World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Poverty, unemployment and homelessness hit Japanese workers

வறுமை, வேலையின்மை மற்றும் வீடில்லா நிலை ஜப்பானிய தொழிலாளர்களைத் தாக்குகிறது

By Carol Divjak
26 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஏற்றுமதிகளின் சரிவு மற்றும் ஆழ்ந்த மந்தநிலைக்கு இடையே ஜப்பானில் நூறாயிரக்கணக்கான மக்கள் வேலையின்மை மற்றும் வறுமையை எதிர்கொள்ளுகின்றனர். சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் இந்த ஆண்டு 5.8 சதவிகிதம் சரிவடையும் என்று கணித்துள்ள நிலையில், பெரும் நிறுவனங்கள் மிகப் பெரும் வேலை நீக்கங்களை அறிவித்துள்ளன.

ஏற்றுமதிகள் தடையற்ற சரிவில் உள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது பெப்ருவரி 49.4 சதவிகிதம் என்ற மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது. கார் ஏற்றுமதிகள் 70 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துவிட்டன. கார்த் தொழில் பிரிவில் 5.1 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். உற்பத்தியோ ஆண்டுக் கணக்கின்படி ஜனவரி மாதம் 41 சதவிகிதம் குறைந்துவிட்டது. 1967ல் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டுவருவதில் இருந்து இது மிகத் தீவிர சரிவு ஆகும்.

ஜப்பானின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனமான டோயோடா, அமெரிக்க நிதிய நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்து 9000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, அதன் தொழிலாளர் பிரிவில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். 59 ஆண்டுகளில் டோயோடா முதல் தடவையாக ஆண்டு இழப்பு என்பதை பெப்ருவரி மாதம் பதிவு செய்தது. உலக தேவையில் கூடுதலான சரிவு இருப்பதை எதிர்பார்த்து, நிறுவனம் அதன் 12 உள்நாட்டு ஆலைகளை மூடும் திட்டங்களைக் கொண்டுள்ளது.

மார்ச் 22ம் தேதி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள டோயோடா நகரில் உள்ள நிலைமை பற்றி குறிப்பிட்டுள்ளது. 80 சதவிகித ஊழியர்கள் அங்கு கார்த்தொழில்பிரிவில் வேலை பார்க்கின்றனர். காலியான வேலையிடங்கள் நகரத்தில் 2007இன் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2008 கடைசி காலாண்டுப்பகுதியில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக இல்லாமற்போயின. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை போன ஆண்டை விட ஜனவரியில் 130 சதவிகிதம் அதிகமாயிற்று.

நகர அரசாங்கம் தனக்கு கிடைக்கும் பெருநிறுவன வரிகளில் இந்த ஆண்டு 96.3 சதவிகிதம் குறைவை எதிர்பார்த்திருக்கையில், பொதுப் பணிகள் கடினமான பாதிப்படையும். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் "சொத்துக்கள் விற்பனை, வெறுமே இருக்கும் கடையின் முற்பகுதிகள், மக்களில்லாத உணவு விடுதிகள் என்று நகரம் சரிவுற்ற நிலையின் அழுத்தங்களை தெளிவாக காண்கிறது." இதைத்தவரி, வெளிநாட்டு வணிகர்களும் அநேகமாக மறைந்துவிட்டனர்; சில உல்லாசவிடுதிகளில் தங்குபவர் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துவிட்டது'' என குறிப்பிடுகிறது.

ஜப்பானின் மற்ற நன்கு அறியப்பட்ட சர்வதேச நிறுவனங்களான Honda, Nissan, Sony, Panasonic, Cannon போன்றவையும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளன. கிட்டத்தட்ட 400,000 தற்காலிக தொழிலாளர்கள் டிசம்பரிலும் இந்த காலாண்டிலும் வேலையை இழந்திருப்பர் என்று Japan Manufacturing Outsourcing Association என்ற அமைப்பு கூறியுள்ளது. அவர்களுள் கிட்டத்தட்ட 30,000 பேர் வீடும் இழந்திருப்பர்.

உத்தியோகபூர்வ வேலையின்மை 0.5 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்து டிசம்பர் மாதம் 4.4 சதவிகிதம் என்று ஆயிற்று. இது 42 ஆண்டுகளில் மோசமான மாதாந்த அதிகரிப்பு ஆகும். இப்புள்ளிவிவரம் 2.7 மில்லியன் மக்கள் வேலையில் இருந்து அகற்றப்பட்டதைக் காட்டுகிறது. இது 390,000 என்று கடந்த ஆண்டு இருந்ததில் இருந்து இந்நிலைக்கு வந்துள்ளது. ஜப்பானின் சமீபத்திய உயர்மட்ட 5.5 சதவிகிதம் என்று 2003ல் இருந்ததைவிட குறைவு என்றாலும், ஜப்பானில் வேலையின்மை என்பது மிக விரைவாக அந்த அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெருநிறுவன வேலை நீக்கம் தொடக்கத்தில் பாதிப்பிற்கு உட்படக்கூடிய தற்காலிக தொழிலாளர்கள் மீது குவிப்பு காட்டுகிறது. "முறை சாரா" தொழிலாளர் பிரிவு தொழிலாளர் சந்தை சட்டங்களால் 1999, 2004ல் தோற்றுவிக்கப்பட்டது. இது நிறுவனங்கள் குறைவூதிய தற்காலிக தொழிலாளர்களை முழுநேர தொழிலாளகளை அகற்றி வேலைக்கு வைக்க அனுமதித்தது. இந்த மாற்றம் ஜப்பானிய வணிகத்தை நீடித்த சரிவில் இருந்து 1990களில் மீள்வதற்கு உதவியதுடன், அதே நேரத்தில் வாழ்க்கைக்கால வேலை என்பதை இல்லாதொழித்தது. அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சலுகையாக அறிமுகமாகியிருந்தது.

இதன் விளைவாக 55.3 மில்லியன் என்று உள்ள ஜப்பானிய தொழிலாளர்களில் இப்பொழுது 34.5 சதவிகிதத்தினர் தற்காலிக அல்லது பகுதி நேர தொழிலாளர்களாக உள்ளனர். வறுமையின் அளவுகள் வியத்தகு முறையில் பெருகிவிட்டன. உத்தியோகபூர்வ தகவல்கள் "வேலை செய்யும் ஏழைகளின்" எண்ணிக்கையை --2 மில்லியன் யென்னுக்கும் குறைவாக ஆண்டிற்கு சம்பாதிப்பவர்கள்" 1997ல் 5 மில்லியனில் இருந்து 2007ல் 10 மில்லியன் என்று இரு மடங்காகியுள்ளனர். ஜப்பானிய வீடுகளில் 4.3 மில்லியன், அதாவது மொத்தத்தில் 8.1 சதவிகிதம் 2007ல் ஒரு மில்லியன் யென்னுக்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கின்றனர்.

தற்காலிக தொழிலாளர்கள் இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களால் சுரண்டப் படுகின்றனர். 2002ல் இருந்து தற்காலிக வேலை கொடுக்கும் அமைப்புக்கள் வெடித்ததில் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. இந்த இடைத்தரகர்கள் பெருநிறுவனங்களை ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்பு அளிப்புக்கள் கொடுக்காமல் வேலைக்கு இருத்த அனுமதிப்பதுடன், அவர்கள் நினைத்த போது பதவியில் இருந்து அகற்றவும் படலாம்.

மில்லியன் கணக்கான இளந்தொழிலாளர்கள் "freeters" என அழைக்கப்படுபவர்கள் (ஜேர்மன் சுதந்திரமான தொழிலாாளர் என்பதில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது) ஒரு குறைவூதிய, பகுதி நேரத் தொழிலில் இருந்து மற்றதிற்கு செல்லுகின்றனர். freeters ஐ தவிர NEET க்கள் (not in emplolyment, eduction or training - வேலை, கல்வி, பயிற்சி எதிலும் இல்லாதவர்கள்) தற்போதைய சமூக அமைப்பு முறையில் எங்கும் இடமின்றி உள்ளனர்.

Associatied Press கடந்த மாதம் Young Contingent Workers Union அமைப்பாளர் Makoto Kawazoe ஐ பேட்டி கண்டது; எப்படி தற்காலிக தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதிய ஆலை வேலைகள் கொடுக்கப்படுகின்றனர், அவற்றில் சராசரி அடிப்படை மாதாந்திர ஊதியம் 150,000 யென்கள்தான் ($1,650), செலவுகளைச் சமாளிக்க மட்டுமே போதுமானதை பெறுகின்றனர் என்று அவர் விளக்கினார். "அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு நிறுவனம் கொடுக்கும் வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்படும்போது, அவர்களிடம் ஒரு சேமிப்பும் கிடையாது" என்று Kawazoe கூறினார். "வேலை தேடிக்கொடுக்கும் நிறுவனங்களைத்தான் மற்றொரு வேலைக்கு அவர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. அங்கு படுக்கையும் வழங்கப்படும். இத்தகைய வட்டத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் மீள்வது மிகக் கடினம்."

"ஒரு அறையுடன் வேலை" என்பது வீடு தேடும் நேர இழப்பின்றி முதலாளிகளுக்கு உடனடியாக வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை வேலை தேடிக்கொடுக்கும் நிறுவனங்கள் கொடுக்கும் முறையாகும்; அவர்கள் வீடு தேடி அலைய வேண்டியதில்லை; அதே நேரத்தில் தொழிலாளர்கள் இந்த குறைவூதிய "முறைக்குள்ளேயே" இருப்பர் என்று Kawazoe விளக்கினார்.

The International Herald Trubune கடந்த மாதம் தற்காலிக தொழிலாளியில் ஒருவரான Koji Hirano கதையைத் தெரிவித்தது. 1,100 சக ஊழியர்களுடன் இவரும் கடந்த அக்டோபர் மாதம் Oita நகரில் உள்ள ஒரு Cannon டிஜிட்டல் புகைப்பட ஆலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். நிர்வாகம் தொழிலாளர்களை உடனடியாக நிறுவன வீடுகளைக் காலிசெய்ய சொன்னது. குறைந்த மாதாந்திர ஊதியங்களில் இருந்து எந்த சேமிப்பும் இல்லாத நிலையில் ஹிரானோ வீடற்ற நிலையை எதிர்கொண்டார். "குளிரில் இறப்பதற்கா எங்களை வெளியே அவர்கள் விரட்டப் போகிறார்கள்" என்று செய்தித்தாளிடம் அவர் கூறினார்.

தமக்கு வேலை தருமாறு Cannon நிர்வாகிகளுக்கு தானும் மற்ற நீக்கப்பட்ட தொழிலாளர்களும் எழுதிய கடிதத்தை கொடுக்க ஹிரானோ முற்பட்டார். ஆனால் அதற்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை. மக்கள் எதிர்ப்பிற்கு பின்னர் (இந்த விஷயம் பிரதம மந்திரி டாரா அசோ வரை சென்றது) தொழிலாளர்கள் இறுதியில் ஒரு சில கூடுதலான மாதங்களுக்கு அவர்களுடைய ஒற்றை அறை வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த Cannon தொழிலாளர்களின் வருங்கால நிலை இருண்டுள்ளது. பல வேலைகளுக்கும் விண்ணப்பித்த பின்னர் வெற்றியளிக்காமல், ஹிரானோ மற்றும் பிறரும் சமூக நல அமைப்புக்களுக்கு சென்றனர். அரை டஜன் விண்ணப்பங்கள் இரு மாத காலத்தில் நிராகரிக்கப்பட்டன. காரணம் அவர்கள் வேலை பெற தக்க முயற்சி எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அதிகாரிகள் இத்தொழிலாளர்கள் வேலையற்றோருக்கான கொடுப்பனவுகளைப் பெற தகுதியற்றவர்கள் என்று வலியுறுத்தினர். ஏனெனில் கானனில் அவர்கள் ஓராண்டிற்கும் குறைவாகத்தால் வேலை செய்திருந்தனர் என காரணம் காட்டினர்.

ஆனால் இந்த நலன்களைப் பெறுவதற்கு ஒரு தொழிலாளி ஒரே வேலையில் ஓராண்டிற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். வேலை ஒப்பந்தங்கள் இரு மாதங்களுக்குத்தான் என்றுள்ள நிலையில் குறைந்தது ஜப்பானின் 17.8 மில்லியன் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வேலையிழந்தால் சமூகநல வசதிகள் கிடைக்காது என்று தொழில் அமைச்சரகம் கூறியுள்ளது. மக்கள் சீற்றத்தை எதிர்கொள்கையில் அரசாங்கம் நலன்கள் பெறுவதற்கான இந்தத் தகுதிக்காலத்தை ஒரே வேலையில் ஆறு மாதங்கள் இருக்கவேண்டும் என்று ஏப்ரல் 1 இருந்து குறைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது.

Cannon தொழிலாளர்களின் விதி மில்லியன் கணக்கான மற்ற தொழிலாளர்களுடைய வாழ்க்கையின் ஒரு துளி போன்றதுதான். இந்தக் கதைகள் செய்தி ஊடகத்தில் புறக்கணிக்கப்படுகின்றன. தற்கொலை செய்துகொள்ளல் பெருகிவரும் சூழல் பொருளாதாரப் பெரும் திகைப்பின் மற்றொரு அடையாளக் குறிப்பு ஆகும். போலீஸ் கொடுத்துள்ள 2007ம் ஆண்டிற்கான புள்ளவிவரங்கள் மொத்த 33,903 தற்கொலை செய்து கொண்டவர்களில் 57 சதவிகிதம் வேலையின்மையில் வாடியவர்கள் என்று தெரியவந்துள்ளது. அந்த அளவு இப்பொழுது உலக நிதிய நெருக்கடி வெடித்தபின் இன்னமும் அதிகரித்திருக்கக்கூடும்.

புத்தாண்டு விடுமுறை நாட்களில் வேலையிழப்புக்களை அடுத்து கிட்டத்தட்ட 500 முன்னாள் தற்காலிக தொழிலாளர்கள், தொழில் அமைச்சரகத்திற்கு அருகில் உள்ள டோக்கியோ நகரத்தில் ஹிபியா பார்க் இல் கூடாரம் அமைத்திருந்தனர். இப்பகுதி மக்கள் இந்நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க குழுமினர். அதிகமாக குவிந்த மக்களை சமாளிக்க அதிகாரிகள் அருகில் இருந்த பொது உடற் பயிற்சிக் கூடத்தை திறக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். இதன் பின்னர் அரசாங்கம் டோக்கியோவில் 4,000 பேருக்கு காலியாக இருக்கும் பொது வீடுகளைக் கொடுக்கும் கட்டாயத்திற்கும் உட்பட்டது.

சமூக அதிருப்தி பெருக்கத்தை கண்டு அச்சுறும் தாராளவாத ஜனநாயக கட்சி (Liberal Democratic Party-LDP) அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.6 மில்லியன் வேலைகளை தோற்றுவிக்க உறுதிமொழி கொடுத்துள்ளதுடன், மேலும் தங்கள் தொழிலாளளை தக்க வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கு உதவித் தொகை அளிப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால் பெரு வணிகம் ஜப்பானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 170 சதவிகிதமாகவுள்ள பாரிய அரச கடனை குறைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவருகையில், இத்தகைய மிகப் பெரிய சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாது.

எந்த ஜப்பானிய அரசாங்கமும் சமூக பாதுகாப்பு வலையை போதுமான அளவிற்கு எப்பொழுதும் கொடுத்தது இல்லை. பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுழைப்புக்குமான அமைப்பின் (OECD) கருத்தின்படி ஜப்பான் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவிகிதம்தான் சமூக நலன்களுக்கு செலவிடுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நிறுவனங்களை மையமாககொண்ட, வாழ்நாள் முழுவதற்குமான வேலை முறை வளர்க்கப்பட்டது. இதற்கு நிறுவனங்கள் ஓய்வூதியம் மற்றும் பிற நலன்களின் பொறுப்பை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் இந்த முறை இப்பொழுது பெரிதும் சிதைந்துவிட்ட நிலையில் உள்ளது.

பெருநிறுவன பணிநீங்கங்கள் உலக சரிவு நிலை ஆழ்ந்து போயிருக்கையில், நிலையான தொழிலாளர்கள் மீதும் படரத் தொடங்கிவிட்டது. Sony உலகளவில் 16,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதுடன், (நிரந்தர தொழிலாளர்களில் பாதிபேர்) இதைத்தவிர அதன் முழுநேர தொழிலாளகளுக்கு ஓராண்டிற்கு ஊதிய முடக்கத்தை விதித்துள்ளது. பல மின்னியக்க நிறுவனங்களான Toshiba, Sharp, NEC உட்பட பல நிறுவனங்களும் பல தசாப்தங்களாக இருந்த பழக்கமான ஆண்டு முடிந்ததும் ஊழியர்களின் மூப்புத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இயல்பான ஊதிய உயர்வுகள் கொடுப்பதை நிறுத்த உள்ளன.

ஆனால் அனைத்துப் பொருளாதார குறிகாட்டுதல்களும் ஒரு ஆழ்ந்த, நீடித்த வீழ்ச்சியை காட்டுகையில் இன்னும் மோசமான நிலைமைதான் இனி வரவிருக்கிறது.