World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The growing danger of trade war

வணிகப்போர் மூளும் ஆபத்து அதிகரிக்கின்றது

Peter Symonds
31 March 2010

Use this version to print | Send feedback

நாணய விவகாரங்களில் காங்கிரஸிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்க நிதித்துறை அளிக்கும் அறிக்கைக்கான காலகெடு ஏப்ரல் 15 நெருங்கிக் கொண்டிருக்கையில் சீனாவிற்கு எதிரான வணிகப்போர் நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சீனாவை "நாணய மதிப்பைத் திரிக்கும்" நாடு என்று அறிவித்து அமெரிக்கத் தண்டனைகளைப் பதிலடியாகக் கொடுப்பதற்கு வழிவகுக்கலாமா என்பதுதான் இப்பொழுது முக்கியப் பிரச்சினை ஆகும்.

வரிபற்றி தீர்மானிக்கும் அமெரிக்க சட்டமன்றத்தின் குழுவில் கடந்த வாரம் பேசுகையில் பொருளாதார வல்லுனர் பிரெட் பெர்க்ஸ்டன் சீன யுவான் அமெரிக்க டாலருக்கு எதிராக 40 சதவிகிதம் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்றும் இதனால் அமெரிக்காவில் ஏராளமான வேலை இழப்புக்கள் ஏற்படுகின்றன, மற்றும் வணிகப்பற்றாக்குறை வளர்கிறது என்றும் கூறினார். ஒபாமா நிர்வாகம் சீனாவை முதலில் ஒரு நாணய மதிப்பு திரிக்கும் நாடு என்று முத்திரையிட்டு மற்ற நாடுகளின் ஆதரவைச் சேர்த்து, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகிவற்றின் மூலம் அதன் நாணயம் மறுமதிப்பீடு செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

பெர்க்ஸ்டெனுடைய சூடான சொற்களே வணிகப்போர் அழுத்தம் உயர்ந்துள்ளதின் அடையாளம் ஆகும். "சமாதானம்" என்ற பெயரில் நாடுகளே தவிர்க்க முடியாமல் போருக்குச் செல்வத போல், சீனாவிற்கு எதிராக அமெரிக்க வணிக அபராதங்களை நியாயப்படுத்தும் வகையில் பெர்க்ஸ்டென் அவற்றை "பொது காப்புமுறை-எதிர்ப்பு உடையவை" என்றார். யுவானை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கும் சீனாவின் "அப்பட்டமான பாதுகாப்பு முறைக்கு" முற்றிலும் எதிரானது என்றார். பெர்க்ஸ்டெனின் "பன்முக அணுகுமுறை", குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்புவிட்டிருப்பது, "அதிகபட்ச தாக்கத்தை" வழங்குவதற்கும், வாஷிங்டன் மீது பதிலடியைக் கொடுக்கும் பெய்ஜிங்கின் திறனைக் குறைக்கவும் முற்படுகிறது.

ஆனால் ஐரோப்பா அதன் நாணய நெருக்கடியிலேயே ஆழ்ந்துள்ளது. அதிக கடன்பட்டுள்ள கிரேக்கத்திற்கு உதவிப்பொதி அளிப்பது பற்றி ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையேயான பூசல்கள் கருத்து வேறுபாடுகளைக் காட்டியுள்ளதுடன், ஐக்கியப்பட்ட நாணயத்தின் எதிர்காலம் பற்றியும் வினா எழுப்பியுள்ளது. இதையொட்டி யூரோவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு உதவியுள்ளதால், சீனாவிற்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைக்கான ஐரோப்பிய ஆதரவு அதிகம் இராது. ஐரோப்பிய ஒன்றிய வணிக ஆணையாளர் Karel De Gucht, Financial Times இடம், "தற்பொழுது ஐரோப்பாவில் இது அரசியல் பிரச்சினையில் குறைந்த முக்கியத்துவம் உடையது." என்றார்.

சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தேவை என்னும் அமெரிக்க முறையீடு ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை விருப்பமற்ற நிலைக்கு தள்ளும். அமெரிக்காவுடன் நீண்டகால மூலோபாய உறவுகளைக் கொண்ட பல ஆசிய பசிபிக் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை நடத்த சீனாவிற்கு ஏற்றமதிகள் அதிகம் நம்பியுள்ளன. யுவான் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்னும் வாஷிங்டனுடைய கோரிக்கையில் சேர்வது, பெய்ஜிங்கிடம் இருந்து பொருளாதாரப் பதிலடியை வரவழைக்கக்கூடும். அவ்வாறு செய்யாவிட்டால், அமெரிக்காவுடன் பிளவு என்ற ஆபத்தைக் கொடுக்கும்.

ஆயினும் கூட வாஷிங்டனில் காப்புவரிகள் பற்றி கூச்சல் குறையாமல் தொடர்கிறது. வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத்தை எட்டுவதை எதிர்கொள்ளும் ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்கங்களும் பல தசாப்தங்கள் முறையாக வேலைகள் தகர்க்கப்படுவதற்கு தங்கள் பொறுப்பு பற்றி கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஒரு பலிகடாவைக் காண விரும்புகின்றனர். கடந்த வாரம் தொழிற்சங்க ஆதரவு கொண்ட பொருளாதார கொள்கை நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு 2001 இருந்து சீனாவிற்கு 2.4 வேலைகளை அமெரிக்கா இழந்துள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இதன் ஆசிரியர் ரோபர்ட் ஸ்காட் சீனா தன் நாணயக் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் சீனப் பொருட்கள் மீது குறைந்தது 25 சதவிகித காப்புவரிகளை சுமத்த வேண்டும் என்று காங்கிரஸிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

2005ல் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு சீனா யுவான் டாலருக்கு எதிராக செயல்பட அனுமதித்தது. ஆனால் 2008ல் தன் நாணயத்தரத்தை உலக நிதிய நெருக்கடி வெடித்தபோது பழைய உறுதியான நிலையில் வைத்தது. தன் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் பெய்ஜிங் பலமுறையும் தான் யுவானின் மதிப்பை உயர்த்துவதாக இல்லை என்று அறிவித்துள்ளது. கடந்த வாரம் வாஷிங்டனுக்குச் சென்றிருந்த சீனாவின் துணை வணிக மந்திரி ஜோங் ஷான் சீனா வணிக உபரி கொண்டிருப்பதால், ஒரு நாணயத் திரிப்பு நாடு என்று அமெரிக்கா முடிவிற்கு வருவது தவறு என்று கூறி, "சீன அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தத்திற்கு இணங்கிவிடாது" என்று எச்சரித்தார்.

சீன ஏற்றுமதிகள் உலக நிதிய முறைவில் கடுமையான பாதிக்கப்பட்டன. இதையொட்டி குறைந்தது 20 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டுள்ளதுடன், சமூக அழுத்தங்கள் தீவிரமாகியுள்ளன. யுவானை மறுமதிப்பீடு செய்வது சீனாவில் புதிய திவால்கள், வேலை இழப்புக்கள் என்ற புதிய அலையை ஏற்படுத்தும். Sydney Morning Herald ல் எழுதிய கட்டுரை ஒன்றி பெய்ஜிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வென் கான்ங் சமீபத்திய வாஷிங்டனின் "சீனாவைத் ஆக்குதல்" சுற்று பற்றிச் சாடியுள்ளார்; மறுமதிப்பீடு செய்யப்படும் யுவான் அமெரிக்காவில் இன்னும் உயர்ந்த விலைகளையும், வட்டிவிகிதங்களையும்தான் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் புதிய வேலைகளும் இதையொட்டித் தோற்றுவிக்கப்படாது. மாறாக இந்தியா, வியட்நாம் போன்ற குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு இருக்கும் நாடுகளுக்கு உற்பத்தி மாறும் என்றார்.

நாணய மாற்று விகிதங்கள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே உள்ள பரந்த அழுத்தங்களின் ஒரு பகுதிதான். ஆண்டுத் துவக்கத்தில் இருந்தே, ஒபாமா நிர்வாகம் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொண்டு, அதை தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை மற்றும் தலாய் லாமாவுடன் ஒபாமா கடந்த மாதம் சந்திப்பு ஆகியவற்றின் மூலம் அடையாளம் காட்டியது. சீன டயர்கள் மற்றும் எஃகு குழாய்கள்மீது ஏற்கனவே அமெரிக்கக் காப்புவரிகள் சுமத்தப்பட்டுள்ளன. வாஷிங்டன் பெய்ஜிங்கிற்கு ஈரானுக்கு எதிரான புதிய ஐ.நா.பொருளாதாரத் தடைகள் பற்றி ஆதரவு கொடுக்க அழுத்தம் கொடுத்தள்ளது--ஈரானோ சீனாவிற்கு முக்கிய எரிபொருள் வழங்கும் நாடு ஆகும். மேலும் சீனாவை இணையத்தள தணிக்கை பற்றி குறைகூறுகிறது, அமெரிக்க பெருநிறுவனம் கூகிள் தன்னுடைய சீன செயல்களில் இருந்து விலகிக் கொள்ள இருக்கிறது.

சில வர்ணனையாளர்கள் இப்பொழுது சீனா கூடுதல் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர். கடந்த வார இறுதியில் Financial Times ல் யூரேசியாக் குழுவின் பகுப்பாய்வாளர் இயான் பிரேமர் எழுதுகையில் சீனா, அமெரிக்கா பொருளாதார இடைத்தொடர்பை ஒட்டி "ஒரு புதிய மோதல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது, இது பனிப்போரைவிடக் கூடுதால ஆபத்தைக் கொண்டிருக்கும்" என்று எச்சரித்துள்ளார். "சீனா தன்னுடைய செல்வாக்கை ஆசியாவில் விரிவாக்கும் விழைவுகளைக் கொண்டுள்ளது, தொலைதூரங்களில் இருக்கும் பகுதிகளில் வணிகம் நடத்த அதன் திட்டம் அதன் இராணுவத்திட்டங்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளன...சமசீர்நிலையில் பரந்த மாற்றமும், வட கொரியா, பர்மா, சூடான் ஆகியவற்றின் மீதான அமெரிக்க அழுத்தத்திற்கு கூடுதல் எதிர்ப்பை கொடுக்கவைக்க சீனப்பருந்துகளைத் தூண்டும்."

ஆனால் Morgan Stanley இன் ஆசிய இயக்குனர் ஸ்ரெபான் ரோஷ் பைனான்சியல் டைம்ஸில் திங்களன்று கருத்துத் தெரிவிக்கையின் சீனா அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பொறுப்பு இல்லை என்று அறிவித்துள்ளார். "வாஷிங்டன் சீனாவை பலிகடாவாக ஆக்குவது உலகத்தை சறுக்கிவிடும் சரிவின் விளிம்பில் நிறுத்தக்கூடும். மோசமான பொருளாதரத்தை தளமாகக் கொண்டு அரசியல் மறுப்பை முன்வைப்பது இது முதல் தடவை இல்லை. ஆனால் அத்தகைய பெரும் தவறு--வணிகப்பிளவுகள், காப்புவரி போன்றவை--2008-09 நெருக்கடியை ஒரு குழந்தை விளையாட்டுப் போல் செய்துவிடும்." என்று எச்சரித்தார்.

மோசமாகும் உலகப் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் மேலாதிக்கக் குறைவை அடிக்கோடிட்டுக்காட்டுவதுடன் சீனாவின் பொருளாதார ஏற்றத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெய்ஜிங் மூலப்பொருட்கள், சந்தைகளுக்காக தேடுவது பழைய ஸ்தாபிதமான சக்திகளுடன் மோதலைக் கொண்டுவருகிறது. 1930களுக்கு சமாந்திரமான நிலைமை மற்றும் போர் ஆபத்து அதிகரித்தல் என்பதும் தெளிவாகத்தெரிகின்றன.

கடந்த வாரம் மன்ற வரிகள் பற்றி தீர்மானிக்கும் குழுவில் சாட்சியம் அளித்த நீல் பேர்க்குஸன் சீனா "ஒரு நாணயத்தைத் திரிக்கும் நாடு" என்று அறிவிப்பதற்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் ஒருதலைப்பட்ச கடுமையான பதிலடி குறித்தும் எச்சரிக்கை கொடுத்தார். "பெருமந்த நிலையின் முக்கியமான படிப்பினைகளின் ஒன்று காப்புவரி நடவடிக்கைகள் ஆகும். இதில் போட்டியிட்டு நாணய மதிப்புக் குறைப்புக்கள் நடந்தன. இது 1930களில் உலகப்பொருளாதாரத்தை மோசமடையத்தான் செய்தன. இரண்டாவது வரலாற்றுப் படிப்பினை நாணயங்கள், வணிகம் பற்றியது பொதுவாக வேறுவித மோதல்களுக்கு முன்னோடிதான்" என்று அவர் எச்சரித்தார்.

இத்தகைய வணிக, நாணய போர்கள், இராணுவவாதம், புதிய காலனித்துவப் போர்கள் மற்றும் பரந்த உலகந்தழுவிய கொந்தளிப்பின் பக்கம் ஏற்படும் நோக்கிசெல்வது காலம் கடந்துவிட்ட முதலாளித்துவ முறையின் கீழ் உலகப் பொருளாதாரத்திற்கும் உலகை தேசிய அரசுகளாக பிரித்து வைத்திருப்பதற்கும் இடையே உள்ள தீர்க்கமுடியாத, அடிப்படை முரண்பாட்டின் விளைவு ஆகும். இதற்கு ஒரே மாற்றீடு உலகை சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் சோசலிசரீதியில் மறுஒழுங்கமைக்கப்படுவதுதான். அதனால் உலகின் பரந்த இருப்புக்கள் ஒரு சில செல்வந்தர்களின் தனி இலாபங்களுக்குப் பதிலாக அவசியமான சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திரட்டப்படலாம்..