World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

Amid fears Greek demonstrations could spread

Government postpones French high school reform

கிரேக்க ஆர்ப்பாட்டங்கள் பரவக்கூடும் என்ற அச்சங்களுக்கு இடையே

பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி சீர்திருத்தத்தை பிரெஞ்சு அரசாங்கம் ஒத்திவைப்பு

By Kumaran Ira
19 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 15ம் தேதி பிரான்சின் கல்வி மந்திரி சேவியர் டார்க்கோஸ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் ஆலோசனைகள் நடத்தியபின், மாணவர்கள் எதிர்ப்பை அடுத்து, மிகவும் எதிர்ப்பிற்கு உள்ளாகியிருந்த பள்ளிச் சீர்திருத்தம் தற்காலிகமாக திரும்பப்பெறப்படுகிறது என்று அறிவித்தார்.

ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டங்களையும் மாற்றியமைக்கும், சட்டத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக ஒத்திப்போடும் முடிவு, சங்கடம் தரக்கூடிய விதத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக் கொள்ள வைத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, மாணவர் எதிர்ப்புக்கள் "கிட்டத்தட்ட வாடிக்கையாகிவிட்டது... தேசத் தயக்கத்திற்கு ஒன்றும் நான் மந்திரி அல்ல, வருங்கால தலைமுறைகளுக்கும் நான் பொறுப்பு கொண்டுள்ளேன். நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் சீர்திருத்தத்தை நான் செய்வேன்" என்று சீர்திருத்தத்தை தக்கவைக்கப் போவதாக உறுதி கூறியிருந்தார்

ஆனால் அப்பொழுதில் இருந்து ஒரு 15 வயது சிறுவன் அலெக்சிஸ் கிரிகோரோபோலஸை போலீசார் சுட்டு வீழ்த்தியபின் கிரேக்கத்தில் மகத்தான, வன்முறை நிறைந்த அரசாங்க எதிர்ப்புக்கள் வெடித்தெழுந்தன. பிரான்ஸ் உட்பட, பல ஐரோப்பிய நாடுகளிலும் அதற்கான பரிவுணர்வு எதிர்ப்புக்களும் பரவின. பிரான்சில் இருக்கும் இளைஞர்களும் சோகம் ததும்பிய பொருளாதாரம் மற்றும் வேலை பற்றிய கவலைகள் நிறைந்த எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கையில், பிரெஞ்சு செய்தி ஊடகம் பரந்த அளவில் சீர்திருத்த எதிர்ப்பு இயக்கம் "கிரேக்க மாதிரியை" ஒட்டி பரவக்கூடும் என்று கருத்துத் தெரிவித்திருந்தன.

Europe1ல் டார்க்கோஸ் விளக்கினார்: "நமக்குப் பழக்கமாகிவிட்ட விதத்தில் பள்ளி மாணவர்கள் சீர்திருத்தங்களை எதிர்ப்பது என்பது பற்றி நான் கவலைப்படவில்லை... அடுத்த ஆண்டு நாம் 11வது வகுப்பிற்கு உரிய பாடத்திட்டங்களை கொள்ளுவோமா என்பது பற்றிய வினாவிற்கும் அப்பால் பிரச்சினை என்பது ஆழ்ந்த வித அச்சத்தை கொடுக்கும் சமூக போராட்டமாக இருக்கிறது; இவை அனைத்துமே மேலும் செல்கின்றன. உயர்நிலைப்பள்ளிகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களுடன் வெளிப்படையாக பிணைந்துள்ள சமூக அழுத்தங்கள் மற்றும் கவலைகள் பள்ளிச்சீர்திருத்தங்களை பணயமாக வைப்பதை நான் விரும்பவில்லை. இன்று உள்ள சூழ்நிலை இது பற்றிய நிதானமான விவாதத்திற்கு வழிவகுக்கவில்லை; எனவே ஓராண்டு இச்சீர்திருத்தத்தை தள்ளிப் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது."

கல்விச்செலவினங்கள் குறைப்பு, கற்பிக்கும் நேரம் குறைப்பு, பொதுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுடன் போட்டியிட வைக்கும் முயற்சிகள், சீர்திருத்தம் படிப்பின் நம்பகத்தன்மையை வேலை கொடுப்பவர்களிடையே குறைக்கக்கூடும் போன்ற கருத்துக்களை ஒட்டி மாணவர்கள் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர். கல்வித்துறையில் வேலைக் குறைப்புக்கள் பற்றியும் அவர்கள் கோபம் அடைந்துள்ளனர்: இந்த ஆண்டு 11,200 வேலைகளை அகற்றியபின் அரசாங்கம் அடுத்த ஆண்டு மற்றும் ஒரு 13,500 ஆசிரியர் வேலைகளைக் குறைக்க முடிவு எடுத்திருந்தது பற்றியும் மாணவர்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் டார்க்கோஸ் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு வந்தபின், மாணவர்கள் அதற்கு எதிராக கணக்கிலடங்கா ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த வாரம் Rennes, Nantes, Amiens, Aix-en-Provence, Paris, Marseille, Nîmes போன்ற இடங்களில் பல மாணவர் ஆர்ப்பாட்டங்களும் மாணவர் பள்ளி ஆக்கிரமிப்புக்களும் நடந்துள்ளன. மேற்கு பிரான்சில் உள்ள சில நகரங்களில் சில வன்முறை நிகழ்வுகளும் வெடித்தன. Brest ல் பெரும்பாலும் மாணவர்கள் இருந்த ஒரு சிறு இளைஞர் குழு மீது போலீஸார் கண்ணீர்ப்புகைத்தாக்குதல் நடத்தினர்; இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் கற்களை வீசினர்.

கிரேக்க கலகங்களைத் தூண்டிவிட்ட அடிப்படை பொருளாதார நிலைமை அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன; குறிப்பாக பிரான்சிலும். ஐரோப்பாவிலேயே மிக அதிகமான வகையில் இளைஞர் வேலையின்மை 23 சதவிகிதமாக இருப்பதுடன், சில புறநகர்ப்பகுதிகளில் 35 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது. படிப்பு முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் 20களில் இருக்கும் பிரெஞ்சு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் வேலையின்றி உள்ளனர். ஒரு நிலையற்ற வேலை மற்றும் வேலையின்மை என்பதற்கிடையே ஏதேனும் ஒன்றைக் கொள்ளும் கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

2005ல் போலீசார் விரட்டியதில் ஒரு இளைஞர் உயிரிழந்தபின் பாரிஸ் புறநகரங்களில் வேலையின்மையில் வாடுபவர் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்கள் தொடங்கிய கலகம் 300க்கும் மேலான பிரெஞ்சு நகர்களில் பரவியது. இதற்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கம் ஒரு மூன்றுமாத அவசரகால சட்ட ஆட்சியை அறிவித்ததுடன், மிகப் பெரிய முறையில் போலீஸ் கலகப் பிரிவையும் பயன்படுத்தியது. நவம்பர் 2007ல் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மீது போலீஸ் கார் ஏறிக் கொன்ற விபத்தையடுத்து தப்பியோடியபின் பாரிசில் கலகங்கள் வெடித்தன.

இந்த சமூக பதட்டங்கள் இப்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடி, மிகப் பெரிய பிணை எடுப்புக்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழில்துறை மூடல்கள் ஆகியவை பரவியிருப்பதை அடுத்து தீவிரமடைந்துள்ளன. வேலைகள் இல்லாத அல்லது தொழில் பாதுகாப்பற்ற ஒரு முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றி மாணவர்களின் கவலைகள் மிகவும் அதிகமாகிவிட்டன. மேலும் கல்விச் செலவினங்களில் சில பில்லியன் யூரோக்களை குறைப்பதற்காக ஆசிரியர்கள் வேலை அகற்றப்படும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில், பிரான்சின் வங்கிகளைப் பிணை எடுப்பதற்கு 360 பில்லியன் யூரோக்களுக்கு வழிவகை செய்த விதத்தில் அரசாங்கம் அதன் வர்க்கத் தன்மையை காட்டியுள்ளது.

டிசம்பர் 11ம் தேதித் தலையங்கத்தில் நாளிதழ் Liberation எழுதியது: "பொருளாதார நிலைமை மோசம் அடைந்துள்ளது நீண்ட காலமாக இருக்கும் கஷ்டங்களை அப்பட்டமாகக் காட்டியுள்ளது: குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான மக்கள் வாழும் நிலைமை, அதிலும் குறிப்பாக 20-30 வயதில் இருக்கும் தலைமுறை வாழ்வதும் அதில் ஒன்றாகும்... ஜனாதிபதி அரண்மனையான எலிசே, எழுச்சி பற்றி மிகச் சிறிய குறிப்பு பற்றிக் கூட பெரும் கவனத்துடன் காண்கிறது. இது ஒரு நல்ல முன்னெச்செரிக்கை: பிரிந்துள்ள, அழுத்தத்திற்குட்பட்டுள்ள, பெரும் ஏமாற்றம் அடைந்துள்ள பிரான்ஸும் ஒரு கிரேக்க மாதிரியில்தான் உள்ளது."

சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி Laurent Fabius, "கிரேக்கத்தில் நாம் காண்பது பிரான்சில் நடக்க முடியாது என்பது அல்ல. அத்தகைய பொருளாதார மந்த நிலை இருக்கும்போது, சமூக நம்பிக்கையற்றதன்மை உணர்வு இருக்கும்போது, ஒரு தீக்குச்சி போதும் சமூக வெடிப்பை பற்ற வைப்பதற்கு."

கடந்த இரு ஆண்டுகளில் சார்க்கோசியின் சமூகச் செலவினக் குறைப்புக்களுக்கு எதிராக பலமுறை வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் மதிப்புக் குறைவிற்கு உட்பட்டிருப்பதும் ஒரு கடுமையான மக்கள் உணர்வை தூண்டியுள்ளது. மாணவர்கள் எதிர்ப்புக்களை மாணவர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொள்ளவில்லை.

"ஒரு வெடிமருத்துக் குவிப்பில் நாம் உட்கார்ந்திருக்கிறோம்" என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில் பாரிஸ் பல்கலைக்கழக சமூகவியல் வல்லுனர் Isabelle Sommier இடம் Liberation "தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இந்த பெரும் திகைப்பை திசை திருப்ப முடியுமா?' என்று கேட்டது. அவ்வம்மையார் கூறியது: "அவையே பெரும் சகதியில் நம்பகத்தன்மையை இழந்து, ஆழ்ந்துள்ளன; ஏனெனில் அவற்றால் மாற்றீடு ஏதும் கொடுக்க முடியவில்லை; அதாவது இப்பொழுது இருக்கும் நிலைமையை தக்க வைத்துக்கொள்ளுதல் என்பதற்கு பதிலாக ஒரு முன்னோக்கும் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்கள் திரட்ட முடியும் என்பது உண்மைதான், ஆனால் பல ஆண்டுளாக இது எதிலும் முடியவில்லை. அதையொட்டி சில இளைஞரிடையே நேரடி நடவடிக்கையில் இறங்கலாம் என்ற உணர்வு வந்துவிட்டது."

உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகள் மிகக் கவனத்துடன் கிரேக்கத்திலும் பிரான்சிலும் நடைபெறும் எதிர்ப்புக்களை கண்காணிக்கின்றனர்.

உள்துறை மந்திரி Michele Alliot-Marie யின் உதவியாளர் Le Monde இடம் கூறினார்: "பள்ளிகளை சுற்றி வளர்ந்து வரும் இயக்கங்கள் பற்றி கவனத்துடன் கண்காணித்து வருகிறோம். சூழல் அச்சத்தைத்தான் கொடுக்கிறது; சில நடுத்தர நகரங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன."

பிரெஞ்சு அதிகாரிகள் கலகம் பற்றி அன்றாடத் தகவல்களை கிரேக்க அரசாங்கத்திடம் இருந்து கேட்டு அறிந்தனர். Le Monde எழுதியது: "[பிரெஞ்சு குடியேற்றப்பிரிவு மந்திரி] Brice Hortefeux தான் நன்கு அறிந்துள்ள கிரேக்க உள்துறை மந்திரியுடன் தொடர்பு கொண்டு நிலைமை பற்றி நன்கு கேட்டறிந்தார். பிரான்சில் இந்த நிகழ்வு "கூடுதலாகப் பயன்படுத்தக்கூடும்" என்ற கவலையையும் அவர் கொண்டுள்ளார்.