World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian economy hammered by world economic crisis

உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு பலத்த அடி

By Kranti Kumara and Deepal Jayasekera
12 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தை தொடர்ந்து சீர் குலைத்து வருகிறது; பொருளாதாரத்தின் உடனடி மற்றும் நீண்ட கால வாய்ப்புக்களை பாதிக்கின்றது; மேலும் கிட்டத்தட்ட நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் வேலை இழப்புக்கள் கடுமையானவகையில் பெருக்கியுள்ளது.

சமீப மாதங்களில் பொருளாதாரத்தின் "பூகோளமயமாக்கப்பட்ட" துறைகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வேலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன என்று அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது; இதில் ஜவுளி, விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணம், கார்த் தொழில் மற்றும் வணிக வழிவகைத் தொடர்பு ஆகியவை அடங்கும். தகவல் தொடர்பால் கடல் கடந்து ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் வங்கிகளுக்கு மிக முக்கியமான பகுதியாக இந்தியா உள்ளது; அவ்வங்கிகளோ உலக நிதிய உருகிவழிதலின் மையத்தில் உள்ளன.

வணிக மந்திரியான கமல் நாத் இன்னும் 1.5 மில்லியன் வேலைகள், ஏற்றுமதி சார்பு உடைய தொழில்களில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நீக்கப்பட்டுவிடக்கூடும் என்று எச்சரித்துள்ளார். வேலையின்மை ஏற்றத்தால் சமூக அரசியல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் --இந்திய வாக்காளர்கள் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்ட பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்-- இடைக்கால நிதி மந்திரியான பிரணாப் முக்கர்ஜி சமீபத்தில் முதலாளிகளை வேலை வெட்டுக்களுக்கு பதிலாக, ஊதியங்களைக் குறைக்கும்படியும் பணி நேரத்தைக் குறைக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார். "பல மட்டங்களிலும் ஊதியங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் வேலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று முக்கர்ஜி கூறினார்.

பல நோக்கர்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும் வேலையிழப்புக்கள் பற்றி பெரிதும் குறைந்த மதிப்பீட்டைத்தான் அரசாங்கம் கொடுக்கிறது எனக் கூறியுள்ளனர். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது உண்மையாகும்.

அரசாங்கம் வேலைகள் பற்றி முறையாகத் தகவல் சேகரிப்பது இல்லை --ஒரு தேசிய வேலைபற்றிய கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடத்தப்படுகிறது; 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் "முறை சாரா" பிரிவு என அழைக்கப்படும் பிரிவில் உள்ளனர்; அதாவது அவர்களுக்கு சட்டபூர்வ நலன்கள் ஏதும் கிடையாது; முதலாளிகள் விரும்பினால் அவர்களை பணிநீக்கம் செய்ய முடியும்.

ஜவுளிப்பிரிவு முதலாளிகள், 700,000 வேலைகள் தங்கள் துறையில் 2008ல் அகற்றப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர். அக்டோபர் மாதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 200,000 பேருக்கும் மேலாக உயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் தங்கள் வேலைகளை குஜராத்தின் சூரத் பகுதியில் மட்டும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெப்ருவரி 26ம் தேதியன்று "ஏற்றத்திற்கு ஊக்கம் கொடுத்த இந்திய சிறுநகரங்கள் கடும் பாதிப்பு" என்ற தலைப்பில் லண்டன் பைனான்ஸியல் டைம்ஸ் தென் இந்தியாவில் ஜவுளி மற்றும் கார் உற்பத்தி மையமான கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வேலைகள் அகற்றபட்டபின் திரும்பிவிட்டதாக தகவல் கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) அமைப்பு புதிதாக வேலையிழந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமப்புறக் குடும்பங்களுக்கு திரும்பிவிட்டது கிராமப்புற இந்தியாவில் நீண்டகாலமாக இருக்கும் சரிந்த தன்மையை அதிகப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இந்திய மற்றும் உலக பெருநிறுவன உயரடுக்கு கடந்த நான்கு ஆண்டுகள், 2004-05 தொடங்கி தொடர்ச்சியாக இந்தியா 9 சதவிகித ஆண்டு வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது பற்றி உயர்வாகப் பேசினாலும், இந்தியாவின் ஏற்றத்தின் நலன்கள் கிட்டத்தட்ட முழுமையாக பெருவணிகம் மற்றும் கூடுதல் சலுகை பெற்ற மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளைத்தான் சென்றடைந்துள்ளது. இதற்கிடையில் கிராமப்புற இந்தியா தொடர்ச்சியான இந்திய அரசாங்கங்களின் முதலீட்டாளர் சார்பு கொள்கை தொடரப்படுவதை அடுத்து பெரும் சேதத்திற்கு உட்பட்டுள்ளது. விவசாயத்தில் அரசாங்க முதலீடு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது; அதனால் அரசாங்கங்கள் பெருவணிகம் விரும்பும் பெரும் திட்டங்களை தொடர வரிகளைக் குறைக்க முடியும் என்பதுடன், இந்தியாவை உலகச் சந்தைக்கு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு உற்பத்தி நாடாகவும் செய்ய முடியும். விவசாயப் பொருட்களுக்கான ஆதரவுகள் மற்றும் உரப்பொருட்கள் மற்றும் பல விவசாயத் தேவைகளுக்கான உதவித்தொகைகள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன அல்லது முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. பொதுப் பணிகளின் சிதைந்த நிலை கிராமப் புற வறிய மக்களைக் கூட பெருகிய முறையில் தனியார் துறையை சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றிற்காக நாடும் கட்டாயத்தில் தள்ளியுள்ளது; இது அவர்களுடைய குறைந்த நிதிய வளங்களை இன்னும் குறைக்கிறது.

WFP உடைய "கிராமப்புறத்தில் உணவுப் பாதுகாப்பின்மை பற்றிய அறிக்கை", "உணவு மற்றும் ஊட்ட சக்திப் பாதுகாப்பின்மை"-ன் மட்டம் உயர்ந்துவருவதாகவும், அது 230 மில்லியன் மக்களை பாதிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறது; இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்; மேலும் இன்னும் 350 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பு அற்று உள்ளனர்; அதாவது குறைந்த பட்ச சக்தி தேவையில் 80 சதவிகிதத்திற்கும் குறைவாக நுகர்கின்றனர்."

பல நூறு மில்லியன் மக்கள் மிக வறிய நிலையில் வாழ்கின்றனர் மற்றும் இன்னும் மோசமான வேலையின்மை, நோய்வாய்ப்படல் என்ற ஆபத்துக்களில் தள்ளப்படக்கூடும். இந்தியாவின் மக்கட்தொகையில் 70 சதவிகிதம் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றது.

இந்திய உயரடுக்கின் அபிலாசைகளுக்கு கடுமையான அடி

கடந்த செப்டம்பர் மாத வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் உள்வெடிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைமையில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இந்தியாவின்மீது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மிக மிக குறைவாக இருக்கும் என்று கூறியது. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் தீவிரச் சரிவு மற்றும் ஏற்றுமதிகளில் பெரும் சரிவை இரண்டும் இக்கூற்றுக்களின் நம்பகத்தன்மையை குறைத்துவிட்டன; இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கமும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. கடந்த செப்டம்பரில் இருந்து ரிசேர்வ் வங்கி கடன் கொடுக்கும் விகிதங்களை ஐந்து முறை குறைத்துள்ளது; பெப்ருவரி 24ம் தேதி வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் மீண்டும் போக்கை மாற்றி தொடர்ச்சியான வரிக்குறைப்புக்களை அறிவித்தது; உண்மையில் இது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வந்துள்ள மூன்றாம் ஊக்கப்பொதியாகும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2008 ன் கடைசி மூன்று மாதங்களில் குறைந்து ஆண்டு விகிதத்தில் 5.3 சதவிகிதம் ஆயிற்று என்ற சமீபத்திய அறிக்கை குறிப்பாக, அரசாங்கத்திற்கு தொல்லை தரக்கூடியதாகும். இது அரசாங்கம் கணித்துள்ளதைவிட மிகக் குறைவு என்பதுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மார்ச் 31ல் முடியும் 2008-09 நிதியாண்டில் 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றுபல முறை முந்தைய வாரங்களில் நம்பிக்கையுடன் கூறப்பட்ட அதன் கூற்றுக்களை பொய்யாக்குகிறது.

உற்பத்தித்துறை விளைவு உண்மையில் 2008 கடைசிக் காலாண்டில் 0.2 சதவிகிதம் சுருக்கம் கண்டது; அதேவேளை இந்திய மக்களில் பாதிபேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் விவசாயத் துறையில் உற்பத்தி 2.2 சதவிகித சரிவைக் கண்டது.

2008-09ல் நிதியாண்டில் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் 2008 வரை) மொத்த வளர்ச்சி ஆண்டு விகிதத்தில் 6.9 சதவிகிதம் என இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைசிக் காலாண்டில் இருந்து பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2009 ன் முதல் மூன்று மாதங்களும் தொடர்ந்து குறைந்துவருகிறது என நம்ப இடமுள்ளது. இவ்விதத்தில் 2008-09 வளர்ச்சி விகிதம் அரசாங்கத்தின் ஆரம்ப கணிப்பான 8 சதவிகிதம் என்று இல்லாமல், திருத்தப்பட்ட 7 சதவிகிதம் என்பதில் இருந்தும்கூட குறையக்கூடும்.

ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஐந்தாவது நேரடி மாதத்திலும் சரிந்துவிட்டது. ஜனவரி மாதம் ஏற்றுமதிகள் 16 சதவிகிதம் முந்தைய ஆண்டில் இருந்து குறைந்து $12.3 பில்லியன் ஆகவும் பெப்ருவரியில் 13 சதவிகிதம் குறைந்து $13 பில்லியன் ஆகவும் ஆயிற்று.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் நாட்டின் ஏற்றுமதியில் ஆண்டு வளர்ச்சி 20 சதவிகிதம் அல்லது அதற்குக் கூடுதலான விகிதத்தைப் பதிவு செய்வதை நம்பித்தான் உள்ளது. அரசாங்கம் ஏற்றுமதி இலக்காக 200 பில்லியன் டாலரை இந்த ஆண்டு நிர்ணயித்துள்ளது --இது 2007ல் சீன ஏற்றுமதி மதிப்பில் ஆறில் ஒரு பங்கைவிடக் குறைவு ஆகும்; ஆனால் இது இப்பொழுது கிட்டத்தட்ட 170 பில்லியன் டாலராக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார கண்ணோட்டம் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பு எனத் தோன்றக்கூடும்; ஆனால் பிந்தைய பொருளாதாரங்கள் விரைவில் சுருங்கிக் கொண்டிருக்கின்றன; இந்தியப் பொருளாதாரத்தின் வியத்தகு குறைந்த வேகம் இந்தியாவை ஒரு உலக சக்தியாக ஆக்கும் இந்திய முதலாளித்துவத்தின் விழைவிற்கு ஒரு அடி கொடுத்துள்ளது; ஐயத்திற்கு இடமின்றி இது வெடிப்பு தரக்கூடிய வர்க்க முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

"நாடு இறுதியில் வலுவான, தொடர்ச்சியான தொழில்துறை விரிவாக்கத்தை அடைந்து விட்டது என்று பேசப்படுவது இப்பொழுது மங்கிய நினைவாகப் போய்விட்டது" என்று HSBC யில் மூத்த ஆசியப் பிரிவு பொருளாதர வல்லுனராக இருக்கும் Robert Prior-Wandesforde பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்.

இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் பலமுறையும் இந்தியாவிற்கு 8 சதவிகித வளர்ச்சி இருந்தால்தான், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் ஒருபுறம் இருக்க, அது சீனா மற்றும் பிற ASEAN நாடுகளுடன் சமமாக வரமுடியும் என்றார். அதேபோன்ற முக்கியத்துவத்தின் அவர் தொடர்ச்சியான "மக்கள் தளத்தை" சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகத் தக்க வைப்பதற்கு --அதாவது இந்தியாவை குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு இருக்கும் உற்பத்தி நாடாக உலக முதலாளித்துவத்திற்கு மாற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் உந்துதலுக்கு-- உயர்ந்த வளர்ச்சி விகிதம் வேண்டும் என்றும் கூறினார்.

இல்லாவிடின், வரவிருக்கும் ஆண்டுகளில் தொழிலாளர் தொகுப்பில் சேர இருக்கும் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பது கடினமாகிவிடும்; இந்த கூடுதல் எண்ணிக்கைக்கு காரணம் மக்கட்தொகை வளர்ச்சி மற்றும் விவசாய சிறு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரையும், குடும்பத்திற்கு சொந்தமான கடைகள், உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்களையும் முன்னேறிய முதலாளித்துவ வழிவகைகளில் ஈடுபடுத்திவிடும் முதலாளித்துவ வர்க்கத்தின் உந்துதலாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் திட்டக்குழு இந்தியா 6.5 ஆண்டு சதவிகித வளர்ச்சியை மட்டும் பெற்றால், அதன் வேலையின்மை விகிதம் இன்னும் அதிகமாகும், மற்றும் ஒரு 70 மில்லியன் மக்கள் 2012 ஐ ஒட்டி வேலையின்மைக்குத் தள்ளப்படுவர் என்று எச்சரித்திருந்தது.

பெருவணிகத்தின் அழுத்தத்தின் விளைவாக UPA அரசாங்கம் ஒரே நேரத்தில் மூன்று ஊக்கப் பொதிகளை அறிவித்துள்ளது; ஆனால் பெரும்பாலான ஊக்கப் பொதி பெருவணிகத்திற்கு வரி வெட்டுக்கள் என்ற விதத்தில்தான் உள்ளன.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் --வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து பல பில்லியன்களை திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டனர்-- அரசாங்கம் அந்நிய முதலீட்டில் இருந்த வரம்புகளை உயர்த்தியுள்ளது.

முதல் ஊக்கப் பொதி, டிசம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, பொதுச் செலவினங்களை $4 பில்லியன்தான் அதிகமாக உயர்த்தியது. ஜனவரி மாத பொதியில் அதிக செலவினம் எதுவும் சேர்க்கப்படவில்லை. எப்படிப் பார்த்தாலும், பல அரசாங்க ஊக்கப் பொதிகளும் அரசாங்கச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் அதிகப்படுத்தியுள்ளன.

மே 2004ல் இருந்து கடந்த ஆண்டு ஜூன் வரை பாராளுமன்றத்தில் UPA க்கு முட்டுக் கொடுத்து நின்ற ஸ்ராலினிச இடது முன்னணி, அரசாங்கம் நிதிய பிற்போக்குத்தனத்தை கையாள்கிறது என்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தின்மீது கூறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான UPA பெருவணிகத்தின் தேவைகளை நிறைவேற்றுகிறது என்பதில் ஐயமில்லை; அதுவோ ஊக்கப்பொதியின் நலன்கள் அனைத்தையும் தானே பெற விரும்புகிறது; கணிசமான அளவு அரசாங்க நிதிகள் வருமான ஆதரவிற்காகவோ அல்லது அரசாங்கம் நடத்தும் உள்கட்டுமானத் திட்டத்திற்கோ செலவு செய்யப்படுவதை விரும்பவில்லை.

ஆனால் மொத்த ஊக்கப் பொதியின் சிறிய அளவு --வரி வெட்டுக்கள் மற்றும் செலவின அதிகரிப்புக்கள் இணைந்தது-- அரசாங்கத்தின் பிற்போக்குத்தன்மையை காட்டும் நடவடிக்கை அல்ல; இந்திய நாடு மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் குறைந்த வளங்களின் நிதிய நெருக்கடியைக் காட்டுவதும் ஆகும்.

பொருளாதார நெருக்கடி இந்திய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையையும் மிக அதிகமாக ஆக்கியுள்ளது. அரசாங்கம் 2008-09 ல் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதத்திற்கு சமமாக இருக்கும் என்று கணித்துள்ளபோது, கடந்த மாத இடைக்கால வரவு-செலவுத் திட்டம் இது இன்னும் அதிகமாக 6 சதவிகிதத்திற்கு உயரலாம் என்று ஒப்புக் கொண்டு, பற்றாக்குறை வரவிருக்கும் ஏப்ரலில் நிதிய ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவிகிதம் வரக்கூடும் என்று தெரிவிக்கிறது. இந்தப் பிந்தைய கணிப்பு கூட இந்தியப் பொருளாதாரம் இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் இருண்ட நிலையில் மிக அதிகமான நம்பிக்கையைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் மொத்த பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியின் விகிதத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக, வளர்ந்துவிட்டது. 2007-08 நிதிய ஆண்டில் 5.7 என்று இருந்த நிலை இப்பொழுது, 2008-09ல் 11.5 என ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதிய நிலைமையில் ஏற்பட்டுள்ள விரைந்த சரிவு உலகின் முக்கிய பத்திரங்களை மதிப்பிடும் முகவாண்மைகளை, அவை இந்தியாவின் கடன் நேர்மை தரத்தை விரைவில் குறைக்க நேரிடும் என்று எச்சரிக்க வைத்துள்ளது. இந்திய வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, Standard and Poor நிறுவனம் இந்தியாவின் கடன் நிலை தாக்குப்பிடிக்கக்கூடியதல்ல என்றும், இந்திய கடன் நிலைமை "எதிர்மறையாக உள்ளது" என்றும் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டது; இந்தியாவின் கடன் தரத்தை தற்போதைய நிலையான BBB- ல் இருந்து குப்பை மதிப்பு என்று அது விரைவில் மாற்றக்கூடும் என்றும் கூறியுள்ளது; BBB- தரமதிப்பீட்டில் மிகக் குறைந்த முதலீட்டுத் தரம் ஆகும்.

UPA மந்திரிகள் இந்தியாவின் நிதிய நிலை மோசமாகியுள்ளது ஒரு தற்காலிக நிகழ்வுதான் என்று உறுதியாகக் கூறுகின்றனர்; "இந்த ஆண்டில் நிலைமை சாதாரண நிலைக்கு வராது" என்று முக்கார்ஜி தன்னுடைய வரவு-செலவுத் திட்ட உரையில் கூறினார். "எனவே மிக அதிகமான நிதியப் பற்றாக்குறை தவிர்க்கப்பட முடியாதது ஆகும். பொருளாதார மீட்பிற்கு பின்னர், பொருளாதரம் அதன் சமீபத்திய வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிய பின்னனர் நாம் மீண்டும் கடுமையான நிதிய இலக்குகளை நிர்ணயிப்போம்" என்றார்.

ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடி, விரைவான பொருளாதார வளர்ச்சி உடனடி மீட்பிற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை. எப்படிப்பட்ட அரசியல் வண்ணம் கொண்டிருந்தாலும், அடுத்து வரவிருக்கும் அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனங்களால் பொது நலச் செலவை வியத்தகு அளவிற்கு குறைக்கும் கட்டாயத்திற்கு உட்படும்; இதையொட்டி இந்தியாவின் வறிய உழைப்பாளிகளுக்கு இன்னும் பேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்படும்.