World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The Tragedy of the Iranian Revolution

ஈரானியப் புரட்சியின் துன்பியல்

By Keith Jones
11 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சர்வாதிகார, அமெரிக்க ஆதரவு பெற்ற ஈரான் ஷாவின் ஆட்சி பெரும் மக்கள் எழுச்சியை ஒட்டி சரிந்து விழுந்தது.

1979 ஜனவரி நடுப்பகுதியில் ஓடிவிட்ட ஷா, தூக்கி எறியப்பட்டது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு மாபெரும் அடியாகும். 1953 தொடங்கி ஒரு கால் நூற்றாண்டு காலம் மயில் சிம்மாசனத்திற்கு ஷா ரேசா பஹ்லவியை மீட்ட சிஐஏ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், வாஷிங்டன் அவருடைய சர்வாதிகாரத்திற்கு ஆதரவாக இருந்ததுடன், எண்ணெய் வளம் நிரம்பிய மத்திய கிழக்கில் ஈரானை அமெரிக்காவின் முக்கிய காவலாளாக ஆக்கி, அவரது சர்வாதிகாரத்தை ஆயுதபலம் மிக்கததாக்கி இருந்தது.

1977 இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் குருதியில் நனைந்திருந்த ஷாவின் ஆட்சியை "ஸ்திரப்பாட்டின் சோலைவனம்" என்று பிரகடனப்படுத்தினார். ஆனால் விரைவிலேயே மக்கள் எதிர்ப்பினால் ஈரான் கொந்தளித்தது. 1978 ம் ஆண்டு முழுவதும் மில்லியன் கணக்கான ஈரானியர்கள் தெஹ்ரான் தெருக்களிலும் மற்ற முக்கிய நகரங்களின் தெருக்களிலும் நிறைந்து வழிந்து உயர்ந்துகொண்டிருந்த வேலையின்மை, விலைவாசிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்; அரசவை மற்றும் அதை ஒட்டி நடப்பவை நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுதல், அப்பட்டமாக திருடுதல் மற்றும் முடியரசு சர்வாதிகாரம் அனைத்திற்கும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஈரானிய மக்களைப் பொறுத்தவரையில், கொடுங்கோன்மை நிறைந்த ஊழல் ஆட்சியின் மொத்த உருவமாக ஷா இருந்தது மட்டும் இன்றி, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு ஏகாதிபத்தியம் நாட்டை சீரழிவில் தள்ளியிருந்தது.

மிருகத்தனமான அடக்குமுறை --செப்டம்பர் 8, 1978 அன்று ஒரே நாளில் 1,600 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்-- மக்களின் அமைதியின்மையை அடக்க முடியாமல் போனது. பெருகிய முறையில் தொழிலாள வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம், வேலைநிறுத்தங்கள், உள்ளிருப்பு ஆக்கிரமிப்புக்கள் என்ற வழிவகைகளை கையாண்டு தவிர்க்க முடியாத புரட்சியின் முக்கிய சமூக சக்தியாக விளங்கியது. இறுதியில் ஷாவின் ஆட்சியின் முதுகெலும்பை எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்தான் முறித்தது.

ஷா அகற்றப்பட்டதை அடுத்து, புரட்சியின் பரப்பு அதிகரித்தது. தொழிலாளர்கள் ஆலைகளை கைப்பற்றினர்; விவசாயிகள் நிலங்களை கைப்பற்றினர். 1917ம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய நிகழ்ச்சிகளுக்கு இணையான சம்பவங்கள் மறுக்கப்பட முடியாதவை ஆகும்.

ஆனால் 1917ஐ போல் இல்லாமல், அரச அதிகாரம் ஈரானிய தொழிலாளர்களின் கைக்கு வரவில்லை; ஏனெனில் அங்கு ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியோ போல்ஷிவிக் கட்சியோ விவசாயிகளையும் மற்ற குட்டி முதலாளித்துவ பிரிவுகளையும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் பின்னே கொண்டுவரும் வகையில் இல்லை; ஈரானில் உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து உண்மையான தேசிய விடுதலையை சாதிக்கும் ஒரே வழியாக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தை முன்வைப்பதற்கு எந்த அமைப்பும் இல்லை.

பதிலாக, புரட்சியில் இருந்து வெளிப்பட்டது ஒரு மத தலைமையிலான முதலாளித்துவ தேசிய ஆட்சியும் ஒரு இஸ்லாமியக் குடியரசும் ஆகும்; அதுவோ தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமின்றி அடக்கி, முதலாளித்துவ ஒழுங்கை மீட்டு முதலாளித்துவ சொத்துரிமையையும் காத்தது. 1983 ஐ ஒட்டி, சில இடங்களில் அதற்கும் முன்னரே, ஆட்சியில் இருந்து சுதந்திரமாக இருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் தடைக்குட்படுத்தப்பட்டு உருத்தெரியாமல் கலைக்கவும் பட்டன.

ஒருமித்த உறவை நீண்டகாலமாகக் கொண்டுள்ள கடைத்தெரு வணிகர்களின் ஆதரவைக் கொண்டு, ஷியைட் மத குருமார்கள் வெற்றிகரமாக ஓர் உயர்ந்த அரசியல் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொண்டனர்; மூத்த மத குருமார்கள் "இஸ்லாமியமற்ற" சட்டங்களை நீக்கும் அதிகாரத்தை பெற்றனர்; பாராளுமன்ற வேட்பாளர்களில் "பக்தி அற்றவர்களை" நீக்கினர்; தங்களுக்குள்ளேயே நாட்டின் "உயர்ந்த தலைவரை" தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மகளிர், இனவழி, மதவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறைக்கப்பட்டன அல்லது மிதித்து நசுக்கப்பட்டன.

புரட்சிக்குப் பின் உடனடியாகக் கொடுக்கப்பட்டிருந்த மிகக் குறைந்த அளவு சமூக சீர்திருத்தங்கள் கூட பின்தள்ளப்பட்டன. 1990களின் ஆரம்ப ஆண்டுகளில் முல்லாக்கள் அடிப்படைப் பொருட்கள் மீது கொடுக்கப்பட்டிருந்த உதவித் தொகைகளை பெரிதும் குறைத்தனர்; ஷா மற்றும் அவருடைய எடுபிடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்த நிறுவனங்களை தனியார் மயமாக்கினர்; வெளிநாட்டு மூதலீட்டிற்கு ஆசை காட்டினர்; சிறப்பு பொருளாதார பகுதிகள் இன்னும் பல சலுகைகளையும் கொடுத்தனர்.

தற்கால ஈரானில் சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை இருப்பதுடன் இவை ஷா காலத்தில் இருந்ததைவிட கூடுதலாகத்தான் உள்ளன. அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று வாடிக்கையாக ஆட்சி கூறினாலும், அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களுடன் அது ஒத்துழைத்துள்ளது.

ஈரானிய புரட்சியின் துன்பியல், தொழிலாள வர்க்கம் சமூகத்தில் இருக்கும் அதன் பரிணாமத்திற்கு ஏற்றாற்போல் ஷா காலத்திய சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் பெற்றிருந்த நிலையை போல் பின்னர் அரசியல் பங்கை ஏற்க முடியாமல் போனதுதான்.

இதற்கு ஸ்ராலினிசம்தான் முழுப் பொறுப்பு

ஈரானியக் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது ருடே (Tudeh) கட்சி ஈரானிய தொழிலாள வர்க்கத்தினுள் ஆழ்ந்த வேர்களைக் கொண்டிருந்தது. 1940 களில் அது ஒரு மக்கள் இயக்கத்தின் தலைமையாக வெளிப்பட்டது; 1944-1947 காலத்திலும் மீண்டும் 1953 லும் அதிகாரத்திற்கு சவால் விட்டிருக்க முடியும். ஆனால் ருடே கட்சி சோவியத் அதிகாரத்துவத்தால் மென்ஷிவிக்-ஸ்ராலினிச இருகட்ட புரட்சிக் கோட்பாட்டில் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தது; அதன்படி தாமதமான முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகளில் தொழிலாள வர்க்கம் சுயாதீன பாத்திரம் ஆற்ற கட்டாயம் விருப்பப்படக்கூடாது, மாறாக தேசிய முதலாளித்துவத்திற்கு "அதன்" புரட்சியை நிறைவேற்றுவதில் உதவ மட்டுமே வேண்டும்.

ஆகஸ்ட் 1953ல் அவர்களுடைய முக்கிய முதாலளித்துவ கூட்டாளியான ஈரானியப் பிரதம மந்திரி மோசடெக் அமெரிக்க அழுத்தத்திற்கு வளைந்து கொடுத்து, மன்னர் எதிர்ப்பு வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்க இராணுவத்தைப் பயன்படுத்தியபொழுது, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மோசமாக குழம்பிப் போயினர். எனவே அவர்கள், இரு நாட்களுக்கு பின்னர் சிஐஏ ஏற்பாடு செய்த மோசடெக் தூக்கி வீசலின் பொழுது எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இன்னும் வலதிற்கு நகர்ந்தனர்; ஷாவுடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிய எந்த படைத்தளபதியுடனும் அரசியல் வாதியுடனும் இணைந்து செயல்பட்டு, ஷாவின் ஆட்சி அரசியலமைப்பு முறையில் ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக இருந்தால் அது நீடித்திருப்பதற்கு தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர்.

சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் இதற்கு இடையில் பஹ்லவி பரம்பரையுடன் (Pahlavi dynasty) பரந்த முறையில் தூதரக, வணிக உறவுகளை வளர்த்துக் கொண்டனர்.

ஷாவின் பிற்போக்குத்தன மரபார்ந்த கூறுபாடுகளுக்கு எதிர்ப்பு என்பதுடன் தொடர்பு கொண்டிருந்த அயோதுல்லா ருஹோல்லா கொமெய்னி (Ayatollah Ruhollah Khomeini) தன்னை 1970 களில் ஷாவின் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்தின் முக்கியமான, உறுதியான எதிர்ப்பாளர் எனக் காட்டிக் கொள்ள முடிந்தது என்றால், அது பல தசாப்தங்கள் ஸ்ராலினிஸ்ட்டுகள், ஷாவை முறையாக ஒரு அறிவொளி சார்ந்த சர்வாதிகாரியாக செயல்படுமாறு மன்றாடி வந்த ஒரு செல்வாக்கிழந்த முதலாளித்துவ அரசியல் வாதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்தி வைத்திருந்ததால்தான் ஆகும்.

ருடேக் கட்சி, ஷாவின் ஆட்சிக்கு எதிராக 1978-79 ல் வெடித்த மக்கள் எதிர்ப்பினால் முற்றிலும் வியந்துபோயிற்று. கொமெய்னி மற்றும் முல்லாக்களுக்கு இயைந்து நடக்க வேண்டும் என்ற விதத்தில் இது அதை எதிர்கொண்டது. ஒரு இஸ்லாமியக் குடியரசு தோற்றுவிக்கப்படுவதற்கு ருடே கட்சி ஆதரவு கொடுத்தது; தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கையை முற்றிலும் முறையாக அகற்றியது; பல நேரமும் ஆட்சியின் போலித்தன இடது இஸ்லாமிய வனப்புரையை எதிரொலித்துப் பேசியது.

கோமெய்னி வளர்த்து பிரச்சாரப்படுத்தியிருந்த மக்களை ஈர்க்கும் ஷியைட் இஸ்லாம், பல விதங்களில் அவருக்கு துணையாக இருந்தது. ஈரானியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஷாவிற்கு எதிராகப் போரிட்டிருந்த நலன்கள் அனைத்தையும் முற்றிலும் மறைக்கும் விதத்திற்கு உதவியது; அவர்களோ வர்க்க அடக்குமுறையின் முக்கிய கருவியாக இருந்த ஷாவின ஆட்சியை எதிர்த்தனர்; அதேபோல் கடைத்தெரு வணிகர்கள் மற்றும் பிற சொத்து அடுக்குகளின் அடக்குமுறையையும் எதிர்த்தனர்; அவர்களோ ஷாவின் கோமாளித்தன முதலாளித்துவத்தை அவர்களுடைய சுரண்டலுக்கு எதிராக இருந்ததால் எதிர்த்திருந்தனர். இதையொட்டி "இறைவன் இல்லாத" மார்க்சிசத்தின் மீது பெருகிய முறையில் வன்முறைத்தாக்குதல் நடத்த முடிந்தது. மேலும் கடைசியாக, ஆனால் முக்கியத்துவம் குறைந்திராத வகையில், புதிய ஆட்சி முதலாளித்துவத்திற்கு அதன் சொத்துரிமை காக்கப்பட உறுதியளிக்கும் என்றும் கூறியது. கோமெய்னி அறிவித்தார்: "இஸ்லாம் இருக்கும் வரையில் தடையற்ற வணிக, செயல்பாட்டு முறைகளும் இருக்கும்"

ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மூன்றாம் உலகிற்கு ஆதரவு என்ற வனப்புரைகளை கோமெய்னி பயன்படுத்தி ஷாவிற்கு எதிரான மக்கள் எழுச்சியை இயக்கி, அதைக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அழுத்தம் கொடுத்தார். ஷா, நியூ யோர்க்கிற்கு வருவதற்கு அனுமதித்த கார்ட்டர் நிர்வாகத்தின் தூண்டுதல் தரும் முடிவிற்கு எதிராக அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியது, ஆட்சியின் புரட்சிகர தன்மைகளை அறிவிக்கப் பயன்படுத்தப்பட்டது; அதேபோல் அமெரிக்காவுடன் மோதலில் இருக்கும் கோமெய்னி ஆட்சியை குறைகூற முற்படும் எவரையும் கண்டிக்கவும் அது பயன்பட்டது. இதற்கிடையில் திரைக்குப் பின், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்க நடைமுறையுடன் தந்திர இணைப்பில் செயல்பட்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ரோனால்ட் றேகனுடன் இரகசிய உடன்படிக்கை கொண்டனர்; அதன்படி 1980 அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கோமெய்னி ஆட்சி, ருடே கட்சிக்கு எதிராக மாறியவுடன், அதற்குத் தேவையான உளவுக் குறிப்புக்கள் சிஐஏ வால் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 1980 ல் இருந்து ஆகஸ்ட் 1988 வரை, கோமெய்னி ஆட்சி சதாம் ஹுசைனுடன் ஈராக்கில் ஒரு கொடூர போரில் சிக்கிக் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் போட்டி தேசிய ஆட்சிகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாக அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட இப்போர் இரு நாடுகளில் இருக்கும் மக்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுத்தது. இப்பிற்போக்குத்தன போரை முல்லாக்கள் இரு இலக்குகளுடன் நடத்தினர்: ஈரானில் மக்களின் விடுதலை விழைவுகள் சரிந்த அளவில் எழுந்த சமூகச் சீற்றம், திகைப்பு இவற்றை திசை திருப்பும் வகையில் இப்பிற்போக்குத்தனமான போரை முல்லாக்கள் நடத்தினர்; மேலும் தன்னை ஒரு வட்டார சக்தியாக நிறுவிக் கொள்ள முற்பட்ட ஈரானிய முதலாளித்துவத்தின் நீண்டகால விழைவுகளையும் அடைவதற்கு அது முற்பட்டது.

இஸ்லாமியக் குடியரசின் ஆட்சியாளர்கள் பல முறையும் வாஷிங்டனை அவமதித்து அறைகூவுதல் தங்கள் நலனக்கு உகந்தது எனக் கருதிய நிலையில், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பல ஏகாதிபத்திய சக்திகளுடன் இலாபம் கொடுக்கும் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். ஈரானிய ஆட்சிக்குள்ளிருந்த முக்கிய சக்திகள், மிரட்டுதல் அச்சுறுத்தல் ஆகியவற்றை வாஷிங்டன் நிறுத்தினால் அதனுடனும் உடன்பாட்டிற்குத் தயார் என்பதை சமிக்கை காட்டின.

பேராசை பிடித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியங்களுக்கு சலுகை ஏதும் காட்டாமல், ஈரானிய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச நோக்கு உடைய அறிவுஜீவிகளும் 1979 ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியினால் ஏற்பட்ட பிற்போக்குத்தன ஆட்சியை உறுதியாக எதிர்க்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய கட்சியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஈரானியப் பிரிவு ஒன்று ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சியின் அடிப்படையில் கட்டாயம் கட்டியமைக்கப்பட வேண்டும். தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட நாடுகளில், ஏகாதிபத்தியத்தில் இருந்து சுயாதீனம் பெறுதல், நிலப்பிரபுத்துவ முறையின் மிச்சசொச்சங்கள் அனைத்தும் இல்லாது செய்யப்படுதல் மற்றும் மதத்தை அரசிலிருந்து தனியாகப் பிரித்தல் உள்பட ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகளை முடித்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சோசலிசப் புரட்சியின் மூலம்தான் நிறைவேற்றப்பட முடியும்.