World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Opposition deepens to austerity programme in Greece

கிரேக்கத்தில் கடும் சிக்கன திட்டத்திற்கு எதிர்ப்புக்கள் அதிகரிக்கின்றன

By Robert Stevens
11 March 2010

Use this version to print | Send feedback

கிரேக்க அரசாங்கம் சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு இன்றைய பொது வேலைநிறுத்தத்திற்கு முன் தீவிரமாகியுள்ளது.

கடந்த வாரம் கழிவுப்பொருளகற்றும் தொழிலாளர்கள், வரிவிதிப்பு அதிகாரிகள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகின்றன, பல அரசாங்க கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன அல்லது சீற்றமுடைய எதிர்ப்பாளர்களால் முற்றுகையிடப்படுகின்றன.

மார்ச் 5ம் தேதி சமூக ஜனநாயக PASOK யின் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ தலைமையிலான அராசங்கம் சமீபத்திய கடும் சிக்கன நடவடிக்கை சட்டத்தை இயற்றியதற்கு விடையிறுப்பாக வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் கொடுத்துள்ள ஒரு திட்டத்தின்கீழ், இச்சட்டம் கிரேக்க வரவு-செலவு பற்றாக்குறையை தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தில் இருந்து 2010 இலேயே 8.7 சதவிகிதத்திற்கு குறைக்கும் உறுதியைக் கொண்டுள்ளது.

புதிய சிக்கன திட்டத்தில் வரி அதிகரிப்புக்களும் செலவினக் குறைப்புக்களுமாக மொத்தம் 4.8 பில்லியன் யூரோக்கள் ($6.5 பில்லியனுக்கு) உள்ளன. இந்தக் குறைப்புக்கள் கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் ஆகும். இதன் விதிகளில் விற்பனைவரியை அதிகரித்தல் அதாவது 19 சதவிகிதத்தில் இருந்து 21 என்றும், கூடுதல் உற்பத்தி வரி பெட்ரோல், சிகரெட்டுக்கள் மற்றும் மதுபான வகைகள் மீதும் உள்ளன. பொதுத்துறை ஊதியங்களில் 10 சதவிகிதக் குறைப்பு, பொதுத்துறை ஊழியர்கள் பெற்று வந்த கூடுதலான 13, 14 மாத ஊதியங்களில் 30 சதவிகித குறைப்பு, பொதுத்துறை ஓய்வூதியங்களில் தேக்கம் ஆகியவை உள்ளன.

மூன்றாவது மாதத்தில் மூன்றாம் முறையாக வந்துள்ள இக்குறைப்புக்கள் முன்பு அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாகும். இவை ஏற்கனவே குறைந்த அளவு ஊதியங்களில் மக்களில் கால் பகுதியினர் வாழ்ந்துவரும் நாட்டில், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே பேரழிவு பாதிப்பைக் கொடுக்கும்.

பொதுத்துறையில் வேலையில் உள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஊதியங்களிலும் பணிநிலைமைகளிலும் இக்குறைப்புக்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அரை மில்லியன் தொழிலாளர்கள் ஆட்சிப் பணித்துறையில் உள்ளனர். இன்னும் 300,000 பேர் பொதுத்துறையில் மற்றய பிரிவுகளில் உள்ளனர்.

ஒரு அவசர சட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் இயற்றப்பட்டபோது, 7,000 பேர் ஏதென்ஸில் எதிர்ப்பு தெரிவித்தனர். கலகப் பரிவு பொலிஸ் பாராளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர். பொலிஸார் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தியதுடன் மிருகத்தனமாக எதிர்ப்பாளர்களை தாக்கினர். 12 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உட்பட்டவர்களில் 87 வயதான முன்னாள் கிரேக்க பாராளுமன்ற உறுப்பினர் மனோலிஸ் கிளெஜோஸும் இருந்தார். இப்பொழுது அவர் Coalition of the Radical Left (Syriza) வில் உறுப்பினர் ஆவார். நாஜி ஆக்கிரமிப்பின்போது கிரேக்க எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்த கிளெஜோஸ் அடிக்கப்பட்டு அவருடைய முகத்தில் கண்ணீர்ப்புகையும் தூவப்பட்டது. மூச்சுத் திணறல் பிரச்சினைகளுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொலிஸ் கலகப்பிரிவு கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரமான வடக்கில் உள்ள தெசலோனிகியிலும் எதிர்ப்பை அடக்கத் திரட்டப்பட்டனர்.

சமூக அழுத்தங்கள் பெருகுவதின் அடையாளமாக, GSEE என்னும் கிரேக்க தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பின் தலைவர் Yiannis Panagopoulos, தனியார்துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், ஏதென்ஸ் கூட்டத்தில் பேசத் தொடங்குகையில் எதிர்ப்பு ஆரவாரம், கூச்சல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பல எதிர்ப்பாளர்களால் தாக்குதலுக்கும் உள்ளானார். PASOK அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான தொழிற்சங்கமாக இருப்பதால் GSEE பரந்த அளவில் வெறுக்கப்படுகிறது. முன்பு அது பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்க மறுத்து விட்டது. GSEE ல் பெரும் அரசியல் பிரிவு PASK ஆகும். இது PASOK யின் தொழிற்சங்கப் பிரிவு ஆகும். கொள்கை அளவில் GSEE சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. பெப்ருவரி 24 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் பனகோபுலஸ் பற்றாக்குறை குறைப்புக் கொள்கைகள் "நியாயமான முறையில் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தலைநகரில் பல பிரிவுகளிலும் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மார்ச் 5ம் தேதி பள்ளிகளும் மருத்துவமனைகளும் மூடப்பட்டன. நாட்டின் பொதுத்துறை இணையத்தின் பெரும்பகுதி 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் நிறுத்தத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஏதென்ஸில் கழிவுப்பொருட்கள் அகற்றும் பிரிவுத் தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை இரு நாட்கள் அதிகப்படுத்தியுள்ளனர். இதையொட்டி இன்றைய பொது வேலைநிறுத்தத்திலும் அவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் தலைநகரத்தில் எங்கு பார்த்தாலும் நிறைய குப்பைகள் உள்ளன. பல பகுதிகளிலும் சாலைகள் சீராக இல்லை. இதே நிலைமைகள்தான் மற்றய நகரங்களிலும் உள்ளன.

திங்களன்று வரிவசூலிப்பவர்கள் இருநாள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் நடத்துகின்றனர். உள்ளுர் அரசாங்க அதிகாரிகள் புதனன்று நான்கு மணிநேர வேலைநிறுத்தம் செய்தனர்.

மார்ச் 1 முதல், வேலையின்மையில் உள்ள தொழிலாளர்கள் உட்பட, ஏதென்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழில்துறை அமைச்சரகம் மற்றும் பொதுக் கணக்கு அலுவலகத்திற்கு செல்லும் பாதைகளை தடுக்க முற்பட்டுள்ளனர். மார்ச் 1ம் தேதி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஆணையர் ஒல்லி ரெஹ்னுக்கும் தொழிலாளர் துறை மந்திரி ஆண்ட்ரீஸ் லவர்டோஸுக்கும் இடையே நடக்கும் பேச்சை தடைக்கு உட்படத்த முயன்றனர். கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் உடனடியாகக் கூடுதல் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை விவாதிக்கப்பட இருந்தது.

மற்றொரு ஆர்ப்பாட்டம் அரசாங்க அச்சகத்தில் நடைபெற்றது. கடந்த வெள்ளியன்று பல டஜன் உள்துறை அமைச்சரகத் தொழிலாளர்கள் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடங்கினர். கட்டிடப் பொறுப்பை எடுத்துக் கொண்ட பின்னர் தொழிலாளர்கள் கட்டிடத்தின் முன்பு "ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது", "பொறுத்தது போதும்" என்ற பதாகைகளை வைத்திருந்தனர்.

இந்த நடவடிக்கைகள் PASOK ஆனது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதிய நிறுவனங்களின் ஆணைகளுக்கு ஏற்ப நடத்தும் பொறுத்துக் கொள்ள முடியாத தாக்குதல்களுக்கு கிரேக்க மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த விரோதத்தைக் குறிப்பவை ஆகும்.

பல கருத்துக் கணிப்புக்கள் சிக்கன நடவடிக்கையை எதிர்க்கும் எண்ணிக்கை தீவிரமாக, கணிசமாக உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. Proto Thema செய்தித்தாள் நடத்திய கருத்துக் கணிப்பு கிரேக்க மக்களில் 86.2 சதவிகிதத்தினர் சிக்கன நடவடிக்கைகள் "நியாயமற்றவை" என்று கருதுவதைக் காட்டியுள்ளது. Skai Telegision உடைய பொதுப்பிரச்சினை கருத்துக் கணிப்பு 62 சதவிகித விடையிறுத்தவர்கள் சமூக அமைதியின்மை "அடுத்த 12 மாதங்களில் அதிகமாக இருக்கும்" என்று நம்புவதாகக் கூறுகிறது.

முன்னைய கருத்துக் கணிப்புக்கள், ஏராளமான செய்தி ஊடகக் கருத்தான வெட்டுக்கள் தேவை, தவிர்க்க முடியாதவை என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தை புதுப்பிக்க கடும் சிக்கன நடவடிகைகளுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதைக் காட்டியிருந்தன.

ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ள Yanis Varoufakis கூறினார்: "இப்பொழுது மக்கள் அறிவிப்புக்களுக்கு விடை கொடுக்கின்றனர். இவை நடவடிக்கைகளாக மாறுகையில், தங்கள் பைகளில் உணரத் தொடங்குவர்.... அப்பொழுது இன்னும் தீவிர ஆர்ப்பாட்டங்கள் இருக்கும். இப்பொழுது இருப்பது போல் நாகரிகமாக இருக்க மாட்டார்கள்."

இன்றைய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புக் கொடுத்த தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் இரண்டும், PASOK க்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் ஆபத்தை நன்கு அறியும். அதில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுபடும். இன்றைய வேலைநிறுத்தத்திற்கு முன், ADEDY பொதுத்துறை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Ilias Iliopoulos அப்பட்டமாக கூறினார்: "ஒரு பெரிய சமூக வெடிப்பு வரும் என்று நான் அஞ்சுகிறேன். மக்கள் விரைவில் பட்டினி கிடப்பர்."

தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்துள்ள காரணம் தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் அரசாங்கத்துடன் உடன்பாடு காண அவகாசம் பெறுவதற்கும்தான். அதையொட்டி பின்னர் தாக்குதல்கள் தொடரப்படும். இதனால் சங்கங்கள் PASOK வை சர்வதேச நிதிய மற்றும் ஐரோப்பிய அதிகாரத்துவத்தால் பாதிக்கப்பட்டது என்று காட்டுகிறது. கிரேக்க முதலாளித்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கூறவில்லை. இவை மக்கள் எதிர்ப்பை ஒரு தேசியவாத திசையில் திருப்ப முயற்சிக்கின்றன.

சமீபத்திய பொது வேலைநிறுத்தத்திற்கு முன் பேசிய வரிவசூல் செய்பவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவரான Yannis Grivas தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அணுகுமுறையை சுருக்கிக் கூறும் வகையில், "இது ஒரு அடையாள எதிர்ப்பு. கடும் சிக்கன நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் அறிவோம்." என்றார்