World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Iran's Green movement in disarray

ஈரானில் பச்சை இயக்கத்தின் நிலைகுலைவு

Keith Jones
20 February 2010

Use this version to print | Send feedback

ஈரானின் முதலாளித்துவ எதிர்ப்பு பச்சை இயக்கம் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஷா ரேஸா பஹ்லாவி அகற்றப்பட்டு 31 ஆண்டுகள் முடிந்த தினமான பெப்ருவரி 11 அன்று பெரும் எதிர்ப்புக்களை நடத்தும் என்று கூறிய அச்சுறுதல்களில் அடைந்த தோல்வியை அடுத்து நிலைகுலைந்து நிற்கிறது.

ஈரானுக்குள்ளேயும் வெளியேயும் பச்சை ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்கள் நடைபெறாமல் செய்வதாக உறுதி கொண்டிருந்தனர். உயர் தலைவர் அயோதுல்லா காமேனீய் மற்றும் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட் தலைமையில் உள்ள ஆட்சி தவிர்க்க முடியாமல் கவிழ்ந்துவிடும் என்றுகூட சிலர் கணித்திருந்தனர்.

Voice of America வின் பேர்சிய மொழி ஒலிபரப்புக்களில் வாடிக்கையாக தோன்றும் இஸ்லாமியக் குடியரசின் முன்னாள் உயர்மட்ட அதிகாரி மோசன் ஸாஷகாரா பெப்ருவரி 11ம் தேதி, "ஒரு முடிவெடுக்கும் நாள்--எதிர்த்தரப்பினர் மில்லியன் கணக்கில் கூடுவது அவர்களுக்கு சாதாகமாக அதிகார பலத்தை மாற்றும் தினம்" என்று அறிவித்திருந்தார்.

இந்த நம்பிக்கைகள் மூன்று தசாப்த காலமாக அது இஸ்லாமிய குடியரசை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கினாலும் பகிரப்பட்டிருந்தன. பெப்ருவரி 11ம் தேதி "தெஹ்ரானில் பலப்பரீட்சை" என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட், "[அரசாங்கம்] மீண்டும் தெஹ்ரானிலும் மற்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தெருக்களுக்கு வருவதை நிறுத்துவதில் தோல்வி அடைந்தால், ஈரானின் குண்டு தயாரிக்கும் உந்துதலுக்குப் பின் நிற்கும் தீவிரக்குழு வீழ்ச்சிக்கு அருகே உள்ளது என்பதை மேற்குலகம் அறியும்" என்று அறிவித்திருந்தது.

ஆனால் மேலைச் செய்தி ஊடகத்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த விதத்தில், ஈரானிய அரசாங்கம் பச்சை இயக்க எதிர்ப்புக்களை ஒதுக்கி, தன்னுடைய ஆதரவாளர்களை மில்லியன் கணக்கில் திரட்டி பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், மிரட்டல், எதிர்த்தரப்பினர் கைது, தொலைத் தொடர்புகளை தடைக்கு உட்படுத்தியது ஆகியவை பச்சை எதிப்பின் அளவில் கணிசமான பாதிப்பைக் கொண்டிருந்தன. ஆனால் பெப்ருவரி 11 அன்று பச்சைத் திரட்டு தவிடுபொடியானது முதலிலும் முக்கியமானதுமாக அதன் முன்னுரிமை கொண்ட வர்க்கத் தன்மை மற்றும் வலதுசாரி அரசியல் சார்பின் விளைவுதான்.

பச்சை இயக்கம் ஈரானின் முதலாளித்துவ-மதகுருமார் அமைப்புமுறையின் அதிருப்திப் பிரிவுகளால் வழிநடத்தப்படுகிறது. வசதியாக உள்ள நகர்ப்புற மத்தியதர வகுப்பு பிரிவுகளை தவிர உண்மையான வெகுஜன மக்கள் ஆதரவு இதற்குக் கிடையாது. இதன் முக்கிய தலைவர்கள், முன்னாள் பிரதம மந்திரி ஹொசைன் மெளசவி, முன்னாள் பாராளுமன்றத் தலைவர் மேதி கரெளபி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹம்மது கடாமி ஆகியோர் இஸ்லாமியக் குடியரசில் முக்கிய பதவிகளில் இருந்திருக்கின்றனர்.

மெளசவியின் ஜூன் 2009 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கிடைத்த அதிக நன்கொடைகளில் முக்கியமாக அளித்தவர் ஹஷேமி ரப்சஞ்சானி ஆவார். இவர் ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்பொழுது இரு முக்கிய அரசாங்க அமைப்புக்களின் தலைவர் மற்றும் ஈரானின் பெரும் செல்வந்தர், வணிகர் என்று கருதப்படுபவர்.

ஈரானின் ஜனாதிபதியாக 1989ல் இருந்து 1997 வரை இருந்த ரப்சஞ்சானி, 1997ல் இருந்து 2005 வரை ஜனாதிபதியாக இருந்த கடாமி இருவரும் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினர். அவை பெரிதும் வறுமையையும் சமூக சமத்துவமின்மையையும் அதிகரித்தன. அதே நேரத்தில் அவர்கள் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய சக்திகளுடனும் மீண்டும் இணைந்து செயல்பட விரும்பினர்.

கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டது என்று கூறி தெருக்களுக்கு வந்து நிறைந்தவர்கள் பெரும்பாலும் வடக்கு தெஹ்ரான் பகுதியில் உள்ள வசதியானவர்கள். அது பச்சை இயக்கத்தின் தலைவர்களால் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் CNN இடத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஈரானில் ஊதியங்கள் கொடுக்கப்படாதது, நிரந்தர வேலைக்கு பதிலாக ஒப்பந்த வேலை, எரிபொருள், உணவு மற்ற அடிப்படை பொருள்கள், பணிகளில் அரசாங்கம் கொடுத்துவந்த உதவித் தொகைகள் படிப்படியாக அகற்றப்படுதல் ஆகியவை பற்றி பெருகிய முறையில் தொழிலாளர் அதிருப்தி, அமைதியின்மை ஆகியவை உள்ளன.

ஆனால் பச்சை இயக்கம் ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கும், நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களுக்கும் எந்த அழைப்பினையும் விட தகுதியற்றிருப்பதுடன், விரும்பவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பச்சை ஆதரவாளர்கள் இஸ்லாமிய ஆளும்அமைப்பினால் சுமத்தப்படும் வழிவகைகள், உடை நெறிகள் பற்றி கொதிப்படைந்தாலும், பலர் ஈரானின் உழைக்கும் மக்களின் சமூகப் பொருளாதார துன்பங்கள் மற்றும் விருப்புகள் பற்றி பொருட்படுத்தவில்லை அல்லது முற்றிலும் விரோதப் போக்கு உடையவர்கள் ஆவர். எதிர்த்தரப்பின் முக்கிய புகார் 2005 முதல் 2008 வரை அஹ்மதிநெஜாட் எண்ணெய் விலை ஏற்றத்தில் கிடைத்த வருமானத்தை சமூக நலத் திட்டத்தில் வீணடித்துவிட்டார் என்பதாகும்.

சமீபத்தில் பச்சை ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் மெளசவி பச்சை இயக்கம் மக்களோடு தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். "புரட்சிக்கு முன் புரட்சிகர சக்திகளும் கல்வியாளர்களும் கீழ்மட்ட வர்க்கத்தை காக்க வேண்டும் என்பது ஒரு கொள்கையாக இருந்தது. ஏழைகளின் நண்பர் என்று கூறுவது பெருமிதமாக இருந்தது.... தீவிர அரசியல் பிரச்சினைகளால் சமூகத்தின் கீழ்மட்ட வகுப்புக்கள், அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் பற்றி குறைந்த கவனத்தை செலுத்துவதில் வந்து முடிந்துள்ளது என்பது பற்றி நான் வருத்தப்படுகிறேன்." என்று மெளசவி எழுதியுள்ளார்.

மேலைச் செய்தி ஊடகமும் அரசியல் அமைப்பினரும், அவற்றின் "இடது" பிரிவு உட்பட, மெளசவியின் கூற்றான தேர்தல் திருட்டு என்பது மறுக்க முடியாது என்ற கருத்தில் இருந்தன. அதை நிரூபிக்க சாட்சியமே தேவை இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு மறுக்க முடியாதது என்றனர். ஆனால் சமீபத்தில் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் Program on International Policy Attitudes சார்பில் வந்த வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று தெஹ்ரான் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தளமுடைய அமைப்புக்களால் ஜூன் தேர்தலுக்கு முன்பும் பின்னரும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் அஹ்மதிநெஜாட் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று இருந்தார் என்பதைக் காட்டியுள்ளன.

கடந்த வாரம் அபூர்வமான வெளிப்படையான சந்தர்ப்பம் ஒன்றில் வெளிநாட்டு உறவுகளுக்குகான குழுவின் தலைவரும் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு வாதிடுபவருமான ரிச்சர்ட் ஹாஸ் CNN இடம் மெளசவி தேர்தலில் வெற்றிபெற்று விட்டார் என்றோ ஈரானியர்களில் 25 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதற்கோ எந்த நிரூபணமும் இல்லை என்று ஒப்புக் கொண்டார்.

பெப்ருவரி 15 நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று எதிர்த்தரப்பு, அதன் நெருக்கடி ஆகியவற்றின் தன்மை பற்றி நன்கு தெரிவிக்கிறது. பச்சை தலைமையின் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தி அரசியலிலும் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நபர்களுடன் மறுஇணைவையும் பாதுகாத்துக்கொள்ளும் தமது நோக்கத்திற்கு பயன்படுத்தியமை பல இளைய எதிர்த்தரப்பினரை விரோதப்படுத்தி விட்டது. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் டைம்ஸ் இயக்கம் ஈரானுக்கு வெளியில் இருந்து வரும் அரசியல் மற்றும் பிற முக்கிய ஆதரவுகளை நம்பியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சை இயக்கத்தை மேலை செய்தி ஊடகம் மற்றும் அரசாங்கங்கள் தழுவியுள்ளது நீண்டகாலப் பிணைப்பாகும். இஸ்லாமிய குடியரசில் ஈரானின் சமூக முரண்பாடுகள் ஆழ்ந்ததின் சுமை, ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற வகையில் இடைவிடாத ஏகாதிபத்திய அழுத்தம் இவற்றால் ஆளும் உயரடுக்கில் வளர்ந்த பிளவுகளை பயன்படுத்தும் திட்டமிட்ட முயற்சியின் விளைவாகும் இது. இந்த நாடுகள் இரண்டுமே ஈரான் எல்லையில் உள்ளதுடன், இதைத்தவிர அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகளும் இதில் பங்கு கொண்டிருந்தன.

அமெரிக்கா ஈரானிய உயரடுக்கிற்குள் தயாராக பங்காளிகளை காணலாம் என்ற கணக்கீடு வரலாற்றுரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். ரப்சஞ்சானி மற்றும் கடாமியின் கீழ் ஈரான் பலமுறையும் வாஷிங்டனுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் நிறுவ முற்பட்டது, ஆனால் ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் இரண்டுமே அதை பொருட்படுத்தவில்லை.

அத்தகைய முயற்சிகளில் கடைசியாக இருந்தவை, Trita Parsi நூலான காட்டிக்கொடுக்கும் கூட்டு (Treacherous Alliance) என்பதில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா ஆகியவற்றின் இரகசியச் செயல்கள், ஈராக்கின்மீது மார்ச் 2003ல் அமெரிக்கப் படையெடுப்பிற்கு பின் வந்தவை, "பெரும் பேரத்தின்" வடிவைக் கொண்டது. ஈராக் பற்றி அமெரிக்காவிற்கு தெஹ்ரான் உதவ ஒப்புக் கொண்டது என்பது மட்டுமில்லாமல் ஹெஸ்போல்லாவிற்கு ஆயுதங்கள் அளிப்பதை, ஹமாஸிற்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்துவது மற்றும் கிட்டத்தட்ட இஸ்ரேலை அங்கீகரிப்பது ஆகியவற்றை ஒப்புக் கொண்டது. இதற்கு பதிலாக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அகற்றி தெஹ்ரானுக்கு பாதுகாப்பு உறுதிகளும் கொடுக்க வேண்டும்.

ஈரானில் இருந்து வெளியேறியவர்களில் ஒருவரான Parsi முன்பு குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் Bob Ney க்கு உதவியாளராக இருந்தார். அவர் ஈரானிய அரசாங்கத்தின் 2003 கோரிக்கையை புஷ் நிர்வாகத்திற்கு கொடுப்பதில் இடைத்தரகராக இருந்தார்.

இன்று Parsi தேசிய ஈரானிய அமெரிக்கக் குழுவின் (NIAC) தலைவர் ஆவார். இந்த அமைப்பு தன்னைத்தானே ஈரானிய அமெரிக்கர்களின் பிரதிநிதி என்றும் பச்சை இயக்கத்திற்கு குரல் கொடுக்கும் அமைப்பு என்றும் கூறிக் கொள்கிறது.

"ஈரானில் பச்சைகளுக்கு உண்மையில் வாஷங்டன் எப்படி உதவலாம்" என்ற தலைப்பில் Parsi உம் Rand Corporation ஆய்வாளரான Alireza Nader உடன் இணைந்து எழுதப்பட்ட ஒரு குறிப்பில், NIAC ஒபாமா நிர்வாகத்தை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு அமைப்பிற்கு எதிராக இலக்கு வைக்கப்படும் தடைகளை விரும்புவதற்கு பாராட்டி, இராணுவ அச்சுறுத்தல்கள் அல்லது அணுசக்திப் பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டைக் காணுதல் என்பது ஈரானின் முதலாளித்துவ எதிர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதத்தில் அமெரிக்க நலன்களை சேதப்படுத்தும் என்று கூறியுள்ளது. "பச்சை இயக்கம் அமெரிக்க அரசியல் காலஅட்டவணைக்கு ஏற்ப தன் செயல்களை சீரமைக்காது, சீரமைக்க இயலாது. ஆனால் பொறுமை இருந்தால்--இதில் மற்ற பிரச்சினைகளை விடுத்து அணுப் பிரச்சினையில் மட்டுமே முக்கியத்துவம் அடங்கியிருக்க வேண்டும்--வாஷிங்டன் மாற்றத்திற்கான கூடுதல் திறனை அடையும் வாய்ப்பு உள்ளது."

ஈரானிய முதலாளித்துவத்தின் வர்க்க நலன்கள் தொடரப்படுவதில் அஹ்மதிநெஜாட்-காமேனீ ஆட்சி பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதார தடைகளினால் உதவித் தொகைகள் அகற்றுவது, தனியார்மயமாக்குவது உட்பட அதன் வலதுசாரிக் கொள்கைகளை பெருகிய முறையில் தொடரும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்த பச்சை பிரிவுகள் மற்றும் அவற்றின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முற்படும் நம்பிக்கையில் உள்ளனர்.

இவ்விதத்தில் மெளசவி "[குறைந்த சலுகைகள் உடைய] வர்க்கங்களின் அக்கறைகளுடனும், கோரிக்கைகளுடனும் இணைத்துக்கொள்ள வேண்டும்" என்று தன் ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் முன்னாள் CIA முகவரும் புதிய தாராளவாத ஜனநாயகங்களுக்கான அமைப்பின் (Foundation for Democracies) சிந்தனைக்குழுவின் உறுப்பினருமான Reuel Marc Gerecht ஒரு நியூயோர்க் டைம்ஸ் தலையங்கப் பக்க கட்டுரையில் அஹ்மதிநெஜாட்டின் பெருகிய வலதுசாரி பொருளாதாரக் கொள்கையினால் "1979 புரட்சிக்குப்பின் ஆட்சிக்கு தளமாக இருக்கும் ஏராளமான mostazafan (அடக்கப்பட்ட வறியவர்கள்) களை, எதிர்த்தரப்பினர் தெருக்களுக்கு இழுக்கக்கூடியதாக இருக்கும்" என்று பரவசத்துடன் எழுதியுள்ளார்.

நல்லெண்ணம் நேர்மை கொண்ட (அரசியலில் அனுபவம் அற்ற) சில இளைஞர்கள் இஸ்லாமிய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக பச்சை இயக்கத்தில் அகப்பட்டுக் கொண்டிக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் இப்பொழுது உரிய படிப்பினைகளைப் பற்றி எடுக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கம் அரசுக்கான தனது எதிர்ப்பை ஈரானிய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவிற்கும் அடிபணியச் செய்துவிடக்கூடாது. உண்மையான ஜனநாயகம் தொழிலாள வர்க்கம் மற்றும் அடக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் சமூக நலன்களை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரள்வதின் மூலம்தான் நிறுவப்பட முடியும்.