சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Internet discussion in China on the exploitation of workers

தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றி சீனாவில் இணைய தள விவாதம்

By John Chan
9 June 2010

Use this version to print | Send feedback

சீன ஹொண்டா தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தம் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனத்தால் நடத்தப்படும் தெற்கு சீனாவில் உள்ள மாபெரும் மின்னணு கடின உழைப்புத் தொழிற்சாலையில் அலையென நடந்த தற்கொலைகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் (CCP) செயல்படுத்தப்படும் மிருகத்தன முதலாளித்துவ சுரண்டலுக்கு மாற்றீடுகள் தேடும் நோக்கத்தில் சீனாவில் வலைத் தளத்தில் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

சீனாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் மில்லியக் கணக்கானவர்களுள் ஹொண்டாவிலும் பாக்ஸ்கானிலும் உள்ள தொழிலாளர்களில் பெரும்பான்மையாக உள்ள இளந் தொழிலாளர்களும் அடங்குவர். சீனாவின் Internet Network Information Centre கருத்துப்படி நாட்டின் 384 மில்லியன் இணைய தள உபயோகிப்போரில் 61.5 சதவிகிதத்தினர் 29 வயதிற்கு உட்பட்டவர்கள், 12.1 சதவிகிதத்தினர்தான் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் ஆவர். கிட்டத்தட்ட 42.5 சதவிகிதத்தினர் மாதாந்திர வருமானமாக அமெரிக்க 146 டாலர் அல்லது அதற்கும் குறைவாகக் கொண்டுள்ளனர்.

இணைய தளத்தில் மேலெழுந்தவாரியான முறையில் "தொழிலாள வர்க்கம்", "வேலைநிறுத்தம்", "பாக்ஸ்கான்" என்ற முக்கிய சொற்கள் மூலம் தேடினால் அவை பாக்ஸ்கான் மற்றும் ஹொண்டா தொழிலாளர்களுடன் பரந்த வர்க்க ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதுடன் ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் உள்ள வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடனும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியிருப்பதை காணமுடிகிறது. தொழிலாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொதுவாக சுருக்கமாகவும், கோபத்துடனும் விளங்குகின்றன. "தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் அல்லது அடுத்த தாக்குதலில் நாங்கள் தற்கொலை செய்யவேண்டியிருக்கும்" என்று சிலர் குரல் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் சீனத் தொழிலாளர்களுக்கு மூன்றே வழிவகைகள்தான், "புரட்சி, தற்கொலை அல்லது இழுத்துக் கொண்டே போதல்" என்று இருப்பதாகக் கூறியுள்ளனர். இணைய தள பொலிஸ் கண்காணிப்பாளர்களால் வெளிவந்த பல கருத்துக்கள் அகற்றப்பட்டுவிட்டன,.

அரசாங்க தொழிற்சங்கங்கள் பங்கு பற்றி குறிப்பிடத்தக்க வகையில் சீற்றம் பெருகியுள்ளது; அவை "முதலாளித்துவத்தின் எடுபிடி நாய்களாகி விட்டன" அல்லது முதலாளிகளின் சார்புடைய "மஞ்சள் தொழிற்சங்கங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. சில கருத்துக்கள் ஒரு சிறிய நிறுவனத்தில் இருந்து பாரிய நிறுவனமாக பாக்ஸ்கான் உயர்ந்துள்ளது பெய்ஜிங்கின் ஊழல் மிகுந்த முதலாளித்துவத்துடன் கொண்டுள்ள கூட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளன. அதிகாரத்துவத்தினர் "மாளிகைகள், அமெரிக்க டாலர்கள், சிறந்த குடிவகைகள் மற்றும் அழகிய பெண்களை" பெறுகின்றனர் என்றும் அதே நேரத்தில் இளவயதினர் "முடிவில்லாமல் மனித இயந்திரங்கள் (robots) போல் ஒரு கூண்டிற்குள் குறைந்த ஊதியத்திற்காக உழைக்கின்றனர்" என்றும் கூறப்படுகிறது.

Sina வலைத் தளத்தில் மே 25 அன்று பங்கு பெற்ற ஒருவர், பாக்ஸ்கான் தற்கொலைகளைப் பற்றி எழுதும்போது ஒரு சமீபத்திய டைம் இதழ் "சீனத் தொழிலாளர்கள்" "இந்த ஆண்டின் மனிதன்" என்று பெயரிட்டுள்ளதையும், இவர்களுடைய குறைவூதியத் தொழில்தான் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி இன்னும் தீவிரமாகமாகாமல் போவதைத் தடுப்பதற்கு முக்கியம் என்று கூறியிருப்பதையும் மேற்கோளிட்டுள்ளார். முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் டைம் இதழினால் குறிப்பிடப்படவில்லை, ஏனெனில் அவர்கள் முதலாளித்துவத்தினருக்கு எதிராக கிரேக்கத்தில் வேலைநிறுத்தங்கள், பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

சீனத் தொழிலாளர்கள் டைம்ஸ் பத்திரிகையால் "கௌரவத்துடன்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதின் காரணம் அவர்கள் உலக முதலாளித்துவத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துகின்றனர், ஏனெனில் சீன அரசாங்கம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுப்பதை தடைசெய்துள்ளது என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களாக தனியார் முதலாளித்துவ பிரிவு பெருகிய முறையில் சீனப் பொருளாதாரத்தின்மீது மேலாதிக்கம் கொண்டுள்ளது, பாக்ஸ்கான் போன்ற கடின கடினஉழைப்புத் தொழிற்சாலைகள் உயர்ச்சியடைய அனுமதித்துள்ளது என்று சேர்த்துக் கொண்டுள்ளார். "அரசாங்கமும் மற்றும் அதன் கூட்டுத்துறையும் பங்குகள்மீது உரிமையை கொண்டு பெருநிறுவன அதிகாரத்தை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழுவிற்கு கொடுத்து, தொழிலாளர்களை முழு அடிமைத்தனம், தாழ்த்தி வைத்தல் ஆகிவற்றிற்குத் தள்ளிவிட்டது."

இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிராக எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும் அவை அதிகாரிகளால் இரக்கமற்ற முறையில் அடக்கப்படும். எனவே ஒரே முன்னேற்றப்பாதை போராடுவதுதான். "எழுந்திருங்கள், அடிமைகளாக இருக்க விருப்பமில்லாதவர்கள் எழுந்திருங்கள்.... உலகெங்கிலும் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், குருதிகொட்டல்கள், தியாங்கள் மூலம்தான் வெற்றியடையப்பட்டுள்ளன! முதலாளித்துவத்தினரின் மனச்சாட்சிகளால் வழங்கப்படவில்லை." என்று கட்டுரையாளர் கூறியுள்ளார்.

கட்டுரைப் பகுதிகள், விவாதத் தளங்களில் "பாக்ஸ்கான் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்யலாம் என்றால்" என்ற தலைப்பில் வந்துள்ள, சுற்றில் உள்ள வலைத் தள கருத்து, அரசாங்கம் நடத்தும் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை (ACFTU) சுயாதீனத் தொழிலாளர் போராட்டங்கள் அடக்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. பாக்ஸ்கானில் நடைபெற்றுள்ள தற்கொலைகள் அக்கொள்கையின் விளைவுதான். ஒரு முன்னாள் செய்தியாளரான இக்கட்டுரையாளர் 2001 ம் ஆண்டு குவாங்டாங் ACFTU தலைவருடன் பேசியதாகக் கூறுகிறார். இந்த அதிகாரி தடைசெய்யப்பட்ட அரசியல் மற்றும் சமய அமைப்புக்கள் தனியார் துறைத் தொழிலாளர்கள் ஆதரவை அப்பகுதியில் இருந்து பெறப்பாடுபடுகின்றன என்றும், "நீங்கள் மக்களை ஒழுங்காக அமைக்கவில்லை என்றால், வேறு எவரேனும் செய்வர், தொழிலார்கள் தாங்களே தம்மை அமைத்துக் கொள்ளுவர், அது ஆளும் கட்சியின் நிலைமையை அச்சுறுத்திவிடும்" என்று அந்த அதிகாரி அறிவித்திருந்தார்.

இக்கட்டுரை ACFTU அரசாங்கம் இல்லாத துறையில் விரிவாக்கம் செய்வதன் உண்மை நோக்கம் அரசியல் ஸ்திரப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவதற்கு என்று கூறியுள்ளது. "இந்த அரசியல் நோக்கம் தவிர, கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாடும் உள்ளூர் அரசாங்கங்களும் மூலதனத்திற்கு முன்பு தாழ்ந்து வணங்குகின்றதுடன், நலன்கள் குறைந்துள்ள தொழிலாளர்கள் முற்றிலும் சக்திவாய்ந்த மூலதனத்தின் முன் செயலற்றதாக்கியுள்ளது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன் இணைந்து நிற்பதில்லை என்பதுடன் முதலாளிகள் உற்பத்தியை தமக்கேற்ப சிறப்புடன் அமைக்கவும் ஒத்துழைக்கின்றனர்" என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

மற்றொரு வலைத் தள அரங்கு "வேலைநிறுத்தங்கள் பற்றிய" லெனினுடைய 1899 ஆண்டு கட்டுரை என்பதை வெளியிட்டது. இந்த அரங்கு ஹொண்டா உட்பட சமீபத்தில் சீனத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களை சுட்டிக்காட்டி, "பெரும் புரட்சித் தலைவர் லெனினுடைய" அறிவுரைகள் இன்றைய தொழிலாள வர்க்கத்திற்கு "முக்கியமான நடைமுறை தாக்கங்களை" கொண்டுள்ளன என்று கூறியுள்ளது. லெனினுடைய தொலைநோக்குடைய கட்டுரை ரஷ்யத் தொழிலாளர்களின் தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் சோசலிச அரசியல் நனவின் வளர்ச்சிக்கு விரிவாக்கம் பெற வேண்டும், சார் மன்னரின் சர்வாதிகார ஆட்சி அகற்றப்படுவதற்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று விளக்கியிருந்தது.

லெனினுடைய கட்டுரையைத் தொடர்ந்து வந்த கருத்துக்களில், ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டார்: "சீனாவில் எந்த இடத்திலும் இலகுவில் வெடிக்கக்கூடிய தன்மை உள்ளது. என்ன இல்லை என்றால் அதைப் பற்ற வைப்பதற்கு ஒரு நபர் இல்லை என்பதுதான்." சீனா மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை 1921இல் போல் நிறுவவேண்டும் என்று சேர்த்துக் கொண்டார். மற்றொரு பங்கு பெற்றவர் எழுதினார்: "நம் கண்முன்னே வெளிவரும் போராட்டங்களில் இருந்து, சீனத் தொழிலாள வர்க்கத்தினர் மீண்டும் மிருகத்தனமான உண்மையில் இருந்து எழுச்சி பெறுகின்றனர் என்பது தெரியவருகிறது. முதலில் சுயாதீன தொழிற்சங்கங்களை நிறுவது பற்றிச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது, பின்னர் ஒரு புதிய இரகசிய அரசியல் அமைப்பை, தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை கட்டமைக்க வேண்டும்", அப்பொழுதுதான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி தூக்கி எறியப்பட முடியும்". "போராட்டத்தில் எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், சீனாவின் சலுகைபெற்ற அதிகாரத்துவம், முதலாளித்துவத்தினரின் அடக்குமுறைகள் இருந்தபோதிலும், இது ஒருவேளை ஏன் தவிர்க்க முடியாமலும் வெளிப்படும்."

இத்தகைய உணர்வுகள் ஆளும் வட்டங்களில் கவலைகளை எழுப்பியுள்ளன. ஹொண்டா வேலைநிறுத்தத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் மேதின உரையில் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ, தொழிலாளர்களை சமாதானப்படுத்த முயன்றார். தொழிலாள வர்க்கத்தை, நாட்டின் "வழிநடத்தும் வகுப்பு" என்று அழைத்தார் --சீனாவில் பல ஆண்டுகளாக இச்சொற்றடர் பயன்படுத்தப்படுவதில்லை. இவருடைய உரை, அலையென அரசாங்க செய்தி ஊடக வர்ணனையாளர்களால் சீனாவை ஒரு உலக சக்தியாக்குவதில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு பற்றி உதட்டளவில் பாராட்ட வைத்தது. செய்தி ஊடகப் பிரச்சாரம், சலுகை பெற்றுள்ள கட்சி அதிகாரத்துவத்தினரை எள்ளி நகையாடும் விதத்தில் சித்தரித்தது. அவர்கள் சீனாவை முதலாளித்துவ உலகிற்கு ஒரு கடின உழைப்புத் தொழிற்சாலையாக மாற்றிவிட்டனர், "ஒரு தொழிலாள வர்க்க முன்னணியாக" என்று கூறியது.

"சீனத் தொழிலாளர்களின் அந்தஸ்து: கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையே இணைக்கப்பட முடியாத பிளவு" என்ற கட்டுரைப் பகுதி உத்தியோகபூர்வ சீனத் தேர்தல் மற்றும் நடத்தப்படுதல் வலைத் தளத்தில் ஜூன் 4ம் தேதி வந்தது, கட்சி இயந்திரம் தொழில்துறை மற்றும் அரசியல் கொந்தளிப்பை திசைதிருப்பும் சிந்தனை வழிவகையை இயற்றுவதில் எதிர்கொண்டுள்ள இடர்களை விளக்கியுள்ளது.

சிறு வயதில் இருந்தே, சீன மக்கள் இடைவிடாமல் சீனாவில் "தொழிலாள வர்க்கம்தான் அரசாங்க அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது" என்று கூறப்படுகின்றனர்; ஆயினும்கூட முதலாளித்துவச் சுரண்டல் பற்றிய உண்மையை அறிகின்றனர். தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது, இன்னும் பிற வகை திகைப்பான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்னும் உண்மை தொழிலாளர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் எஜமானர்களாக மாறுவது "ஒரு தொலைதூரக்கனவுதான்" என்பதை நிரூபித்துள்ளது.

கட்டுரை தொடர்கிறது: "ஆழ்ந்த உழைப்பு, தொடர்ந்து கூடுதல்நேர உழைப்பு, எளிமையான ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் வேலை, மிக அடிப்படை வீடுகள், தளராத இராணுவ மாதிரியிலான நிர்வாகம், அதிக வசதிகளற்ற ஓய்வு நேரம், மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறை--இதுதான் தொழிலாளர்களுடைய வாழ்வில் உள்ளதாகும். இத்தகைய வாழ்வு ஒரு தனிப்பட்ட கடின உழைப்புத் தொழிற்சாலையின் சிறப்பு நிலைமை மட்டும் அல்ல; ஒற்றை வெளிநாட்டு உரிமையாளரின் நிறுவனத்தின் தன்மை மட்டும் அல்ல. "சீனாவில் தயாரிக்கப்பட்டது" என்ற முத்திரையில் உலகம் முழுவதும் பொருட்கள் வெள்ளமெனச் செல்லுகையில், 'உலகத்தின் தொழில் பட்டறை" என்ற "பெயருக்கு" திருப்தி கொடுக்க இன்னும் எத்தனை கடினஉழைப்புத் தொழிற்சாலைகள் தேவை?' என்பதைச் சிந்தியுங்கள்."

இக்கட்டுரை எழுதிய Qing Wuyu (ஒரு புனைப் பெயராக இருக்கும் எனத் தோன்றுகிறது) ஹொண்டா வேலைநிறுத்தம் பற்றியும் விவாதித்துள்ளார். ஏனெனில் 1982 அரசியலமைப்பின்படி வேலைநிறுத்தம் செய்யும் உரிமை அகற்றப்பட்டுவிட்டது, அனைத்து வேலை நிறுத்தங்களும் ACFTU வின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்: இதன் பொருள் அது தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அவர்களுடன் "முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய கட்டத்தை அடைந்தவிட்டது".

ஆண்டின் பொருளாதார உற்பத்தி அளவை மதிப்பிடும் ஆய்வுகளை மேற்கோளிட்டு, அரசாங்க அதிகாரத்துவத்தினர் 40 சதவிகிதம், பெருநிறுவன மூலதனம் 40-50 சதவிகிதம் எடுத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்திற்கு 15-20 சதவிகிதம்தான் விட்டுவைக்கின்றனர் என்று கூறியுள்ளார். "இத்தகைய பகிர்வு இருக்கையில், தொழிலாள வர்க்கம் அரசாங்க அதிகாரத்தின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளது மற்றும் அது நாட்டின் வழிகாட்டும் சக்தி என்றால், எவர் நம்புவர்?' என்றும் கேட்டுள்ளார்.

ஆனால் கட்டுரையின் முடிவு சமூக அநீதிகள் சீன அரசாங்கம், மற்றும் தொழில்வழங்குனர்களின் "மனச் சாட்சியை" எழுப்பும், அவர்கள் வேலை நிறுத்தத்தை சட்டபூர்வமாக்கி தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் காக்க அனுமதிப்பர் என்ற நம்பிகையை தெரிவிக்கிறது. அப்பொழுதுதான் தொழிற்சங்கங்கள் நடுநிலை பங்கை வகிக்கமுடியும் என்று க்விங் வாதிட்டுள்ளார்.

உண்மையில், CPP பிரதிநிதித்துவப்படுத்தும் மோதலுக்கு உட்பட்டுள்ள வர்க்க நலன்கள் மற்றும் சீனத் தொழிலாளர்களுடையவை, விவசாயிகளுடையவை ஆகியோரின் நலன்களும் தீர்க்கப்பட முடியாதவை ஆகும். ஒரு முந்தைய இணைய தள மோதல் சீனச் செய்தி ஊடகம் சீனாவின் மிகச் செல்வம் படைத்த மில்லியனர்கள்--100 மில்லியன் யுவானுக்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்டவர்கள் ($US 14.6 மில்லியன்), மூத்த CCP அதிகாரிகளின் குழந்தைகள் ஆவர் என்று தெரிவித்தபின் வந்தது. சீனாவின் 450,000 டாலர் மில்லியனர்கள் மக்கட் தொகையில் 0.04 சதவிகிதம் மட்டும் இருப்பவர்கள் தேசிய சொத்தில் 70 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர்.

இத்தகைய சமூக சமத்துவமற்ற நிலையும் மற்றும் பரந்த குற்றத்தன்மையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் ஊழலினால் விரிவடைந்துள்ளவை. அவை அதிகளவில் அதிருப்திக்கும் சீற்றத்திற்கும் எரியூட்டி அவை இணையத்தள விவாதங்களில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. பெய்ஜிங்கின் தணிக்கை முயற்சிகள் இருந்தபோதிலும் பொலிஸ் அரசாங்கத்தை தூக்கி எறிவதற்கான ஒரு உண்மையான மார்க்சிச கட்சிக்கான விழைவுகள் இதில் வெளிப்பட்டுள்ளன.