World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Tony Blair, war criminal, testifies before inquiry

விசாரணைக் குழு முன் போர்க்குற்றவாளி டோனி பிளேயர் சாட்சியம் அளிக்கிறார்

By Chris Marsden
30 January 2010

Use this version to print | Send feedback

2003 ஈராக் போர் பற்றிய சில்கோட் (Chilcot) விசாரணைக்குழு முன் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயரின் சாட்சியம் அவரை மீண்டும் ஒரு போர்க்குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறது. அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் விரிவாக்கிய முன்கூட்டி தாக்கும் போர் என்னும் கொள்கைக்கு இணங்கி ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பில் அவர் ஒத்துழைத்தார் என்பது அவருடைய சாட்சியத்தில் தெளிவாகிறது.


சில்கோட் விசாரணையில் பிளேயர் தோன்றுகையில் போலீசார் பாதுகாப்பு

சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தெரிந்தபின்னரும்கூட பல முறையும் அவர் ஈராக்கில் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது என்ற தன் நம்பிக்கை பற்றிக் கூறினார். போருக்குச் செல்லும் முடிவை பாதுகாக்கும் அவருடைய உணர்வுபூர்வ கருத்துக்கள் எவ்விதமான சட்டபூர்வத்தன்மையும் அற்றதாகும்.

"இது ஒன்றும் ஒரு பொய், சதி அல்லது ஏமாற்றுத்தனம் பற்றியது அல்ல" என்று அவர் அறிவித்தார். "இது ஒரு முடிவு. நான் எடுக்க வேண்டிய முடிவு, சதாம் ஹுசைனின் வரலாறு தெரிந்த நிலையில், இராசயன ஆயுதங்களை அவர் பயன்படுத்தியது மற்றும் அவர் காரணமாக இருந்த ஒரு மில்லியனுக்கும் மேலான இறப்புக்கள் என்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீறிய அளவில், இந்த நபர் தன்னுடைய ஆயுத திட்டத்தை மறுகட்டமைக்கும் ஆபத்தை அனுமதிக்கலாமா, அல்லது அதற்கான பொறுப்பை ஆபத்திற்கு உள்ளாக்கலாமா? ....நான் எடுத்த முடிவு --மீண்டும் வெளிப்படையாக எடுப்பேன்--இதுதான்: பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களை அவர் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றால், நாம் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும். என்னுடைய கருத்து அப்பொழுது இப்படித்தான் இருந்தது, இப்பொழுதும் அப்படித்தான் உள்ளது."

பிளேயர் இங்கு எழுப்பும் கணிசமான பிரச்சினைகள் சதாம் ஹுசைன் ஆயுதத் திட்டங்களை "மறு கட்டமைக்கும்" "ஆபத்து" உள்ளதா என்பதே ஆகும். உண்மையில் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்ததோ அல்லது அவற்றை பிரிட்டன், அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தியதோ அல்ல. மாறாக பிளேயர் ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், போர் நியாயப்படுத்தப்படும் என்று அறிவிக்கிறார்; ஏனெனில் அவர் ஈரான் போரில் குர்திஸ் மக்களுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்களை உபயோகித்திருக்கிறார்.

பிரிட்டன் ஏன் "பொருளாதார தடைகள் மூலம் கட்டுப்படுத்தும் கொள்கையுடன்" நின்றுவிடவில்லை என்று பிளேயரை கேட்கப்பட்டபோது, அவர் போரை நியாயப்படுத்திய அமெரிக்க கருத்தை எதிரொலித்து, 9/11 தாக்குதல்களுக்கு பின்னர் அனைத்தும் மாறிவிட்டன என்றார். மற்ற தாக்குதல்கள் வரக்கூடும் ஆதலால், "ஆபத்து நிறைந்த சூழலை" ஒத்திப்போடுவதற்கில்லை. சதாம் ஹுசைன் 9/11 தாக்குதல்களுடனோ, அல்குவைடாவுடனோ தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டபோது, பிளேயர் "போக்கிரி நாடுகள்" பேரழிவு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும், சதாம் ஹுசைன் மற்றும் அல்குவேடாவிற்கும் இடைய உள்ள பிணைப்பு அடக்குமுறைக்குள்ளாகும் மற்றும் தோல்வியுறும் நாடுகள் "வெளிச்சக்திகளுக்கு பலவீனமாகி", அங்கு பயங்கரவாத குழுக்கள் ஊடுருவக்கூடும் என்று வாதிட்டார்.

ஒரு உண்மையான அச்சுறுத்தல் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, பேரழிவு ஆயுதங்கள் தாக்குதல் அல்லது பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் திறன் இருந்தால் போதும் என்ற வகையில் பிளேயர் அடிப்படையில் உறுதியாகக் கூறினார்.

ஈராக்கிற்கு எதிரான போர் ஆட்சி மாற்றத்திற்காக என்பதை முறையாக மறுத்தாலும், 2002ல் ஜனாதிபதி புஷ்ஷை அவரது கிராபோர்ட் பண்ணையில் 2002 வசந்த காலத்தில் சந்தித்தபோது அத்தகைய போருக்கு உடன்பட்டதை மறுத்தபோதும், அவர் பல முறையும் அமெரிக்காவின் முன்கூட்டிதாக்கும் போருக்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்து வந்தார். சதாமை அகற்றுதல், "எப்பொழுதும்" கருத்தில் இருந்தது என்றார் அவர். 9/11 க்கு பின்னர் "இப்படியே விட்டுவிடக்கூடது" என்ற கருத்துத்தான் நிலவியது என்றார். ஆட்சிகளை அகற்றுவது "முறையான இலக்காக" அரசாங்கக் கொள்கையாக 1999ல் வந்துவிட்டதா என்று கேட்கப்பட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். ஆனால் ஜனாதிபதி கிளின்டன் 1998லேயே ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவை தெரிவித்தார் என்று கூறினார். பிரிட்டனும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தலைச் சமாளிக்க விரும்பியது, அதற்காக "ஆட்சி மாற்றம் தேவை" என்றால், அதற்கும் தயார் என்றார்.

வெளிப்படையாக ஒரு கொள்கை என்ற விதத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அனுமதித்ததை தவிர்க்க பிளேயரின் ஒரே முயற்சி பேரழிவு ஆயுதங்கள் பிரச்சினைதான். ஐ.நா.தீர்மானம் 1441 ஐ மீறி ஈராக்கினால் அவை கொள்ளப்பட்டன என்பதுதான், போர்தொடுப்பதற்கு அதிகாரத்தை கொடுத்தது என்று இவர் தொடர்ந்து கூறுகிறார். பல ஆட்சிகள் அகல்வதை அவர் பார்க்க விருப்பம் கொண்டிருந்தார், ஆனால் இங்கிலாந்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதற்கு ஒரு அடித்தளம் தேவை என்றார் அவர். ஒருமுறைகூட இங்கிலாந்திற்கும் அத்தகைய அச்சுறுத்தலை அவர் அடையாளம் காணவில்லை. அது இல்லாவிடின் போருக்கான அடித்தளம் இல்லை. மாறாக சதாம் "உறுதியாக" பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருந்தார் அல்லது "சந்தேகத்திற்கு இடமின்றி" ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருந்தது என "நான் நம்பினேன்" என்று சாட்சியங்களுக்கு எதிரான அவருடைய கூற்றுத்தான் இருந்தது. இதைத்தான் 2002 உளவுத்துறை கோப்பின் இழிந்த முன்னுரையில் அவர் கூறியிருந்தார்.

ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று நிரூபணம் ஆயிற்று என்று சுட்டிக் காட்டப்பட்டற்கும், ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் Hans Blix தலைமையில் தங்கள் பணியை முடிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டதற்கும், பிளேயர் மீண்டும் "சாத்தியம்" என்ற பிரச்சினைக்கு திரும்பினார். ஈராக்கிய மதிப்பீட்டு குழு சதாமிடம் வழிவகையும் முறைகளும் ஆயுதத்திட்டத்தை தொடங்க இருந்தன என்றும் இது ஒன்றே போரை நியாயப்படுத்தப் போதுமானது என்றும் கூறினார். சில நேரம் "மார்ச் 2003" வினாவை கேட்கக்கூடாது, "2010 வினாவைத்தான்" கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"2010 வினா" என்பதை உலகம் "சதாம் ஹுசைன் இல்லாமல் சிறந்துள்ளதா" என்பதுதான் என்று பிளேயர் சித்திரித்தார். இது அதையும் விட அதிகமானதுதாதன். அவருடைய வாதம் குறிப்பாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் என்ற முக்கிய சக்திகள் எதையும் செய்யலாம் என்பதை நியாயப்படுத்துகிறது. ஆக்கிரமிப்பு போர்களை ஆட்சி மாற்ற நோக்கத்துடன் தொடக்கலாம், அவர்கள் நினைக்கும்போது அவ்வாறு செய்யலாம். இப்போர் தொடர்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றார் அவர். ஈரானுடன் "இதே போன்ற பிரச்சினைகள்" பல சதாம் ஹுசைன் காலத்திய ஈராக்குடன் இருந்தன என்று அறிவித்த அவர், இப்பொழுது அத்தகைய அச்சுறுத்தலை சமாளிக்க "கூடுதலான சிறந்த முறையில் உள்ளது" என்றார்.

ஐ.நா. ஒப்புதல் பெறுதல், இரண்டாம் முறை ஐ.நா.வில் தீர்மானம் இயற்றப்பட வேண்டும் என்ற விடயத்தைப் பொருத்தவரையில் பிளேயர் வெற்றுத்தனமாக தீர்மானம் 1441 ஐ (2002ல் இயற்றப்பட்டதை) காட்டி அது போருக்கு நெறித்தன்மை கொடுத்தது என்று வலியுறுத்தினார். தானும் இரண்டாம் ஐ.நா. தீர்மானம் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டதாகவும் அதற்குக் காரணம், பிரான்ஸும் ரஷியாவும் அத்தகைய தீர்மானத்திற்கு உடன்படாது என்பது "மிகத் தெளிவாயிற்று" என்றும், பாதுகாப்புக் குழுவில் அதற்கு பெரும்பான்மை இராது என்பதும் தெரிந்துபோயிற்று. பிரிட்டன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது என்பதற்கு இது ஒரு ஒப்புதல் ஆகும். ஏனெனில் ஐ.நா.வில் கோரியது இதற்குக் கிடைக்கவில்லை; எனவே ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டது.

அரசாங்க தலைமை வக்கீல் கோல்ட்ஸ்மித் பிரபுவின் ஒப்புதலை 1441 தீர்மானத்தின் அடிப்படையில் தான் பெற்ற நிலையை பிளேயர் ஆதரவாக எடுத்துக் கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில், புதிய ஐ.நா. ஒப்புதல் தேவை என்று வெளியுறவு அலுவலக சட்டக்குழு "தொடர்ந்து, ஒருமித்து கொடுத்த" கருத்திற்கு எதிரானது அது என்ற உண்மையை பல முறையும் உதறித்தள்ளினார்.

பிளேயரின் சாட்சியம், விசாரணைக்குழு மிருதுவாக அவரை நடத்தியது, அவருடைய முடிவுரை போர் பற்றி எந்த "வருத்தமும் இல்லை" என்று கூறியது பார்வையாளர்களில் சிலரை "பொய்யர்", "கொலைகாரர்" என்று கூற வைத்தது. ஈராக்கில் இறந்த சில படையினரின் உறவினர்களில் ஒரு பெண்மணி அழுது விட்டார்.

சில்கோட் விசாரணை எந்த வலுவும் அற்றது என்று பிளேயர் அறிந்திருந்தது அவருடைய திமிர்த்தன முறையில் வெளிப்பட்டது. மேலும் தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்த குற்றம் சார்ந்த தன்மையை எளிதில் கடக்கவும் முடிந்தது. குழுவினால் ஒரு ஆழ்ந்த வினா கூட பிளேயரிடம் எழுப்பப்படவில்லை என்று பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய அதிர்ச்சி தரும், குற்றம் சார்ந்த அறிக்கைகள் ஒன்றுகூட சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. உதாரணமாக போரின் சட்டத்தன்மை பற்றிய விவாதம் சாட்சியத்தில் 6 மணி நேரத்தில் 35 நிமிஷங்களைத்தான் கொண்டிருந்தது. கடந்த மாதம் Fern Britton உடன் தொலைக்காட்சி பேட்டி பற்றிக் கூறியது குறிப்பிடத்தக்கது. "பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை அறிந்திருந்தால், அப்படியும் போருக்குச் சென்றிருப்பீர்களா" என்று Britton கேட்டிருந்தார். பிளேயர் அதற்கு அப்படியும் ஈராக் மீது படையெடுத்திருப்பேன், ஏனெனில் சதாம் ஹுசைனை "அகற்றுவது சரியே" என்று தான் நினைத்ததாகவும், "அச்சுறுத்ததில் தன்மை பற்றி வித்தியாசமான வாதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்" என்றும் விடையிறுத்தார்.

இந்த விசாரணை பிளேயரை எந்தச் சவாலையும் எதிர்கொள்ளாமல், தான் "ஆட்சி மாற்றம்" என்ற சொற்றொடரை பயன்படுத்தவில்லை, "இது ஒன்றும் நிலைப்பாட்டு மாறுதல் அல்ல. அப்பொழுது இருந்த நிலை பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய ஐ.நா.தீர்மானங்கள் மீறப்பட்டதுதான். அதுதான் காரணம். அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி" என்று அறிவிக்க அனுமதித்தது.

இதைவிட வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. சில்கோட் விசாரணை ஈராக் போரில் பிரிட்டன் பங்கு பெற்றது பற்றிய உண்மை நிலவரத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. நேற்று விசாரணை தொடங்கியபோதுகூட, விசாரணைக்குழுத் தலைவர் சேர் ஜோன் சில்கோட் வந்திருந்தவர்களை பின்வருமாறு எச்சரித்தார்: "இது ஒன்றும் விசாரணை அல்ல". உறுதியாக இது இல்லைதான். இதற்கு சட்டபூர்வ அதிகாரங்கள் இல்லை என்பது மட்டும் இல்லாமல், Privy குழு உறுப்பினர்கள் போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விசுவாசத்திற்கு உரிய பிரதிநிதிகள் அடங்கியது. இவர்களில் சிலர் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளனர்.

சில்கோட்டே 2004, ஈராக் போரை நியாயப்படுத்த உளவுத்துறை கொடுத்த தகவலை ஆராய்ந்த Butler விசாரணைக்குழுவில் இருந்தார். அது பிளேயர் அல்லது எவரையும் பழைய இணையத்தள அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்ட "நம்பிக்கையற்ற கோப்பிற்கும்", பிரிட்டனுக்கு எதிராக 45 நிமிடங்களுக்குள் இணைக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்களை ஈராக் கொண்டிருக்கிறது என்ற தவறான கூற்றுக்களுக்கும் பொறுப்பு அல்ல என்று கூறியது. இந்த அறிக்கைதான் பாராளுமன்றத்தில் பிளேயர், "எவரும் பொய் கூறவில்லை, உளவுத் தகவலை எவரும் போலியாகத் தயாரிக்கவில்லை. எவரும் கோப்பில் உளவுத்துறை ஆலோசனைக்கு எதிராக கருத்துக்களை திணிக்கவில்லை" என்று கூறவைத்தது.

பிளேயருக்கு வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆலோசகராக சேர் லாரன்ஸ் ப்ரீட்மன் இருந்தார்; அவரும் ஈராக்கின்மீதான போருகற்கு தீவிர ஆதரவு கொடுத்தார். வரலாற்றாளர் சேர் மார்ட்டின் கில்பர்ட் தன்னை ஒரு யூதன் என்று விவரித்துக் கொண்டு, சில்கோட் விசாரணையில் அவர் நியமிக்கப்பட்டது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் குறைகூறப்பட்டதற்குக் காரணம் அவர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷையும் டோனி பிளேயரையும் தான் Privy குழுவிற்கு நியமிக்கப்பட்ட ஆண்டில் ரூஸ்வெல்ட், சேர்ச்சிலுடன் ஒப்பிட்டதால்தான் என்றார். சமீபத்தில் அவர் பிரதம மந்திரி கோர்டன் பிரெளனை "இஸ்ரேலிடம் முழு ஈடுபாடு கொண்டவர்" என்று புகழ்ந்திருந்தார். சேர் ரோட்ரிக் லின் ரஷ்ய கூட்டமைப்பிற்கு பிரிட்டிஷ் தூதராக இருந்து Trade Bank of Iraq ஐ நடத்திய JP Morgan Chase க்கு ஆலோசகராகவும் இருந்துடன், எண்ணெய் பெருநிறுவனமான BP க்கும் சிறப்பு ஆலோசனையாளராகவும் இருந்தார்.

ஒரு பயனற்ற விசாரணையை எதிர்கொண்டதை தவிர, பிளேயர் தான் ஒருவர் மட்டும் குருதி படிந்த கரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை நன்கு அறிவார். அவருடைய சாட்சியத்தின்போது அவர் கோல்ட்ஸ்மித்தும் போரை ஆதரித்தார் என்று குறிப்பிட்டார்; அதைத்தவிர மந்திரிசபை முழுவதும், மற்றும் பழைமைவாத கட்சியினர், பாராளுமன்றம் முழுவதுமே போரை ஆதரித்தன என்றார். இவர் ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றால், இவர் பிரிட்டனின் மற்ற முக்கிய நபர்களும் புஷ் நிர்வாகத்தின் முக்கிய நபர்களுடன் இணைந்து இருப்பார்.

பிளேயர் மற்றும் அவருடைய சக குற்றவாளிகளும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றால், சில்கோட் விசாரணைக் குழு போன்ற வெற்றுத் தனத்தில் எவ்வித நம்பிக்கையும் வைக்கப்படக்கூடாது. அதேபோல் யுத்தத்தை நிறுத்து கூட்டு (Stop the War Coalition) ஒழுங்கமைக்கும் குறைந்த பட்ச எதிர்ப்புக்களும் பயனில்லை. அதற்கு பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உலகின் முக்கிய சக்திகளின் அரசாங்கத் தலைவர்களாக இருக்கும் போர் வெறியர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும்.