சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the Irish bailout: The financial wolf pack targets new victims

அயர்லாந்து பிணையெடுப்பின் பின் நிதியத்துறை ஓநாய் கூட்டம் புதிய பலிகளை குறிவைக்கிறது

Nick Beams
1 December 2010

Use this version to print | Send feedback

நிதியச் சந்தை செயல்பாடுகள் விவரிக்கப்படுவதில் இருப்பது போல பொருளாதார அல்லது அரசியலின் வேறு எந்த துறையிலும் இவ்வாறான பெரியளவிலான புதிர்படுத்தும் நிலை இருக்குமா என்பது சந்தேகமே.

சென்ற ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட அயர்லாந்து பிணையெடுப்பு என்பது இதற்கு ஒரு மிகப்பொருத்தமான உதாரணமாக உள்ளது. நடந்திருப்பது அயர்லாந்தின் பிணையெடுப்பு அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்தை பலியிட்டு, வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய அனைத்து அயர்லாந்து கடன்கள் மற்றும் நிதிச் சொத்துகளும் முழுதாக செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அரசின் அத்தனை ஆதாரவளங்களும் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச நிதியத் துறை சந்தைகளின் கோரிக்கைகளுக்கு அயர்லாந்து அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதேயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தோல்வியடைந்து பிணையெடுப்பைக் கோருவது அயர்லாந்துஅல்ல, மாறாக அயர்லாந்திற்கு கடன் கொடுத்தவர்களான ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகும். 

ஏற்கனவே 4,000 யூரோ இழப்பை சந்தித்திருக்கும் அயர்லாந்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த ஒப்பந்தத்தால் இன்னும் கூடுதலாய் 4,000 யூரோ இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது. நிதியத்துறை சந்தைகளின் பேராசை பிடித்த கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய தான் எந்த கோட்டையும் தாண்டக் கூடும் என்பதை வலியுறுத்திக் கூறுவதைப் போல, அரசாங்கமானது பிணையெடுப்பிற்கு ஓய்வூதிய நிதியில் இருந்து 17.5 பில்லியன் யூரோக்களை பங்களிக்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆயினும், இந்த ஒப்பந்தம் அறிவித்து கூட முடியவில்லை, அதற்குள் நிதியத்துறை ஓநாய் கூட்டம் தனது அடுத்த குறிகளை வரிசைப்படுத்தத் தொடங்கி விட்டது... போர்த்துகல், ஸ்பெயின் அல்லது சாத்தியமானால் பெல்ஜியம்.

2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்ஸின் வீழ்ச்சி, ஒரு சுழற்சியாய் நிகழும் வீழ்ச்சி அல்ல வீழ்ச்சியைத் தொடர்ந்து மீட்சி வருவதற்கு, மாறாக ஒட்டுமொத்த போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் வீழ்ச்சியின் ஆரம்பத்தையே இது எடுத்துக்காட்டுகின்றது என்னும் உண்மையை ஆழமடையும் ஐரோப்பிய நிதி நெருக்கடி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2007ல் அமெரிக்க நிதி நெருக்கடியின் தோற்றமானது ஐரோப்பிய வங்கிகளின் மீது உடனடியான தாக்கத்தைக் கொண்டிருந்தது. அவை அமெரிக்க நிதி நிறுவனங்களின் வழமைக்குமாறான வீட்டு அடமானக் கடன் வழங்கும் நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டோ (ஜேர்மனியின் அரசு வங்கிகளைப் போல) அல்லது இதேபோன்ற ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்டோ இருந்தன.

அவ்வளவு தான் என்றிருந்தால் கூட இப்போது அந்த நெருக்கடி முடிந்து போயிருக்கக் கூடும். ஆனால் இந்த ஆரம்ப திவால்கள் உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள்ளான வெகு ஆழமான முரண்பாடுகளின் வெளிப்பாடு மட்டுமே.

போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் முடிவைத் தொடர்ந்து 1980களின் ஆரம்பம் தொடங்கி உலக முதலாளித்துவமானது நிதிமயமாக்கத்தின் அதிகரிப்புக்கு மேல் அதிகரிப்பு என்று சொல்லத்தக்க ஒரு தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்முறையின் விஸ்தீரணத்தை ஒரு முக்கியமான புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக, உலக நிதிச் சொத்துகளின் மொத்தம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 100 சதவீதமாக இருந்தது. 2007 வாக்கிலோ இது 350 சதவீதத்திற்கு அதிகரித்து விட்டிருந்தது.

 இத்தகையதொரு விரிந்த மாற்றத்தின் பாதிப்புகள் ஆழமடைந்து கொண்டிருக்கும் கடன் மற்றும் நிதி நெருக்கடியில் தங்களை இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பணம், அதன் இயல்பாகவே, வரையறையின்றி பணத்தைக் கொண்டுவர முடியும் என்று பல்வேறு நிதியத்துறை செய்தித்தொடர்பாளர்கள் பிரமைகளை உருவாக்கினாலும், நிதிச் சொத்துகள் என்பவை இறுதி ஆய்வில் சமூக உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட சொத்தின் மீதான, அதாவது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழியப்பட்ட உபரி மதிப்பின் மீதான உரிமையைத் தான் குறிப்பிடுகின்றன. 

சிறிது காலத்திற்கு, அதாவது பணம் நிதிய அமைப்பில் பாய்ந்து கொண்டே இருந்த வரைக்கும், இந்த பொருளாதார விதி வேலைசெய்வதாகவே தோற்றமளித்தது. சொத்து மதிப்புகள், குறிப்பாக மனை இட விற்பனை மதிப்புகளின் உயர்வால் பரந்த நிதிய இலாபங்கள் குவிக்கப்பட்டன. உண்மையிலேயே முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப்போக்கிற்கு வெளியே பணமே கூடுதல் பணமாக மாற முடியும் என்பதைப் போல் தோற்றமளித்தது.

ஆயினும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் விதிகள் இறுதியில் தம்மை நிலைநிறுத்தின. அமைதியான வழியில் அல்ல, மாறாக மார்க்ஸ் விவரித்த வகையில்....அதாவது எப்படி நம் காதுபட ஒரு வீடு விழும்போது புவியீர்ப்பு விதி தன்னை நிலைநிறுத்திக் காட்டுகின்றதோ அதைப் போல. நிதிய வீடு 2008 செப்டம்பரில் விழுந்தது. உடனடியாக மந்தநிலைக்குள் அமிழ்ந்து விடாமல் தடுக்க அரசாங்கங்கள் பிணையெடுப்பு மற்றும் ஊக்குவிப்பு தொகுப்புகளைக் கொண்டு பதிலிறுப்பு செய்தன. ஆனால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக அதனை அதிகரிக்கவே செய்தன. டிரில்லியன் கணக்கான டாலர் கடன் கணக்குகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புத்தகங்களில் இருந்து அரசாங்கத்தின் புத்தகங்களுக்கு இடம்மாற்றப்பட்டன. இப்போது இந்த கடன்கள் எல்லாம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் சமூக நிலைமைகளையும் வெட்டுவதன் மூலமாகத் தான் செலுத்தப்பட்டாக வேண்டும்.

சொற்ப காலம், அமெரிக்காவில் நிலவிய பேராசை பிடித்த தடையில்லா சந்தை அமைப்புமுறைக்கான ஒரு வகை மாற்றினை ஐரோப்பிய முதலாளித்துவம் பிரதிநிதித்துவப்படுத்தியதாக தோற்றமளித்தது. உண்மையில், அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கும் நிதி மற்றும் கடன் விரிவாக்கம் என்பது மிக முக்கியமானதாய் இருந்தது.

1999ல் யூரோமண்டலம் நிறுவப்பட்டதானது, ஐரோப்பிய பொருளாதாரம் அதன் போட்டித்திறனில் சிறந்து திகழ முடியும் என்பதை உறுதி செய்வதற்கான முயற்சியாக இருந்தது. உலகின் பிரசித்தி பெற்ற நாணயமதிப்பாக டாலரை யூரோ சவால் செய்ய முடியும் என்பதான நம்பிக்கைகளும் கூட இருந்தன. ஆயினும், நாணய மதிப்பு ஒன்றிணைந்தது ஐரோப்பாவுக்குள்ளேயே முக்கியமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. மற்ற விடயங்கள் ஒருபுறமிருக்க, அது குறைந்த போட்டித்திறன் கொண்ட அல்லது விளிம்பு பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுகின்ற நாடுகள் தங்கள் நாணய மதிப்பைக் குறைத்து உலக சந்தைகளில் தங்களது நிலையை மேம்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை அகற்றி விட்டது. அவர்களது வரவு செலவில் இருந்த இடைவெளி முக்கியமான நாடுகள் என்று அழைக்கப்படுவதான நாடுகளின், குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்சின், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பாய்ந்த மூலதனத்தால் மறைக்கப்பட்டது. இந்த மூலதனம் வீடு மற்றும் கட்டுமானத் துறை அபிவிருத்திகளுக்கும் சுற்றுலாத் திட்டங்களுக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நிதியாதாரம் அளிக்கப் பயன்படுத்தப்பட்டது. பதிலாக ஏற்றுமதி சந்தைகளை கூடுதல் சக்திவாய்ந்த ஐரோப்பிய பொருளாதாரங்களின் வசம் வழங்கி விட்டது. இவ்வாறாக ஒரு சுயமுன்னேற்றங்களுக்கான ஒரு பொருளாதார வட்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜேர்மன் முதலாளித்துவம் இதில் கணிசமான ஆதாயங்களை அனுபவித்தது. 1990ல் மறுஇணைவு சமயத்தில் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருந்தன. 2008க்குள்ளாக அவை 47.2 சதவீதமாய் வளர்ச்சி கண்டிருந்தன. இது உலகில் மிக உயர்ந்த விகிதாச்சாரம் ஆகும். இதில் பெரும்பகுதி யூரோமண்டலத்தின் எஞ்சிய பகுதிகளுக்கான ஏற்றுமதியில் இருந்து விளைந்ததாகும்.

மேலும் மற்ற நாணய மதிப்புகளுக்கு நிகராக ஜேர்மன் மார்க் (Deutsch Mark) வர்த்தகம் செய்ததைவிட  விட யூரோவில் மதிப்பு குறைந்த மட்டத்தில் வர்த்தம் செய்யப்பட்டமையானது சர்வதேச சந்தைகளில் ஜேர்மன் ஏற்றுமதிகளுக்கு அனுகூலமளித்தது. கடன் விரிவாக்கத்தால் சாத்தியமான முதலாளித்துவ அபிவிருத்தியின் இந்த கட்டம் ஒரு முடிவை எட்டியிருக்கிறது. ஒரு புதிய காலகட்டம் திறந்திருக்கிறது, இதில் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பாவை உடைத்த அத்தனை முரண்பாடுகளும் மீண்டும் தலைதூக்குகின்றன.

 அயர்லாந்தின் பிணெயெடுப்பு என்று அழைக்கப்படுவதான ஒன்று ஒரு ஆரம்பம் மட்டுமே. நிதிச் சந்தைகள் வெறுமனே சொற்ப காலத்திற்கான சிக்கனத்தை மட்டும் கோரவில்லை, மாறாக ஒட்டுமொத்த போருக்குப் பிந்தைய சமூக நல அமைப்புமுறையையும் அழிப்பதற்குக் கோருகின்றன.

அதே சமயத்தில் இப்போது திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் ஒரு நச்சுத்தன்மையான பொருளாதார வட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன. அந்த வட்டத்தில் குறைவான வளர்ச்சி, பொருளாதார நெருக்கடியை மோசமடையச் செய்து அதிலிருந்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆழமான கடன்நிலை மற்றும் திவால்நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலமே சந்தேகத்தில் இருப்பதோடு இரண்டு உலகப் போர்களுக்கு அழைத்துச் சென்ற ஐரோப்பாவுக்குள்ளான மோதல்களுக்கு திரும்ப அச்சுறுத்துகிறது. தேசிய மோதல்களும் பிளவுகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. அயலுறவுகளுக்கான ஐரோப்பிய மன்றத்தின் மாட்ரிட் அலுவலக தலைவரான José-Ignacio Torreblanca நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் எழுதும்போது ஸ்பெயின் எதிர்கொள்ளும் பெருகிய பொருளாதார பிரச்சினைகளுக்கு ஜேர்மனியை குற்றஞ்சாட்டினார்.

 1980கள் மற்றும் 1990களில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு நிகழ்முறையானது ஒரு சுயவிருப்பங்களுக்கான பொருளாதார வளர்ச்சி வட்டத்தை உருவாக்கியிருந்தது: விளிம்பு மையத்தை விட துரிதமாய் வளர்ந்தது.... ஆனால் அந்த வளர்ச்சியில் ஜேர்மனி மற்றும் மற்றவை தான் கணிசமான ஆதாயத்தைப் பெற்றன, ஏனென்றால் இந்த வளர்ச்சியானது அவர்களின் ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது.இப்போது ஜேர்மனி தனியாக பயணிக்க சிந்தித்து வரும் நிலையில் இந்த வட்டம் திரும்பவியலாமல் உடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதின் மூலமும் அதற்காகப் போராடுவதன் மூலமும் தான் இந்த நெருக்கடியை சந்திக்க முடியும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்படுவதன் மூலமும் அவற்றின் கடன்கள் மறுதலிக்கப்படுவதன் மூலமும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரமும், தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுவதற்கான அதன் பூர்த்தி செய்ய முடியாத கோரிக்கைகளும் தூக்கியெறியப்பட வேண்டும். 

இந்த நெருக்கடிக்கு தேசிய மட்டத்திலான தீர்வு எதுவும் கிடையாது. ஐரோப்பா பிளவுபட்டு நிற்பது இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி பேரழிவுகளுக்கு திரும்புவதையே குறித்து நிற்கிறது. ஐரோப்பா ஒரு முற்போக்கான அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். இது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதன் ஊடாக மட்டுமே சாத்தியமாக முடியும். இதுதான் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு ஆகும்.