World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Intense maneuvering in run-up to spring elections

இந்தியா: வசந்தகால தேர்தலுக்கு முன் தீவிர சூழ்ச்சிகள்

By Deepal Jayasekera
18 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

அனைத்து இந்திய முக்கிய அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் தேசிய தேர்தல்களை பெரும் கவலையுடன் அணுகுகின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நடைமுறை பற்றி ஆழ்ந்த அதிருப்தியை பரந்த முறையில் மக்கள் கொண்டிருக்கையில், தேர்தல் முடிவுகள் அதிக உறுதியற்ற தன்மையைத்தான் கொண்டுள்ளன.

எந்தக் குறிப்பிட்ட தனியொரு கட்சியும் 1984க்கு பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதில்லை; இந்தியாவின் அடுத்த அரசாங்கமும் அதிக உறுப்பினர்களை கொண்ட, அதிர்விற்கு அதிகம் உட்படுகின்ற பல கட்சி கூட்டணி உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் வகையில் இருக்கும் என்றுதான் அநேகமாக உறுதியாகியுள்ளது.

சமீபத்திய வாரங்கள் மூன்று பெரிய தேசிய அரசியல் அமைப்புக்கள்--தற்போதைய ஐக்கிய முன்னணிக் கூட்டணி அரசாங்கத்தற்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP), ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான இடது முன்னணி--தேர்தல் கூட்டணிகளை தனித்தனியே அமைக்க முயல்வதுடன் ஏராளமான வட்டார மற்றும் சாதித் தளத்தை கொண்டுள்ள கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் திறனைப் பெற விழைகின்றன.

2004 ம் ஆண்டு தானே வியந்த வகையில், இந்தியாவை உலக முலாளித்துவ சந்தைக்கு ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை உற்பத்தி செய்யும் நாடாக வேண்டும் என விரும்பிய முதலாளித்துவ உந்துதலில் இருந்து விளைந்த பெருகிய பொருளாதார பாதுகாப்பின்மை, சமூகச் சமத்துவமின்மை மற்றும் வறுமை இவற்றையொட்டிய மக்கள் சீற்றத்திற்கு சிறந்த முறையில் முறையிட்டு காங்கிரஸ் கட்சி BJP மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) பதவியில் இருந்து அகற்றியது. காங்கிரசின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுகள்) தலைமையிலான இடது முன்னணி அதற்கு தேர்தலுக்கு முன்பும் பின்னரும் கொடுத்த ஆதரவினால்தான்.

மே 2004ல் இருந்து கடந்த ஜூன் வரை நான்கு ஆண்டுகள் இடது முன்னணி பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தியது; மக்கள் அழுத்தத்திற்கு அது உடன்படும் என்றும் பிஜேபி க்கு எதிரான "மத சார்பற்ற தடுப்பை" அது கொண்டுள்ளதாகவும் காரணம் கூறியது. ஆயினும்கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "உலக மூலோபாய" பங்குத்தன்மையை இணைக்கும் "நவீன தாராளவாத "சீர்திருத்தங்களை" அமல்படுத்தும் பிஜேபி பயணித்த பாதையில்தான் ஐமுகூ (UPA) வும் தொடர்ந்தது, என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்களே ஒப்புக் கொள்ள வேண்டியது ஆயிற்று.

UPA அரசாங்கக் கொள்கைகளுக்கான எதிர்ப்பில் சிதைந்த வடிவில் என்றாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலத் தேர்தல்களில் எதிர்ப்பு வெளிவந்துள்ளது; மேலும் ஸ்ராலினிஸ்ட்டுக்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து பல ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தின.

இப்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் தாக்கும் நிலையில் மத்தியதர வகுப்பினரையும் விட்டு வைக்கவில்லை; சமீபத்திய ஆண்டுகள் விரைவான பொருளாதார விரிவாக்கத்தால் இப்பிரிவு விகிதத்திற்கு மீறி நலன்களை அடைந்தது இதன் விளைவாக சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு தளத்தை அளித்தது.

இந்திய ஏற்றுமதிகள் அக்டோபரில் இருந்து ஒவ்வொரு மாதமும் தீவிரமாகக் குறைந்து வருகிறது; ஜனவரி மாதம் ஆண்டுக் கணக்கில் 24 சதவிகித சரிவைக் கண்டது. கடந்த மாதக் கடைசியில் இந்திய ரிசேர்வ் வங்கி இந்த நிதியாண்டிற்கான வளர்ச்சி எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளது; மார்ச் 31ல் முடிவுறும் இக்காலத்தில் இது 7 சதவிகிதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது; ஆனால் பல பொருளாதார வர்ணனையாளர்கள் இது பெரும் நம்பிக்கையுடன் கூறப்பட்டுள்ள விகிதம் என்கின்றனர்

இந்திய அரசாங்கம் துல்லியமான வேலைகள் பற்றிய தகவலைக் கொண்டிருக்கவில்லை ஆனால் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து குறைந்தது ஒரு மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்புப் பரிவு வரவிருக்கும் மாதங்களில் 10 மில்லியன் வேலைகள் இழக்கப்படக்கூடும் என்று கூறியுள்ளது. பல மில்லியன் வேலைகள் இழப்பின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் மகத்தானதாக இருக்கும் என்று Standard & Poor's உடைய ஆசியா-பசிபிக் பகுதிக்கான தலைமைப் பொருளாதார வல்லுனர் கூறியுள்ளார்: "இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வேலையிழப்புக்கள் பெரும் பொருளாதார நெறியில் கணிசமான உட்குறிப்புக்களை கொண்டிருக்கும்" என்று சுபீர் கோகர்ன் கூறியுள்ளார்; "இது முன்னோடியில்லாத தன்மையைக் கொண்டது; அரசியலில் இது எப்படிச் செல்லும் எனக் கூற இயலாது."

டிசம்பர் மாதமும் மீண்டும் ஜனவரியிலும் UPA அரசாங்கம் ஊக்கப் பொதிகளை அறிவித்தது; ஆனால் இவை கடந்த நான்கு ஆண்டுகள் வருடத்திற்கு 8.5 சதவிகித வளர்ச்சி விகிதம் இருந்தபோதிலும்கூட, இந்திய நாட்டின் நிதிய நெருக்கடி மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் வலுவிழந்த தன்மையையும் உயர்த்திக் காட்டின. அரசாங்கச் செலவுகள் $4 பில்லியன்தான் அதிகமாயின அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாக ஆகும்.

"சாதாரண மனிதர்களைப் பற்றி" காங்கிரசின் வீண் ஆரவாரப் பேச்சு

திங்களன்று நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜி அறிமுகப்படுத்திய இடைக்கால பட்ஜேட் அடிப்படையில் அரசியல் ஆவணம் ஆகும், ஏனெனில் இந்தியத் தேர்தல் சட்டங்களின்படி, அரசாங்கங்கள் முக்கிய நிதிய மாற்றங்களை தேர்தலுக்கு முன்பு கொண்டுவருவதில் இருந்து தடைக்கு உட்பட்டுள்ளன. UPA இன் கொள்கைகளை நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியப் பொருளாதாரத்திற்கு "கனவுச் சிறப்பு" போன்றதை அளித்தது என்றும், அரசாங்கத்தின் குவிப்பு "சாதாரண மனிதனைப்" பற்றி இருந்தது, இருக்கிறது என்றும் UPA "அனைத்தும் அடங்கிய வளர்ச்சி" பற்றி உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு விடை சீர்திருத்தத்தை "விரைவு படுத்துல்" என்றும் அதையொட்டி இந்தியாவை "கூடுதலான போட்டித்தன்மை" பெற்றதாக செய்வதும்தான் என்று முக்கர்ஜி அறிவித்தார். ஆனால் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி மந்திரி அத்தகைய மாறுதல்கள் பொதுவாகத்தான் இருக்கும் என்றார்; அதே நேரத்தில் அரசாங்கம் "சாதாரண மக்கள்" மீது நேரடி பாதிப்பு இருக்கும் முன்னோடித் திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்றும் உயர்த்திக் கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக விரைவான பொருளாதார விரிவாக்கத்தில் மற்றும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையினால் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் ஆழமான விவசாய நெருக்கடி நிலைமையிலும், கிராமப்புற இந்தியாவில் தானிய நுகர்வு சரிந்துள்ள நிலையிலும், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நலச் செலவினங்களை ஓரளவிற்கு அதிகமாக்கியது என்றுதான் கூறவேண்டும். ஆனால் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதம் போன்ற திட்டங்கள் --ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் 100 நாட்கள் குறைந்த பட்ச வேலையை ஆண்டு ஒன்றுக்கு கொடுப்பது, குறைந்தது அமெரிக்க $1.50 ஊதியத்தை அளிப்பது போன்றவை--அதிகபட்சம் பல மில்லியன் மக்களை இன்னும் மோசமான பசி, பட்டினி, வறிய நிலையின் இடர்பாடுகளுக்குள் தள்ளவில்லை என்று மட்டும்தான் கூறமுடியும்.

மேலும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி என்பது மீண்டும் தேர்தல்கள் முடிந்தபின் UPA உடைய உண்மையான தளமாகிய பெருவணிகத்தில் இருந்து சமுகச் செலவினங்களை குறைப்பதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று பொருளாகும். திங்களன்று பட்ஜெட்டில் முக்கர்ஜி பற்றாக்குறை பற்றிய கணிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 என்று நடப்பு நிதி ஆண்டில் இருப்பதில் இருந்து 6 சதவிகிதம் என உயர்த்தவும் 2009-10 நிதிய ஆண்டில் 5.5 என உயர்த்தவும் வேண்டியிருந்தது.

பட்ஜெட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க அறிவிப்பு பாதுகாப்பு செலவினங்கள் 34 சதவிகிதம், கிட்டத்தட்ட $30 பில்லியன் என்று அதிகரிக்கப்பட்டது ஆகும். கடந்த நவம்பர் மாதம் மும்பை பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி முக்கர்ஜி இதை நியாயப்படுத்தினார். "ஒரு நுழைவாயில் கடக்கப்பட்டுவிட்டது. எமது பாதுகாப்பு சூழ்நிலை கணிசமாகக் குறைந்துள்ளது" என்று முக்கர்ஜி கூறினார்.

அமெரிக்காவில் 9/11 நடந்த தாக்குதல்களுடன் மும்பை மீதான கொடூரத்தையும் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் BJP இன் பயங்கரவாத எதிர்ப்பில் உள்ள கடினப்போக்கு வனப்புரையின் மாதிரியைத்தான் கொண்டுள்ளது. இந்தியாவின் பரபார்ந்த விரோதியான பாக்கிஸ்தான் மீது அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில் அது மும்பைத் தாக்குதல்களை பயன்படுத்தியுள்ளது; பிரதம மந்திரி மன்மோகன் சிங் அத்தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார்; ஏனெனில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களை அந்நாட்டில் இருந்து அகற்ற அது போதுமானதை செய்யவில்லை என்பது அவர் கருத்து. டிசம்பர் மாதம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கடுமையான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை இயற்றவும் செய்துள்ளது; அவை ஆட்கொணர்தல் மற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் குற்றவாளி அல்ல என்ற முக்கிய நீதித்துறைக் கருத்துக்களை அகற்றியுள்ளன.

சமீபத்திய வாரங்களில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடிக் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு பற்றிய விவரங்களை உறுதியாகக் காண முற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தளமாகக் கொண்டுள்ள சமாஜ்வாடிக் கட்சி கடந்த ஜூலை மாதம் இடது முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொண்டதும் UPA யின் உதவிக்கு வந்தது; இது இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் செயல்படுத்துவது என்ற காங்கிரசின் முடிவை ஒட்டி நிகழ்ந்தது ஆகும்.

ஆனால் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகப் போகவில்லை. உத்தரப் பிரதேசத்தின் BJP முதல் மந்திரி என்னும் முறையில் பாபர் மசூதியை இடிக்கும் இந்து மதவெறிப் பிரச்சாரத்திற்கு முன்னின்ற கல்யாண் சிங்குடன் சமாஜ்வாடி நட்புறவை வளர்ப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 1992-93 ல் நடந்த அப்பிரச்சாரத்தின் விளைவு இந்தியாவில் பிரிவினைக்கு பின் மிகப் பெரிய வகுப்புவாதக் கலவரத்தில் முடிந்திருந்தது. சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பின் இந்து வெறிப்பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் அரசாங்கங்ககள் வசதி செய்து கொடுத்ததாகப் பதில் கூறியுள்ளனர்.

உண்மை என்ன என்றால் மத சார்பின்மை கருத்திற்கு தான் வலுவான ஆதரவு கொடுப்பதாகக் காங்கிரஸ் காட்டிக் கொண்டாலும், நீண்டகாலமாகவே அது இந்து வெறி வலதுடன் பெரும் நட்புறவைக் கொண்ட சான்றுகள்தான் உள்ளன. இதற்கு உதாரணம் மிகப் பெரிய முறையில் BJP மற்றும் சிவசேனை கட்சிகளில் இருந்து விலகியவர்கள் காங்கிரஸில் சேர்க்கப்பட்டுள்ளதுதான்.

காங்கிரஸ்-சமாஜ்வாடி பிளவுகளின் உண்மை வேர் வரவிருக்கும் தேர்தல்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும், அதே நேரத்தில் வட இந்தியாவில் உள்ள "இந்தி பேசும் பகுதியில்" அதன் சிதைந்துள்ள அமைப்பை மீளக் கட்டி அமைக்க வேண்டும் என்ற இரட்டை இலக்குகளை தொடர்வதால் ஏற்பட்டுள்ள சிக்கல்தான். பிந்தைய இலக்கிற்கு கட்சி அதன் தேர்தல் நட்புக் கட்சிகள் பற்றிய முன்னோக்கை மாற்றிக் கொள்ளுதல் அல்லது குறைந்த பட்சம் ஒதுக்கி வைத்தல் என்பது தேவைப்படுகிறது.

UPA நட்புக் கட்சிகளுக்கு சங்கடத்தை கொடுக்கும் விதத்தில், காங்கிரஸ் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை UPA பதாகையில் நிறுத்த விரும்பவில்லை; இதையொட்டி அது தேசிய அளவிலான கூட்டு ஏதும் இல்லை என்பதை வலியுறுத்துகிறது; தேர்தல் உடன்பாடுகள்தான் காங்கிரஸுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே மாநில அளவில் உள்ளது என்பதை வலியுறுத்தப் பார்க்கிறது.

BJP யும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியும்

இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பிஜேபி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் இருந்து எதிர்பாராமல் இறக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து நெருக்கடியில்தான் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக பலமுறையும் மதவெறித் தூண்டுதல்களை அது நடத்தியுள்ளது; முதலாளித்துவத்தின் கணிசமான பிரிவுகள் பெரும் கவலைக்கு உட்படும் வகையில், இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை இயற்ற ஐமுகூ க்கு உதவவும் மறுத்தது; ஆனால் பதவியில் இருந்தபோது இதுதான் வாஷிங்டனிடம் அத்தகைய உடன்பாட்டிற்கு வலியுறுத்தியிருந்தது.

பயங்கரவாதம் பற்றி காங்கிரஸ் "மிருதுவாக" உள்ளது என்று பிஜேபி பல காலமாக கூறிவந்துள்ளது; இந்த வகுப்புவாதக் கூற்றின் தாக்குதலை கூர்மையாக்கும் வகையில் இதற்குக் காரணம் ஆளும் கட்சி அதன் முஸ்லிம் வாக்கு வங்கியை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறுகிறது. நவம்பர் டிசம்பர் மாநிலத் தேர்தல்களின் மும்பை கொடுரத்தை பிஜேபி பயன்படுத்தி ஆதாயம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் டெல்லியில்கூட காங்கிரஸ் அரசாங்கத்தை தோற்கடிக்க அதனால் முடியவில்லை மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.

மாநிலத் தேர்தல்களை அடுத்து தேஜகூ (NDA) கட்டணியில் பிஜேபி- யின் முக்கிய நட்புக் கட்சியான ஜனதா தளம் (ஐக்கியம்) பயங்கரவாத வனப்புரையை கட்சி குறைத்துக் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தது; அப்பொழுதுதான் சமூகப் பொருளாதார குறைபாடுகள் பற்றி கூற முடியும் என்றும் அது கூறியது. இதை பிஜேபி தலைமை நிராகரித்தது.

பெருகிய வேலையின்மை மற்றும் கடந்த ஆண்டு இரட்டை இலக்க விலையேற்றத்தை நாடு கண்டது ஆகியவற்றை ஒட்டிய மக்கள் சீற்றத்தை பிஜேபி பயன்படுத்திக் கொள்ளாது என்ற பொருளை இது தந்துவிடாது.

பிஜேபியிலும் அதைச் சுற்றிலும் பலரும் மகாத்மா காந்தியை "முஸ்லிம்களை சமாதானப்படுத்துபவர் என்று முற்றிலும் கண்டிப்பதுடன், இந்து மேலாதிக்க சிந்தனையாளர் வி.டி. சவர்க்காரை போற்றவும் செய்கின்றனர்; அவருடைய சீடர்களில் ஒருவர்தான் காந்தியை படுகொலை செய்தவர் ஆவார். ஆனால் இது ஒன்றும் பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங்கை, காந்திய பெயரைக் கூறி இந்திய பொருளாதார வளர்ச்சிப் பாதை என்று விளக்கப்படாத கருத்தை அவர் முன்வைப்பதை தடுக்க வில்லை. இந்த மாதம் முன்பகுதியில் சிங் கூறினார்: "கம்யூனிசமும் பின்னர் இப்பொழுது முதலாளித்துவமும் உலகம் முழுவதும் சரிந்துவிட்டது காந்தி 100 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதைத்தான் நினைவிற்கு கொண்டு வருகிறது."

அதிகாரத்தில் இருந்தபோது பிஜேபி இரக்கமற்ற முறையில் பெருவணிகத்தின் செயற்பட்டியலைத்தான் செயல்படுத்தியது. கடந்த மாதம் அனில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல் உட்பட பல இந்தியாவின் முக்கிய முதலாளிகள் தற்போதைய குஜராத் முதல் மந்திரியும், 2002 குஜராத் முஸ்லிம் எதிர்ப்புப் படுகொலைகளையும் தூண்டிய நரேந்திர மோடி இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக வரவேண்டும் என்று ஆர்வத்துடன் வெளிப்படுத்தியதின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இதன் பின்னர் மோடி முன்னாள் உள்துறை மந்திரியும் 1990 களில் பாபர் மசூதி இடிக்கும் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுத்தவருமான எல்.கே.அத்வானிக்கு பிரதம மந்திரிப் பதவி வேண்டும் என்பதற்கான தன்னுடைய ஆதரவை வலியுறுத்தினார்.

பிஜேபி தலைமையிலான தேஜகூ சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து கட்சியில் இருந்து பலர் வெளியேறும் நிலையைக் கண்டுள்ளது. தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்டுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை தளமாகக் கொண்ட தெலுகு தேசக் கட்சி (TDP) மற்றும் காஷ்மீர் தேசிய மாநாடு (NC) ஆகியவை அனைத்தும் தேஜகூ ஐ விட்டு விலகி விட்டன.

இப்படி கைவிட்டுச் செல்பவற்றின் பின்னணியில் இருப்பது பலவகை கணிப்புக்கள் ஆகும். காங்கிரசை அகற்ற பொதுமான ஆக்கத்தை வளர்ப்பதில் பிஜேபி தோற்றுள்ளது; மேலும் மேற்கூறப்பட்டுள்ள மாநிலங்களில் பிஜேபி க்கு மிகக் குறைந்த ஆதரவுதான் உள்ளது; இதன் பொருள் மாநில அளவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இது அக்கட்சிகளுக்கு அதிகம் செய்ய முடியாது என்பதாகும்; தேஜகூ-ஐ விட்டு விலகியவர்களுக்கு பிஜேபி யின் இந்து மேலாதிக்கவாத சிந்தனை ஒரு தடையாக இருக்கிறது; குறைந்த பட்சம் ஒரு சங்கடமாக உள்ளது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு "மூன்றாம் அணியை" வளர்க்கிறது.

ஸ்ராலிஸ்ட்டுக்கள் தலைமையிலான இடது முன்னணி கடந்த ஜூலை மாதம் திறமையுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இடது முன்னணியில் ஆதிக்கம் செலுத்த வரும் இந்திய கம்யூனிஸ் கட்சி (மார்க்சிஸ்ட்டுக்கள்) பலமுறையும் முழு ஐந்து ஆண்டு காலமும் அது காங்கிரஸை ஆதரிக்கும் என்று கூறிவந்தது; ஆனால் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தேர்தல் வரை ஒத்திப்போட்டால்தான் அத்தகைய ஆதரவு என்றும் கூறியது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கின் பேரார்வ பாராட்டை பெற்றவிதத்தில், ஸ்ராலினிஸ்ட்டுக்களையும் அவர்களுடைய முறையீட்டையும் ஒதுக்கி வைத்தது; வாஷிங்டனுடன் ஒரு நெருக்கமன நட்பை உறுதி செய்துகொள்ள அணுசக்தி உடன்பாடு உதவும் என்று நம்பியது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரஸுடன் தங்கள் உடன்பாடு சரிந்ததை எதிர்கொள்ளும் வகையில் ஒரு மூன்றாம் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது; அது பிஜேபி அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஒரு தேர்தல் மற்றும் அரசாங்கக் கூட்டணி அமைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்; இடது மற்றும் வட்டார, சாதித்தளத்தைக் கொண்ட முதலாளித்துவ கட்சிகள் அதில் அடங்கியிருக்கும். இந்த நோக்கத்தை கொண்டு அவர்கள் முன்பு பிஜேபி உடன் பங்காளிகளாக இருந்த அதிமுக, தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுடன், தேர்தல் முகாமை அமைத்துள்ளது; மேலும் அக்கட்சிகள் அதிகாரத்தில் மாநிலங்களில் இருக்கையில் கடுமையான, தீய தொழிலாள வர்க்க கொள்கைகளையும் செயல்படுத்தியிருந்தன.

இன்னும் அதிகமான பிஜேபி நட்புக் கட்சிகளையும் இழுத்துவிடலாம் என்று ஸ்ராலினிஸ்ட்டுக்கள் நம்புகின்றனர். சிபிஐ(எம்) அரசியல் குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை கருத்தின்படி, "தேஜகூ- வில் இருந்து புதிய நண்பர்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. தேஜகூ க்குள் பிளவுகள் உள்ளன. அனைத்து பிஜேபி, காங்கிரஸ் இல்லாத கட்சிகளுடனும் இணைந்து செயலாற்ற நாங்கள் விரும்புகிறோம்."

சிபிஐ(எம்) ஒரிசாவில் BJP, ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகியவற்றுடன் சேர்ந்து ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதா தளம் (BJD) -ஐ ஏற்கனவே அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஜனதா தளம் (மதசார்பற்றது) முன்பு கர்னாடகாவில் பிஜேபி உடன் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தன.

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) ஆதரவைப் பெற ஸ்ராலினிஸ்ட்டுக்கள் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வம் காட்டியுள்ளனர்; அக்கட்சி இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை ஆளுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தன்னை இந்தியாவின் முன்னாள் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்ட தலித்துக்கள் மற்ற அடக்கப்பட்ட அடுக்குகளின் குரல் என்று காட்டிக் கொள்ளுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு வலதுசாரி, சாதிக் கட்சி ஆகும்; பலமுறையும் பிஜேபி உடன் ஒத்துழைத்துள்ளது. முதல் மந்திரியும் BSP யின் தலைவருமான மாயாவதி தான் இந்தியப் பிரதமராக வரவேண்டும் என்ற விழைவை இரகசியமாக ஒன்றும் வைத்திருக்கவில்லை. இடது அவரை மூன்றாம் அணிக்குத் தலைமை தாங்குமாறு கொடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் என்றால், பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுடன் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் தந்திரோபாய உத்திகளில் ஈடுபடுவதற்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம்தான்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பரந்த அளவில் இழிவிற்கு உட்பட்டுள்ளனர்; புதிய தாராளக் கொள்கையை தொடும் நேரத்திலேயே, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான நட்பிற்கு இந்தியாவை கொண்டுவர விரும்பும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு இது முட்டுக் கொடுத்த பங்கு மட்டும் இதற்குக் காரணம் அல்ல; அது பதவியில் இருக்கும் மேற்கு வங்கம், கேரளம் மற்றும் மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முதலீட்டாளர் ஆதரவு கொள்கைகளைத்தான் தொடர்ந்து வந்திருக்கின்றனர். இன்னும் இழிவான முறையில் இடது முன்னணி அரசாங்கம் மேற்கு வங்கத்தில் பெரு வணிகத்திற்கான சிறப்புப் பொருளதாரப் பகுதியை அமைப்பதற்கு விவசாயிகள் நிலத்தைக் கையகப்படுத்துகையில் நந்திகிராமத்தில் எதிர்ப்புக்கள் மக்களிடம் இருந்து வந்தபோது, அவற்றை மிருகத்தனமான முறையில் ஒடுக்க கட்சிக் குண்டர்கள் மற்றும் போலீசாரை கட்டவிழ்த்திருந்தது.

அரசாங்கத்தில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கடுமையாக ஐமுகூ ஐக் கண்டித்துள்ளனர். ஆனால் வருங்காலத்தில் காங்கிரஸுடன் பிணைப்பு என்பதை ஒதுக்கிவிடவில்லை; அதற்கு பிஜேபி அதிகாரத்திற்கு வருவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணம் கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தல்களில் சிபிஐ(எம்) உடைய தொடக்க கோஷம் "பிஜேபி ஐ தோற்கடிக்கவும், காங்கிரசை நிராகரிக்கவும்" என்று இருந்தது. ஆனால் rediff.com கருத்தின்படி, கட்சித் தலைமை இதை "பிஜேபி ஐ தோற்கடியுங்கள், காங்கிரசை தோற்கடியுங்கள்" என்று மாற்றும் கட்டாயத்திற்கு உட்பட்டது எனத் தெரிகிறது; இதற்குக் காரணம் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் உள்ள கட்சித் தொண்டர்களின் எதிர்ப்பு ஆகும்; அங்கு காங்கிரஸ் கட்சி இடதின் முக்கிய தேர்தல் போட்டிக் கட்சியாக உள்ளது.

பெப்ருவரி 8ம் தேதி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சிபிஎம் உடைய பொதுச் செயலர் பிரகாஷ் காரட் இடது ஒரு "மதசார்பற்ற அரசாங்கத்தை" ஆதரிப்பதை ஒதுக்காது என்று கூறினார்; இதில் காங்கிரஸும் அடங்கும். "அவ்வாறு நடக்காது என்று கூறமாட்டேன்; ஆனால் அது நடப்பது கடினம்" என்று காரட் கூறினார்.

இதற்கிடையில் காங்கிரஸ் ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் உடன்பாட்டை புதுப்பிக்கத் தயார் என்று குறிப்பு காட்டியுள்ளது--இப்பொழுது இல்லை என்றாலும், தேர்தலுக்கு பின்னர் என. பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் பல முறையும் இடதை UPA அரசாங்கத்தின் குறைந்த பட்ச பொது வேலைத்திட்டத்தை (Common Minumum Programme) தயாரிப்பதில் கொண்ட மைய பங்கிற்கும் அரசாங்கத்திற்கு உரிய ஆலோசனைகள் வழங்கியதற்கும் பாராட்டியுள்ளனர். பெப்ருவரி 3ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்: "இடது கட்சிகளுடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்கள்தான் எங்களைவிட்டு நீங்கினர்; நாங்கள் அவர்களை விட்டு நீங்கவில்லை."

சமீபத்திய வாரங்களில் காங்கிரஸ் நட்புக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதாதளம் (RJD), தேசியவாத காங்கிரஸ் (NCP), லோக் ஜன சக்தி கட்சி (LJP) மற்றும் சமாஜ்வாடிக் கட்சி போன்றவை ஸ்ராலினிஸ்ட்டுகளை விவாதிக்க அணுகியுள்ளனர்; ஸ்ராலினிஸ்ட்டுக்களும் உடன்பட்டுள்ளனர். காங்கிரசிற்கும் இடதிற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை குறைக்க வேண்டும் என்பது தன் நோக்கம் என்று RJD கூறியுள்ளது; அதையொட்டி பிஜேபி க்கு எதிரான "சமய சார்பற்ற" எதிர்ப்பு பிளவு அடையாமல் இருக்கும் என்பது அதன் கருத்து. தங்கள் பங்கிற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்தக் கூட்டங்களை ஒரு மூன்றாம் அணியை வளர்க்கும் தங்கள் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காட்டுகின்றனர்; ஆனால் இவை தேர்தலுக்கு பின்னர் ஒரு பிஜேபி எதிர்ப்பு கூட்டிற்கான தளத்திற்காகத்தான் எனலாம்; மேலும் ஐமுகூ பங்காளிக் கட்சிகள் சிலவற்றுடன் தேர்தலின்போது இணக்கத்தையும் காணலாம்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பற்றிய காங்கிரசின் அணுகுமுறை சிக்கல் வாய்ந்த பாராளுமன்ற கணக்கை ஒட்டித்தான் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த அரசாங்கக் கட்சியின் தலைமை ஐமுகூ அரசாங்கத்திற்கு எதிராக சமூக எதிர்ப்பை அடக்கி அதை பாதுகாப்பான சிதைகளில் திருப்புவதில், இடது முன்னணியின் முக்கிய பங்கை அறிந்துள்ளது. உண்மையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்திய ஆளும் உயரடுக்கின் பல பிரிவுகளாலும் காங்கிரசின் பல வட்டார, சாதித் தள நட்புக் கட்சிகளைவிட கூடுதலான "பொறுப்பு வாய்ந்தவர்கள்" என்றுதான் கருதப்படுகின்றனர்; ஏனெனில் இக்கட்சிகள் பெருவணிகத்திற்கு முற்றிலும் தாழ்ந்து நிற்கையில் பல நேரமும் மிகக் குறுகிய வட்டார, பிளவு, ஏன் குற்றம் சார்ந்த செயல் நோக்கங்களைக் கூட கொண்டு செயல்படுகின்றன.

பல முதலாளித்துவக் கட்சிகளுடன் பகிரங்கமாக மற்றும் இரகசிய உறவுகளை கொண்டுள்ள நிலையில், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முன்னோடியில்லாத உலகப் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் இந்தியாவின் தொழிலாளர்களை அரசியல் நடைமுறையுடன் இணைக்கும் வகையில் செயல்படுகின்றனர்; தொழிலாள வர்க்கம் எவ்வித சுயாதீன அரசியல் செயற்பாடு கொள்ளுவதையும் நசுக்குகின்றனர். இப்போக்கை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இது ஒன்றுதான் வலது அதுவும் குறிப்பாக இந்து மேலாதிக்கவாத பிஜேபி ஐ எதிர்க்கும் வகை எனக் கூறி நியாயப்படுத்தினாலும், இது வகுப்புவாதம், சாதிய வெறி ஆகியவை உள்பட சமூகப் பிற்போக்குத்தனத்தைத்தான் கூடுதலாக வலுப்படுத்தும்.