World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Protest letters against LTTE threats

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கண்டனக் கடிதங்கள்

11 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

"ஐரோப்பாவில் சோ.ச.க. ஆதரவாளர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை எதிர்த்திடுங்கள்!" என்ற தலைப்பில் மார்ச் 9 வெளியான அறிக்கையின் பிரதிபலனாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு கிடைத்த கடிதங்களை இங்கு பிரசுரிக்கின்றோம். தமிழ் சமூகத்தின் மத்தியில் அரசியல் விவாதத்தை நசுக்கும் முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறு கோரி புலிகளுக்கு கண்டனக் கடிதங்களை அனுப்புமாறு நாம் எமது வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பாரிசில் உள்ள பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் [Comité de Coordination Tamoul-France -CCTF] கவனத்துக்கு,

நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். நான் பல ஆண்டுகளாக பிரான்சின் இரண்டாந்தர ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தின் (SNES) பிக்கார்டி பிராந்திய குழுவில் உறுப்பினராக உள்ளேன். நான் எப்போதும் எனது மாணவர்களுக்கு இன மற்றும் தேசிய மூலங்களைக் கருதாமல் அனைத்து மக்களதும் ஜனநாயக உரிமைகளை மதிக்குமாறு கற்பித்துள்ளேன்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாரிஸ் ஆதரவாளர்கள் மீதான சரீர தாக்குதலிலும் அச்சுறுத்தல்களிலும் உங்களது ஆதரவாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

தமிழர்களின் தலைவிதிக்கு எதிராகவும் இலங்கை இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராகவும் பாரிஸ் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்த ஏனையவர்களதும் ஜனநாயக உரிமைகளையும் உங்களது ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஜேர்மனியிலும் உங்களுடைய ஆதரவாளர்கள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறிய பிரதேசத்தில் சிக்கியுள்ள 200,000 தமிழர்களுக்கு எதிராக கொழும்பு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தக் குற்றங்களுக்கு எதிராகவும் மற்றும் யுத்தத்துக்கு ஒரு சோசலிச தீர்வு காணவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் மக்களை தடுக்க நீங்கள் எடுத்துள்ள முயற்சி, தமிழ் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்ற உங்கள் கூற்றை பொய்யாக்குகிறது.

இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் அங்கேலா மேர்கெல்லின் உருவப் படங்களுடனான பெரும் சுலோக அட்டைகளுடன் பாரிஸ் வீதிகளில் உங்களுடைய ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்வதன் மூலம், இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தை மட்டுமன்றி பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தையும் நீங்கள் எதிர்ப்பதை வெளிக்காட்டுகிறது.

உள்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக உரிமைகள் மீதான அவர்களது அரசாங்கத்தின் கடுமையான தாக்குதல்களை நீங்கள் நிராகரிப்பதோடு இந்த ஏகாதிபத்தியவாத மற்றும் இராணுவவாத தலைவர்களுடன் முகத்துதி கூறி தயவைப் பெறுவதன் பேரில் அவர்களை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்கள் என்ற நம்பகத் தன்மையையும் அவர்களுக்கு வழங்க முற்படுகிறீர்கள்.

இலங்கையிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை உங்களது குண்டர்கள் நிறுத்த வேண்டும் எனக் நான் கோருகிறேன்.

டொனி ஷோர்ட்

அமியன், பிரான்ஸ்

* * *

அன்பின் ஐயா,

ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கும் மற்றும் புலிகளை விமர்சிக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் எதிராக விடுதலைப் புலி ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டனம் செய்கின்றேன்.

இலங்கையில் சோ.ச.க. தொடக்கத்தில் இருந்து உத்வேகத்துடன் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து வந்துள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை நிபந்தனையின்றி திருப்பியழைக்கக் கோரும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். இந்தப் பிரச்சாரத்தை அது யுத்தத்தின் மத்தியிலும் மற்றும் அரசின் அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் மத்தியிலும் மற்றும் சிங்களப் பேரினவாதிகளின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் முன்னெடுத்துள்ளது.

இத்தகைய ஒரு சூழ்நிலையின் கீழ், சோ.ச.க. ஆதரவாளர்கள் மீதான விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தாக்குதல்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினதும் ஆளும் தட்டினதும் கைகளில் நேரிடியாகப் பயன்படும். மேலும், தீவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சோசலிசத் தீர்வு காண்பதை புலிகள் முழுமையாக எதிர்ப்பதையே இத்தகைய தாக்குதல்கள் காட்டுகின்றன. புலிகள் சாதாரண தமிழ் உழைக்கும் மக்களை அன்றி தமிழ் முதலாளித்துவ தட்டுக்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதை புலிகளின் நிலைப்பாடு தெளிவுபடுத்துகிறது. சிங்கள முதலாளித்துவத்தைப் போலவே, தமிழ் முதலாளித்துவ தட்டும் தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதில் நிதி மூலதனத்திற்கு உப கொந்தராத்துக்காரணக விரும்புகிறது.

தமிழர்களின் எதிர்காலம் இனவாத பிரிவினைவாதத்தில் அன்றி சோசலிசத்தின் அடிப்படையிலேயே தங்கி உள்ளது.

சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்துவதோடு தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலைத்திட்டங்கள் பற்றிய சுதந்திரமான கலந்துரையாடல்களை அனுமதிக்குமாறும் உங்களைக் கோருகிறேன்.

உண்மையுள்ள,

அ. சாந்தகுமார்,

கொழும்பு மாவட்ட சோ.ச.க. வேட்பாளர்

* * *

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு,

பல ஐரோப்பிய நாடுகளில் சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தது பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வாசித்த பின்னர், ஐரோப்பாவில் தமது அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்துமாறு புலிகள் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என நான் கோருகிறேன்.

இந்த அச்சுறுத்தல் பிரச்சாரமானது, தமிழ் வெகுஜனங்கள் உட்பட சகல உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலாகும். புலிகள் ஜனநாயக விரோதமான முறையில் ஒரு பிரத்தியோக அரசியல் உரிமையை தமிழ் மக்கள் மீது அமுல்படுத்த முயற்சிக்கின்றனர்.

அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாததாலும், வெளிநாட்டில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், அதே போல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் தமது முதலாளித்துவ சார்பு கொள்கைகள் தொடர்பாக குவிந்துவரும் எதிர்ப்பு தொடர்பான பீதியினாலும் புலிகள் வன்முறையை நாடுகின்றனர். மேற்கத்தைய சக்திகளின் தலையீட்டுக்காக அழைப்பு விடுப்பதன் பேரில் வன்னி யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காக, அங்குள்ள சிவிலியன்களை வெளியேற விடாமல் தடுக்க புலிகள் எடுக்கும் முயற்சி இந்த பீதியின் ஒரு பிரதிபலிப்பே ஆகும்.

சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறை, அதன் சோசலிச வேலைத் திட்டம் பற்றிய கலந்துரையாடலை தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும். கொழும்பில் உள்ள சிங்கள மேலாதிக்க அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் சோ.ச.க. யிற்கு நீண்ட வரலாறு உண்டு.

புலிகளால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளை, ஜனநாயக உரிமைகளை காக்கும் அனைவரும் சமரசமின்றி எதிர்ப்பதோடு கண்டனம் செய்ய வேண்டும். எதுவாயினும் இத்தகைய வழிமுறைகளுக்கு தொழிலாள வர்க்கத்தினுள்ளும் உலகில் எங்கென்றாலும் இடம் கிடையாது.

மைக்கல் ஹெட்

சட்டப் துணைப் பேராசிரியர்

மேற்கு சிட்னி பல்கலைக்கழகம்

* * *

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணப்புக் குழுவின் (CCTF) கவனத்துக்கு, "வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்களை வெளியேற்றக்" கோரியும் "இலங்கையில் யுத்தத்துக்கு முடிவுகட்டும் சோசலிச முன்நோக்கு" பற்றியும் மார்ச் 15ம் திகதி நடத்தவுள்ள கூட்டத்துக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது, WSWS மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களை உங்களது குண்டர்கள் தாக்கியுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். இலங்கையில் தமிழர்களின் நிலைமை தொடர்பாக பிரச்சாரம் செய்ய விரும்பும் எந்தவொரு அமைப்பும் CCTF இடம் முதலில் அனுமதி பெறுவதோடு முகவரியையும் கொடுக்க வேண்டும் என அந்தக் குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

WSWS ஆதரவாளர்களுக்கு எதிரான சரீர ரீதியான தாக்குதல் உட்பட, சகலவிதமான அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என நான் இலங்கை மற்றும் பிரான்ஸ் மக்களினதும் மற்றும் ஏனைய அனைத்து மக்களினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கையை முன்வைப்பதில் அடிப்படை ஜனநாயக உரிமையை காக்கும் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

பாரிசில் தமிழ் குழுக்களும் மற்றும் பிரான்ஸ் இடது குழுக்களும் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த கடந்த சனிக்கிழமை நீங்கள் முன்னெடுத்த முயற்சிகளையும் நான் கண்டனம் செய்கின்றேன்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ் அரச அடக்குமுறைகளையும் அதிகரித்து வரும் வறுமையையும் எதிர்கொண்டுள்ள சிங்கள மக்களையும் இந்த இனவாதத்தில் உங்களது ஆதரவாளர்கள் தாக்குகிறார்கள். அதே சமயம், இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரிக்கும் ஏகாதிபத்திய சக்திகளிடம் ஆதரவு கோரி நீங்கள் கெஞ்சுவதோடு, ஜனாதிபதி சார்க்கோசியின் வயிற்றிலடிக்கும் கொள்கைகள் மற்றும் ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை எதிர்த்து அவர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்ட மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக நீங்கள் சார்கோசியின் உருவப்படத்தை உங்களது ஆர்ப்பாட்டங்களில் ஏந்தியிருந்தீர்கள்.

முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசி, தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசை ஸ்தாபிக்க, சிங்கள முதலாளித்துவத்துக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த முயற்சிக்கும் WSWS உடைய முன்நோக்கு மீதான உங்களது பகைமையுடன், உங்களது முதலாளித்துவ, தேசியவாத மற்றும் இனவாத கொள்கைகளும் உடனொத்ததாக உள்ளது.

WSWS ஆதரவாளர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் அந்தத் தாக்குதலுக்கு நீங்களே பொறுப்பாளிகள் என நான் பிரகடனம் செய்கின்றேன்.

லியோன்,

பாரிஸ்

* * *

விடுதலைப் புலிகளுக்கு,

உங்களது ஐரோப்பிய முகவர்கள், ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிரான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக நான் உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக தெரிந்துகொண்டேன். அவர்களது நடவடிக்கை, தமிழர்கள் மட்டுமன்றி சர்வதேச தொழிலாள வர்க்கம் தொடர்பாகவும் உங்களது அமைப்பின் ஜனநாயகமற்ற அடக்குமுறை போக்கை வெளிக்காட்டுகிறது.

பெப்பிரவரியில் பேர்லின், லண்டன், பாரிஸ் மற்றும் ஸ்டுட்கார்டில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (CCT) மற்றும் பிரிட்டிஷ் தமிழர் பேரவை உட்பட பலவித புலி சார்பு அமைப்புக்களின் கண்காணிப்பாளர்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சோ.ச.க. ஆதரவாளர்களை நிறுத்துமாறு கோரியதோடு அங்கிருந்து வெளியேறுமாறும் அச்சுறுத்தினர். மற்றும் அவர்கள் சோ.ச.க. ஆதரவாளர்களை இடித்துத் தள்ளி, வன்முறையுடன் அச்சுறுத்தியதோடு சிங்கள-விரோத இனவாத மொழியிலும் தூற்றினார்கள்.

25 ஆண்டுகால சிவில் யுத்தத்துக்கும் இலங்கை தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கும் முடிவுகட்ட ஒரு சோசலிச தீர்வை அபிவிருத்தி செய்வதன் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டமொன்றுக்காக, பாரிசுக்கு அயலில் உள்ள லா சப்பலில் பிரச்சாரம் செய்யும் சோ.ச.க. ஆதரவாளர்களுக்கு எதிராகவும் அவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சோ.ச.க. ஆதரவாளர்களின் துண்டுப் பிரசுரங்களை அபகரித்து நாசம் செய்த சி.சி.டி. ஆதரவாளர்கள், சி.சி.டி. யின் அனுமதி இன்றி லா சப்பலில் வாழும் தமிழர்களுடன் அரசியல் கலந்துரையாடல் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் பிரச்சாரம் ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலாகும். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல்களை தயாரித்தவர்கள் புலிகளின் ஆலோசனையுடன் செயற்படுபவர்கள் என நான் நம்புகிறேன். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கான கட்சியின் இடைவிடாத போராட்டம் பிரசித்தமானதாகும். இந்நிலையில் புலிகள் சோசலிச சமத்துவக் கட்சியை இலக்கு வைப்பது அசாதாரணமானதாகும்.

நான் ஆஸ்திரேலியாவில் ஒரு ஒய்வுபெற்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியலாளர் ஆவேன். நான் தொலைத்தொடர்பு, மின்னியல் துறையிலும் ஈயத்தொழில் தொழிற்சங்கத்திலும் (CEPU) பல பதவிகளை வகித்துள்ளேன். நான் எனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியில், ஜனநாயக உரிமைகள் மற்றும் சகல தொழிலாளர்களதும் அவர்களது அமைப்புகளதும் -அவர்களோடு உடன்படாவிட்டாலும்- கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

புலிகள் தமிழ் சமுதாயத்தின் மத்தியில் அரசியல் கலந்துரையாடலை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என நான் கோருகிறேன்.

உண்மையுள்ள,

நொயல் ஹொல்ட்,

சிட்னி, ஆஸ்திரேலியா