World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Right-wing march in Washington against Obama health care plan

ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு எதிராக வாஷிங்டனில் வலதுசாரி அணிவகுப்பு

Joe Kishore and Barry Grey
14 September 2009

Use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகத்தைக் கண்டித்து வாஷிங்டனில் வலதுசாரிக் குழுக்கள் சனிக்கிழமையன்று ஒர் ஆர்பாட்டத்தை நடத்தின. குறிப்பாக புதனன்று காங்கிரசில் ஜனாதிபதி உரையில் கோடிட்டுக் காட்டப்பட்ட, திட்டமிடப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு முறையின் மீது இந்த ஆர்ப்பாட்டம் கவனம் செலுத்தியது.

சபையின் பெரும்பான்மைத் தலைவராக இருந்த முன்னாள் குடியரசு கட்சியாளரான டிக் ஆர்மேயின் குழுவான FreedomWorks-ஆல் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; இது மிகவும் குழப்பமடைந்துள்ள சமூக அடுக்கை ஈர்த்தது; கருக்கலைப்பு மீதான எதிர்ப்பு (anti-abortion) மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகள் ஆகிய கோரிக்கைகளுடன் வரிகள் குறைப்பு மற்றும் அரசாங்க செலவினங்களின் குறைப்பு ஆகியவையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாசிச உரை நிகழ்ச்சி வர்ணனையாளர்களால் ஊக்கம் கொடுக்கப்பட்டிருந்த கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், அமெரிக்காவில் "சோசலிசத்தை" அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக பலரும் ஒபாமாவை கண்டித்தனர்; சிலர் அவரை ஹட்லருடன் ஒப்பிட்டு, அவருடைய அமெரிக்க குடிமகன் என்ற அந்தஸ்தையும் கேள்விக்குட்படுத்தினர்.

"ஒபாமா பாதுகாப்பு" என்று அவர்கள் அழைத்த ஒன்றிற்கு கண்டனம் தெரிவிப்பது தான் அமைப்பாளர்களின் உடனடி அரசியல் நோக்கமாக இருந்தது. இதை Freedom Worksன் வலைத் தளம், "சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் கூறுபாட்டைக் கொண்டுள்ளது" என்று எழுதியிருக்கிறது. "மக்கள் கருத்து" என்று அழைக்கப்படுவதின் மீது அவர்கள் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்தி இருக்கிறார்கள்; இதன்படி, சீரமைக்கப்படும் சுகாதார பாதுகாப்பு சந்தையில் தனியார் காப்பீட்டாளர்களுடன் போட்டியிடும் வகையில் குறைந்த தன்மையுடைய ஓர் அரசு காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

புதனன்று நிகழ்த்திய அவரின் உரையில், காப்பீட்டு துறையையும், அவரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை குறை கூறும் குடியரசு கட்சியினரையும், சுகாதார பாதுகாப்பு சந்தையில் அரசின் ஒரு சிறிய பங்களிப்பிற்கும் கூட முகஞ்சுழிக்கும் "நிதான போக்குடைய" ஜனநாயகக் கட்சியினரையும் அமைதிப்படுத்த, "மக்கள் கருத்து" என்ற இந்த திட்டத்தை தாம் கைவிட போவதாக ஒபாமா தெளிவுபடுத்தினார்.

ஆர்மேயைத் தவிர, ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்தியானாவின் மைக்கேல் பென்ஸ், தெற்கு கரோலினாவின் செனட்டர் ஜிம் டிமின்ட் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் அதிக மக்கள் பங்கு பெறவில்லை. செய்தி ஊடகத் தகவல்கள்படி, 15,000த்தில் இருந்து 30,000 பேர்கள் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 2003 பெப்ரவரியில், ஈராக்கிய படையெடுப்பிற்கு முன் நிகழ்ந்த மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை விட, இந்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தவானவர்கள் தான் இருந்தார்கள்; ஆனால் இந்த வாரயிறுதி ஆர்ப்பாட்டம், அமெரிக்க செய்தி ஊடகங்களால், குறிப்பாக கேபிள் தொலைக்காட்சிகளில் பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. அமைப்பாளர்களும், செய்தி ஊடக ஆதரவாளர்களும் கூறுவது போல், இதிலொன்றும் பரந்த மக்கள் எழுச்சி இருப்பதாக கூற முடியாது.

இருந்த போதினும், இவர்களின் இந்த ஐக்கியம், தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி என்னும் ஆபத்தை எழுப்புகிறது. இந்த ஆபத்து, வலது சாரி மற்றும் அமெரிக்காவில் உள்ள பாசிச அரசியலுக்கான மக்கள் தளத்திலிருந்து வருகிறது என்று கூற முடியாது. உண்மையில், மக்களில் பெரும்பாலானவர்கள், பொது சுகாதார பாதுகாப்பிற்கும், செல்வந்தர்கள் மீதான கூடுதல் வரிகளுக்கும், இன்னும் பிற சமத்துவ சமூக கொள்கைகளுக்கும் தான் ஆதரவளிக்கின்றனர்.

மாறாக, ஜனநாயகக் கட்சிக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் அந்த அர்த்தத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு, தொழிலாள வர்க்கம் அடிபணிந்திருப்பதிலிருந்து தான் அடிப்படையில் ஆபத்து எழுகிறது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வாக்குரிமை இழப்பு என்பது பெருவணிகத்தின் இரண்டு வலதுசாரி கட்சிகள் அரசியலில் ஏகபோக உரிமை பெற்றிருப்பதின் மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளது.

"சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் கையில் எடுப்பது" என்பதன் மீது எவ்வாறான கண்டனங்கள் இருந்த போதினும், அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு செலவினங்களைப் பெருநிறுவனங்களுக்கு குறைப்பதற்கான ஒரு முயற்சியைத் தான் ஒபாமாவின் திட்டம் குறிக்கிறது.

புதனன்று தன்னுடைய உரையில் ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: "எமது சுகாதார பாதுகாப்பு பிரச்சினை, நம்முடைய பற்றாக்குறை பட்ஜெட் பிரச்சினையாகும்." அரசியல் நடைமுறைக்குள், இன்னும் அதிகமாகவும், நேரடியாகவும் செலவினங்களைக் குறைக்க புதிய வழிவகைகளைக் கண்டுபிடிக்கும் விவாதத்தை தான் ஒபாமாவின் உரை தொடங்கி வைத்திருக்கிறது. தனியார் காப்பீட்டாளர்களிடம் இருந்து, மிகக் குறைந்த தன்மையுடைய பாதுகாப்பு காப்பீட்டைத் தான் மக்கள் வாங்க வேண்டும் என்றுள்ள இவருடைய திட்டம், அதன் இறுதி நோக்கமாக, முதலாளிகள் அளிக்கும் சுகாதார பாதுகாப்பை --பெருநிறுவனங்களுக்கு பில்லியன்களை சேமிப்பாக அளிக்க கூடியவை-- அகற்றிவிடுவதாக உள்ளது; மேலும் இது கணிசமாக மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி இவற்றின் செலவினங்களையும் குறைத்து விடும்.

சுகாதாரப் பாதுகாப்பு துறையின் வருங்காலம் குறித்து, மக்களின் பரந்த பிரிவுகளிடையே முற்றிலும் பெரிய கவலைகள் சூழ்ந்துள்ளன. செலவின குறைப்பு என்பது பணிகளில் குறைப்பிற்கு வழிவகுத்துவிடும், ஒபாமாவின் முழுமுறையை மாற்றுதல் என்பது அமெரிக்க சுகாதார பாதுகாப்பு முறையின் மீது காப்பிட்டு தொழில்துறையில் சக்தியை மிகப் பரந்தளவில் விரிவடைய செய்ய வழிவகுக்கும் என்று மூத்த குடிமக்களும், மற்றவர்களும் நியாயமான முறையில் கவலைப்படுகின்றனர்.

எவ்வாறிருப்பினும், இத்தகைய மக்கள் எதிர்ப்பிற்கு, அரசியல் வட்டாரத்தின் எந்த பிரிவிலிருந்தோ அல்லது இரண்டு கட்சிகளிடம் இருந்தோ எந்த வெளிப்பாடும் இல்லை. ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை தாழ்த்தியிருப்பது, ஒரு முற்போக்கு மாற்றீட்டின் வளர்ச்சியை தடுக்கிறது. வலது அரசியலில், இடதின் வெற்றிடத்தை பயன்படுத்தி குடியரசு கட்சி ஆதாயம் காண முயல்கிறது--மக்களைப் பொறுத்தவரையில் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

போலித்தனமான முன்னேற்றம் மற்றும் தாராளவாத மத்தியதர வர்க்க அமைப்புகளின் பாத்திரம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவை, ஒபாமாவிற்கு ஆதரவளித்தும், அவருடைய வலதுசாரி கொள்கைகளை மூடிமறைப்பதன் மூலமாகவும், வெகுஜன தொழிலாளர்களின் நலன்களையும், கவலைகளையும், அவற்றின் நலன்களுக்கான எவ்வித ஒருங்கிணைந்த வெளிப்பாடுகளையும் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உள்நாட்டு கொள்கைகளை பொறுத்தவரையில் மட்டுமின்றி, வெளியுறவு கொள்கைகளிலும் இது முற்றிலும் உண்மையாகிறது, சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தத்தின் மீதான எதிர்ப்பு, கார் தொழிலாளர்கள் மீதான தாக்குதல், வோல்ஸ்ட்ரீட் பிணையெடுப்பு, புஷ்ஷின் போலீஸ்-அரசாங்க நடவடிக்கைகளின் தொடர்ச்சி போன்றவற்றால் இது உறுதியாகிறது.

இக்குழுக்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடக்கும் போர்களுக்கு எதிராக உண்மையான போராட்டத்தை எதிர்க்கின்றன. இவற்றுள் சில இப்பொழுது "போர் எதிர்ப்பு" ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடுகின்றன; ஏனெனில், அதன் மூலம் வளர்ந்து வரும் போர்-எதிர்ப்பு உணர்வை உடைக்கவும், திசைதிருப்பி விடவும் முடியும். பெரும்பாலும் இன்னும் திறமையான ஏகாதிபத்திய மூலோபாயத்தைத் தான் அவர்கள் மத்திய ஆசியாவில் காண விரும்புகிறார்கள்.

இந்த அமைப்புக்களும், அவற்றிற்காக குரல் கொடுப்பவையும் --Nation இதழ் போன்றவை-- சுய அடையாளம் மற்றும் நவீன வாழ்க்கைமுறை பற்றிய பிரச்சினைகளைப் பற்றியே பெரும் அக்கறை கொண்டுள்ளன --இவற்றின் மூலம், அவை குறிப்பிடும் சலுகைகள் பெற்ற மெத்தனமான சமூக அடுக்குகளின் பிரச்சனைகளைத் தான் பிரதிபலிக்கின்றன. அவர்கள் சமூக கவலைகளான வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத்தரங்கள், வீடுகள் முன்கூட்டி விற்கப்படல் போன்றவற்றை பொருட்படுத்துவதில்லை-- இவைதான் பெரும்பாலான மக்களுடைய கவலைகளாக இருக்கிறது; நெருக்கடியினாலும், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளாலும் அவர்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளனர்.

Nation இதழில் சமீபத்தில் வெளியான "A Method to Their Madness" என்ற கட்டுரை, வலதுசாரி சக்திகளின் அரசியலை விவாதித்திருப்பதுடன், "தலைமை இல்லாமலேயே" அவை வலிமையைப் பெறுகின்றன என்று அறிவித்துள்ளது. ஒரு வெளிப்பாட்டை தரும் நிலையில் இக்கட்டுரை, "நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் தான், சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தம் பற்றிய அவரின் திட்டங்களை ஒபாமா தெளிவாக விளக்கியுள்ளதாகக் கருதுகின்றனர்....CNN கருத்துகணிப்பின்படி, சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் தங்களால் கூடுதல் நலன்களைப் பெற முடியும் என்று ஐந்தில் ஒருவர் தான் நினைக்கிறார், 40 சதவீதத்தினர் திட்டங்கள் பற்றி குழப்பம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்" என்று அது குறிப்பிடுகிறது.

"மக்கள் கருத்து" என்பதை முன்வைக்க, "இந்த தலைமையை" ஒபாமா அளிக்க வேண்டும் என்று இந்த கட்டுரை வலியுறுத்தியுள்ளது. சுகாதார பாதுகாப்புத்துறை முற்றிலும் மாற்றுவதன் மூலம், "அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு" கிடைக்கும் என்ற பொய் மீண்டும் வளர்க்கப்படுகிறது.

உண்மையில் சுகாதார பாதுகாப்பு, முழுதும் மாற்றப்படுவது பற்றிய குழப்பமும், கவலையும் ஒபாமா நிர்வாகத்தின் மோசடித்தனத்தின் ஒரு விடையிறுப்பாகும்; அது சுகாதார பாதுகாப்பு மீதான எதிர்-புரட்சி நடவடிக்கையை சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மூடி மறைக்க முற்படுகிறது. Nation போன்ற அமைப்புக்கள் முழு உணர்வுடன், இந்த மோசடியை நிலைநிறுத்த முயல்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களின் போது, ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிப்பதற்கான வாதங்களில், குடியரசு கட்சி நலன்களின் தொகுப்பை அவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் மீண்டுமொரு முறை சுட்டிக்காட்ட கூடும்.

தற்போதைய நெருக்கடியின் வரலாற்று, அரசியல் உட்குறிப்புக்களைப் பற்றி அறியாத நிலையில், அவர்கள் தங்கள் சொந்த கொள்கைகளின் தர்க்கத்தைக் கூட புரிந்துகொள்ள இயலாதவர்களாக உள்ளனர். ஒரு கட்டத்தில், சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்திய இதே தீவிர வலது மூலகங்களின் ஒரு பிரிவு, பரந்த சமூக அக்கறைகளைப் பற்றி மக்களைத் திருப்தி செய்யும் விதத்தில் முறையீடுகளையும் செய்ய கூடும். அதுதான் உண்மையான பாசிச இயக்கத்தின் ஆவியுருவை வெளிக்கொண்டு வரும்.

தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கிய பிரச்சினை இந்த மத்தியதர வர்க்க குழுக்களின் பிற்போக்குத் தன்மையை அறிந்து கொள்வதும், அவற்றின் பொய்யான முன்னோக்கை நிராகரித்து ஜனநாயகக் கட்சியுடன் உடைவிற்கு பாடுபடுவதும், ஒபாமா நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை தளமாக கொண்ட ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்திற்கு போராடுவதுமாகும். மகத்தான வேலையின்மை, வறுமை, போர் இவற்றிற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் நுழையும்போது, அத்தகைய முன்னோக்கிற்கு பெருகிய முறையில் பரந்த மக்கள் ஆதரவு இருக்கும்.