World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Protests mount against Pakistan's blasphemy laws

பாக்கிஸ்தானில் மதத்தை இழிவுபடுத்துவருக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்புக்கள் பெருகுகின்றன

By Ali Ismail
1 October 2009

Use this version to print | Send feedback

இந்தக் கோடையில் கிட்டத்தட்ட இனவாத கொலைபோல் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பல கிறிஸ்துவர்களை கொன்றபின், "மதத்தை இழிவுபடுத்தும்" நிலைப்பாட்டை தண்டிக்கும் பாக்கிஸ்தானின் கடுமையான சட்டங்கள் பற்றி மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1980 களில் அமெரிக்க ஆதரவைப் பெற்றிருந்த தளபதி ஜியா-உல்-ஹக் "இஸ்லாமிய மயமாக்குதல்" உந்துதலின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்திய இச்சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. இச்சட்டங்கள் பலமுறை கிறிஸ்துவர்கள், பிற சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்மீது விசாரணைகள் நடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு பஞ்சாபில் கோஜ்ரா என்னும் ஊரில் வன்முறை நடந்தது. அதில் ஒரு தடைசெய்யப்பட்ட இஸ்லாமியக் குழு உள்ளூர் கிறிஸ்தவர்கள் குர்ரானை களங்கப்படுத்தியதாக தவறான முறையில் குற்றம்சாட்டினர். முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்து, உள்ளேயிருந்தவர்கள் தீயில் கருகிப் போயினர். கிறிஸ்தவர்கள் என்ற நம்பப்பட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

100 பேருக்கும் மேலானவர்கள் இப்படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டனர். பாக்கிஸ்தான் அதிகாரிகள் கருத்தின்படி இது ஒரு சுன்னி இஸ்லாமியக் குழுவான Sipah-e-Sahaba வால் உத்தரவிடப்பட்டது என்றும் இது பலமுறை நாட்டின் ஷியா சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையிலும் தொடர்பு கொண்டது என்றும் தெரிகிறது.

பாக்கிஸ்தானிய கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல் பொதுவாக வெளிவருவதில்லை. ஆனால் பாக்கிஸ்தானிய கிறிஸ்தவர்கள், மனித உரிமை பாதுகாப்புகுழுக்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் பிரிவுகள் மற்றும் சர்வதேச கிறிஸ்துவக் குழுக்கள் ஆகியவை எழுப்பிய கூச்சலால், பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவருமான ஆசிப் அலி ஜர்தாரி பெயரளவிற்கேனும் நீதி வழங்கும் கட்டாயத்திற்குள்ளாவார்.

ஜனாதிபதி ஜர்தாரியும் பஞ்சாப்பின் இடைக்கால அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களுக்கு ஒரு சில ஆயிரம் டாலர்கள் என்ற அற்ப இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளன.

கோஜ்ரா கொடூரம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பும் பாக்கிஸ்தானில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிராக மற்ற வன்முறை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் ஒரு கிறிஸ்துவ பெண்மணி குஜ்ரன்வாலாவில் ஒரு திருச்சபை தாக்கப்பட்டபோது கொல்லப்பட்டார். ஜூன் 30ம் தேதி கசூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு கிராமத்தை சூறையாடியபோது டஜன் கணக்கான கிறிஸ்துவர்களுடைய வீடுகள் தாக்கப்பட்டன.

இஸ்லாமிய போராளிகளும் மதவெறி பிடித்த குருமார்களும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு இடையே உள்ள விரோதப்போக்கை அதிகரிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாக்கிஸ்தானிலுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள குற்றங்களால் விளையும் வெறுப்புணர்வை பயன்படுத்துகின்றனர். புஷ் நிர்வாகம் சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரபிற்கு ஆயுதங்களையும் நிதியையும் அளித்தது. ஆகஸ்ட் 2008ல் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளானர். ஒபாமாவின் கீழ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடக்கும் எழுச்சி-எதிர்ப் போரின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று பாக்கிஸ்தானை அறிவித்து, வாடிக்கையாக ஆளற்ற ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களை பாக்கிஸ்தானிற்குள் நடத்துவதுடன், தலிபானுடன் பிணைப்பு உடைய நாட்டின் வடமேற்குப் போராளிகளை அரசாங்கம் இரத்தம்தோந்த வகையில் அடக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

கோஜ்ரா படுகொலை பற்றிய கூக்கூரல்கள் இருந்தபோதிலும், கிறிஸ்துவர்கள்மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. செப்டம்பர் 12ம் தேதி, பாக்கிஸ்தானின் ஆங்கில மொழி நாளேடான Dawn குர்ரான் மீண்டும் இழிவுபடுத்தப்பட்டது என்ற சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டை அடுத்து முஸ்லிம் வகுப்புவாதிகளால் ஒரு திருச்சபை தீக்கிரையாக்கப்பட்டது என்ற தகவலைக் கொடுத்துள்ளது. பிஷப் சாமுவேல் பெர்வைஸ் பின்னர் அரசாங்கம் சிறுபான்மையினரை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

குறிப்பிடத் தக்க வகையில் உளைச்சலைக் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில், மத இழிவு தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கைதுசெயயபபட்ட 20 வயதான ரோபர்ட் பானிஷ் மசி, செப்டம்பர் 15ம் தேதி சியால்கோட் மாவட்டத்தில் சிறை அறையில் இறந்து காணப்பட்டார். மசியின் இறப்பு தற்கொலை என்று போலீசார் கூறுகையில், அவருடைய உடலில் சித்திரவதைக்குட்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் இருந்தன. காவலில் கொலையுண்டிருக்கலாம் என்பதை அவை சுட்டிக் காட்டுகின்றன. Daily Times பஞ்சாபின் சிறுபான்மை துறை மந்திரி கம்ரான் மைக்கேல், "நான் உடலைப் பார்த்தேன், சித்திரவதை அடையாளங்கள் இருந்தன" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

மதத்தை இழிவு செய்ததாகக் கூறப்பட்டு சிறையில் மர்மமான சூழ்நிலையில் மசி ஒன்றும் முதன் முதலான இறந்த நபர் அல்ல.

மசியின் குடும்பம் அவரை சியால்கோட்டில் இருந்து 20 கி.மீ. இருக்கும் அவருடைய சொந்த கிராமத்தில் புதைப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. சியால்கோட்டில் இறுதி ஊர்வலம் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறி இழிவுபடுத்துதல் பற்றிய சட்டங்கள் கைவிடப்பட வேண்டும், மசி இறப்பு பற்றி பகிரங்க விசாரணை வேண்டும் என்று கோரிய போது போலீசார் அதை கண்ணீர்ப்புகை குண்டு மூலம் தாக்கினர்.

சமீபத்திய கிறிஸ்துவ எதிர்ப்பு வகுப்புவாதத் தாக்குதல்கள் கிறிஸ்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இன்னும் பல உழைக்கும் மக்களை பாக்கிஸ்தான் முழுவதும் எதிர்ப்புக்களை நடத்த தூண்டியுள்ளன. கிறிஸ்துவ தேசியக் கட்சியின் தலைவரான ஜோசப் பிரான்ஸி்ஸ் கருத்தின்படி, "நாங்கள் பாக்கிஸ்தானை வெறுக்கிறோம். இங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். சமூகங்களுக்கு இடையேயான உறவு இங்கு உண்மையில் கொடுரமானது" என்று மக்கள் கூறுவதாகத் தெரிகிறது.

வன்முறையினால் மட்டும் எதிர்ப்பவர்கள் சீற்றம் அடையவில்லை. போலீசார் சிறிதும் பொருட்படுத்துவதில்லை, சில நேரம் தாக்குதலை நடத்துபவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பதினாலும் எதிர்ப்பவர்கள் சீற்றம் கொண்டுள்ளனர்.

ஒரு உதாரணத்திற்கு, செப்டம்பர் 16ம் தேதி The News, கராச்சிப் போலீசார் லோரன்ஸ் என்னும் கிறிஸ்துவருடைய குடும்பத்தின் பல உறுப்பினர்களையும் கடுமையாகத் தாக்கினர். இதற்குக் காரணம் இவருடைய குடும்பத்தினர் ஒருவரான 60 வயதான நீரிழிவு நோயாளி அண்டை வீட்டுக்காரரின் கூரைமீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுவதுதான் காரணம் என்று தகவல் கொடுத்துள்ளது. அந்த இடத்தில் சில மத நூல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பாக்கிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் குழுவின்படி, "இதையொட்டி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மத குருமார்கள் கூடி லோரன்ஸின் வீட்டைத் தாக்கினர். இதைப்பற்றி மனித உரிமைகள் குழு ஒன்று விசாரணை நடத்திவிருகிறது." கராச்சி நகரசபை ஆட்சியை வழிநடத்தும் Muthahida Qaumi Movement (MQM) ஐச் சேர்ந்த யூசுப் ஆஷிக், "இந்த நிகழ்ச்சி பற்றி நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், கிறிஸ்துவ குடும்பம் இஸ்லாமியச் சட்டங்களின்படி இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடிவு எடுத்துள்ளது. உள்ளூர் மசூதியில் இதைப் பற்றி தக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

பாக்கிஸ்தானில் உள்ள கிட்டத்தட்ட மூன்று மில்லியன் கிறிஸ்துவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தீண்டத்தகாதவர்கள் என்று இருந்தவர்களின் வழித் தோன்றல்களாவர். இந்த மத மாற்றங்கள் ஓரளவேனும் அவர்களுடைய சமூகப் பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்தி சாதி அடக்குமுறையில் இருந்து தப்பும் முயற்சிகள் ஆகும்.

பிராம்மண ஹிந்து பிரிவுதான் மத வழியில் தீண்டாமைக்கு ஒப்புதல் கொடுத்தாலும், காலனித்துவ இந்தியாவில் வசதி உடைய முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் சாதிப் பிளவுகளை செயல்படுத்தினர். இன்றைய பாக்கிஸ்தானின் கிறிஸ்துவர்கள் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான எதிர்ப்புணர்வை சமாளிக்க வேண்டும். அவர்கள் பல நேரமும் "தோட்டிகள்" என்று அவர்களுடைய முன்னோர்கள் செய்து வந்த இழிந்த பணிகளைச் சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தப்படுகின்றனர்--அப்பணிகள் பெரும் வறுமையினால் இன்றும் பலராலும் தொடர்ந்து செய்யப்படுகின்றன.

இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கினால் 20ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்று பிரிட்டிஷ் இந்தியாவை உலுக்கி, 1947ல் பிரிவினையை பிரிட்டிஷ் மேற்பார்வையில், ஒரு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் முக்கியமான ஹிந்துப் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா என்ற இரண்டு சுதந்திர முதலாளித்துவ நாடுகள் உருவாக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவுகளே மதவெறியும் மதக்குறுங்குழுவாதமும். பிரிவினையின் உடனடி விளைவு பாரிய வகுப்புவாதக் கலவரக் கொடுமைகள் ஆகும்; இதில் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர், 12 மில்லியனுக்கும் மேலானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் பெயர நேரிட்டது..

கிட்டத்தட்ட அனைத்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாக்கப்ட்ட பாக்கிஸ்தான் நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து தப்பியோடினர்; மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வட இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானில் அடைக்கலத்தை நாடினர்.

இதற்கு மாறான நிலையில், கிறிஸ்துவர்கள் அதிக அளவில் பாக்கிஸ்தானை விட்டு வெளியேறவில்லை; இதையொட்டி பின்னர் நாட்டின் மிகப் பெரிய மத சிறுபான்மையினர் ஆயினர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. "பாக்கிஸ்தானை நிறுவிய" முகம்மது அலி ஜின்னா, ஒரு சிறிய கிறிஸ்துவ உயரடுக்கின் நட்பைப் பெரிதும் விழைந்தார். இஸ்லாம் ஆபத்தில் உள்ளது, இஸ்லாமும் இந்து மதமும் சேர்ந்து இருக்க முடியாத, பொருத்தமற்ற மதங்கள் என்று வலியுறுத்திபோதே, ஜின்னா கிறிஸ்துவர்கள் பாக்கிஸ்தானில் சம உரிமையுடன் வாழ முடியும் என்று வலியுறுத்தினார். வறியவர்களில் மிக வறியவர்களாக இருந்த பாக்கிஸ்தானின் கிறிஸ்துவர்கள் உரிய தொடர்பு, போக்குவரத்து நுட்பம், நிதிய இருப்புக்கள் என்று 1947-48 ல் நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தனர்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவை போலவே பாக்கிஸ்தானிலும், முதலாளித்துவம் மக்களின் அடிப்படை தேவைகளை அது பூர்த்தி செய்ய இயலாததால் ஏற்பட்ட சமூக அதிருப்தியை திசை திருப்பவும், தகர்க்கவும், மற்றும் 1947ல் தோற்றுவிக்கப்பட்ட போட்டி நாடுகளுக்கு எதிரான பூகோளஅரசியல் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் வகுப்புவாதத்தை ஒரு வழிவகையாகப் பயன்படுத்திக் கொண்டது.

ஜியா-உல்-ஹக்கின் சர்வாதிகாரத்தின்கீழ், பாக்கிஸ்தானிய அரசியல் மற்றும் சமூகம் இன்னும் கூடுதலான வகுப்புவாதத்தைக் கொண்டது. அதையொட்டி பாக்கிஸ்தானிய மக்களுக்கு பேரழிவுதரும் விளைவுகள்தான் ஏற்பட்டன. இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் முஸ்லிம் சமயகுருக்களை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பெரிய தடுப்பாக ஜியா வெளிப்படையாள வளர்த்தார். அமெரிக்கா மற்றும் அதன் சவுதி நட்பு நாடுகளுடன் சேர்ந்து பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீனுக்கு ஆயுதம் கொடுத்து இஸ்லாமியப் போராளிகளை பாக்கிஸ்தானின் முதலாளித்துவ பூகோள-அரசியல் மூலோபாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கியது. கல்வி, சுகாதாரத்திற்கு அரசாங்கம் செலவழிக்க வேண்டியதின் மாற்றீடாக மத பள்ளிகள் மற்றும் சமூக பணிகளையும் ஜியா செய்தார்.

ஜியாவின் கீழ்தான் பாக்கிஸ்தான் அதன் கடுமையான மத இகழ்வு பற்றிய சட்டங்களை வளர்த்தது. 1982ம் ஆண்டு குற்றவியல் சட்டத் தொகுப்பில் 295-B என்பது சேர்க்கப்பட்டது. அதில் கூறப்படுவதாவது: "எவர் வேண்டுமென்றே இழிவுபடுத்துதல், சேதப்படுத்துதல், அல்லது புனித குர்ரானை அல்லது அதன் ஒரு பகுதியை களங்கப்படுத்துகிறார்களோ, அல்லது எந்த இழிந்த, சட்டவிரோத வகையிலும் அதைப் பயன்படுத்திகின்றனரோ, அவர்களுக்கு ஆயுட்கால சிறைதண்டனை வழங்கப்படும்." 1990ம் ஆண்டில் கூட்டாட்சி ஷாரியத் நீதிமன்றம் ஜியாவால் ஒப்புதல் கொடுக்கப்பட்டு மத இழிவு நடவடிக்கைகளுக்கு மரணம்தான் ஒரே தண்டனை என்று கூறியது.

குற்றவியல் சட்டத் தொகுப்பில் 298 வது பிரிவு குறிப்பிடத்தக்க வகையில் பாகுபாடு காட்டுகிறது. அஹமதிய சமூகம் தங்கள் சமயத்தை தடையின்றி மேற்கொள்ளவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்திற்காக இது இயற்றப்பட்டது. அஹ்மதிய மத இயக்கம் தான் மஹ்தி என்று கூறிக்கொண்ட மீர்சா குலாம் அஹ்மதைப் போற்றும் இயக்கம் ஆகும்; அந்த தூதர் போன்ற பெருமகனார் நீண்ட காலமாக முஸ்லிம்களால் எதிர்பார்க்கப்படுகிறார். தங்களை முஸ்லிம்கள் என்று அஹமதியர்கள் கருதிக் கொண்டாலும், அரசாங்கம் அவர்களை மத நெறி பிறழ்ந்தவர்கள் என்றுதான் கருதுகிறது. சுன்னி தீவிரவாதிகள் அஹமதியர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளுக்கும் அஹமதிய எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது. 2008ல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் அஹமதியர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்திப் பேசிய உடன் இரு அஹமதியர்கள் கொல்லப்பட்டனர்.

மத இழிவு பற்றிய சட்டங்கள் சிறுபான்மையினர் மற்றும் மதநம்பிக்கை இல்லாதவர்களின் சுதந்தித்தைப் பாதிக்கும் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் பல நடவடக்கைகளில் ஒன்றுதான்.

பாக்கிஸ்தானிய அரசியல் அமைப்பின் 2ம் விதி இஸ்லாம் நாட்டுச் சமயம் என்று அறிவிக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவிகளை விழைய முடியாது. பாக்கிஸ்தானிய கடவுச்சீட்டு அக்கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களின் மத நம்பிக்கையை கூறுவதுடன், சிறுபான்மையினர் பொது மக்களுடன் சேர்ந்து என்பதற்கு பதிலாக வகுப்புவாத வாக்குப் பதிவு முறையில்தான் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க முடியும் என்றும் உள்ளது. இதையொட்டி அவர்கள் முஸ்லிம் பெரும்பான்மையில் இருந்து பிரிந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக்கப்படுகிறது.

அடிப்படைவாதம் கோஜ்ரா படுகொலைகள் போன்றவற்றிற்கு வழிவகுத்தாலும், மதத்தை இழிவு செய்தல் என்ற குற்றச்சாட்டு சொத்துக்கள் மற்றும் பிற நிதியப் பூசல்களின் போது பொதுவாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட அவ்வாறு கொண்டுவரப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தள்ளுபடியாகின்றன. இது நிலச்சுவான்தர்களும் மத குருமார்களும் வறுமை, வேலையின்மையை பயன்படுத்தி தங்கள் நிதிய நலன்களை உறுதிசெய்யும் வழிவகை என்பது தெளிவு.

நாட்டின் கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய வகுப்புவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பாக்கிஸ்தானிய அரசாங்கம் இந்த இழிவு பற்றிய சட்டங்களை "பரிசீலனை" செய்வதாக வெறுமனே கூறியுள்ளது.

இதற்கிடையில் நடைமுறையின் சில பிரிவுகள் சட்டத்தை பாதுகாப்பாக வைக்கும் இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன. பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) கின் தலைவரான செளதரி ஷூஜத் ஹுசைன் ஒரு வணிகத் தொலைக்காட்சிப் பிரிவிடம் தன்னுடைய கட்சி இழிவு பற்றிய சட்டங்களை அகற்றும் எந்த நடவடிக்கையையும் எதிர்க்கும் என்றும், ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையும் சிறுபான்மையினரை பாதுகாத்தல் என்றும் இழிந்த முறையில் கூறினார். PML(Q) கட்சிதான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பினாலும் அவருடைய ஆதரவாளர்களாலும் தோற்றுவிக்கப்பட்டது அவர்களுள் பலரும் பின்னர் நவாஸ் ஷரிப்பின் தலைமையில் இருக்கும் PML(N) க்கு மாறிவிட்டனர். பல இஸ்லாமியக் கட்சிகளும் இழிவு சட்டங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளன.

பாக்கிஸ்தானிய சமூகத்தை எதிர்கொண்டிருக்கும் பொது நெருக்கடியின் ஒரு அடையாளம்தான் வகுப்புவாத வன்முறை ஆகும். நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாக உலக நிதிய கரைப்பினால் தாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் இன்னும் ஒரு $3.2 பில்லியனை பாக்கிஸ்தானுக்கு ஒதுக்கியது; இதற்கு ஈடாக அரசாங்கம் எரிபொருள் மானியத்தை கொடுத்தலை அகற்ற வேண்டும், வரிகள் மூலம் வருவாயை உயர்த்த வேண்டும், மற்றும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை குறைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் சுமத்தியுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகள் பாக்கிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள்மீது கடுமையான சேதத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தும். பாக்கிஸ்தானியர்களில் பெரும்பாலானவர்கள் நாள் ஒன்றுக்கு $2 க்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர். பொதுக் கல்வி, சுகாதாரப் பணிகள் ஆகியவற்றை பெறுவதற்கு முடியாத நிலை தவிர்க்க முடியாமல் பெரும்பாலான மக்களுக்கு ஒரு அவலமான வாழ்க்கை நிலை என்றுதான் ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் வாடிக்கை நாடு என்று தொடக்கத்தில் இருந்தே இருக்கும் பாக்கிஸ்தானும் அதன் முதலாளித்துவ உயரடுக்கும் வெளிசக்திகள்மீது, குறிப்பாக வாஷிங்டன் மீது மிக அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளன.

இப்பொழுது பாக்கிஸ்தானிய அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக தன்னுடைய மக்களின் ஒரு பெரும் பகுதியின்மீதே கீழ்ப்படிந்த முறையில் ஒரு போரை அறிவித்தள்ளது. அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு என்பது பாக்கிஸ்தான மக்கள் கட்சி (PPP) தலைமையின்கீழ் தீவிரமாகியுள்ளது--இக்கட்சிதான் கடந்த காலத்தில் ஒரு சோசலிசக் கட்சி என்றும் பாக்கிஸ்தானிய தாராளவாதத்தின் இழிந்த, வெற்றுத் தன்மையை உருவகப்படுத்தி நின்றது.

மத இழிவு பற்றிய சட்டங்கள் பாக்கிஸ்தானில் உள்ள ஜனநாயக விரோதத் தன்மையில் ஒரு உதாரணம்தான். பாக்கிஸ்தானில் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவத்திடம்தான் உள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகளும் பிற்போக்குத்தன மத, தேசியவாத, இன-மொழி உணர்வுகளுக்கு அழைப்புவிடுகின்றனர். அரசியல்வாதிகளும் இராணுவமும் இதையொட்டி தற்பொழுது உள்ள பெரும் சமத்துவமற்ற சமூகப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில்தான் உறுதியாக உள்ளனர்.

மசூதியையும் அரசாங்கத்தையும் பிரித்தல், நிலப்பிரபுத்துவத்தை அழித்தல் ஆகிய அடிப்படை ஜனநாயக கடமைகளை தீர்ப்பதற்கான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான பெரிய போராட்டத்துடன்தான் பிணைந்துள்ளது. பாக்கிஸ்தான் தொழிலாளர்களும் தெற்கு ஆசியா முழுவதும் இருக்கும் அவர்களுடைய சக தொழிலாளர்களும் மத, இன வேறுபாடுகளைக் கடந்து பாக்கிஸ்தானிலும், அப்பகுதி முழுவதும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக ஒன்றுபட வேண்டும்.