World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The racist outburst of German Federal Bank executive member Thilo Sarrazin

ஜேர்மன் மத்திய வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திலோ சராஜின்னின் இனவெறி வெடிப்பு

By Justus Leicht
13 October 2009

Use this version to print | Send feedback

பொதுவாக தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புள்ள வார்த்தைகளை பயன்படுத்தி, ஜேர்மன் மத்திய வங்கி நிர்வாகக்குழு உறுப்பினரும் நீண்ட காலமாக சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) உறுப்பினருமான திலோ சராஜின் சமூகத்தின் மிக பாதிக்கப்பட்ட பிரிவினரான வேலையில்லாதவர்கள், வறியவர்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக துருக்கிய, அரேபிய மக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.

சராஜின்னின் வெறித்தன பேச்சிற்கு ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் கிடைத்துள்ள ஆதரவு பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சி-இடதுகட்சி செனட்டில் நிதி மந்திரியாக இருக்கும்போது ஆத்திரமூட்டும் தன்மை உடைய கருத்துக்களை வெளியிட்டதற்காக மதிப்பிழந்த ஒரு நபரின் சொந்த வெறுப்புக்களை மட்டுமல்லாது, பரந்த அரசியல் சக்திகள் மத்தியிலும் இக்கருத்து பிரதிபலிக்கின்றதை எடுத்துக்காட்டுகின்றது.

சராஜின்னின் தீமை நிறைந்த தாக்குதல் புகழ்பெற்ற கலாச்சார ஏடான Lettre International ன் சமீபத்திய பதிப்பில் வெளிவந்துள்ளது. "வெகுஜனத்திற்கு பதிலாக வர்க்கம்: சமூக நலன்கள் பெறுவோரின் தலைநகரத்தில் இருந்து உயரடுக்கிற்கான பெருநகரத்திற்கு." என்ற தலைப்பில் ஏடு முன்னாள் பேர்லின் நிதிப்பிரிவு செனட்டரிடம் கொண்ட நீண்ட விவாதத்தை வெளியிட்டுள்ளது.

அவருடைய பேட்டியில் உள்ள சராஜின்னின் இனவெறி உணர்வுக் கருத்துக்கள் ஜேர்மன் தேசியகட்சி (NPD) போன்ற நவ-பாசிச அமைப்புக்களின் தடையற்ற ஒப்புதலை வென்றுள்ளன. அவருடை கருந்துக்களைப் பாராட்டிய NPD சராஜின் "நம் நாட்டில் இப்பொழுதுள்ள அரசியல் நிலைமையை சுருக்கமாக கூறியுள்ளார்" என்றும் மத்திய அரசாங்கத்தில் அவர் குடியேற்றப் பிரிவு ஆணையாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அரசாங்க வக்கீலின் அலுவலகம் இப்பொழுது சராஜின்னின் பேட்டி அரசிற்கு எதிரான குற்றமா என்ற பரிசீலித்து வருகிறது.

தன்னுடைய வர்க்க விரோதம் பற்றி தனது கருத்துகள் அனைத்தையும் வெளிப்படுத்த சராஜின் முனைந்தார். அற்பமான Hartz IV பொதுநல உதவித் தொகைகளைப் பெறுபவர்கள், "நாட்டு மக்கட்தொகையில் 20 சதவிகிதம் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தேவையற்றவர்கள்" என்று அவர் கண்டித்தார். சமூகத்தின் இந்தப் பிரிவு "அகற்றப்பட" அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இம்மக்கள் இறந்துவிட வேண்டும், இந்த பிரிவினர் தம்மை குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று புதிப்பித்துக் கொள்ளக்கூடாதா?" என்ற கேள்விக்கு சராஜின் இணக்கம் தெரிவித்தார்: "[தவறான] அறிவியல் கருத்துக்கள் எப்பொழுதும் மறைந்துவிடும். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்."

"ஒரு தவறான கொள்கையினால் எண்ணிக்கையில் பெருகிவிட்ட" துருக்கியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இது குறிப்பிடத்தக்க வகையில் பொருந்தும். "பழங்கள், காய்கறிகள் வணிகத்தை தவிர அவர்களால் ஆக்கப்பூர்வ பணி ஏடும் கிடையாது. அவர்களால் எந்த முன்னோக்கையும் அபிவிருத்திசெய்யவும் விருப்பமற்றவர்கள். இது ஜேர்மனின் கீழ்வர்க்கத்திற்கும் பொருந்தும். இவர்களும் ஒருகாலத்தில் அரச மானியம் பெற்ற கம்பிச்சுருள்கள் அல்லது சிகரெட் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரிந்தனர்" என்றார் அவர். இங்கு அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் வேலையின்மையின் வாடுபவர்களுடன், அப்பட்டமான வர்க்கத் திமிரால் ஒன்றாக பிணைக்கப்படுகின்றனர்.

NPD வெளியீடுகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறக்கூடிய விதத்தில் ஒரு பத்தியில் சராஜின் அறிவிக்கிறார்: "அரேபியர்களும் துருக்கியர்களும் மக்கள் தொகையில் தங்கள் பங்கு விகிதத்தில் இரண்டில் இருந்தது மூன்று டங்கு அதிக பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர். இரண்டிலும் பரந்த அடுக்குகள் ஜேர்மன் சமுதாயத்தினுள்ள முழுமையான இணைதலுக்கு திறனற்றவை. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்: இனி குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது; எவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் அது வெளிநாட்டில்தான் இருக்க வேண்டும். மணப்பெண்கள் எப்பொழுதும் அங்கிருந்து கொண்டுவரப்படுகின்றனர். இங்கு உள்ள துருக்கியப் பெண் ஒரு அனடோலியனைத் திருமணம் செய்து கொள்ளுகிறாள், துருக்கிய இளைஞர் ஒரு அனடோலிய கிராமத்தில் (துருக்கியில் பின்தங்கிய கிராமம்) இருந்து பெண் எடுக்கிறார். அரேபியர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. என்னுடைய கருத்தாய்வு இப்படித்தான் இருக்கும். பொதுவாக உயர்த்த தகுதி உடையவர்கள் தவிர மற்றவர்கள் குடியேறக்கூடாது; எதிர்காலத்தில் குடியேறுபவர்களுக்கு எவ்வித சமூக நலன்களும் வழங்கப்பட கூடாது."

முன்னாள் நிதிப் பிரிவு செனட்டரின் இனவெறி எல்லையில்லாமல் உள்ளது. "இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டை நிராகரிப்பவர்கள் எவரையும் நான் அங்கீகாரம் செய்யத் தயாரில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு போதுமானவற்றைச் செய்வதில்லை. தொடர்ந்து சிறிய தலையங்கி அணியும் பெண்குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். இது பேர்லினில் உள்ள துருக்கியர்களில் 70 சதவிகிதத்தினருக்கு பொருந்தும், அரேபியர்களின் 90 சதவிகிதத்தினருக்குப் பொருந்தும்."

சராஜின் தொடர்கிறார்: "கொசவோவிர்கள் கொசவோவை வெற்றிகொண்ட அதே முறையில் பிறப்பு விகிதத்தால் துருக்கியர்கள் ஜேர்மனியை வெற்றி கொண்டு வருகின்றனர். மொத்தத்தில் ஜேர்மனியர்களைவிட 15 சதவிகித அதிக புத்திஜீவித தகமையை (IQ) கொண்ட கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் இப்படிச் செய்தால் நான் ஏற்கத்தயார்." இங்கு வெளிநாட்டு ஊடுருவல் என்பது யூத எதிர்ப்புவாத சொற்களுடன் இணைந்து வருகிறது.

சராஜின்னின் "பாராட்டை" ஜேர்மனியில் இருக்கும் யூத சமூகப் பிரதிநிதிகள் எதிர்த்தனர்.

மத்திய வங்கியாளர் தான் இத்தகைய சமூக டார்வினிய தேர்ந்தெடுக்கும் முறை மிக விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக விளக்கினார். ஜேர்மனியைப் போல் சமூகப் பின்னணியின் அடிப்படையில் மக்களை பாகுபாடு செய்யும் நாடுகள் குறைவு என்று ஆய்வுகள் கூறினாலும் இது சராஜின்னிக்கு திருப்தியானதாக இல்லை. "பள்ளிகள் உயர்மட்டத்தில் இருந்து கீழ் வரை வேறுவிதமாக சீரமைக்கப்பட வேண்டும். இதன் பொருள் செயற்திறன் இல்லாதவர்களுக்கு நாம் அவர்களின் செயலின்மையை வேறு எங்காவது காட்டுக என்று கூறுவதாகும். நான் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கூறுகிறேன்: இங்கு நம்மிடம் வரும் அனைவரும், ஏதேனும் சாதிக்க முடியும் என்றால் வரவேற்கத்தக்கது. மற்றவர்கள் வேறு எங்காவது செல்லலாம்." இதைத்தவிர, "மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்; சிறந்தவர்கள்தான் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட வேணடும்."

ஜேர்மனிய ஆளும் உயருடக்குடன் நல்ல தொடர்புடையவர் சராஜின். ஒரு டாக்டரினதும், மேற்கு பிரஷ்ய நிலச்சுவான்தாரின் மகளின் மகனுமான இவர், நீண்ட காலமாக பொதுப் பதவிகளிலும் அரசாங்க நிறுவனங்களிலும் இருந்திருக்கிறார். பொருளாதாரத்தில் டாக்டர் பட்டப்படிப்பிற்கு பின் சராஜின் 1973ல் SPD யில் சேர்ந்தார். அதே ஆண்டு Friedrich Ebert Foundtional இல் வேலை பார்த்தார். அது கட்சிக்கு நெருக்கமானது. அங்கிருந்த அவர் நிதியமைச்சகரத்திற்கு உயர்வு பெற்றார்; அங்கு கன்சர்வேடிவ் ஹெல்முட் கோல் (CDU) அதிபர் பதவியில் இருந்த காலம் உட்பட இருந்து வந்தார்.

1990ல் ஜேர்மனிய மறு இணைப்பிற்கு பின்னர், இவர் அதைத்தொடர்ந்த நிதிய அமைப்பிற்கான தயாரிப்பிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்து, முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் தொழில், நிறுவனங்களை தகர்க்கும் அறக்கட்டளையில் தீவிரமாக இருந்தார். இதன்பின் அவர் ரைன்லாந்த்-பாலடிநேட்" மாநில நிதித்துறையில் உயர் ஊதிய பதவிகளை வகித்தார். அதே போல் ஜேர்மன் புகையிரதத்துறையிலும் இருந்தார்.

ஆளும் பேர்லின் மேயர் Klaus Wowereit (SPD) ஆல் 2002 அவர் செனட்டில் சேர அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிதிப் பிரிவின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். SPD, இடது கட்சிகளுடைய ஆதரவுடன் அவர் கடுமையான சிக்கனப் போக்கை செயல்படுத்தினார். இது பொதுப்பணி ஊழியர்களின் வேலைகள், வருமானங்கள் மீது பேரழிவான விளைவைக் கொடுத்தது. நகரத்தின் சமூக நிலைமைகளுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. 2009 வசந்த காலத்தில் சராஜின் ஜேர்மனிய மத்திய வங்கியில் இப்பொழுதுள்ள பதவியில் சேர்ந்தார்.

பேர்லினில் சராஜின் SPD யின் கொள்கைகளுக்கு சமூக எதிர்ப்பு பெருகியது பற்றிய நெருக்கமான அனுபவத்தைப் பெற்றார். பேர்லினில் நிதி செனட்டர் என இருந்த காலத்தில், சராஜின் ஏற்கனவே வறிய, குடியேறுபவர்களுக்கு எதிராக நயமற்ற, ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்துபவர் என்று தனக்கு என ஒரு பெயரைப் பெற்றிருந்தார்.

செனட்டில் அவர் தாக்குதலை திசைதிருப்பும் பங்கைப் புரிந்து, SPD மற்றும் இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஜனரஞ்சக வலதுசாரி மறைப்பைக் கொடுத்த விதத்தில் கவனத்தை ஈர்த்தார். அவர் இந்த தீய, தொழிலாள வர்க்க எதிர்ப்பு உரைகளை கூறிக் கொண்டே இருந்தபோதிலும் SPD யும் இடது கட்சியும் அவரை முழுக்காலத்திலும் பதவியில் வைத்தது. இதுவே இக்கட்சிகளின் அரசியல் நோக்குநிலை பற்றி நிறைய எடுத்துரைக்கிறது.

எனவே இந்த சமீபத்திய அறிவிப்புக்களை ஒரு நிதானமற்ற நபரின் சிந்தனையற்ற வெளிப்பாடுகள் என்று எடுத்துக் கொள்ளுவது தவறாகிவிடும். தனக்கு வேலை கொடுத்திருப்பவர்களுக்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை தவிர்ப்பதற்கு போதுமான அரசியல் ஆதரவை தான் பெற்றிருப்பதாக சராஜின் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

Der Spiegel இதழின்படி இக்கட்டுரை வெளிவிட முன்னர் மத்திய வங்கியின் தலைவரான Axel Weber உடன் ஒரு முரண்பாட்டை கொண்டிருந்தார். அவர் இந்த கட்டுரை "முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல" என்று கருதியிருந்தார். ஆயினும் கூட சராஜின் சிறிதும் மாற்றாமல் தன்னுடைய கட்டுரையை வெளியிடுவதற்கு அனுப்பி வைத்தார்.

சர்வதேச நிதிய, பொருளாதார நெருக்கடி மற்றும் செப்டம்பர் 27 தேர்தல் முடிவில் மிக மோசமான தோல்வியைத் தழுவிய SPD யின் சரிவு ஆகியவற்றின் பேரழிவான விளைவுகளின் பின்னணியில், சராஜின் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கும் பிரிப்பதற்கும் இனவாத ஆயுதத்தை கையாண்டுள்ளார். தன்னைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட மத்தியதர உயர்மட்ட "உயரடுக்கின்" சார்பில் அவர் பேசுகிறார். அந்த அடுக்கு சமூகநல அரசாங்கம், சமூக சமரசத்தின் அனைத்து வடிவங்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்ப்பு அனைத்தையும் நசுக்க முற்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது செய்தி ஊடகம், தொலைக்காட்சி உரையாடல் நிகழ்வுகளில் இவருடைய இழிவான கருத்துக்களுக்கு சாதகமான வரவேற்பு கிடைத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தன்னை "ஐரோப்பிய கலாச்சார செய்தித்தாள்" என்று விவரித்துக்கொள்ளும் Lettre International சராஜின்னின் எரியூட்டும் பேட்டியை முதலில் வெளியிட்டதே குறிப்பிடத்தக்கதாகும். Lettre International ன் ஜேர்மனிய பதிப்பு 1988ல் taz செய்தித்தாளின் இணைந்த பதிப்பாக ஆரம்பித்தது. அது முன்னாள் 1968 தீவிரவாதிகளினால் உத்தியோகபூர்வ முதலாளித்துவ செய்தி ஊடகத்திற்கு ஒரு இடது மாற்றீடாக நிறுவப்பட்டிருந்ததுடன், பசுமைவாதிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. சராஜின்னுடனான நேர்காணலை நடத்திய ஜேர்மனியப் பதிப்பின் ஆசிரியரான Klaus Berberich, taz இன் நிறுவன உறுப்பினர் ஆவார்.

"இடது" பற்றிய இந்த பிரிவினரின் குணாதிசயப்படுத்தல் வாழ்க்கைமுறைப் பிரச்சினைகளைப் பற்றியதே ஒழிய சமூகப் பிரச்சனைகள் அல்ல. இவை நீண்டகாலம் முன்னரே வலதிற்கு நகர்ந்துவிட்டன --பசுமை வாதிகள் 1998ல் ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தில் நுழைந்ததில் இருந்தே. சமூக துருவப்படுத்தலின் தீவிரமடைதல் அவர்களிடையே இன்னும் வலதிற்குப் பாய வேண்டும் என்ற உந்துதலை தூண்டுகிறது. இதற்கு இடையில், வெளிப்படையான இனவெறி கருத்துக்கள் அத்தகைய வட்டங்களில் சுற்றில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அவை ஜேர்மனியில் இருக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இயக்கப்படுகின்றன.

SPD யிலும் பசுமை அல்லது இடது கட்சியில் இருக்கும் கூடுதலாக துருக்கி பின்னணியை கொண்ட ஒரு சில அரசியல்வாதிகள் இச்சமீபத்திய சாடுதலுக்கு எதிர்ப்பை எழுப்பியுள்ளனர் அல்லது சராஜின் இராஜிநாமா செய்யவேண்டும் அல்லது SPD யில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களிடம் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் இது பற்றி விடையிறுப்பு இல்லை. அரசாங்கத்தின் முன்னாள் பழைமைவாத உள்துறை மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள (CDU) இடம் இருந்தும் மெளனம்தான் விடையாக உள்ளது. அவர் கடந்த காலத்தில் தன்னை சமூகங்களின் ஒன்றிணைதலுக்கு வாதிடுபவராக காட்டிக் கொண்டதுடன், நாட்டின் இஸ்லாமிய சமூகங்களின் சார்பாக மாநாடுகளையும் அமைத்துள்ளார்.

ஆளும் உயரடுக்கின் மற்ற பிரதிநிதிகள் இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் சந்தேகத்திற்கு இடமின்றி சராஜின்னுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இவ்விதத்தில் முன்னாள் BDI (ஜேர்மனிய தொழில்துறை கூட்டமைப்பு) தலைவர் Olaf Henkel, Deutschlandfunk வானொலிக்கு சராஜின் "சில உண்மைகளைப் பேசுவதால்", "பசுமைக்கட்சி, இடதுகட்சியை சுற்றி உள்ள நல்லமனிதர்களாக காட்டிக்கொள்பவர்களால்" தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதாக அறிவித்தார்.

துருக்கியர்களும் அரேபியர்களும் "தேசிய சராசரியைவிட இரு மடங்கு வேலையின்மையில் இருப்பர் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பர்" என்ற அறிக்கை விடுத்து மஞ்சள் பத்திரிக்கை Bild அவரைக் காத்துள்ளது. Hartz IV, பொதுநல உதவி பெறும் வெளிநாட்டினர், அவர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கையும் சராசரியை விட இருமடங்காக உள்ளது." தன்னுடைய கருத்தில் Bild வறுமை, பாகுபாடு இவற்றின் விளைவைப் பயன்படுத்தி அப்பட்டமான இனவெறி உணர்வுகளை நியாயப்படுத்துகிறது.

சமீபத்திய இனவெறிக் கருத்துக்கள் Die Welt செய்தித்தாளிலும் நிறைய ஆதரவைக் கொண்டுள்ளது. இது Bild போல் Springer குழுவைச் சேர்ந்தது. ஆனால் ஒரு "தரமான": செய்தித்தாள் என்று கருதப்படுகிறது. ஏட்டின் தலைமை ஆசிரியர் தோமஸ் ஷிமிட் எழுதியுள்ள தலையங்கம் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவர் சராஜின்னின் கட்டுரை "வெளிப்படையான உண்மைகளை" கூறியுள்ளது என்றும் குடியேறுபவர்கள் இத்தகைய "உண்மைகளை" அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

1970 களில் ஷிமிட் பசுமைவாத முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷருடைய நண்பரும், பிஷ்ஷருடன் சேர்ந்து "புரட்சிகரப் போராட்டம்" என்ற குழுவின் இணை நிறுவனரும் ஆவார். அந்த நேரத்தில் ஷ்மிட் Pflasterstrand (Pebble Beach), taz போன்ற மாற்றீட்டு ஏடுகளில் எழுதி வந்ததுடன் பசுமைவாதிகளின் மற்றொரு தலைவரான டானியல் கோன்-பென்டிற் இற்கு ஆலோசகராகவும் இருந்தார். கோன்-பென்டிற் பிஷ்ஷருக்கு இன்னமும் நெருக்கமான நண்பராக இருப்பதுடன் பிரான்சின் பசுமைக் கட்சியில் முக்கிய நபராக உள்ளார். சமூக ஏணியில் விரைவாக உயர்ந்த முன்னாள் தீவிரவாதிகளின் ஒரு அடுக்கை ஷிமிட் பிரதிபலிக்கிறார். அந்த கடந்த காலத்தில் இருந்து ஒரு பெரிய கூறுபாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீதும், குறிப்பாக அதன் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் மீது ஆழ்ந்த இகழ்வுணர்வை கொண்டுள்ளார்.

ஒரு செய்தியாளரான Bettina Rohl குழப்பம்மிக்க வலதுசாரி வார்த்தைப் பிரயோகத்துடன் Die Welt இன் வலைத் தளத்தில், சராஜின் "கடுமையான சமய குற்ற விசாரணையை போன்ற தன்மையில் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதியுள்ளார். மிக கோரமான அறிக்கையான "கல்வியில் சமத்துவமின்மை, அதையோட்டி பெரும்பாலான குடியேறுபவர்கள் மற்றும் பெரும்பாலான ஜேர்மனியர்களுக்கும் வருமானத்தில் இடைவெளி என்பது எவராலும் வேண்டும் என்றே ஏற்படுத்தப்படவில்லை, அது எவருடைய தவறும் இல்லை." என்பதை வெளியிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையில், Frankfurter Allegemeine Zeitung செய்தித்தாள் சராஜின் இராஜிநாமா செய்யவேண்டும் ("சராஜின் அகல வேண்டும்") என்று குரல் கொடுக்கிறது. ஆனால் அவருடைய வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளடக்கத்தை ஆராய்வதை கவனத்துடன் தவிர்க்கிறது.

இன்னும் அதிக கருத்துக்களை கூறுகையில், செய்தித்தாள் முற்றிலும் வேறுவித ஒலிக்குறிப்பைத்தான் பயன்படுத்துகிறது. "முக்காடு அணிந்த பெண்'' (Headscarf Girl") என்ற தலைப்பில் கட்டுரையாளர் Volker Zastrow சராஜின் மீதான குறைகூறலை பேச்சுரிமை மீதான தாக்குதல் என்று கண்டித்துக் குறையாக கூறுவது: "பெரும் கலாச்சார புரட்சி என்று அறுபதுகளில் நடந்ததற்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் கீழே செயல்படுத்தும் அதிகாரிகள் உருவமற்ற, மறைமுகமான பொது அதிகாரத்தை கொண்டுள்ளனர். இதில் இருந்து இலகுவில் மாற்றத்திற்குட்படக்கூடிய வெகுஜனம் புதிய வடிவங்களை எடுத்து, தீர்ப்புக்களையும் அறிவிக்கிறது. இதிற்கு எதிராக மேல்முறையீடு செய்யமுடியாது. இவ்வாறு செய்கையில் சிந்தனை உரிமை குறைமதிப்பிற்கு உட்படுகிறது, சுதந்திரமான தீர்ப்பு ஆக்கம் பெறுவதில்லை."

இந்தப் பின்னணியில்தான் மத்திய வங்கியாளரும் SPD உறுப்பினருமான சராஜின்னின் சமீபத்திய வெடிப்புரைகள் உள்ளன. தன்னுடைய சொந்த சிலுவை யுத்தத்தை அவர் நிகழ்த்துகிறார். ஆனால் ஒரு செல்வாக்கு மிகுந்த அடுக்கின் ஆன்மாவிற்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நன்கு அறிவார். ஜேர்மனிய ஆளும் உயரடுக்கில் கணிசமான பிரிவு எந்தவித பொறுத்துக் கொள்ளும் தன்மை, சமூக சமரசம், சமூகத்தில் நலிவுற்றோர் பற்றிய அக்கறை, பொதுநல அரசாங்கம், "இடதுசாரி நல்லமனிதர்களாக காட்டிக்கொள்பவர்கள்" இவற்றிற்கு இறுதியான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

இந்த பிரிவுகள் CDU-SPD-CSU வில் இருந்து CDU-FDEP கூட்டணிக்கான அரசாங்க மாற்றத்தை தாக்குதலுக்கு செல்லக்கூடிய அடையாளமாக காண்கின்றன.

மற்றொரு தெளிவான குறிப்பு பேராசிரியரும் தன்னைத் தானே தத்துவஞானி என்று நியமித்துக் கொண்டுள்ள Peter Sloterdijk யின் கட்டுரையில், ஜூன் மாதம் FAZ பத்திரிகையில் வந்ததில் காணலாம். இதில் ஆசிரியர் அதிக வருமானத்திற்கு அதிகவரி என்ற கருத்தை "சோசலிச தேசியமயமாக்கலுக்கு ஒப்பானது" என்று கண்டித்துள்ளார். பின்னர் "எதிர் சுரண்டல்" பற்றி அவர் கூறியுள்ளார்: "உற்பத்தித்திறன்" இல்லாதவர்கள் "உற்பத்தித் திறன்" உடையவர்களின் உழைப்பில் வாழ்கிறார்கள், அதாவது, உயர்வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில் வழங்குவோரின் உழைப்பில் வாழ்கின்றனர். உயர்வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில் வழங்குவோர் ஒரு "கொடுக்கும் கைகளின் புரட்சியை" மேற்கொள்ள வேண்டும் என்றும் "கட்டாய வரிகளை" அகற்றுவதற்கு போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய தேர்தலுக்குப் பின்னர் Der Spiegel உடைய ஆசிரியர் Gabor Steingart தான் கறுப்பு-மஞ்சள் கூட்டணியை, குறிப்பாக வணிகச்சார்பு உடைய FDP, மற்றும் பசுமைவாதிகளுக்கு கிடைத்த கூடுதலான வாக்குகளை வரவேற்றார். "FDP க்கு ஆதரவு அதிகம் என்பது ஒரு சமூகமாறுதலை குறிக்கிறது. முன்பு தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தினால் சுரண்டப்படுவது என்பது சகாப்தத்தின் சிறப்பு கூறுபாடாக இருந்தது. இப்பொழுது அதன் இடத்தில் அலுவலக உத்தியோகத்தர்களும் மற்றும் மத்தியதர ஊழியர்கள் அரசாங்கத்தால் சுரண்டப்படுதவதைப் பார்க்கிறோம். இதையொட்டி சுரண்டப்படுபவர்கள் முன்பு சரிந்திருந்த தொழிலாளர்கள் எழுச்சி செய்வது போல் எழுச்சி செய்கின்றனர்."

சராஜின்னின் இடைவிடாத் தாக்குதலும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் அவருக்குக் கொடுக்கும் ஆதரவும் அத்தகைய "எழுச்சிக்கு" குரல் கொடுக்கும் அழைப்பு ஆகும். உயர், மத்தியதர வகுப்புக்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, குறிப்பாக சமூகத்தின் மிக நசுக்கப்பட்ட அடுக்குகளுக்கு எதிராக திட்டமிட்டமுறையில் அணிதிரட்டப்படுவதின் திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இது.