World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Opportunist "lefts" unite with CGT to derail fight for jobs

பிரான்ஸ்: சந்தர்ப்பவாத "இடதுகள்" CGT உடன் இணைந்து வேலைகளுக்கான போராட்டத்தை தடம்புரள வைக்கின்றன

By Pierre Mabut
24 September 2009

Use this version to print | Send feedback

அண்மையில் மோட்டார் தயாரிப்புத் தொழில்துறை தொழிலாளர்கள், ஆலை மூடல்களுக்கும் ஏராளமான பணிநீக்கங்களுக்கும் எதிராகப் போராடுகையில், Lutte Ouvriere (LO) மற்றும் New Anti-Capitalist Party (NPA) போன்ற மத்தியதர வர்க்க சந்தர்ப்பவாதிகளினால் உதவியும் ஊக்கமும் பெறும் தொழிற்சங்கங்கள், எப்படி தொழிலாளர்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச்செல்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றது.


கொன்டினென்டல் பதாகை: "போக்கிரிப் பங்குதாரர்களுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்" என்று ஜேர்மனிய, பிரெஞ்சு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் ஸ்ட்ராஸ்போர்க்: "பங்குதாரர்கள் செல்வத்திற்கு என்று இல்லாமல் எங்களுடைய வேலைகள் மற்றும் ஊதியங்களுக்கு உத்தரவாதம் தருக".

செப்டம்பர் 17ம் தேதி பாரிசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் முழுவதில் இருந்தும் 3,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மிக உறுதியோடும் சிலர் பெருந்திகைப்புடன் கூடிய போராட்டங்களை தங்கள் வேலைகளைக் காப்பாற்ற நடத்துகின்றனர். பொதுவாக இப்போராட்டங்கள் தொழிற்சங்க கூட்டமைப்புக்களால் காட்டிக் கொடுக்கப்படுகின்றன; அவை இவற்றை தனித்தனி ஆலை ஆர்ப்பாட்டம் என்று தனிமைப்படுத்தி மிக அற்பமான பணிநீக்க இழப்பீட்டிற்கு வேலைகளை விற்று விடுகின்றன.

அமியானில் இருக்கும் Goodyear டயர்களின் CGT தொழிற்சங்கத்தால் ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்ப அழைப்பு விடப்பட்டது; அங்கு 817 தொழிலாளர்கள் வேலை நீக்க அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். CGT என்னும் பிரான்சின் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களில் ஒன்று PCF கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிக நெருக்கமானது.

இந்த அழைப்பிற்கு உடனடியான ஆதரவு Clairoix இல் உள்ள பணிநீக்கம் செய்யப்பட்ட கொன்டினென்டல் டயர் தொழிலாளர்களிடம் இருந்த வந்தது. அவர்களில் ஆறுபேர் நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றவர்கள்; மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாத தண்டனையும் அபராதங்களும் அவர்கள் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கையில் அரசாங்க அலுவலகங்களை சேதப்படுத்தியதற்கு கொடுக்கப்பட்டன. இப்பொழுது அவர்கள் தண்டனையை எதிர்த்து முறையீடு செய்துள்ளனர்.

அணிவகுப்பில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பிரதிநிதிக்குழுக்கள், கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் Peugeot, Renault, ஸ்ட்ராஸ்போர்க்கில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், பிளோங்போர்ட்டில் இருக்கும் போர்ட், டெல்பி, வாகன் மற்றும் மிஷ்லன் டயர் (Montceau-les-Mines), Freescale (Toulouse), New Fabris மற்றும் Molex நிறுவனங்களில் இருந்து வந்திருந்தன.

New Fabris தொழிலாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு தங்கள் ஆலையை தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, இப்பொழுது ஒரு பணிநீக்க திட்டத்தை ஏற்றுள்ளனர். Molex தொழிலாளர்கள், 11 மாத காலப் போராட்டத்திற்கு பின்னர், தயக்கத்துடன் CGT இன்னும் பிற சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அணிவகுப்பிற்கு இரண்டு நாட்கள் முன்புதான் பெற்ற முடிவுத் தொகுப்பை ஏற்க வாக்களித்தனர். இந்த உடன்பாட்டில் 283 தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுதல், நிறுவனத்தில் உழைத்த ஓராண்டிற்கு ஒரு மாத பணிநீக்க இழப்பீட்டுத் தொகை ஆகியவை உண்டு. தொழில்துறை மந்திரி Christian Estrosi, Molex பேச்சுவார்த்தைகளில் தொடர்புடையவர் இதை ஒரு "நேரிய விளைவு" என்று விளக்கியுள்ளார்.

கார்த் தொழிலாளர்களிடையே கடுமையான கசப்புணர்வு தங்கள் வேலைக்காப்பு, பணியிடங்கள் காப்பு ஆகியவற்றிற்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் கைவிட்டுவிட்டது பற்றி உள்ளது. பாரிசில் எதிர்ப்பு முடிந்தவுடன் பெரும் ஏமாற்றத்திற்கு உட்பட்ட கூறுபாடுகள் பங்குச் சந்தைக் கட்டித்திற்குள் நுழைந்து சுவர் முழுவதும் முதலாளித்துவ எதிர்ப்பு வாசகங்களை எழுதி வைத்தனர்.

கொன்டினென்டல் Clairoix, அமியான் Goodyear ஆகியவற்றின் அழைப்பில் மோட்டார் தொழிலின் CGT கூட்டமைப்புக்கள் பாரிஸ் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்; அதைத்தவிர, முதலாளித்துவ "இடது" கட்சிகளின் முக்கிய பிரிவுகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். இவர்களுள் பசுமைக் கட்சியின் Cecile Duflot, PCF ன் Pierre Laurent, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அரசாங்க மந்திரியும் இடது கட்சியின் நிறுவனருமான Jean-Luc Melenchon, மற்றும் வலதுசாரி சமூக ஜனநாயகவாதி Arnaud Montebourg ஆகியோரும் இருந்தனர்.

Lutte Ouvrière இன் Arlette Laguiller, NPA யின் பெசன்ஸநோ ஆகியோரும் அணிவகுப்பில் முக்கியமாக இருந்தனர்; அவர்களுடைய அமைப்புக்களும் வலுவாக பங்கு பெற்றிருந்தன. தொழிலாளர்கள் கொண்டிருந்த அடக்கி வைத்துள்ள சீற்றத்தை கட்டுப்படுத்தி அவர்களை தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தாழ்த்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

CGT தலைவர் Bernard Thibault க்கு எதிராக சீற்றம் பெருகியிருந்தது; அவர் கிட்டத்தட்ட அன்றாட நடவடிக்கையாக வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் பொருளாதார நெருக்கடியின் இழப்பை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்ற திட்டங்களுக்கு வெளிப்படையான ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். ஆலைகளில் நடக்கும் தொழிலாளர்களுடைய போராட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் எதிர்க்கிறார்.

"இழிந்தவர்" என்று Clairoix CGT தலைவர் சேவியர் மாத்யூவினால் விவரிக்கப்படும் Thibault ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களில் முக்கியமானவர்; Mediapart பேட்டியாளரிடம் தனக்கு மற்ற வேலைகள் இருப்பதாக அவர் கூறிவிட்டார். "எங்கள் பணி இன்னும் கடினமானது, ஏனெனில் CGT உறுப்பினர்கள் தொழிற்சங்க முறையில் இருந்து மிக அதிகம் எதிர்பார்க்கின்றனர்." என்றார் அவர்.

கார் மற்றும் கார் பாகங்கள் தயாரிப்பு தொழில்கள் மந்த நிலையினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. தொழில்துறையில் இதையொட்டி நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து 150,000 வேலையிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக CGT தெரிவிக்கிறது. CGT உலோக மற்றும் இரசாயன கூட்டமைப்புக்களின் தலைமைகள் தேசிய உள்ளூர் மட்டங்ளில், கீழிருந்து வந்துள்ள அழுத்தத்தை ஒட்டி கூட்டமைப்புத் தலைமையில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ள முயல்கின்றன. ஆனால் கூட்டமைப்பு தலைமையுடன் இயைந்த வகையில் செப்டம்பர் 17 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு எதுவும் தங்கள் உறுப்பினர்களை கேட்டுக் கொள்ளவில்லை.

ஸ்ராலினிச PCF இன் செய்தித்தாளான l'Humanite செப்டம்பர் 17 எதிர்ப்பில் CGT கூட்டமைப்புக்களின் தலைமை இருந்ததற்கு காரணத்தைக் கூறியுள்ளது. "அக்டோபர் 7, 22 ஆகிய நாட்களில் நடக்க இருக்கும் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை நாடுவதற்கு" என்று அது கூறியுள்ளது. அக்டோபர் 7ம் தேதி, "கெளரவமான வேலைக்கு" சர்வதேச தொழிற்சங்க நாள் ஆகும்; அக்டோபர் 22 "தொழில்துறையின் தேவைகள் தினம்" ஆகும். இது அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மாநாட்டிற்கான தயாரிப்பை நடத்தும்; இது சார்க்கோசிக்கு CGT யின் Thibault ஆல் முன்வைக்கப்பட்ட திட்டம் ஆகும்; இது உலக நெருக்கடியில் பிரெஞ்சு தொழில்துறைக்கு ஊக்கம் கொடுக்கும் கொள்கைகளை இயற்ற உதவும்.

வேறுவிதமாகக் கூறினால் பாரிஸ் ஆர்ப்பாட்டம் இழிந்த முறையில தீபோ இன்னும் பிற தொழிற்சங்க தலைவர்களின் வர்க்க ஒத்துழைப்பு கொள்கைகளுக்கு ஏற்றம் கொடுக்கப் பயன்பட்டது; அடக்கி வைத்திருக்கும் கோபத்தை வெளியே கொண்டுவருவதற்கு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த அடையாள எதிர்ப்பும் ஆகும். இதை மூடிமறைக்கும் வகையில் ஒலிவியே பெசன்ஸநோ பாரிஸ் எதிர்ப்பை, "போராட்டங்களின் சங்கமம்" என்று பாராட்டினார்.

LO, NPA இரண்டுமே CGT இரசாயனத் தொழிற்சங்கத் தலைவர்கள் அமியானில் இருக்கும் குட் இயர் Michael Wamen, Clairoix ல் இருக்கும் சேவியர் மாத்தியு ஆகியோருக்கு விமர்சனமற்ற ஆதரவைக் கொடுக்கின்றன; அவர்களுடைய கொள்கை பணிநீக்கத்தின்போது சிறந்த நலன்களை இயன்றளவு பெறுதல் ஆகும். மாத்யூவை அவர்கள் நீக்கப்பட்ட கொன்டினென்டல் தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆலையில் 50,000 யூரோக்கள் வாங்கித் தந்தவர் என்று புகழ்கின்றனர்; ஆயினும் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் அவர் கையெழுத்திட்ட உடன்பாட்டின்படி ஆலை மூடல், மற்றும் ஐரோப்பாவில் கொன்டினென்டல் ஆலைகளில் எங்கு தொழிலாளர்கள் வெளியே அனுப்பப்பட்டாலும் அல்லது ஆலைகள் மூடப்பட்டாலும் தொழிலாளர் எதிர்ப்பு அணிதிரள்வது இருக்காது என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது.

இத்தகைய உடன்பாடுகள் நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை சரிய வைத்து மூட உதவுகின்றன; அதே நேரத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்பை தேசிய, சர்வதேச அளவில் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆலைகளை மூடும், தொழிலாளர்களை நீக்கும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் சர்வதே நிறுவனங்கள்தான்; இவை உலகெங்கிலும் ஆலைக் குறைப்பில்தான் ஈடுபட்டு வருகின்றன (கொன்டினென்டல், குட் இயர், மோலெக்ஸ், நியூ பாப்ரிக்ஸ்.)

NPA தொழிற்சங்க அதிகாரத்துவத்தை மூடிமறைக்க முற்படுகையில், "பதவியில் இருந்து அகற்றுதல் தடை செய்யப்பட வேண்டும்", "பொது வேலைநிறுத்தம் கூடாது" என்பவற்றிற்கு ஒரு சட்டம் தேவை என்று கூறியுள்ளது. இது "அரசாங்கத்தையும் முதலாளிகளையும் உண்மையிலேயே நீடித்த வகையில் பின்வாங்க வைக்கும்" என்றும் அலங்காரமாகக் கூறுகின்றது. ஆனால் சில நேரததில் NPA இன் பெசன்ஸநோ தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கையில் NPA எந்த விதத்திலும் ஒரு சமூகப் புரட்சியை கருத்திற் கொள்ளவில்லை என்ற உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளது.

NPA தொழிற்சங்கங்களுக்கு கொடுத்துள்ள முறையீடு தொழிலாளர்களை இந்த அமைப்புக்களின் கட்டுப்பாட்டின்கீழ் தக்கவைத்துக் கொள்ளும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது; அவற்றின் பங்கு நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்களின்மீது சுமத்துவது ஆகும். LO, NPA இரண்டும் ஒருபோதும் தொழிலாளர் வர்க்கம் சுயாதீன அரசியல் அணிதிரளலைக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்ததில்லை. மாறாக அவை ஒரு சமூகக் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலைக் கொடுக்கின்றன; தொழிற்சங்கங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதின் மூலம் இது அடையப்படாலம் என்று அவை கூறுகின்றன.

NPA யின் பெசன்ஸநோ அன்றைய நடப்புக்கள் பற்றித் தன்னுடைய திருப்தியைத் தெரிவித்து, வேலை அழிப்பிற்கு எதிரான உண்மையான போராட்டத்தை அது பிரதிபலித்தது என்றும் கூறினார். "பல மாதங்களாக இது நடக்கவில்லை; இப்பொழுது இது நடந்த உண்மையாகிவிட்டது. இது மேலிருந்து வராமல், அடிமட்டத்தில் இருந்து எழுச்சி பெற்றது; ஏனெனில் பல தடைகள் இதற்கு இருந்தன" என்றார் அவர்.

முதலில் எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்த குட் இயர் தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிட்டு சேவியர் மாத்யூ கூறினார்: "கார்த் தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் மற்றும் உலோக, ரப்பர் கிளைகளுடன் திரட்டியதிலும் ஒரு உண்மை ஒற்றுமையைத் தோற்றுவித்ததிலும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்" என்றார். இப்படி Thibault ற்கு எதிராக பல முழக்கங்கள் இருந்தாலும், மாத்யூவிற்கும் CGT தலைமைக்கும் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் மிகக் குறைவுதான்.

எதிர்ப்பில் பங்கு பெற்ற பல தொழிலாளர்களுடன் WSWS நிருபர்கள் பேசினர்:

அமியானில் உள்ள குட் இயர் ஆலையில் இருந்து வந்த புளோரியான் அங்கு ஒரு பராமரிப்பு தொழில்நுட்பக்காரராக உள்ளார். "நிலைமை மிகவும் தெளிவில்லாமல் இருக்கிறது. தொழிற்சங்கங்கள் மிகவும் ஒற்றுமையின்றி உள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் மறு இடம் செல்லுவது, ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எங்கள் நலன்களை மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை காக்காமல் பாதுகாக்க முடியாது. ஆம், இது சர்வதேசியவாதத்தின் அவசியம்தான்."

கான்டினென்டல் டயர்ஸில் இருந்து வரும் Thierry ஒரு தொழிற்சங்க உறுப்பினர் அல்ல. "ஆலையில் நிலைமை 1,200 பேரை தெருவிற்கு அனுப்பும் தன்மையைக் கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு நாங்கள் வேலையின்மை நலன்களைப் பெறுவோம், வேலை பெற முயல்வோம். நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோம்." தங்கள் வேலைகளை இழப்பதற்கு பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகள் பற்றி குறிப்பிட்டு அவர், "உண்மையான வெற்றி வேலையைத் தக்க வைத்துக் கொள்வதுதான். மற்றவர்களோடு ஒப்பிடும்போது சில நலன்களுடன் நாங்கள் நீங்குகிறோம். ஆனால் வெற்றி என்று பேச முடியாது. தொழிற்சங்கங்கள் எப்பொழுதும் மீண்டும் மறு தேர்தலைப் பற்றி நினைக்கின்றனவே அன்றி தொழிலாளர்களைப் பற்றியோ அவர்களை ஒன்றுபடுத்தி வலுவான போராட்டத்தை பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடத்துவது பற்றியோ நினைப்பதில்லை."

Caumont ல் இருக்கும் NDM கட்டுமானப்பணிப் பிரிவில் இமானுவேல் வேலை பார்க்கிறார். "இங்கு ஒரு வெற்றிக்காக கூடியிருக்கிறோம். ஆனால் இப்பொழுது அது எங்களுக்கு இல்லை. ஒவ்வொருவரும் தெருவிற்கு ஆர்ப்பரிக்க வந்தால், நாம் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடலாம். மக்கள் ஒற்றுமையுணர்வை பெற வேண்டும்; ஊதியங்கள், வேலை வாய்ப்புக்கள் பெருக வேண்டும் என்ற முன்னோக்கு வேண்டும். வேறு இடங்களில் வேலை என்பதை எதிர்த்து இங்கு இருக்கிறோம்."