சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Communist Policy Toward Art (1923)

கலை பற்றிய கம்யூனிஸ்ட் கொள்கை (1923)

லியோன் ட்ரொட்ஸ்கி

Use this version to print | Send feedback

தொழிலாளர்களால் தான் புரட்சிகரக் கலையை தோற்றுவிக்க முடியும் என்பது உண்மையல்ல. நாம் முன்னரே கூறியதை மறுபடியும் கூறுவோமாயின், புரட்சி என்பது ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சி என்பதாலேயே, அது கலைக்காக தொழிலாள வர்க்க ஆற்றலை மிகக் குறைந்தளவில் தான் செலவிடுகிறது. பிரெஞ்சு புரட்சிக் காலத்தில், அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரதிபலித்த உயர்ந்த படைப்புக்கள் பிரெஞ்சு கலைஞர்களால் தோற்றுவிக்கப்படவில்லை; மாறாக, ஜேர்மனிய, ஆங்கில மற்றும் ஏனைய நாட்டவரால் தோற்றுவிக்கப்பட்டன. புரட்சி உருவாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த பிரெஞ்சு பூர்ஷூவா, அதன் அடிச்சுவட்டை மீண்டும் தோற்றுவித்து, நிலைநிறுத்துவதற்கு அதன் வலிமைக்குப் போதிய தரத்தை அளிக்க முடியவில்லை. இது பாட்டாளி வர்க்கத்திற்கு இன்னும் சரியாக பொருந்துகிறது; பாட்டாளி வர்க்கம் அரசியலில் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த போதினும், கலையில் சிறிதளவே கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. வடிவத்தில் தங்களின் தகுதிகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு, அறிவுஜீவிகள் ஓர் செயலற்ற அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்திருந்ததில் வெறுக்கத்தக்க முன்னுரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இதை அக்டோபர் புரட்சியில் அவர்கள் காட்டிய கூடிய விரோதப் போக்கு அல்லது குறைந்த நட்புத்தன்மையில் காணமுடிகிறது.

ஆகவே, புரட்சியைத் தோற்றுவித்த பாட்டாளி வர்க்கத்தைவிட இந்த சிந்தனைவயப்பட்ட அறிவுஜீவிகள் கூட்டத்தால் புரட்சியைப் பற்றிய ஒரு சிறந்த கலைத்துவ உருவாக்கங்களை (அவை சற்றே பிறழ்ந்து இருந்தன என்ற போதினும்) கொடுக்க முடிந்ததுடன், கொடுத்தும் வருகின்றன என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உடன்பயணிப்பவர்களின் அரசியல் மட்டுப்படுத்தல்கள், உறுதியற்ற தன்மை, பொறுப்பின்மைகள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் பில்ன்யக்கின் The Naked Year ஐயும், அத்துடன் அவரையும் நாம் நீக்கிவிடுவோமேயானால், சிவ்லோட் இவானோய், திக்கோனோய், போலன்ஸ்கியா ஆகியோருடன் “Serapion Fraternity” ஐயும் ஒதுக்கிவிடுவோமேயானால், மாயாகோவ்ஸ்கி மற்றும் யென்னின் ஆகியோரையும் நீக்கிவிட்டால், வருங்கால பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு கடந்தகாலத்தின் அருமையான குறிப்புகளில் ஏதேனும் மிஞ்சுமா? அதிலும் குறிப்பாக டெம்யன் பெய்ட்னியை உடன்பயணிப்பவர்களுடன் சேர்க்க முடியாது என்றும், புரட்சிகர இலக்கியத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்றும், குஜ்னிட்சா அறிக்கையில் (manifesto of the Kuznitsa) வரையறுக்கப்பட்ட விதத்தில், பாட்டாளி வர்க்க இலக்கியத்தோடு அவரை தொடர்புபடுத்த முடியாது என்றும் நாம் நம்புகிறோம். அப்படியானால், பின்னர் நமக்கு என்ன எஞ்சியிருக்கும்?

கட்சி, அதன் இயல்புக்கு மாறாக, முற்றிலும் ஓர் பல தத்துவங்களின் கருத்துக்களை தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கின்ற (eclectic) நிலைப்பாட்டைக் கலைத்துறையில் கொண்டிருக்கிறது என்பதையா இது குறிக்கிறது? மிக கடுமையாக தெரியும் இந்த வாதம், உண்மையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. புதிய கலையின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான மற்றும் அதன் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்வதற்கான மற்றும் அதன் பாதையில் ஓர் அதிநுட்பமான வெளிச்சத்தையளித்து மிகவும் முற்போக்கான போக்குகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை மார்க்சிச அணுகுமுறை அளிக்கிறது. ஆனால் அதைக் கடந்து அது எதையும் அளிப்பதில்லை. கலை தன்னுடைய சொந்தக் கருவிகளை கொண்டு, அதன் சொந்தப் பாதையை உருவாக்கி கொள்ள வேண்டும். மார்க்சிச அணுகுமுறைகள் கலைத்துறையைப் போன்றதல்ல. கட்சி, பாட்டாளி வர்க்கத்தை வழிநடத்துகின்றதே தவிர வரலாற்றின் வரலாற்று நிகழ்சிபோக்குகளுக்கு அல்ல. நேரடியாகவும், கட்டாயமாகவும் கட்சி தலைமையெடுத்துச் செல்வதற்கான துறைகள் (domains) உள்ளன. அதேசமயம், சில துறைகளுக்கு அது ஒத்துழைப்பை மட்டுமே அளிக்க முடியும். இறுதியாக, வேறுசில துறைகளோடு அது தன்னைத்தானே ஒன்றுபடுத்திக்கொள்ள மட்டுமே முடியும். கட்சி அதிகாரம் செலுத்த முடியாத துறைகளில் ஒன்று தான் கலைத்துறை. கட்சியானது கலையைப் பாதுகாத்து, அதற்கு உதவ வேண்டும்; அதனால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் அதனால் கலைக்கு மறைமுகமாக மட்டுமே தலைமை கொடுக்க முடியும். புரட்சியை அணுக நேர்மையோடு போராடி கொண்டிருக்கும் பல்வேறு கலைக்குழுக்களுக்குக் கூடுதலான நம்பிக்கையை அதனால் அளிக்க முடியும்; அளிக்கவும் வேண்டும். அதன் மூலம் அது புரட்சியின் ஒரு கலைத்துவ வடிவத்திற்கு உதவுகிறது. ஏனைய இலக்கிய வட்டங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மற்றும் போட்டியிட்டு கொண்டிருக்கும் ஓர் இலக்கிய வட்டத்தின் இடத்தை எவ்விதத்திலும் கட்சியால் எடுக்க முடியாது; எடுக்கவும் எடுக்காது.

தொழிலாள வர்க்கத்தின் முழுமைத்தன்மையில், அதன் வரலாற்றுரீதியான நலன்களுக்கு கட்சி பாதுகாப்பளிக்கிறது. ஏனென்றால், அது நனவுபூர்வமாகவும், படிப்படியாகவும் ஒரு புதிய கலாச்சாரத்திற்கும், அதன் மூலம் ஒரு புதிய கலைக்கும் அடித்தளத்தை அமைக்கிறது. அவ்வாறான கலை, உடன்பயணிக்கும் இலக்கியவாதிகளை தொழிலாள வர்க்க எழுத்தாளர்களின் போட்டியாளர்களாக அல்லாமல், மறுகட்டமைப்பெனும் பெரும்பணியில் தொழிலாள வர்க்கத்திற்கு நிஜமாகவும், ஆக்கபூர்வமாகவும் உதவக்கூடியவர்களாக மதிக்கும். ஒரு இடைமருவு காலத்திலிருக்கும் இலக்கியக் குழுக்களின் தற்காலிகத் தன்மையை கட்சி நன்கு புரிந்துகொண்டு, அவற்றை மதிப்பிடுகிறது. தனிப்பட்ட அருமையான இலக்கியவாதியின் வர்க்க நிலைப்பாடுகள் என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல், இக்குழுக்கள் இடம்பெற்றிருக்கும் இடத்தையும், ஒரு சோசலிச கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவை ஏற்கக்கூடிய இடத்தையும் பற்றிய கண்ணோட்டத்தில் இதைச் செய்யும். எந்த குழுவினதும் இருக்கும் இடத்தை கட்சியால் இன்று தீர்மானிக்க சாத்தியப்படவில்லை என்றால், பின்னர் அந்த கட்சியானது கட்சியென்ற முறையில் பொறுமையாகவும், சகிப்புணர்வோடும் காத்திருக்கும். தனிப்பட்ட விமர்சகர்களும், வாசகர்களும் முன்கூட்டியே ஏதேனும் ஒரு குழுவிடம் பரிவுணர்வு காட்டலாம். ஆனால், மொத்தத்தில், கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பாதுகாக்கிறது; மேலும் அது கூடுதலான புறநிலைத்தன்மையோடும், புத்திசாலித்தனத்தோடும் இருக்க வேண்டும். இதன் எச்சரிக்கையுணர்வு இருபுறமும் கூர்மையாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அதற்காக எழுதுகிறார்கள் என்பதற்காக குஜ்னிஸ்டா (Kuznista) மீது தன்னுடைய ஒப்புதல் முத்திரையைக் கட்சி அளிக்காவிட்டால், முன்கூட்டியே, அது அறிவுஜீவிகள் மத்தியிலும் கூட, எந்த இலக்கியக் குழுவையும் ஒதுக்குவதில்லை. இவ்வாறு இதுபோன்றதொரு குழு புரட்சியை அணுக முயற்சிக்கிறது; மேலும் நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையிலான அல்லது கட்சி உறுப்பினருக்கும், கட்சி-சாராதவருக்கும் இடையிலான, அல்லது அறிவுஜீவிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிணைப்புகளில் (ஒரு பிணைப்பென்பது எப்பொழுதும் ஒரு பலவீனமான புள்ளியாகவே இருக்கிறது) ஒன்றை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

எவ்வாறிருப்பினும், கலைத்துறைக்குச் சாதகமாக ஒரு பாதுகாப்பற்ற நிலைப்பாட்டை கட்சி எடுக்கும் என்பதையா இதுபோன்றவொரு கொள்கை குறிக்கிறது? இது பெரிதும் மிகைப்படுத்தலாக இருக்கிறது. கலையில் வெளிப்படையாக இருக்கும் நச்சுத்தன்மையையும், சிதைக்கும் போக்குகளையும் கட்சி விலக்கி ஒதுக்கும்; அதேசமயம், அதன் அரசியல் தரமுறைகளைக் கொண்டு அதுவே கலைத்துறைக்கு வழிகாட்டும். எவ்வாறிருப்பினும், அரசியல் அணியிலிருப்பதைவிட கலையின் ஒருபகுதி குறைவாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது விஞ்ஞானத்திற்கும் உண்மையாக இல்லையா? கலப்படமில்லா பாட்டாளி வர்க்க விஞ்ஞானத்தின் மாறாநிலைவாதிகள், சார்புவாத தத்துவம் குறித்து என்ன கூறப்போகிறார்கள்? இதை சடவாதத்துடன் சமரசப்படுத்தப்பட முடியுமா, முடியாதா? இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுவிட்டதா? அப்படியானால், எங்கே, எப்போது, எவரால்? எமது உடற்கூறு வல்லுனர் பாவ்லோவ் முற்றிலும் சடவாத வழிவகையில்தான் இருக்கிறார் என்பது எவருக்கும், இது குறித்து அறிந்திராதவர்களுக்கும் கூட, தெளிவாகத் தெரியும். ஆனால் பிராய்டின் உளப்பகுப்பாய்வு (psychoanalytic) தத்துவம் குறித்து ஒருவர் என்ன கூறுகிறார்? கார்ல் ரடெக் நினைப்பது போல் (நானும் கூட), சடவாதத்துடன் இதை சமரசப்படுத்தப்பட முடியுமா அல்லது இது அதற்கு விரோதமாக உள்ளதா? இதே கேள்வியை அணு அமைப்பின் மற்றும் இதரபிற அனைத்து புதிய தத்துவங்களின் மீதும் எழுப்ப முடியும். இந்த புதிய பொதுக்கருத்துக்களை முறையாக உள்வாங்கக்கூடிய மற்றும் உலகின் இயங்கியல் சடவாத கருத்துருவிற்குள் அவற்றை அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு விஞ்ஞானி வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேநேரம், இதன்மூலம் அவரால் இந்த புதிய தத்துவங்களை பரிசோதிக்கவும், இயங்கியல் முறையை ஆழமாக அபிவிருத்தி செய்யவும் முடியும். ஆனால் இத்தகைய படைப்பை-ஒரு செய்தித்தாள் கட்டுரை அல்லது இதழியல் கட்டுரைப் போலில்லாமல், உயிரினங்களின் தோற்றம் மற்றும் மூலதனம் (Origin of Species,Capital) போன்று, ஒரு விஞ்ஞான மற்றும் மெய்யியல் படைப்பாக இருக்கக்கூடியதை-இன்றோ அல்லது நாளையோ செய்துவிட முடியாது என்பதையும், மாறாக, இதுபோன்ற சகாப்தத்தை-உருவாக்கும் புத்தகங்கள் இன்று உருவாக்கப்பட்டாலும் கூட, பாட்டாளி வர்க்கம் அதன் கரங்களில் இருந்து ஆயுதங்களை அப்பால் வைக்கமுடியும் காலம் வரை, அபாயம் நீங்காமல் தான் இருக்கும் என்பதையும் நினைத்து நான் வருந்துகிறேன்.

இந்த கலாச்சாரத்தை தாங்கிபிடித்திருக்கும் படைப்பானது, அதாவது, பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்திற்கு முந்தைய ஆரம்ப அடிப்படைகளை எடுத்துக்கொள்ளும் படைப்பானது, விமர்சனம், விருப்பத்தேர்வு மற்றும் ஒரு வர்க்கத்தரம் இருப்பதாக கருதுகிறதா? நிச்சயமாக அது கருதவில்லை. ஆனால் இந்த நிலைப்பாடானது அரசியல்ரீதியாக இருக்கிறதேயொழிய, அருவமான கலாச்சாரரீதியான ஒன்றாக இல்லை. புரட்சி தான் ஒரு புதிய கலாச்சாரத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்ற ஒரேயொரு அர்த்தத்திலேதான் அரசியல் நிலைப்பாடானது, கலாச்சாரத்துடன் பரந்த தன்மையில் ஒத்திசைகிறது. ஆனால், அத்தகைய ஒத்திசைவு அளிக்கப்படும் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றாகிவிடாது. தேவைப்படும்போது பாலங்களையும், கலைச்சின்னங்களையும் அழிப்பதற்கான உரிமையை புரட்சி கொண்டிருக்கிறது என்றால், கலையின் எந்த போக்கிலும், வடிவத்தில் அதன் சாதனை எத்துணை உயர்ந்திருந்தாலும் பொருட்படுத்தாமல், அதன் கரங்களை ஊடுருவத் தயங்காது. இது புரட்சிகர சூழலைச் சிதைக்கும் அல்லது புரட்சியின் உட்சக்திகளை, அதாவது பாட்டாளிகள், விவசாயிகள் மற்றும் அறிவுஜீவிகளை ஒன்றுக்கொன்றை விரோதமாக எழுப்பிவிடுவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. எமது நிலைப்பாடானது, தெளிவாக, அரசியல்ரீதியானது; தவிர்க்க முடியாதது; பொறுத்துக்கொண்டிருக்காதது. ஆனால் இந்தக் காரணத்திற்காகவே, அது தன் செயற்பாட்டின் வரம்புகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டியுள்ளது. என்னுடைய கருத்தை மிகத் துல்லியமாக வெளியிடுவதானால், நான் இவ்வாறு கூறுவேன்: நாம் கவனிப்பிற்குட்பட்ட ஒரு புரட்சிகர கட்டுப்பாட்டுமுறையை, மற்றும் அற்பத்தனமான கட்சி மோசடிகளிலிருந்து சுதந்திரமான, கலைத்துறையில் ஒரு பரந்த, வளைந்துகொடுக்கும் கொள்கையை கொண்டிருக்க வேண்டும்... .

தனிநபர்வாதம் (individualism) பழைய இலக்கியம் வடிவத்தில் பழமைவாத சின்னமாக இருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல், மாறாக அது பாட்டாளிகளின் ஒட்டுமொத்த இயல்பிற்கும் முரண்படுகிறது என்பதற்காக, எதிர்காலவாதிகள் (futurist) அதை ஒதுக்கி தூக்கியெறிய விரும்பும்போது, அவர்கள் தனிநபர்வாதத்திற்கும் கூட்டியியல்புவாதத்திற்கும் (collectivism) இடையிலிருக்கும் முரண்பாடுகளின் இயங்கியல் இயல்பை போதியளவிற்கு புரிந்துகொண்டிராத ஒரு புரிதலை வெளிப்படுத்துகிறார்கள். இதில் அருவமான உண்மைகள் என்று ஏதுமில்லை. தனிநபர்வாதம் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அதிகளவிலான தனிநபர்வாதம் இருப்பதாலேயே, புரட்சிக்கு முந்தைய அறிவுஜீவிகளின் ஒரு பிரிவு தன்னைத்தானே புதிர்வாதத்திற்குள் (mysticism) தள்ளிக் கொண்டது; ஆனால் மற்றொரு பிரிவு-அவர்களைக் கௌரவிக்கும் முறையில் கூறுவதானால்-பாட்டாளிகளுக்கு அருகில் வந்த புரட்சியால் ஈர்க்கப்பட்ட மற்றொரு பிரிவு எதிர்காலவாதத்தின் குழப்பங்களோடு கைகோர்த்து நகர்ந்தது. ஆனால் தனிநபர்வாதத்தால் அவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டிருந்ததால், பாட்டாளிகளிடம் மதிப்பைக் கொண்டு அவர்கள் அருகில் வந்தபோது, தன்முனைப்புவாதத்தின் கொடுமைகளை அவர்கள் காட்டினார்கள், அதாவது அதீத தனிநபர்வாதத்தை காட்டினார்கள். பிரச்சினை என்னவென்றால், சராசரி பாட்டாளி இந்த தரத்தில் பின்தங்கியிருந்தார். பெருந்திரளான கூட்டத்தில், பாட்டாளியின் தனித்துவம் போதியளவிற்கு உருவாக்கப்படவும் இல்லை; வேறுபடுத்திக் காட்டப்படவும் இல்லை.

புறநிலை தரத்தை உயர்த்துவதும், தனிநபரின் அகநிலை நனவை உயர்த்துவதுமே, இன்று நாம் நின்றிருக்கும் விளிம்பிலிருந்து கலாச்சாரத்தை முன்னேற்றுவதில் செய்யக்கூடிய மிக மதிப்புடைய பங்களிப்பாக இருக்கிறது. பூர்ஷ்வா இலக்கிய படைப்புகள் வர்க்க ஐக்கியத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று சிந்திப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஷேக்ஸ்பியர், கோத்தே, புஷ்கின் அல்லது டாஸ்டோயேவ்ஸ்கியிடமிருந்து ஒரு தொழிலாளர் எதை எடுத்துக் கொள்ளக்கூடியது, மனிதகுல சிறப்பியல்பு, அதன் உணர்வுகளின் வடிவங்கள், மனிதனின் உளச் சக்திகள் பற்றிய ஆழ்ந்த, தீவிர அறிந்து கொள்ளுதல், ஆழ்மனத்தின் பங்கு போன்றவைதான். இறுதிப் பகுப்பாய்வில் தொழிலாளி செழிப்புத்தான் அடைவார்.

ஆரம்பத்தில், கோர்க்கி தனிநபர்வாத காதலுடன் பொறுப்பற்றதன்மைக்கு ஆட்பட்டிருந்தார். இருந்த போதினும், 1905க்கு சற்று முந்தைய காலப்பகுதியில், பாட்டாளிகளின் மிதமான ஆரம்பகால புரட்சிகரவாதத்தை பரப்பினார். ஏனென்றால், அந்த வர்க்கத்திடையே தனித்துவத்தை தூண்டிவிட அவர் உதவினார்; அதில் தனித்துவம் ஒருமுறை தூண்டிவிடப்பட்டுவிட்டால், தூண்டிவிடப்பட்ட ஏனைய தனித்துவங்களுடன் தொடர்பு கொள்ள அது விழையும். பாட்டாளி வர்க்கத்திற்கு கலை உணவும் (artistic food), கல்வியும் தேவைப்படுகிறது; ஆனால் இதற்காக பாட்டாளி வர்க்கம் வெறும் களிமண்ணாக இருக்கிறது, அதை இதற்கு முன்னால் இருந்த மற்றும் பின்னால் வரவிருக்கிற கலைஞர்கள் தான் தங்களின் சொந்த கற்பனையினாலும், தங்களின் சொந்த விருப்பத்தினாலும் மெருகேற்ற முடியும் என்பது அர்த்தமல்ல.

பாட்டாளி வர்க்கம் ஆன்மீகரீதியாக இருப்பதால், அது கலைத்துவத்திலும் மிகவும் நுன்நுணர்வாக இருக்கிறது; அது அழகியல் உணர்வில் அறிவுபெறாமல் இருக்கிறது. பேரழிவிற்கு உடனடியான பிந்தைய காலத்தில் பூர்ஷூவா அறிவுஜீவிகள் விட்ட இடத்திலிருந்து அவர்களால் தொடங்க முடியும் என்று சிந்திப்பதே பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஒரு மனிதன் தொடக்கநிலையிலிருந்து அவனுடைய அபிவிருத்தியில் உடலளவிலும், மனத்தளவிலும் இனத்தின், ஓரளவிற்கு விரித்து சொல்வதனால், மொத்த விலங்கின உலகின் வரலாறையும் கடந்து செல்கிறான். ஆகவே, ஒரு குறிப்பிட்டளவிற்கு, வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையிலிருந்து காலத்திலிருந்து வெகுசமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புதிய வர்க்கத்தின் மேலெழுந்துவரும் பெரும்பான்மை, கலைத்துவ கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றின் வழியாக கடந்து செல்கிறது. இந்த வர்க்கம் பழைய கலாச்சாரங்களின் உட்கூறுகளை உள்வாங்காமலும், ஏற்றுக்கொள்ளாமலும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கத் தொடங்க முடியாது. ஆனால் அது குறைந்தபட்சம் கலையின் ஒட்டுமொத்த பழைய வரலாற்றையும் படிப்படியாக, மெதுவாக, முறையாக கடந்து செல்ல வேண்டியது அவசியம் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு உயிரியியல் ரீதியான தனிநபர் என்ற வகையில் அல்லாமல், ஒரு சமூக வர்க்கம் என்கிற வகையில், உள்வாங்கும் மற்றும் மாற்றம்பெறும் நிகழ்ச்சிப்போக்கானது ஒரு தடையற்ற, மிகவும் நனவுபூர்வமான பாத்திரத்தை கொண்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தின் முக்கிய சுவடுகளை மதிக்காமல் ஒரு புதிய வர்க்கம் முன்னேறி சென்றுவிட முடியாது.

புரட்சிகர கலையும், சோசலிச கலையும்

இதுவரை புரட்சிகரக் கலை என்று ஏதும் இல்லை. இக்கலையின் கூறுபாடுகள் சில உள்ளன; அதைப்பற்றிய குறிப்புக்களும், முயற்சிகளும் உள்ளன; மேலும் மிக முக்கியமானது என்னவெனில், புரட்சிகர மனிதன் இருக்கிறான். அவன் ஒரு புதிய தலைமுறையைத் தன் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த கலையின் தேவை மிக, மிக அதிகமாக உள்ளது. அத்தகைய கலை தன்னைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொள்ள எத்தனை காலமாகும்? இதைக் கணிப்பதும் கூட கடினம்; ஏனென்றால், நிகழ்ச்சிப்போக்கு அளவிடற்கரியதாக, கணிப்பிடமுடியாததாக உள்ளது; அதிகளவில் அளவிடக்கூடிய சமூக நிகழ்ச்சிப்போக்குகளை கணிப்பிட முயலும் போது கூட, நம்முடைய கணிப்புவேலையில் நாம் வரம்புகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கலையானது, புரட்சியின் போது பிறந்த, அதை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் இளம் தலைமுறையின் கலை வெளிப்பாடாக, குறைந்தபட்சம் அதன் முதல் பெரிய அலையாக கூட ஏன் ஆகவில்லை?

ஒரு புரட்சிகர சமுதாய அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளையும் தவிர்க்க முடியாமல் பிரதிபலிக்கும் புரட்சிகரக் கலையானது, இதுவரை அடித்தளம் அமைக்கப்பட்டிராத சோசலிசக் கலையுடன் குழப்பப்பட்டு விடக்கூடாது. மற்றொருபுறம், இந்த இடைமருவு காலத்திய கலையினூடாகவே சோசலிசக் கலையும் வளரும் என்பதையும் ஒருவர் மறந்துவிடக்கூடாது.

இதுபோன்றதொரு வேறுபாட்டை வலியுறுத்துகையில், ஏதோவொரு அருவமான வேலைத்திட்டத்தின் பள்ளியாசிரியர்முறை கண்ணோட்டத்தை நாம் பின்பற்றி கொண்டிருக்கவில்லை. சோசலிசப் புரட்சியென்பது தேவையின் அரசிலிருந்து சுதந்திர அரசிற்கான ஒரு பாய்ச்சல் என்று ஏங்கெல்ஸ் வெற்றுத்தனமாகக் கூறவில்லை. புரட்சியானது இன்னமும் சுதந்திர அரசாகிவிடவில்லை. ஆனால் அதனோடு ஒப்பிடுகையில், அது “தேவையின்” கூறுபாடுகளைப் பெருமளவிற்கு வளர்த்துக் கொண்டுள்ளது. சோசலிசம் வர்க்க முரண்பாடுகளை அழிக்கும்; அத்துடன் வர்க்கங்களையும் அழிக்கும்; ஆனால் புரட்சியானது வர்க்கப் போராட்டத்தை அதன் மிக உயர்ந்த பதட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

புரட்சிக் காலக்கட்டத்தில், சுரண்டுபவர்களுக்கு எதிராக தங்களின் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க உதவும் இலக்கியம் தான் தேவைப்படுகிறது; அதுதான் முற்போக்கானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் ஓர் ஆக்கப்பூர்வமான வரலாற்று காரணியாக விளங்கும் புரட்சிகர இலக்கியமானது சமுதாய வெறுப்புணர்வை நிரப்பாது, மாறாக அதிலேயே நிறைந்திருக்கும். சோசலிசத்தின்கீழ், ஐக்கியம் தான் சமுதாயத்தின் அடிப்படைத்தளமாக இருக்கும். இலக்கியமும், கலையும் ஒரு வித்தியாசமான வகையில் ஒலிக்கப்படும். தற்போது புரட்சியாளர்களாகிய நாம் பெயரிடக் கவலைப்படும் எதிர்பார்ப்பில்லாத நட்பு, அண்டை வீட்டாரை நேசித்தல், பரிவுணர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் (இவை வேஷதாரிகளாலும், வஞ்சகர்களாலும் அதிகளவில் போர்த்தப்பட்டிருக்கின்றன) சோசலிசக் கவிதையின் வலிமையான முழக்கங்களாக இருக்கும்.

எவ்வாறிருப்பினும், நீட்ஷேயவாதிகள் (Nietzscheans) பயப்படுவதுபோல், அதிகளவிலான ஐக்கியம் மனிதனைச் சீரழித்து ஓர் உணர்வுபூர்வ, செயலாக்கமற்ற, மந்தை விலங்குகளைப் போலாக்கிவிடுமா? என்றால் நிச்சயம் அவ்வாறு ஆகாது. முதலாளித்துவ சமுதாயத்தில், சந்தைப் போட்டியின் தன்மையை கொண்டிருக்கின்ற போட்டித்தன்மையின் சக்திவாய்ந்த ஆற்றல், ஒரு சோசலிச சமுதாயத்தில் மறைந்துவிடாது; மாறாக, உளப்பகுப்பாய்வாளர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், அது மேன்மைப்படுத்தப்படும். அதாவது அதுவொரு உயர்ந்த, கூடுதலான ஆழ்ந்த வடிவத்தை எடுக்கும். ஒருவருடைய கருத்தைக் குறித்தோ, ஒருவருடைய திட்டத்தைக் குறித்தோ, ஒருவருடைய ஆர்வத்தைக் குறித்தோ அதிலே போட்டி இருக்கலாம். அரசியல் போராட்டங்களின் அளவுகள் இல்லாதுபோகையில் (வர்க்கங்களிலில்லாத ஒரு சமுதாயத்தில், அத்தகைய போராட்டங்கள் இருக்காது) சுதந்திரமடைந்த உணர்ச்சிகள், தொழில்நுட்பம், கலை உட்பட ஆக்கபூர்வமானவற்றிற்குள் திசை திருப்பப்படும். அதன் பின்னர் கலை இன்னும் பொதுநோக்கம் கொள்ளும்; முதிர்ச்சியடையும்; பக்குவமடையும்; மேலும் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கையை முற்போக்காக கட்டமைப்பதில் அது மிகச்சிறந்த வழிமுறையாக மாறும். வேறு எதனுடனும் தொடர்பற்ற, வெறும் “அற்பத்தனமாக” அது இருக்காது.

நிலத்தைச் சாகுபடி செய்தல், மனிதர்களின் வசிப்பிடத்தைத் திட்டமிடுதல், அரங்குகள் அமைத்தல், குழந்தைகளுக்கு சமுதாயம் சார்ந்து கற்பிப்பதற்கான முறைகள், விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், புதிய வடிவங்களை தோற்றுவித்தல் போன்ற வாழ்வின் அனைத்து வடிவங்களும் அனைவரையும், ஒவ்வொருவரையும் உயிர்ப்புடன் ஈர்க்கும். ஒரு புதிய பிரமாண்டமான கால்வாய்கள் பற்றிய பிரச்சினைக்காக, அல்லது சகாராவில் சோலைகளை நிறுவுவதற்காக (இதுபோன்றவொரு பிரச்சினையும் எதிர்கொள்ளப்படும்), வானிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதன்மீது, ஒரு புதிய அரங்கத்தின்மீது, வேதியல் புனைவுகோள்களின் மீது, போட்டியிடும் இரண்டு இசைப் போக்குகளின் மீது, விளையாட்டுக்களின் ஒரு சிறந்த முறையின்மீது மக்கள் “குழுக்களாக” பிரிவார்கள். ஆனால் இத்தகைய குழுக்கள் வர்க்க அல்லது ஜாதி பேராசைகளால் நச்சுப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த வெற்றிக்காக அனைவரும் சமமான ஆர்வம் காட்டுவார்கள். போராட்டமானது, முற்றிலும் ஒரு சித்தாந்த தன்மையைக் கொண்டிருக்கும். அது இலாபத்திற்கு பின்னால் ஓடாது; அது எந்த கருவியையும் கொண்டிருக்காது, காட்டிக்கொடுப்புகள் இல்லை, இலஞ்சம் இல்லை, வர்க்கங்களாக பிளவுற்ற சமுதாயத்தில் “போட்டி” உணர்வை ஏற்படுத்தும் எதுவும் இருக்காது. ஆனால் இது எவ்வகையிலும் முழு ஈடுபாட்டை, வியத்தகு முன்னேற்றத்தை, தீவிர ஆர்வத்தை இல்லாமல் செய்துவிடாது.

ஒரு சோசலிச சமுதாயத்தில் அனைத்துப் பிரச்சினைகளும்-முன்னர் தன்னியல்பாகவும், தானாகவும் தீர்க்கப்பட்ட வாழ்வின் பிரச்சினைகளும், தனிச்சலுகைப்பெற்ற தெய்வீக ஜாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கலையின் பிரச்சினைகளும்- அனைத்து மக்களுக்கும் சொந்தமாக இருக்கும்; கூட்டு நலன்களும் மற்றும் ஆர்வங்களும், தனிநபர் போட்டிகளும் மிகப் பரந்த வரவேற்பையும், எல்லையில்லா வாய்ப்புக்களையும் பெறும் என்று ஒருவர் உறுதியாகக் கூறலாம். ஆகவே, கலை என்பது புதிய கலைத்துவ போக்குகளின் உருவாக்கத்திற்கும், அவற்றின் வடிவங்களை மாற்றுவதற்கும் தேவையான எந்தவிதமான கூட்டு தூண்டுதல்களோ, முறுக்கேறிய சக்தியோ, உளவியல்ரீதியான கூட்டு எழுச்சிகளோ இல்லாமல் பாதிக்கப்பட்டுவிடாது. அது அழகியல் உணர்வின் பள்ளியாக இருக்கும், இதைச்சுற்றி “குழுக்கள்” அணித்திரளும், அதாவது பண்புநலன்களின், ஆர்வங்களின் மற்றும் உணர்வுகளின் சங்கமங்களாக அவை இருக்கும். படிப்படியாக உயர்ந்து வரும் அடித்தளங்களைக் கொண்டிருக்கும் ஒரு கலாச்சாரத்தில் நிகழும் மிகவும் அதிருப்தியும், அழுத்தமும் நிறைந்த ஒரு போராட்டத்தில், மனித ஆளுமையானது, தொடர்ச்சியான அதிருப்தியிலும் அதன் ஒப்பில்லா அடிப்படை சிறப்புடன், வளரும்; அதன் அனைத்து பகுதிகளிலும் மெருகேற்றப்படும். உண்மையில், ஒரு சோசலிச சமுதாயத்தில் தனித்துவம் வீழ்ந்துவிடும் என்றோ அல்லது கலை அதன் சிறப்பை இழந்துவிடும் என்றோ அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை... .