சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New WikiLeaks revelations confirm
Obama administration targets Iran for aggression

ஒபாமா நிர்வாகம் தாக்குதலுக்கு ஈரானை குறிவைக்கிறது என்பதை விக்கிலீக்கின் புதிய வெளியீடுகள் உறுதிபடுத்துகின்றன

By Patrick Martin
30 November 2010

Use this version to print | Send feedback

ஈரானின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும், நேரடியான ஓர் இராணுவ தாக்குதலுக்கு பாதையைத் திறந்துவிடவும், ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்கான முயற்சியையும் பெரும் கவனத்தையும் ஒபாமா நிர்வாகம் செலவிட்டுள்ளதாக விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட சமீபத்திய பெரும் ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. அமெரிக்க வெளிவிவகாரத்துறைக்கும், உலகெங்கிலும் உள்ள 270 அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதுக்குழுங்களுக்கும் இடையிலான 250,000த்திற்கும் மேற்பட்ட இரகசிய இராஜாங்க கசிவுகளின் முதல் தொகுப்பானது, அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிரான, இணையத்தை மையமாக கொண்டு இயங்கும் அந்த அமைப்பால் வெளியிடப்பட்டது.

கடந்த தசாப்தத்தில், அதுவும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரானுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கான ஆதரவை அணிதிரட்டுவதிலும் மற்றும்  இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக ஒரு முன்கூட்டிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலை நடத்தி முடிப்பதிலும் அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட பரந்த முயற்சிகளை அந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த இஸ்லாமிய குடியரசு நீண்டகால அடிப்படையில் ஈரானை வலுப்படுத்தும் மற்றும் எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சினார்கள்.   

அணுசக்தி யுத்ததளவாடங்களை ஏந்திச் செல்லக்கூடிய, ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட 19 மத்திய-ரக ஏவுகணைகளை வட கொரியா ஈரானுக்கு அனுப்பி இருந்தது என்ற பெப்ரவரி 24, 2010இல் ஓர் அமெரிக்க-ரஷ்ய கூட்ட அறிக்கையை பற்றிய விபரம்தான்   வெளியான கசிவுகளில் இருந்த ஆவணங்களில் மிகவும் ஆத்திரத்தைத் தூண்டும் குற்றச்சாட்டைக் கொண்டிருந்ததாக இருக்கிறது. இந்த முறையீடு ஒரு வெளிப்படையான ஆதாரமாக இருந்தபோதினும் கூட, விக்கிலீக் ஆவணங்களைக் காட்டி அமெரிக்க ஊடகங்களில் இந்த முறையீடு குறித்து கூப்பாடு போடப்பட்டது. ஆனால் அது 2003இல் ஈராக் மீதான தாக்குதலை நியாயப்படுத்த புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட பொய்களைப் போன்றே, இது ஓர் ஆதாரமற்ற அமெரிக்க அரசாங்க குற்றச்சாட்டை விட வேறு எதுவுமல்ல.    

2,000 மைல்களுக்கு அப்பால் உள்ள நகரங்களையும் தாக்கக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை ஈரான் பதுக்கி வைத்திருக்கிறது என்ற முறையீட்டின் மீது New York Times இதழ் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியது: "அந்த ஏவுகணைகள் ஈரானிலிருந்து வீசப்பட்டால், தொழில்நுட்ப விவரங்களின்படி, பேர்லின் உட்பட மேற்கத்திய ஐரோப்பாவையும் தாண்டி சென்று தாக்கக்கூடும். அதுவே வடமேற்கு திசையில் அனுப்பப்பட்டால், அந்த ஆயுதங்கள் மிக எளிதாக ரஷ்யா வரை செல்லும்."   

ஒபாமா நிர்வாகத்துடன் சேர்ந்து Times இதழ் அதன் கருத்தை வெளியிட்டது. அந்த இதழின் ஆசிரியர்கள் வெட்கமில்லாமல் பின்வருமாறு எழுதினார்கள்: "ஒபாமா நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், அச்செய்திகள் பற்றிய விபரத்தை வெளியிடாமல் இருக்க நியூயோர்க் டைம்ஸ் உடன்பட்டிருக்கிறது." 

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அவற்றின் உளவு நடவடிக்கைகளை ஈரான் மீது, குறிப்பாக அதனுடன் ஒரே எல்லைகளைக் கொண்ட நாடுகளின் மீது வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டன என்பதையும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. 1979இல் மிகச் சரியாக அமெரிக்க தூதரகத்தை "ஒற்றர்களின் கூடு" என்று முத்திரைக் குத்திய போர்க்குணமிக்க மாணவர்களால் தெஹ்ரான் கைப்பற்றப்பட்டதிலிருந்து, அங்கே உத்தியோகப்பூர்வமாக அமெரிக்காவால் இருக்க முடியவில்லை என்பதால் அந்த நடவடிக்கை தேவையாக இருந்தது.  

தெஹ்ரானுடன் முக்கிய பொருளாதார உறவுகள் வைத்திருக்கும் நாடுகள், குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் மீது இறுக்கிப்பிடியாக இராஜாங்க அழுத்தமளிப்பதை வாஷிங்டன் தொடர்ந்தது. நவம்பர் 2007இல், வட கொரியாவிலிருந்து ஈரானுக்கு பெய்ஜிங் வழியாக ஏவுகணை சரக்குகளைக் கொண்டு வருவதை இடைமறிக்க கோரி, புஷ் நிர்வாகம் சீனாவுடன் தலையீடு செய்தது. இந்த பரிவர்த்தனையானது, கார்பன் இழையிலிருந்து கைரோஸ்கோப்புகள் வரை அல்லது சாதாரண இராசாயனங்கள் வரையில் அனைத்து சரக்கு கையாள்கைகளையும் கொண்டிருந்த டஜன்கணக்கான இராஜாங்கரீதியிலான பரிவர்த்தனைகளில் குறைந்தபட்சம் இதுவும் ஒன்றாக இருந்தது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு சவூதி அரேபியாவின் முடியாட்சிகள் மற்றும் ஏனைய அரேபிய ஷேக்பிரபுத்துவங்களால் செய்யப்பட்ட தொடர்ச்சியான முறையீடுகள் தாம் குறிப்பாக குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. பாரசீக வளைகுடாவின் எல்லா முடிசூடிய தலைகளும் இன்றும் கூட 1979 ஈரானிய புரட்சியை நினைத்து நடுங்குகின்றன. அது, மத்திய கிழக்கில் மிகச் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக இருந்த ஷாவின் முழு முடியாட்சியையும் அழித்தது.

2005இன் தொடக்கத்தில், ஈராக் மீதான அமெரிக்க யுத்தத்தின் இரண்டு ஆண்டுகளின் போது, அதிகரித்து வந்த பெரும் விரோதபோக்கின் காரணமாக அமெரிக்க தாக்குதலைப் பெயரளவிற்கு எதிர்த்த அரேபிய ஆட்சியாளர்கள், அதன் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஈரான் வரை நீடிக்குமாறு திரைக்குப் பின்னால் வாஷிங்டனை வலியுறுத்தி வந்தனர். ஈராக் மீதான தாக்குதலை நியாயப்படுத்த புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட பொய்களுக்கு தங்களின் வாதங்களையும் ஒட்டுப்போட்ட அவர்கள், ஈரானைத் குழப்பாமல் விட்டால் அது நிச்சயமாக ஓர் அணுகுண்டைத் தயாரிக்கும் என்று வாதிட்டனர்.

தேவையானால் ஈரானுக்கு எதிராக இராணுவ முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தங்களின் அமெரிக்க இடைத்தரகர்களுக்கு பஹ்ரெய்ன் மற்றும் ஜோர்டானில் உள்ள அதிகாரிகளும் கூறி வந்த நிலையில், "பாம்பின் தலையை நசுக்க" ஈரானின் அணுசக்தி உலைகளைத் தாக்க வேண்டும் என்று சவூதி அரசர் அப்துல்லாஹ் மீண்டும் மீண்டும் அமெரிக்காவிற்கு அழுத்தம் அளித்தார். "அதை தொடர்ந்து செல்ல அனுமதிப்பது, அதை நிறுத்துவதில் உள்ள அபாயங்களை விட அதிகமாக இருக்கிறது," என்று பஹ்ரெயின் அரசர் ஹம்மத் இபின் இஷா அலி கலிபா அமெரிக்க தளபதி டேவிட் பெட்ரேயசைச் சந்தித்து தெரிவித்தார்.

2006, 2007 மற்றும் 2008இல் ஈரான் குண்டு தயாரித்துவிடுவது "தவிர்க்க முடியாததாக" இருக்கும் என்ற உடனடி எச்சரிக்கையுடன், இந்த வாதங்களில் ஊடுறுவியிருந்த பொய்மையானது, ஒபாமா நிர்வாகத்தாலும் மற்றும் இஸ்ரேலினாலும் செய்யப்படும் இன்றைய இதேபோன்ற வாதங்களை மதிப்பிடுவதற்கு ஒரு பயனுள்ள அளவுகோலை அளிக்கிறது.

அரேபிய ஷேக்குகளின் வெளிப்படையான கண்ணோட்டங்கள், ஒபாமா நிர்வாகத்தின் பெரும் வெளிநாட்டு கொள்கை முனைவின் மீதும், பாரசீக வளைகுடா அரசுகளுடன் அமெரிக்க இராணுவ உறவுகளின் விரிவாக்கம் மீதும், மற்றும் குறிப்பாக அரேபியா மற்றும் அதன் சிறிய அண்டை நாடுகளுக்கு பெரும் ஆயுதங்களை விற்பனை செய்வதை மீண்டும் தொடர்வதையும் வெளிச்சமிட்டு காட்டியது. நவீன போர் விமானங்கள் உட்பட 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை சவூதி அரேபியாவிற்கு விற்றதை செப்டம்பரில், பெண்டகன் வெளிப்படையாகவே உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நிறைய ஆயுதங்களின் உள்பாய்ச்சல்கள் சவூதி அரேபியா, கடார், குவைத், பஹ்ரெய்ன், ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இருந்துகொண்டு தமது கூட்டாளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகளால் கண்மூடித்தனமாக செயல்படுத்த முடியும் என்பதையே குறிக்கிறது என்ற நிலையில், இந்த விற்பனைகள் அரசியல்/இராஜாங்கரீதியிலான மற்றும் ஓர் இராணுவ/தொழில்நுட்பரீதியிலான என்ற இரண்டுவகையான உள்ளடக்கத்தை கொண்டிருந்தன. "இந்த நேச நாடுகளும், சக நாடுகளும் ஈரானுக்கு எதிராக தங்களின் சொந்த தற்பாதுகாப்பு கவசத்தை உருவாக்க நாங்கள் உதவுகிறோம். இது ஒருவகையில் ஈரான் விஷயத்தைக் காலங்கடத்துவது தான். ஆனால் பல்வேறு வழிகளில் இது நமக்கு உதவியாய் அமையும்," என்று அப்போதைய அமெரிக்க அதிகாரி ஒருவர் பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்தார்.

விக்கிலீஸின் ஆவண வெளியீடுகளுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டன், ஈரானிய அச்சுறுத்தலின் மீது இருந்திருக்கக்கூடிய அமெரிக்காவின் கவலை பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதற்கு ஆதாரமாக அரேபிய தலைநகரங்களில் இருந்த இராஜதந்திரிகளால் அறிவிக்கப்பட்ட ஈரானுக்கு எதிரான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டார். "அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, ஈரான் பெரும் கவலையளிப்பதன் ஓர் ஆதாரமாக இருக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே நான் நினைக்கிறேன். கசிவுகளில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், ஈரான் அதன் அண்டை நாடுகளின் பார்வையிலும் மற்றும் அந்த பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டும் ஒரு தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் விரோதத்தைத் தான் அரேபிய ஆட்சியாளர்கள் ஈரானுடன் பகிர்ந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக விக்கிலீக்ஸின் ஆவணங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெடன்யஹூ இதே பிரத்யேக தொனியில் பேசினார். "நம்முடைய பிராந்தியம் ஓர் விவாத்திற்குரிய இடமாக இருந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலை பெரும் அச்சுறுத்தலாக காட்டும் 60 ஆண்டுகளின் பிரச்சாரத்தின் விளைவாக, இவ்வாறு உள்ளது. அந்த கண்ணோட்டம் இனி செல்லுபடியாகாது என்பதை எதார்த்தத்தில் நம்முடைய வாசகர்களுக்குப் புரியும். வரலாற்றில் முதல்முறையாக ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது," என்று அவர் அறிவித்தார்.

இராணுவ தலைமை தளபதி அட்மிரல் மெக்கேல் முல்லென், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்க தயாரிப்புகளை மீண்டும் வலியுறுத்த விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார். ஞாயிறன்று CNNஇல் பேசுகையில், "ஈரான் அதனை அணுவாயுதபாணியாக்கி கொள்வதும், அவ்வாயுதங்களை ஓர் ஏவுகணையில் பொருத்தி மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது உட்பட அதை அபிவிருத்தி செய்யும் பாதையில் அது இன்னும் முன்னேறி கொண்டிருக்கிறது," என்று முல்லென் தெரிவித்தார்.

நேர்காணல் செய்த பரீத் ஜகாரியாவினால் நேரடியாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பிரதிபலிப்பாக கூறுகையில், "உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திலிருந்தே நாங்கள் இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகளைக் குறித்து சிந்தித்து வருகிறோம். நம் முன்னால் வாய்ப்புகள் இருக்கின்றன என்று நான் ஏனையவர்களோடும் பேசி வருகிறேன். நாங்கள் அதை செய்வோம்... எதிர்காலத்தில் நாங்கள் அதை செய்வோம்," என்றார்.

ஆனால் அந்த "இராணுவ விருப்பத்தேர்வு" என்ன என்பதை துல்லியமாக அட்மிரல் முல்லென் கூறவில்லை. ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளாக ஈரானிய தலைநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்தபட்சம் ஒரு பதிலை அளிப்பதாக தெரிகிறது. மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த ஒரு கூட்டத்தால் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் இரண்டு ஈரானிய அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் குறி வைக்கப்பட்டார்கள். அவர்களின் கார்களில் வெடிகுண்டுகளை இணைத்துவிட்டு அகன்ற அவர்கள், பின்னர் அவற்றை வெடிக்கச் செய்தனர்.

தெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தின் அணுசக்தி பொறியியல் துறையில் பேராசிரியரான மஜீத் ஷாஹ்ரியாரி அதில் கொல்லப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பாதுக்காப்பு அமைச்சகத்தில் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவரான பெரெடூன் அப்பாஸி அந்த தாக்குதலில் படுகாயமடைந்தார். அந்த இரு நபர்களின் மனைவிமார்களும், மற்றும் ஒருவரும் கூட அந்த தாக்குதகளில் காயமடைந்தனர். அந்த தாக்குதல்கள் இரண்டும் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.

தாக்குதல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரேமாதிரியான தன்மை இவற்றில் ஓர் உளவுத்துறை அல்லது உளவுத்துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சமீப காலங்களில் நடந்த ஈரானிய அணுசக்தித்துறை வல்லுனர்கள் மீதான தாக்குதல்களில் இது ஐந்தாவதாக இருக்கிறது. பேராசிரியர் ஷாஹ்ரியாரி ஐசோடோப்புகளைப்(அணுத்துகள்களை)பிரிப்பதில் வல்லுனராக இருந்தார் என்றும், மற்றும் ஈரானிய இராணுவத்தால் நடத்தப்படும் supreme national defence பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்றும் கூறப்படுகிறது. இணையவழி யுத்த தாக்குதல் முறையில் ஸ்டஸ்நெட் வார்மைக் (stuxnet worm) கொண்டு செயலிழக்கச் செய்யும் இலக்கில் ஈரானிய அணுசக்தி ஆலைகளும் இலக்காகி இருப்பதாகவும், அவை இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டதாகவும்  வதந்திகள் பரவின.

செய்தியாளர் கூட்டத்தில், ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மதினிஜத் கூறுயதாவது: "இந்த படுகொலையில் சந்தேகத்திற்கு இடமின்றி சியோனிச அரசின் மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களின் தொடர்பு இருக்கின்றன," என்று தெரிவித்தார். ஈரானில் அணுசக்தி அபிவிருத்தி திட்டத்தின் தலைவர் அலி அக்பர் சலிஹி, "நெருப்புடன் விளையாட வேண்டாம்," என்று அமெரிக்காவையும், அதன் நேச நாடுகளையும் எச்சரித்தார்.

பத்திரிகை செய்திகளின்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட, அமெரிக்காவால் திணிக்கப்பட்ட தடை ஆணைகளில் அப்பாஸி இலக்காக இருந்தார். ஈரானிய அணுசக்தி மற்றும் குண்டுவீசும் ஏவுகணை திட்டங்களில் அவர் பாத்திரம் வகித்தார் என்பதற்காக 2007இல் இருந்து அவர் சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தார்.