World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

50,000 line up for housing aid in Detroit

டெட்ரோயிட்டில் வீட்டு உதவிக்காக 50,000 பேர் வரிசையில் நிற்கின்றனர்

By Jerry White
8 October 2009

Use this version to print | Send feedback


ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது போலீஸார் Cobo Hall இன் வடக்கு நுழைவாயிலை பாதுகாத்து நிற்கின்றனர்.

டெட்ரோயிட்டில் கிட்டத்தட்ட 50,000 பேர் புதனன்று பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்துதல், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதற்கு Cobo Hall மாநாட்டு மையத்தில் உதவி நாடி நின்றனர். 3,000 பேர்தான் உதவியை நாடி வரக்கூடும் என்று எதிர்பார்த்த நகரவை அதிகாரிகள் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்துத் திகைத்தனர்.

பெருமந்தநிலைக் காலத்தின்போது இலவச சூப்பிற்கு வரிசையில் நின்ற வேலையற்ற தொழிலாளர்களை நினைவுறுத்திய வகையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாதவர்களும் நகரப்பகுதியில் கூடி நின்றனர். குழந்தைகளை தள்ளு வண்டியில் கொண்டுவந்த தாய்மார்கள், சக்கர நாற்கலிகளில் வந்த ஊனமுற்ற தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள், பல்கிப் பெருகிய இளந் தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று அனைவரும் பல மணி நேரம் காத்து நின்றனர். முதலில் உதவியைப் பெறுவதற்காக பலர் தெருக்களிலேயே இரவில் தூங்கினர்.

பலர் காத்திருக்கும்போது மயக்கமுற்ற நிலையில் அங்கிருந்த மருத்துவக் குழுவினால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். டெட்ரோயிட்டின் மேயரான டேவிட் பிங், கோபோ அரங்கத்திற்கு வரவேண்டாம் என்று குடிமக்களுக்கு முறையிட்டார். டெட்ரோயிட் சிறப்பு கலகமடக்கும் பிரிவு உட்பட நூற்றுக்கணக்கான போலீஸர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நுழைவாயிலில் காவல் காத்தனர்.

இறுதியில், நண்பகலை ஒட்டி போலீஸார் கதவுகளைத் திறந்தபோது கட்டிடத்திற்குள் நுழைவதற்கான பரபரப்பில் பலரும் காயமுற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. வரிசையில் இருந்தவர்கள் கண்ணாடிக் கதவுகள் மூலம் உள்ள அனுப்பப்பட்டு ஒரு மேசையின் முன்பு நிறுத்தப்பட்ட மனுக்கள் படிவங்கள் கொடுக்கப்பட்டன; அவற்றை பூர்த்தி செய்தபின் பிற்பகல் 2 மணிக்கு முன்னர் அங்கு இருந்த பெட்டிகளில் போடுமாறு கூறப்பட்டனர்.

நகரத்தின் வீடற்ற நிலை தடுப்பு, விரைவான மறு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் (Homeless Prevention and Rapid Re-Housing Program HPRP) குடிமக்கள் மனுக்களை கொடுப்பதற்கு புதன்தான் கடைசி நாள் ஆகும். ஒபாமா நிர்வாகத்தின் 15.2 மில்லியன் டாலர் ஊக்கப் பொதியில் இருந்து வந்துள்ள மானியத்தால் நிதியம் பெற்றுள்ள இத்திட்டம், 3,400 பேருக்கு மட்டும்தான் உதவி புரிய முடியும் என்று திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் Constance Bell கூறினார். 50,000 விண்ணப்பங்கள் புதனன்று பெறப்பட்டதை தவிர இன்னும் ஒரு 30,000 விண்ணப்பங்கள் முன்னரே வழங்கப்பட்டிருந்தன என்று பெல் கூறினார். இதன் பொருள் விண்ணப்பித்தவர்களில் 24 பேருக்கு ஒருவர்தான் மானிய பணத்தைக் கண்ணால் காண்பர் என்பதாகும்.

நகரவை குறைந்த வருமானமுடைய, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு 3,000 டாலர் கொடுக்க இருப்பதாக விரைவில் பரவிய வதந்திகளின் அட்படையில் பெரும் கூட்டம் சேர்ந்திருந்தது. நகரத்தில் பொருளாதார பெரும் திகைப்பு இருந்த தன்மை--உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 29 சதவிகிதம், மக்களில் மூன்றில் ஒரு பங்கு உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்--பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதில் வெளிப்பட்டது.

கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கு தகுதி இல்லை என்று நகரவையின் செய்தித் தொடர்பாளர் ஒப்புக் கொண்டார். HPRP திட்டம் ஏற்கனவே வீடிழந்தவர்கள் அல்லது முன்கூட்டி விற்பனையை ஒட்டி வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொள்ளுபவர்களுக்கு பயன்பாட்டு கட்டணத்திற்காக தற்காலிக உதவி அளிக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது. மேலும் உதவியைப் பெற்றுக் கொண்டபின் வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியும் என்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். அடைமான கட்டணங்களைக் கட்டுவதற்கு பணம் பயன்படுத்தப்பட முடியாது.

 


கோபோ அரங்கத்திற்கு வடக்கு வாயில் முன்பு மக்கள் காத்திருத்தல்

கூடியிருந்த பலரிடமும் அவர்களுடைய முயற்சி பலனற்றது என்று தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக நகரவை அதிகாரிகள் திட்டத்திற்கான விண்ணப்ப மனுக்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்டவற்றை சேகரிக்கும் பணியில் தொடர்ந்தனர். அவர்களுடைய பெரும் கவலை பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் சீற்றமான முறையில் வெடித்து எழுவதைத் தவிர்க்க வேண்டும், அந்த நிலை ஏற்பட்டால் போலீஸின் தாக்குதல் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இவ்விதத்தில் ஒழுங்காகத் தயாரிப்பு இல்லாமல், நிகழ்வு ஒழுங்குற அமையாமல் இருந்தது எந்த அளவிற்கு அரசாங்க அதிகாரிகள் தொழிலாள வர்ககத்தை எதிர்கொண்டுள்ள உண்மையைப் பற்றி அறியாமல் தொலைவில் உள்ளனர் என்பதையும், சமூக நெருக்கடியின் பரப்பையும் காட்டுகிறது. உதவிக்கு விண்ணப்பித்த 80,000 குடும்பங்கள் கிட்டத்தட்ட நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பிரதிபலிக்கின்றன.

டெட்ரோயிட்டில் உள்ள உண்மையான வேலையின்மை விகிதம் உத்தியோகபூர்வ 29 சதவிகிதத்தைவிட அதிகமாகும்; இல்லாத வேலையை நாடுவதை பல ஆயிரம் மக்களை கைவிட்டுவிட்டனர். வற்புறத்தப்பட்ட திவால்கள், மறுகட்டமைப்பு என்று ஜெனரல் மோட்டார்ஸ், கிறைஸ்லர் நிறுவனத்தை ஒபாமா நிர்வாகம் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவுடன் கொண்டுவந்தது நெருக்கடியை அதிகரித்துள்ளது. அவை ஆயிரக்கணக்கான வேலைகளைத் தகர்த்ததுடன் கார்த் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோரின் ஊதியங்களையும், நலன்களையும் குறைத்துவிட்டன.

உதவியை நாடி ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் நின்ற காட்சி குறிப்பிடத் தக்கதாகும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த இளைஞர்களில் பலர் நகரத்தின் பல கார்த்தயாரிப்பு ஆலைகளில் வேலையில் சேர்ந்திருப்பர். ஆனால் 1970ல் இருந்து நகரம் அதன் உற்பத்தி வேலைகளில் முக்கால் பகுதியை இழந்துவிட்டது; இதையொட்டி 250,000 தொழிலாளர்களின் வேலைகள் பறிபோயின. இன்று இளம் தொழிலாளர்களுக்கு குறைவூதி வேலைகளைத் தவிர வேறு ஏதும் இல்லை; இவற்றுள்ளும் சிறிதுகூட பொருளாதாரப் பாதுகாப்பு கிடையாது.

கடந்த மாதம் டெட்ரோயின் வட்டாரத்தின் எரிவாயு, மின்சார நிறுவனமான DTE Energy துன்பத்தில் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்களுக்கு உதவி தர இருப்பதாகக் கூறியபோது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாநில காட்சியகத் திடலில் கூடினர். டெட்ரோயின் நியூஸில் கடந்த மாதம் வந்த தகவல்படி, மிச்சிகனின் இரு பெரிய மின்சார நிறுவனங்களால DTE Energy, Consumers Energy கடந்த ஆண்டு 181,000 வாடிக்கையாளர்களுடைய உஷ்ணப்படுத்தும் கருவிக்கான மின்தொடர்பை துண்டித்தனர் என்று தெரிகிறது. (இந்த ஆண்டு) ஏற்கனவே DTE 115,000 வீடுகளுக்கான மின்சாரத் தொடர்பை துண்டித்தது; இவ்வாறு செய்துள்ளதின் வேகத்தன்மை கடந்த ஆண்டின் 142,000 துண்டிப்புக்களைவிட அதிகமாக இருக்கும்.

நாட்டிலேயே சொந்தவீடு உடையவர்கள் அதிகம் என்று இருந்த நகரங்களில் ஒன்றாக இருந்த டெட்ரோயிட், 2006, 2007ல் மிக அதிக முன்கூட்டி வீடுகள் விற்பனைக்கு வந்த நகர் என்று பெயரெடுத்ததுடன், இப்பொழுதும் அமெரிக்காவிலேயே மிக அதிக முன்கூட்டி விற்பனைகளில் ஒரு நகரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டெட்ரோயிட்டின் பொருளாதாரச் சரிவு நீண்ட காலத் தயாரிப்பு ஆகும். கார்த் தொழிலாளர்கள் பெற்றிருந்த வாழ்க்கைத் தரங்கள் நாட்டிலேயே இதற்கு 1950 களில் மிக அதிக தனி நபர் தலா வருமானம் என்ற இடத்தைக் கொடுத்திருந்தது. கடந்த மூன்று தசாப்தங்கள் 1979-80 கிறைஸ்லர் பிணை எடுப்பு தொடங்கி, பெருவணிகமும் அரசாங்கமும் இடையறாத் தாக்குதலை தொழிலாளர்கள் மீது நடத்துவதைத்தான் கண்டுள்ளன; இவற்றின் உச்சக்கட்டம் GM, Chrysler ஆகியவற்றை ஒபாமா மறு கட்டமைக்க உத்தரவிட்டது ஆகும். டெரோயிட் நகரம் தொழில்மயத்தில் இருந்து குறைந்துவிட்டது அமெரிக்க முதலாளித்துவம் உற்பத்தித் துறையில் இருந்து நிதிய ஊக வடிவமைப்புக்களில் மிக அதிக ஒட்டுண்ணித்தனத்திற்கு மாறியதின் அடையாளமாக உள்ளது.

15.2 சதவிகிதம் என்ற நிலையில் மிச்சிகன் மாநிலம் அமெரிக்காவிலேயே மிக அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் கார்த் தொழில் குறைக்கப்பட்டபோது, மிச்சிகன் 870,000 வேலைகளை இழந்தது. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு கடைசிக்குள் 1 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகப் பணிகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலைமையில், மாநில, நகரவை ஆட்சிகள் வீடுகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான செலவினங்களைப் பெரிதும் குறைந்துள்ளன; இதற்குக் காரணம் பெரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும் என்பதுதான். வோல் ஸ்ட்ரீட்டிற்கு பல டிரில்லியன்களை வாரிவழங்கிய ஒபாமா நிர்வாகம் இதேபோன்ற பிணை எடுப்புக்களை மாநில அரசாங்கங்களுக்கோ அல்லது இப்பொழுது வேலையின்மையில் இருக்கும் 15 மில்லியன் மக்களுக்கோ கொடுத்துவிடவில்லை.

2.8 பில்லியன் டாலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மிச்சிகன் மாநிலம் இயன்றளவிற்கு பொதுநலத் திட்டங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டு மானியத்திற்கு வரிசையில் நின்ற அன்றே, டெட்ரோயிட்டின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த, பல மில்லியன் வசதி படைத்த வணிகரான, மேயர் டேவிட் பிங் ஒரு "மாற்றும் திட்டம்" என்ற விதத்தில் 500 மில்லியன் டாலர் செலவை அடுத்த இரு ஆண்டுகளில் குறைக்கும் விதத்தில் நகரவைச் செலவுகளை குறைத்தல், பொதுச் சொத்துக்களை விற்றல், தனியார் மயமாக்குதல், பணிகளைக் குறைத்தல், 1000க்கும் மேற்பட்ட நகரவைத் தொழிலாளர்களை பணிநீக்குதல் ஆகியவற்றை செய்யப் போவதாக அறிவித்தார்.

நாட்டின் மற்ற பல பகுதிகளையும் பொருளாதார நெருக்கடி டெட்ரோயிட், மிச்சிகன் கொண்டுள்ள துயர்நிலையை போல் கொண்டுவருகிறது. பொருளாதார வகையில் பெரும் ஏமாற்றத் திகைப்பிற்குட்பட்டிருக்கும் காட்சிகள் நாடு முழுவதும் சாதாரணமாகப் பெருகியுள்ளன. இலவச மருத்துவ மனைகள் கலிபோர்னியா, டெக்ஸா் இன்னும் பிற மாநிலங்களில் ஏராளமான கூட்டத்தை ஈர்க்கின்றன; ஆயிரக்கணக்கான மக்கள் கிடைக்கும் ஒரு சில வேலைகளுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

1930 களுக்கு பின்னர் இணையில்லாத நெருக்கடியை அமெரிக்கா அனுபவிக்கிறது. இந்த நெருக்கடியின் முன்பு, ஒபாமா நிர்வாகம் பொருளாதார அழிவை எதிர்கொள்ளும் பல மில்லியன் மக்களுக்கு தீவிர உதவி எதையும் அளிக்கவில்லை.

புதனன்று வெளிப்பட்ட சோகம் ததும்பிய காட்சி ஒபாமாவின் "ஊக்க", "மீட்பு" திட்டங்களின் இழிந்த தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலையின்மையில் இருப்பவர்களை மீண்டும் வேலையில் இருத்த தேவையான பொதுப்பணித் திட்டங்களை வெள்ளை மாளிகை நிராகரித்துவிட்டது. மாறாக அதன் கொள்கைகள் அனைத்தும் --வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பில் இருந்து கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதல், சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களைக் குறைத்தல் என்ற திட்டங்கள் வரை-- நிதிய உயரடுக்கின் செல்வம், அதிகாரத்தை காக்கும் வடிவமைப்பைத்தான் கொண்டிருக்கின்றன.