சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

WikiLeaks founder jailed in London on bogus charges

போலிக் குற்றச்சாட்டுகளின் மீது இலண்டனில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் சிறையில் அடைக்கப்பட்டார்

By Patrick Martin
8 December 2010

Use this version to print | Send feedback

செவ்வாயன்று காலை பிரிட்டிஷ் பொலிஷாரால் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேவிற்கு ஓர் இலண்டன் நீதிபதியால் பிணையளிப்பது மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்வீடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிகாரிகளின் கோரிக்கையின்மீது, டிசம்பர் 14இல் அசாங்கே விசாரணையை முகங்கொடுக்கிறார். தகாத பாலியியல் நடவடிக்கை குறித்த போலி குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தி கடந்த வாரம் ஸ்வீடன் அதிகாரிகள் பிடியாணைப் பிறப்பித்திருந்தார்கள்.

கைது நடவடிக்கையைப் பாராட்டிய அமெரிக்க அதிகாரிகள், ஸ்வீடனுடன் கடந்த 50 ஆண்டுகளாக கைதிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கையை வாஷிங்டன் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார்கள். அசாங்கே ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே, அவர் அமெரிக்காவின் Guantanamo Bay அல்லது சிஐஏ'யின் "இரகசிய" சிறைக்கூடம் போன்ற, ஓர் அமெரிக்க சிறைக்கூடத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான அபாயத்தை அசாங்கே முகங்கொடுப்பார் என்பதற்கான அறிகுறியாக அக்குறிப்பு இருக்கிறது.    

அசாங்கே விஷயத்தில் இதுபோன்ற கருத்துக்கள் அடிப்படை அரசியல் நிஜங்களை அடிக்கோடிடுகின்றன: விக்கிலீக்ஸ் தலைவர் ஸ்வீடனில் அவரின் தனிப்பட்ட நடத்தைக்காக இலக்காக்கப்படவில்லை; மாறாக, அமெரிக்க இராணுவ அட்டூழியங்கள் மற்றும் இராஜதந்திர உத்திகளை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திக் காட்டியதால் ஏற்பட்ட உலகளாவிய பெரும்தாக்கங்களுக்கான எதிர்வினையாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.  

விக்கிலீக்ஸ் தினந்தோறும் வெளிப்படுத்தி வரும் மனிதயினத்திற்கு எதிராக குற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் உண்மையான கிரிமினல்களான அமெரிக்க யுத்ததரகர்கள், சுதந்திரமாக இருக்கிறார்கள்; ஆனால் அசாங்கே சிறைச்சாலையில் இருக்கிறார்

ஓர் ஐரோப்பிய கைது பிடியாணைக்குப் பிரதிபலிப்பாக, அயல்நாட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும் மெட்ரோபொலிட்டன் பொலிஸின் (புதிய ஸ்காட்லாந்து யார்டு) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அசாங்கேயைக் கைது செய்தார்கள் என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது. “ஒரு மிரட்டல், இரண்டு தகாத பாலியல் நடவடிக்கைகள், மற்றும் ஒரு கற்பழிப்பு ஆகியவற்றின்கீழ் ஸ்வீடன் அதிகாரிகளால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்; இவை அனைத்தும் 2010 ஆகஸ்டில் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பொலிஸ் அவரை வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு இரவு கூட்டி வந்தது. அங்கே அவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், அடுத்த விசாரணை வரும்வரையில் ஏழு நாட்களுக்குச் சிறைக்காவலில் வைக்குமாறு பொலிஸிற்கு உத்தரவிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தலைவர் நீதிமன்றத்திற்கு வந்த போது, ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவதில் தமக்கு விருப்பமில்லை என்றும், உத்தியோகப்பூர்வமாக பிணை முறையீடு செய்திருப்பதாகவும் அறிவித்ததைத் தவிர, வேறொன்றும் கூறவில்லை.

ஸ்வீடன் அதிகாரிகளின் பிரதிநிதியாக இருக்கும் வழக்கறிஞர் ஜெம்மா லிண்ட்பீல்டு, பிணை முறையீட்டை நிராகரிக்க வேண்டுமென கோரினார். "ஓரிடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்குச் செல்லும் அசாங்கேயின் வாழ்க்கைமுறை" (கொலை மிரட்டல்களின் காரணமாக அவர் அடிக்கடி ஓரிடத்திலிருந்து வேறிடத்தில் செல்கிறார்), பிரிட்டனில் இருக்கும் அவரின் தற்காலிக குடியிருப்பு, அவர் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம்கோரக்கூடும் என்ற ஊடகங்களின் அறிவிப்புகள் ஆகியவற்றை அவர் காரணங்காட்டினார். கைதின் போது தன்னுடைய கைரேகை மற்றும் டிஎன்ஏ மாதிரியை அளிக்க அவர் மறுப்பதையும் கூட அவர் மேற்கோளிட்டுக் காட்டினார்

அசாங்கேயிற்கு பெரும் எண்ணிக்கையிலான கொலை மிரட்டல்கள் வந்திருப்பருப்பது தான், அவரை சிறைக்காவலில் வைப்பதற்கான உண்மையான காரணம் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார். "பல அடையாளம் தெரியாத நபர்கள் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயலக்கூடும்" என்று அவர் எச்சரித்தார். இந்த அறிக்கையிலிருக்கும் செருக்குத்தனத்திற்காக அது குறிப்பிடத்தக்கதாக உள்ளது: கொலை மிரட்டல்களுக்கான சூழல்களை உருவாக்கிய அதே அமெரிக்க இராணுவ/உளவு பிரிவுகள் தான் ஸ்வீடன் வழக்கிற்கு பின்னால் நிற்கின்றன.    

விசாரணைக்கு முன்னதாகவே அசாங்கே தானாகவே முன்வந்து சரணடைந்தார் என்பதற்கு இடையில், “சுருக்கமாக கூறுவதானால், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், மிகவும் இறுக்கமான நிலைமைகளை ஏற்படுத்த முடியும் என்றாலும் கூட அவ்வாறு ஏற்படுத்தாமல், நீதிமன்றத்தின் சட்டத்திற்கு முன்னால் சரணடைய ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்று லிண்ட்பீல்டு குறிப்பிட்டார்.

இந்த விளைவு "துரதிருஷ்டவசமானது" என்று கூறிய அசாங்கேயின் வழக்கறிஞர் மார்க் ஸ்டீபன்ஸ், ஆனால் பிணையில் வருவதற்காக அசாங்கே மீண்டும் விண்ணப்பிப்பார் என்று தெரிவித்தார். “இந்த விஷயம் பரவும். என்னையும் சேர்த்து, பலரும், திரு. அசாங்கே அப்பாவி என்று நம்புகிறோம். அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு அரசியல்ரீதியாக உந்தப்பட்டது என்று பலர் நம்புகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.  

அவருடைய இலண்டன் வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெனீபர் ராபின்சன்ஆஸ்திரேலிய பிராட்கேஸ்டிங் கார்பரேஷனிடம் கூறுகையில், “பிரிட்டனில் அவருக்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஒரு நியாயமான தண்டனைக்காக, 'அவரை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வேண்டும்' என்ற கோரிக்கை என்னைப் பொறுத்த வரையில் பெருங்கவலையாகவும், ஓர் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.   

அசாங்கேயின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க, ஓர் அரைடொஜன் முக்கிய பிரிட்டிஷ் குடிமக்கள் உறுதிமொழி பிணைய பத்திரங்களை அளித்திருந்த போதினும், நீதிபதி ஹாவர்டு பிட்டில் அசாங்கேவிற்குப் பிணையளிக்க மறுத்தார். திரைப்பட இயக்குனர் கென் லோச், இதழாளரும் ஆவணப்படவியலாளருமான ஜோன் பில்கெர், மற்றும் ஜெமிமா கான், பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் இம்ரான் கானின் முன்னாள் மனைவி உட்பட அவர்களில் பலர் நீதிமன்ற அறைக்கே வந்திருந்தார்கள்.

ஜோன் பில்கெர் பத்திரிக்கையாளர்களிடம், “மிகச் சிறந்த காரணங்களுக்காக சில மிக தீவிர எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்ட ஒரு மனிதர் இவர்," என்று தெரிவித்தார். அசாங்கேவைத் தமக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், "அவர்மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும்" அவர் தெரிவித்தார்.

பில்கெர் மேலும் தெரிவித்ததாவது: “இந்த அவமரியாதைகள் ஏற்படும் என்று எமக்கு தெரியும். இந்த அவமரியாதைகளைச் சுற்றி இருக்கும் பெரும் விபரங்களைக் குறித்தும் யாம் அறிவோம். ஸ்வீடனில் அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என்பதுடன், ஒரு மூத்த அரசியல் பிரமுகர் தலையீடு செய்யும் வரையில், ஒட்டுமொத்த விஷயத்தையும் மூத்த வழக்கறிஞர் வீசி எறிந்திருந்த போது, அங்கே அந்த குற்றச்சாட்டுக்களை அவரே அர்த்தமற்றவை என்று தீர்மானித்திருந்ததன் காரணமாக தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்.”

அசாங்கேவிற்கு அவர் அளித்து வரும் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பிவந்த பத்திரிக்கையாளர்களின் ஓர் உள்ளார்ந்த விமர்சனம் குறித்து, பில்கெர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நமக்காக ஜூலியன் அசாங்கே வெளிப்படுத்தி இருக்கும் பெரும் சேவையைப் புரிந்துகொள்ள, ஒருவர் அவற்றைப் படித்தாலே போதுமானது, நமக்காக என்று நான் கூறும் போது, ஒட்டுமொத்த மனிதயினத்தையும், இதழியல் துறையையும் இங்கே நான் குறிப்பிடுகிறேன். இது இதழியலில் ஒரு சிறந்த முறையாகும். இது உண்மையை எடுத்துக்காட்டுகிறது.”

"தனிப்பட்ட முறையில் ஜூலியன் அசாங்கேயிற்கு எதிராக, ஒரு மோசமான அநீதியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால் தான், தாம் 20,000 பவுண்டை உத்திரவாதமாக அளிக்க முன்வர வேண்டியதாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். அவர் ஓர் இதழாளரின் பணியைத் தான் செய்து வருகிறார்; அத்துடன் சுதந்திரமான தகவல் பரிமாற்றமே ஜனநாயகத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது என்பதை நம்பும் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.”

Land and Freedom, Bread and Roses, The Wind That Shakes the Barley போன்ற திரைபடங்களை இயக்கிய இயக்குனர் கென் லோச் கூறுகையில், தமக்கு அசாங்கேயைத் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும், 20,000 பவுண்ட் மதிப்பிலான பத்திரத்தை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். “அவர் ஒரு பொதுச்சேவை செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நம்மை ஆள்பவர்கள் கையாளும் விஷயங்களை நாம் தெரிந்துகொள்வதற்கு நமக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன்.” 

இங்கிலாந்தின் ZDNet உடன் பேசுகையில், பிணை அளிக்க மறுத்த நீதிபதியின் முடிவு "மிகவும் அதிர்ச்சி" அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். “அவர் பதிப்பித்திருக்கும் ஆவணங்களையும், குற்றச்சாட்டுக்களின்  இயல்பையும் ஒரேநேரத்தில்" மேற்கோளிட்டுக் காட்டிய அவர், “தம்மிடம் கிடைத்த ஆவணங்களை வெளியிட்டிருக்கும் ஒரு நபரை இம்மாதிரி கையாள்வது முற்றிலும் புதிதாக இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

ஜாக் கோல்ட்ஸ்மித்தின் நாடாளுமன்றத்தில் இருந்த பழமைவாத கட்சி உறுப்பினரின் தங்கையான ஜெமினா கான் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், “தமக்கு அசாங்கேயைத் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் கூட, அவர் 20,000 அல்லது தேவையானால் அதற்கு மேலும் அளிக்க தயாராக இருப்பதாக" தெரிவித்தார். ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஜியோபிரே ஷீர்ஸ் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பேட்ரிஷியா டேவிட் ஆகியோரும் அதே தொகையை அளிக்க முன்வந்தார்கள். பெயர் வெளியிட விரும்பாத மேலும் ஆறு நபர்களும் அவர்கள் பங்கிற்கு மொத்தத்தில் 80,000 அளித்தார்கள். ஆக பிணை எடுப்பதற்கான மொத்தத்தொகை 160,000ஐ எட்டியது.     

கலை மற்றும் இதழியலில் இருக்கும் முன்னனி பிரபலங்கள் உட்பட இந்த தனிநபர்களால் எடுக்கப்பட்டிருக்கும் முடிவானது, விக்கிலீக்ஸ் வரவேற்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருக்கிறது. இது உலக அளவில் பொதுமக்களின் கருத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெளிப்படுத்திக் காட்டுவதாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களின் மீதிருக்கும் விராதத்தையும், அதிகரித்துவரும் ஒப்புதலையும் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் உள்ளது

பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களிலும், இரண்டு பெரு-வியாபார அரசியல் கட்சிகளினாலும், சர்வதேச அளவில் விக்கிலீக்ஸைத் துடைத்தழிப்பதற்கான முயற்சிகளினூடாக, இந்த மாற்றம் அமெரிக்க எல்லையினுள்ளும் நடந்தேறி வருகிறது. Time இதழின், இந்த ஆண்டின் சிறந்த மனிதர்" என்ற இணைய வாக்களிப்பில், 300,000த்திற்கும் அதிகமான இணைய வாக்குகளுடன், ஜூலியன் அசாங்கே முதல் தேர்வாக உள்ளார்.

ஸ்வீடனால் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான வழக்கு, உண்மையான கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களை ஏளனப்படுத்துகிறது. அந்த வழக்கில், இரண்டு பெண்களுடன் விருப்பமில்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர், அவர்கள் இருவரும் ட்வீட்டர் மற்றும் செல்பேசி குறுந்தகவல் வழியாக உற்சாகமான கருத்துக்களைப் பதிப்பித்திருந்தார்கள்.

அவ்விருவரையும் "விக்கிலீக்ஸின் சுய-சேவகர்கள்" என்று பத்திரிக்கைகள் மாற்றமில்லாமல் குறிப்பிட்டு வரும் நிலையில், குறைந்தபட்சம் அவர்களில் ஒருவரான அன்னா அர்டின் ஸ்விடனில் உள்ள வலது-சாரி அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கிறவர். இவர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு வலது-சாரி குழுவான Union Liberal Cubanaஇன் அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்வீடன்/ஸ்பானிஷ் காஸ்ட்ரோ எதிர்ப்பு இதழில் தொடர்ந்து பங்களிப்பு அளித்து வருகிறார்.

இந்த கட்டமைப்பு, அசாங்கேவை பிரிட்டிஷ் சிறைச்சாலைக்கு, குறைந்தபட்சம் தற்காலிகமாக, அனுப்பி இருக்கிறது என்ற போதினும், தொழில்நுட்பரீதியான மற்றும் நிதியியல் சார்ந்த தாக்குதல்கள் அவர் அமைப்பின் மீது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. செவ்வாயன்று விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள், விக்கிலீக்ஸின் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அந்த குழுமத்தின் (விக்கிலீக்ஸின்) நடவடிக்கைகள் மீது ஒரு சட்டப்பூர்வ விசாரணை நடந்து வருவதை அவை காரணம் காட்டியுள்ளன.

அதேநேரத்தில், பிரிட்டிஷ் நாளிதழான Guardian இதழின் தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர் குறிப்பிடுகையில், “Ku Klux Klanஆல் ஆதரிக்கப்பட்டிருக்கும் Knights Party போன்ற மறைமுக இனவாத அமைப்புகளுக்கு" நன்கொடைகள் வழங்க, அவ்விரு நிதியியல் நிறுவனங்களுமே தொடர்ந்து பயனர்களை அனுமதித்து வருகின்றன. Ku Klux Klan வலைத்தளம் பயனர்களை கிறிஸ்துவ கோட்பாடுகள் (Christian Concepts) என்றழைக்கப்படும் ஒரு தளத்திற்கு திருப்பிவிடுகிறது. இது, தங்களின் இன மற்றும் கிறிஸ்துவ கருத்துக்களைப் போதிக்க பயனர்களிடம் இருந்து விசா மற்றும் மாஸ்டர்கார்டு நன்கொடைகளைப் பெறுகிறது.