World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The post-modernist wonderland: Intellectual Impostures by Alan Sokal and Jean Bricmont

பின்நவீனத்துவம் எனும் மாயவுலகம்: ஆலன் சோகல் மற்றும் ஜோன் பிரிக்மொண்ட்டின் புத்திஜீவித வஞ்சகங்கள்

By Stefan Steinberg
1st July 2000

Use this version to print | Send feedback

புத்திஜீவித வஞ்சகங்கள், Profile Books ISBN 1 86197 1249

புத்திஜீவித வஞ்சகங்கள் தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் உட்பட பல்வேறு மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆங்கிலத்தில் மலிவுவிலை பதிப்பாகவும் கிடைக்கிறது. நவீன தத்துவ போக்குகள் குறித்து ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இதை படிக்க வேண்டும். குறிப்பாக, "பின்நவீனத்துவம்" என்ற கலப்பு வார்த்தையின்கீழ் அழைக்கப்படும் சற்றே குழம்பிய சிந்தனைப் பாடசாலையினது போக்கு பற்றி ஆர்வம் உடையவர்கள் அனைவரும் இதைப் படித்தாக வேண்டும்.

ஆசிரியர்கள் ஆலன் சோகல் மற்றும் ஜோன் பிரிக்மொண்ட் ஆகியோர் தங்களின் ஈட்டியையும், கேடயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, மிக பிரபலமான பல பிரெஞ்சு பின்நவீனத்துவவாதிகளின் படைப்புகளில் காணக்கிடக்கும் பல்வேறு அறிவீனங்களுக்கு எதிரான போருக்கு புறப்படுகிறார்கள். இந்த கட்டுரையின் ஆசிரியர் சோகல் மற்றும் பிரிக்மொண்ட் ஆகிய இருவரின் இறுதி முடிவுகள் அல்லது விமர்சனங்கள் பலவற்றுடன் உடன்படாதபோதும், பின்நவீனத்துவத்தின் தவறான கருத்தாக்கத்தின் பிரமாண்ட பொதியைக் குறைப்பதற்கான அவர்களின் முயற்சிக்காக இருவருமே பாராட்டப் படுகிறார்கள். அல்லது, அவர்களே குறிப்பிடுவது போல, ''இப்படியான ஒரு விமர்சன மனப்பான்மை குறிப்பிட்ட தனிப்பட்ட நபர்களை நோக்கி மட்டுமல்ல மாறாக இந்த வகையான சொல்லாடல்களை (Discourse) பொறுத்துக்கொண்ட மற்றும் ஊக்குவிக்கவும் செய்த முழு (இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும்) புத்திஜீவித சமூகத்தையும் நோக்கி தூண்டி விட வைக்கப்பட்டுள்ளது.'' (பக்கம். 6).

புத்திஜீவித வஞ்சகங்கள் என்ற இந்த புத்தகத்தின் முன்வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும். 1996-ல் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு பெளதீக பேராசிரியராக இருந்த சோகல், Social Text என்றழைக்கப்பட்ட ஓர் இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இந்த இதழ் சமூகவியலுக்கும், தொடர்புபட்ட வகையில் புதிதாக அபிவிருத்தி அடைந்திருந்த "கலாச்சார ஆய்வுகள்" துறைக்குமான ஒரு செல்வாக்கு பெற்ற இடது-சாரி பத்திரிகை என்ற பாராட்டைப் பெற்றிருந்தது. சோகல் அவருடைய கட்டுரைக்கு, Transgressing the Boundaries: Toward a Transformative Hermeneutics of Quantum Gravity ("எல்லைகளை மீறல் : கற்றை ஈர்ப்பினது மாறக்கூடிய ஒரு விளக்கவுரையியல் நோக்கி '') என்று பெயரிட்டிருந்தார்.

சில பக்கங்களிலேயே கற்பனை மற்றும் வெளி அனுமதித்ததாக கூறி அவர் பெருமளவிற்கு பொருத்தமற்ற கருத்துக்களையும் மற்றும் போலி-விஞ்ஞானத்தையும் உள்ளே கொண்டு வந்திருந்தார். வாசகரின் திருப்திக்காக ஒரு சிறிய எடுத்துக்காட்டு: "Euclid-ன் pi மதிப்பும், நியூட்டனின் G மதிப்பும், முன்னர் நிலையானதாகவும், எல்லாவற்றிற்கும் பொருந்துவதாகவும் கருதப்பட்டது, இப்போது அவை அவற்றின் தப்பிக்க முடியாத வரலாற்று ஆவணமாக உணரப்படுகிறது. ஓர் உத்தேசமான பார்வையாளர் தவிர்க்கமுடியாமல் குழப்பத்திற்கு உள்ளாவார் என்பதுடன் ஒரு வெளி-காலம் புள்ளியின் எவ்வித அறிவாதாரயியலில் இருந்தும் தொடர்பில்லாமல் போய்விடுவார்." புகழ்பெற்ற இடதுசாரி தீவிரவாதியும், சஞ்சிகையின் ஆசிரியரும், அதன் இணை நிறுவுனரும், நியூயோர்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்ரான்லி ஆரொனோவிட்ஸ் (Stanley Aaronowitz) உள்பட அந்த சஞ்சிகையின் ஆசிரியர்கள் இந்தக் கட்டுரையை ஒரு சிரத்தைமிகுந்த பங்களிப்பாக எண்ணி வரவேற்றதுடன், அதைப் பிரசுரித்தனர்.

அவர்களது கட்டுரை அந்த சஞ்சிகையில் வெளிவந்தவுடன், கட்டுரை ஒரு கேலிகூத்தாக இருப்பதாக சோகல் ஏற்றுக்கொண்டதன் பின்னர் மட்டுமே சஞ்சிகையின் ஆசிரியர்களின் பக்கத்தில் பின்னடிப்பு தொடங்கிவிட்டிருந்தது. சோகல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுடன், மேலும் புத்திஜீவித வஞ்சகங்கள் புத்தகத்தில் இந்த காயத்தை அவர் இன்னும் அதிகமாக்கவும், ஆழமாக்கவும் முயற்சிக்கிறார்.

இந்த புத்தகம், மற்றவர்களோடு சேர்த்து Jacques Lacan, Jean-Pierre Lyotard, Julia Kristeva, Jean Baudillard, Gilles Deleuze மற்றும் Felix Guattari போன்ற பிரெஞ்சு பின்நவீனத்துவத்தின் மிக முக்கிய பிரபலங்களை அலசுகிறது. தாம் அபிவிருத்தி செய்ததை தீரம் நிறைந்த வழியில் விளக்கிக்காட்டவும், தமது வாதங்களை வெளிப்படுத்திக்காட்டவும் அந்த நபர்களின் படைப்புகளில் இருந்து ஒரு தொடர் உதாரணங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

லூசே இரிகறே மற்றும் ஜூலியா கிறிஸ்தேவா

லூசே இரிகறே மெய்யியல் மற்றும் விஞ்ஞான பின்நவீனத்துவ போலிப் பகட்டுடன் கூடிய ஒரு முன்னணி பிரெஞ்சு பெண்ணிலைவாதியாவார் விஞ்ஞான பின்நவீனத்துவவாத தகுதிகளுடன் கூடிய ஒரு பிரபல பிரெஞ்சு பெண் எழுத்தாளர். அவர் படைப்புகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கல்வியாளர்கள் மத்தியில் நன்கு மதிக்கப்படுகிறது. அவருடைய ஒரு கட்டுரையான, "விஞ்ஞானத்தின் ஆய்வுப்பொருள் பாலியல்தன்மை உடையதாகவா இருக்கிறது?" "Le sujet de la science est-il sexue?" (1987) என்பதில், அவர் தம்முடைய கவனத்தை ஒரு பிரச்சினையின் பக்கம் திருப்புகிறார். அது ஐன்ஸ்டீனின் முக்கியமான சார்பு தத்துவத்தைக் கையாள்வதை வெளிப்படையாகவே தவிர்த்திருந்தது. அவர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்: ""e=mc2 ஒரு பாலியல் சமன்பாடா?'' அவர் மேலும் தொடர்கிறார்: "உண்மையில் அது அப்படிதான். நாம் ஓர் அனுமானத்தை உருவாக்குவோம், இது இதுவரை நமக்கு முக்கியமாக தேவைப்படும் ஏனைய வேகங்களை விட்டுவிட்டு ஒளியின் வேகத்திற்கு தனிச்சிறப்பை அளிக்கிறது. இந்த சமன்பாட்டின் பாலியல் இயல்பைக் குறித்து எனக்கு என்ன குறிப்பிடத் தோன்றுகிறது என்றால் இது நேரடியாக அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படவில்லை, மாறாக எது வேகமாக போகிறதோ அதற்கு தனிச்சிறப்பை அளிக்கிறது..." (பக்கம் 100)

அதற்கு தொடர்புடைய இன்னொரு ஆய்வில் இரிகறே உணர்ச்சிவசப்பட்டு அவரது வெறுப்பை உமிழ்கிறார்: "ஆனால் அணுசக்தி உலைகளை உருவாக்கியதோடு அல்லாமல், வாழ்வின் அடிப்படை தேவையான நம்முடைய உடல் செயலின்மையின் மீது கேள்வி எழுப்பியதைத் தவிர மாபெரும் சார்பியல் கோட்பாடு நமக்காக என்ன செய்திருக்கிறது?" (பக்கம். 98)

உண்மையில், பின்நவீனத்துவவாதிகள் பலரிடம் காணப்படுவது போல இங்கிருக்கும் வாதம் மிகவும் சித்திரவதைப்படுத்துவதாக இல்லை. ஐன்ஸ்டீன் (கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒரு மனிதன்!) அபிவிருத்தி செய்த அவரது சார்பியல் சமன்பாடு நவீன விஞ்ஞானத்தின் ஒரு மைல்கல்லாகும். ஐன்ஸ்டீன் சமன்பாட்டின் நியாயமான முடிவு என்னவென்றால், ஒளியின் வேகத்தை விட வேகமாக எந்த திடப்பொருளாலும் பயணிக்க முடியாது என்பதாகும், அதாவது ஒளியின் வேகமே புரிந்துகொண்ட அளவில் உச்சபட்ச வேகமுடையது என்பதாகும். இரிகறேயின் கற்பனையின்படி, வேகம் என்பது வலிமையான ஆணின் பண்பை உடையதாக இருக்கிறதாம். ஐன்ஸ்டீன் சமன்பாட்டினை வேகத்துடன் 'இணைத்தலானது' பாலியல் வகைப்பட்ட காரணமாக இருக்கிறது. ஆகையால் அவரது அனைத்து சமன்பாடுகளும் சந்தேகத்திற்குரியவை. (மற்றும், எமது உடல்ரீதியான செயலின்மைக்கான ஒரு அச்சுறுத்தல்-- நீடூழி வாழ்க செயலின்மை -inertia!)

ஒளியின் வேகத்தை அடைய முயலும்போது ஆணின் உடலைப்போன்றே பெண்ணின் உடல்களும் சரியாக ஒரே வகையான பெளதீக பிரச்சனைகளுக்கே முகம்கொடுகின்றன என்ற உண்மை இரிகறேயின் வாதத்திற்கு சார்பாக இருப்பதை புறம்தள்ளிவிடுகிறது. இவரது வாதம் சிரத்தைமிகுந்த காரணத்தை எடுத்துக்காட்டுவதை விட்டு மாயவுலகத்தின் மந்திரவாதியுடன் வெகுவாக பொருந்தி நிற்கிறது. இரிகறேயின் எழுத்துக்களை பற்றி சோகல் மற்றும் பிரிக்மொன்ட் ஆலும் செய்யப்படும் தீர்மானமானது தலைச்சிறந்த தெளிவாக இருக்கிறது: "துரதிருஷ்டவசமாக, இரிகறேயின் கூற்றுக்கள் அவர் ஆய்வு செய்யும் துறையில் அவரது மேலெழுந்தவாரியான ஒரு விளக்கத்தை வெளிக்காட்டுவதுடன், அதன்விளைவாக விவாதத்திற்கு எதையுமே கொண்டுவரவில்லை.''

இரிகரே உண்மையிலே அவருக்கு சிறிதாக மட்டுமே தெரிந்த துறைக்குள் வழிதவறி வந்துவிட்டிருந்ததுடன், தளதளத்து போய்விடுகிறார். ஆழமாக மூச்சு விட்டுக்கொண்டு நாம் மேலும் செல்வோம்.

பின்நவீனத்துவ பள்ளியின் இன்னொரு முக்கிய நபர் தான் ஜூலியா கிறிஸ்தேவா (Julia Kristeva). இவர் இலக்கிய செயல்களுக்கும், கணிதத்திற்கும் இடையிலான ஒரு தொடர்பை உருவாக்க முயன்றார். குறிப்பாக இவர், குறியீட்டுக் கணிதத்தின் (Algebra) ஒரு சிறப்புப் பகுதியான இணை கோட்பாட்டுடன் கவிதையை ஏற்றமைவிக்க (ஒத்திசைவிக்க) முனைந்தார். "Semeiotike: Researches for a Semioanalysis" (1969) என்ற அவருடைய படைப்பிலிருந்து ஒரு பத்தி குப்பிடத்தக்கதாகும்:

"கவிதை மொழி (Poetic language) (இனிமுதல் இதை அவற்றின் முதலெழுத்துக்களான pl என்பதிலேயே குறிப்பிடுவோம்) நேரான தர்க்க நெறிமுறையைக் கொண்டிருக்கிறது. மேலும், அல்ஜீப்ரா செயற்கை குறியீடுகளான ஓர் அமைப்பில் நெறிப்படுத்தி இருப்பது போலவே ஒன்றுக்கொன்று பொருத்தமான அனைத்து புள்ளிவிபரங்களையும் அதில் நம்மால் பார்க்க முடியும், மேலும் அவை பயன்பாட்டு மொழியின் அளவிற்கு வெளிப்படுத்திக்காட்டப்படவில்லை." (பக்கம் 41)

கிறிஸ்த்தேவாவின் கட்டுரை முழுவதும் அவரது கணிதக் கருத்துப்பாட்டின் பல பொய்மைப்படுத்தல்களும் திரித்தல்களும் தான் இருக்கின்றன என்பதை சோகலும், பிரிக்மொன்டும் வரைந்து காட்டுகிறார்கள். அதேநேரம், கணிதத்தின் ஒரு கிளைக்கும் மற்றும் கவிதைக்கும் இடையிலான ஒரு உறவினை உறுதிப்படுத்த அவரது முக்கிய ஆய்வறிக்கையில் ஒருதடவை கூட ஒரு கவனமான வாதத்தை முன்வைக்க ஒரு போதும் முயலவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மீண்டும் ஒருமுறை ஒருவர் நிதானத்தோடு ஒரு முடிவுக்கு வரலாம், மிகைமதிப்பீடு செய்யப்பட்டு தவறான முறையில் சிறப்புமிக்கவராக புகழப்பட்ட இன்னொரு கோட்பாட்டாளர் தான் இவர். இது எப்படியிருந்தபோதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பிரதி எடுத்தலின் பட்டியல் தொடர்கிறது.

அவர்களது அரசியலின் பாகமாக தம்மைத்தாமே இடதுசாரிகளாக வர்ணித்துக்கொண்ட மிக புகழ்பெற்ற பல பிரெஞ்சு சமகாலத்து சிந்தனையாளர்களுக்கு அத்தியாயத்திற்கு பின் அத்தியாயமாக சோகலும் பிரிக்மொன்டும் அர்ப்பணித்துள்ளார்கள். சமூகவியல், இலக்கிய விமர்சனம், மொழியியல், கலாச்சார ஆய்வுகள் மற்றும் பல ஏனைய கல்விநெறிகளின் துறைகளில் குழப்பமான கோட்பாடுகளை ஆதரிக்கும் பொருட்டு நிரூபிக்கப்பட்ட, மதிப்புமிக்க இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துப்பாடுகளை இந்த அனைத்து புத்திஜீவிகளும் போலியான முறையில் உபயோகப்படுத்துகிறார்கள்.

பின்நவீனத்துவம் என்றால் என்ன?

ஊசி நுணியில் எத்தனை தேவதைகள் நடனம் ஆடமுடியும் என்ற மதகுருக்களுக்குரிய குறைந்தபட்சம் ஒரு அர்த்தமற்ற விவாதத்தைத்தான் பின்நவீனத்தும் செய்து வந்திருக்கிறது என்ற நிலைப்பாட்டை நிரூபித்துக்காட்ட சோகலும் பிரிக்மொன்டும் போதுமான சாட்சியங்களை ஒன்றுதிரட்டியுள்ளார்கள். ஆனால், அதற்குள் இருப்பது அவ்வளவுதானா? பின்நவீனத்துவம் முட்டாள்த்தனமான ஒன்றாக மட்டுமா இருக்கிறது? பின்நவீனத்துவம் என்றால் என்ன? அந்த இயக்கத்தின் மூலங்கள் என்னவாக இருக்கின்றன?

இந்த விஷயத்தில் சோகலும், பிரிக்மொன்டும் பல்வேறு சுவாரசியமான கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள் முதலாவதாக, விஞ்ஞானம் மற்றும் ஒவ்வொரு சிந்தனைத்துறையிலும் சார்புநிலைவாதத்தை அறிமுகப்படுத்தும் மற்றும் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு புறநிலை உண்மையினை மறுக்கும் பின்நவீனத்துவத்தின் பொதுவான போக்கினை ஒரு சிந்தனைப்பள்ளியாகத்தான் சரியாக இனங்காண்கிறார்கள்.

மேலும், பின்நவீனத்துவ கோட்பாடுகளின் மீது பரந்துபட்ட ''இடது கல்வியாளர்கள்'' தட்டுகளுக்கு தனிப்பட்ட நாட்டம் இருப்பதாக ஆசிரியர்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். புத்திஜீவித வஞ்சகங்களின் இதற்கு முந்திய பதிப்பில் ஒரு சில ''இடது'' விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், சோகல் தான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினார் என்பதை விளக்கப்படுத்துகிறார்: "நான் ஏன் இதைச்செய்தேன்? கட்டுடைத்தல் (Deconstruction) எப்படி தொழிலாள வர்க்கத்திற்கு உதவி செய்திருக்க கூடும் என்பதை ஒருபோதும் விளங்கியிராத வெட்கமற்ற பழைய இடதுசாரி நான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், இங்கு ஒரு புற உலகம் இருப்பதையும், அந்த உலகம் பற்றிய புறநிலை உண்மைகளும் அங்கிருப்பதையும் மற்றும் எனது பணியானது அவைகளில் சிலவற்றை கண்டுபிடிப்பதுதான் என எளிமையான வகையில் நம்பிய ஒரு மந்தமான பழைய விஞ்ஞானியாக நான் இருக்கிறேன்.'' (ப. 249).

பின்நவீனத்துவத்திற்கு பின்னால் உந்துசக்தியாய் இருந்தவர்கள் பிரெஞ்சு புத்திஜீவிகள் தான், ஆனால் அந்த இயக்கம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய புத்திஜீவி சமூகத்தாலே பரந்தமட்டத்தில் பரப்பப்பட்டது என்பதை சோகலும் பிரிக்மொன்டும் இனம்காண்கிறார்கள்: ''Lacan, Kriesteva, Baudrillard மற்றும் Deleuze இடம் விஞ்ஞான விதிமுறை அழுத்தப்பாடு மீதான வெறுப்பு மனநிலையை ஒருவர் காணலாம், இவர்கள் 1970 களில் பிரான்சில் கேள்விக்கு அப்பாற்பட்ட வெற்றியை பெற்றதுடன், இன்றுவரை இவர்களுக்கு குறிப்பிடும்படியான செல்வாக்கு அங்கு இருந்துவருகிறது. இந்த சிந்தனை வழிமுறை பிரான்சுக்கு வெளியிலும் பரவியது, குறிப்பாக 1980 மற்றும் 1990 களில் தான் ஆங்கிலம் பேசும் உலகத்திற்கு பரவியது.'' (ப.194)

பின்நவீனத்துவத்தை பொறுத்தவரை ''அடிக்கடி மிகைப்படுத்தப்பட்ட சமூகவியல் தொடர்பு'' இருக்கிறது என ஓரிடத்தில் சோகலும் பிரிக்மொன்டும் ஏற்றுக்கொள்வதுடன், அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: ''தனிப்பட்ட முறையில், இங்கே ஆய்வுசெய்யப்பட்ட கருத்துக்களில் அரசியலுடனான தர்க்கரீதியான அல்லது கருத்துரீதியான தொடர்பு இருக்குமெனில் அது சிறிதளவானதே.'' அவர்களது சொந்த புனைவுகோளின் விளைவாக, பின்நவீனத்துவத்தின் மூலங்கள் பற்றிக் கூறுவதற்கு ஆசிரியர்கள் சற்று குறைவான அக்கறையே கொண்டிருக்கிறார்கள்.

ஒப்பீட்டளவில், பின்நவீனத்துவ இயக்கத்தின் முன்னணி நபர்கள் தமது சொந்த சிந்தனையின் சமூக, அரசியல், வரலாற்று வேர்களை வரைந்துகாட்டுவதில் மெளனம் சாதிப்பவர்களாக இல்லை. ஜோன் பிரான்சுவா லியோத்தார் -Jean-Francois Lyotard- பின்நவீனத்துவ இயக்கத்தின் தாத்தா அல்லது ''பாப்பரசர்'' என பலரால் அழைக்கப்படுகிறார். அவருடைய பின்நவீன நிபந்தனை (The Post-modern Condition) என்ற அவரது புத்தகத்தில் அவர் நவீனத்திற்கும் பின்நவீனத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறார்.

''ஆன்மாவின் இயங்கியல், (Hermeneutic) மறைபொருள்களின் அர்த்தம், அறிவின் அல்லது உழைக்கும் குடிமக்களின் சுயவிடுதலை, அல்லது செல்வங்களின் உருவாக்கம் இதைப்போன்ற சில பெரும் கதையாடலுக்கான (Grand Narrative) தெளிவான அழைப்பைச் செய்யும் (Metadiscourse) பெரும் சொல்லாடலை பற்றிக் குறிப்பதுடன் தானே முறைமைவாய்ந்ததாய் ஆக்கிக்கொள்ளும் எந்த அறிவியலையும் குறித்துக்காட்டுவதற்கு நான் நவீனம் என்ற பதத்தை பயன்படுத்துவேன்.''

"முடிவாக எளிமைப்படுத்தி கூறவேண்டுமானால், பெரும்கதையாடல் மீதான நம்பிக்கையின்மையை நான் பின்-நவீனம் என்று வரையறுப்பேன். சந்தேகத்திற்கிடமின்றி இந்த நம்பிக்கையின்மை என்பது விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு விளைவாகவே இருக்கிறது; ஆனால் அந்த வளர்ச்சி அதன்வகையில் அதை முன் ஊகம் செய்துகொள்கிறது. உத்தியோகபூர்வ பெரும்கதையாடல் அமைப்பின் காலாவதிக்கு அதன்பாகமாக அதனைச்சார்ந்திருக்கும் பல்கலைக்கழக செயல்பாட்டின் மற்றும் மாறாநிலைவாத (Metaphysical) தத்துவத்தினதும் நெருக்கடியே மிக குறிப்பிடும்படியான பொருத்தமாக இருக்கிறது. கதையாடல் வழிமுறை அதனது செயல்பாட்டினை, அதனது மாபெரும் கதாநாயகனை, அதனது மாபெரும் பயணத்தை, அதனது மாபெரும் நோக்கத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறது.'' (பின்நவீன நிபந்தனை, Jean-Francois Lyotard)

உலகம் மற்றும் சமூகம் பற்றிய ஒரு பொதுவான புரிதலை எட்டுவதற்கான சாத்தியக்கூறில் இருந்து, அதாவது உலகை நனவான முறையில் மாற்றுவதற்கான அடித்தளத்தை அளிக்கும் ஒரு விஞ்ஞானபூர்வமான புரிதலில் இருந்து தொடங்கும், அனைத்து மெய்யியல் மற்றும் சமூக கருத்துக்களையும் லியோத்தார் பெரும்கதையாடலாக கணிப்பதுடன் அவர் இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் உறுதியாக நிராகரிக்கிறார்.

இந்த விடயத்தில் பின்நவீனத்துவ வாதிகளில் இவர் (லியோத்தார்) மட்டும் ஜேர்மன் மெய்யியலாளரான ஹெகலினை (''மெய்பொருளின் இயங்கியல்'') மாபெரும் குற்றவாளியாக பார்க்கவில்லை. ஹேகலின் மீதான பின்நவீனத்துவவாதிகளின் வெறுப்பானது (இந்த கேள்வியை மேலதிகமாக பின்னர் பார்ப்போம்) குறிப்பாக இயங்கியல் முறையை ஒரு அடிப்படையாகக் கொண்டு உலகப் பார்வையை அணைத்துக்கொண்ட அனைத்து ஜேர்மன் தத்துவ ஞானிகளின் மீதும் திருப்பப்படுகிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆல் சடவாத ரீதியாய் மறுவேலை செய்யப்பட்ட ஹேகலின் இயங்கியல் சோசலிச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வடிவில் ஒரு சமூக சக்தியாய் வந்ததானது, பின்நவீனத்துவவாதிகளின் கண்களினால் அதற்கு சமமான குற்றமாய் சந்தேகிக்கப்படுகிறது.

பின்நவீனத்துவமும், ஸ்ராலினிசமும்

ஸ்ராலினிசத்தையும் அதனது குற்றங்களையும் உண்மையான சோசலிசத்துடன் சமன்படுத்திக்கொண்டு லியோத்தார் மற்றும் ஏனைய பின்நவீனத்துவவாதிகளும் இருபதாம் நூற்றாண்டு மார்க்சிச ''பெரும்கதையாடலின்'' (''பகுத்தறிவு அல்லது உழைக்கும் குடிமக்களின் சுயவிடுதலை'' இன்) இறுதித்தோல்வியை குறித்துக்காட்டுகிறது என்ற கருத்தினை தமது அடிப்படையாக கொண்டுள்ளார்கள். மேலும், முதலாளித்துவத்தை ஒரு பகுத்தறிவின் அடிப்படையில் (''செல்வத்தின் உருவாக்கம்'' இனை) அபிவிருத்தி செய்யலாம் என்ற சாத்தியத்தை வைத்திருக்கும் எந்தவொரு ஒட்டுமொத்த கோட்பாட்டின் மீதும் தமது அதிருப்தியை அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

பின்நவீனத்துவ அபிவிருத்திக்குள் இருக்கும் அரசியல் பாத்திரத்தை சோகலும், பிரிக்மாண்ட்டும் புறக்கணித்தாலும் கூட, லியோத்தாரின் சுயசரிதையை சுருக்கமாக பார்த்தால் கூட அவரது கோட்பாட்டின் பரிணாமம் பிரான்சில் யுத்தத்திற்கு பிந்தைய இடது-சாரி அரசியலுடன் ஏற்பட்ட அவரது சொந்த அனுபவங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

1924-ல் வேர்சையில் பிறந்த லியோத்தார், பாரீசின் சோர்போர்னில் மெய்யியலும், இலக்கியமும் படித்தார். ஒரு இளைஞனாக தொழிற் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டதுடன், குறிப்பாக அல்ஜிரியாவில் ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்தபோது பிரெஞ்சு காலனித்துவத்தின் நேரடிக்காட்சிகளால் அவர் தீவிரமயப்படுத்தப்பட்டார். அல்ஜீரிய தேசியப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆதரவளித்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிராகரித்த அவர், Cornelius Castoriadis-ன் தலைமையிலான Socialism and Barbarism என்றழைக்கப்பட்ட ஒரு குழுவில் சேர்ந்தார். தங்களைத் தாங்களே ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று குறிப்பிட்டுக் கொண்ட அந்த குழு, சோவியத் ஒன்றியத்தை பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நிராகரித்ததுடன், அது ஒரு அரசு முதலாளித்துவ பொருளாதாரமாகத்தான் இருந்துவருகிறது என அவர்கள் கூறிவந்தார்கள்.

ஐம்பதுகளில் Castoriadis-ன் விரைவான வலது பரிணாமத்தை தொடர்ந்து, Socialism and Barbarism குழுவில் இருந்து வெளியேறிய லியோத்தார், 1964-ல் Workers Power என்ற பத்திரிகையுடன் அவருடைய சொந்த இயக்கத்தை ஸ்தாபித்தார். இரண்டு வருடங்களுக்கு பின்னர், 1966-ல், அவர் முற்றிலுமாக புரட்சிகர அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். இந்த நடவடிக்கையை ஒரு நேர்காணலின் போது 1988-ல் நேர்மையைக் கைவிட்ட நிலையில் நினைவுகூர்ந்து விவரிக்கிறார்: "என் வாழ்வில், ஒரு பகுதி முடிந்தது. நான் புரட்சிகர சேவையை விட்டு வெளியேறினேன். நான் வேறெதையோ செய்ய வேண்டியவனாய் இருந்தேன், இவ்வாறு செய்ததன் மூலம் என்னை நானே காப்பாற்றி கொண்டேன்" என்றார்.

பல பின்-நவீனத்துவவாதிகளும் இதுபோன்ற ஓர் அரசியல் பரிணாமத்தைத் தான் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரெஞ்சு மெய்யியலாளரான Jean Paul Sartre-ன் பத்திரிகையான Les Temps Modernes-ல் தன்னுடைய முதல் கட்டுரையை Julia Kristeva பிரசுரித்தார். பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் மீது அனுதாபம் கொண்ட இந்த Jean Paul Sartre, அவருடைய தொழில் வாழ்வின் இறுதிக் காலத்தில் ஒரு குறிப்பிட்டளவிற்கு மாவோயிசத்தின் மீது அக்கறை காட்டினார். Sartre-னாலும் அல்லது அவருக்கு அடுத்து Ecole Normale Superior-ல் இருந்து வந்த மிக முக்கிய பிரபலமான Louis Althusser-இனாலும் (இவர் பல ஆண்டுகளாக சித்தாந்த பிரச்சினைக்கான பொறுப்பை ஏற்று பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர்) ஏனைய பல பின்நவீனத்துவவாதிகள் கவரப்பட்டார்கள்.

பின்நவீனத்துவ இயக்கத்தின் பல முன்னணி நபர்கள் ஒன்றில் ஸ்ராலினிச கட்சியின் அல்லது இடது தீவிரக் குழுக்களின் அங்கத்தவர்களாக இருந்தார்கள் அல்லது குறைந்தபட்சம் அதன் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்பது அவர்களது மூலங்கள் பற்றிய மேலோட்டமான ஆய்வுகூட அம்பலப்படுத்தும். இந்த புத்தக விமர்சனம் என்ற வரையறைக்குள் யுத்தத்திற்கு பின்னரான பிரான்சின் பரந்த புத்திஜீவித தட்டின் சமூகவியல் அபிவிருத்தி பற்றி நீண்ட கவனம் செலுத்துவது சாத்தியமற்றது. ஆனால் எப்படியிருந்தபோதும் யுத்தத்திற்கு பின்னரான பிரான்சில் முன்னணி இடதுசாரி அமைப்பு என்ற வகையில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிரமாண்டமான பாத்திரத்தினை வகித்தது என்பதை மிக மேலெழுந்தவாரியான விசாரணைகூட சுட்டிக்காட்டுகிறது.

ஸ்ராலினிச வரட்டுத் தத்துவம் பிரெஞ்சு அறிவுஜீவிகள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியை உருவாக்கியது. யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் அது ஏற்படுத்திய அதிகப்படியான உருக்குலைவும், ஸ்ராலினிசத்தின் ஒரு பாகமாக வலதுசாரி நகர்வு ஏற்பட்டதும், அல்ஜீரியா மற்றும் வியட்நாமுடனான தொடர்பில் அக்கட்சியின் குற்றங்களும், 1968-ல் தீவிரமடைந்திருந்த மாணவர் மற்றும் தொழிலாளர்கள் இயக்கத்தை அது காட்டிக்கொடுத்ததும், இறுதியாக சோவியத் ஒன்றியத்தின் உடைவும்

பிரமைகளையும், திசைவிலகலையும் பரப்பியதிலும் மற்றும் ஒரு புத்திஜீவித பகுதியின் வலதுநோக்கிய திருப்பத்தை விரைவுபடுத்தியதிலும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது.

அமெரிக்க எழுத்தாளர் ரிச்சார்ட் ஜெ. பேர்ன்ஸ்ரைன் அவருடைய The New Constellation என்ற புத்தகத்தில், எஞ்சியிருந்த பின்-நவீனத்துவவாதிகளில் சிலரோடு போராடுவதை கையில் எடுக்கிறார். குறிப்பாக, ஹெகலையும், இயங்கியலையும் பாதுகாக்க இறங்குகிறார். ஆனால் இவ்வாறு செய்யும்போது, பாசிசம் மற்றும் ஸ்ராலினிசம் ஆகியவற்றின் அனுபவங்களை தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் அறிவுஜீவிகளின் (பிரான்சில் மட்டுமின்றி) அடுக்குகள் எதிர்கொண்டிருக்கும் பொதுவான அழுத்தங்களையும் பேர்ன்ஸ்ரைன் தாமே தொகுத்து எழுதுகிறார்:

''அதிகமான பலாத்காரம், காட்டுமிராண்டித்தனம், படுகொலைகள் இருந்து வரும் இருபதாம் நூற்றாண்டை அனுபவித்த யாரும் முற்போக்கான முறையில் சுதந்திரத்தினை செயல்படுத்தல் என்ற வரலாற்றின் ஒரு கதையாடல் (Narrative) பற்றி சந்தேகம் கொள்ளாமால் இருக்க முடியும் என்பது கடினமானதாகும். அவுஸ்விற்ஷ் மற்றும் குலாக்குக்கு பின்னர், ஊக அடிப்படையில் புரிந்து கொள்ளலின் ஊடாக யதார்த்தத்துடன் சமரசம் அடைவதில் சந்தேகம் கொண்டிருப்பதையோ மற்றும் அவநம்பிக்கை கொண்டிருப்பதையோ ஒருவர் தவிர்க்க முடியாது. 'வீட்டில்' இருத்தல் என்ற முழு மாறாநிலைவாதமும் இன்றைய உலகில் இப்பொழுது போலியானதாகத் தெரிகிறது." (புதிய நட்சத்திரக்கூட்டம், ப.306) .

செக் நாட்டு ஜனாதிபதி வாக்லவ் ஹாவலும் கூட, அவருடைய பாணியில், பின்வருமாறு கூறுகையில், நவீன சித்தாந்தத்தின் நெருக்கடிக்கும், ஸ்ராலினிச பொறிவிற்கும் இடையிலான தொடர்பை பிரதிபலிக்கிறார்: "கம்யூனிசத்தின் வீழ்ச்சியை நவீன சிந்தனை--- உலகம் புறநிலையாக அறியக்கூடியதே, மேலும் இதுவரை பெற்ற அறிவும் முழுமையாக பொதுமையாக்கப்பட வேண்டும் என்ற தர்க்கத்தினை அடிப்படையாக கொண்ட சிந்தனை--- ஓர் இறுதி நெருக்கடிக்கு வந்திருப்பதின் ஓர் அறிகுறியாக பார்க்கலாம்." (Intellectual Impostures, பக்கம் 181-ல் குறிப்பிடப்பட்டது).

பின்-நவீனத்துவவாதிகளின் அரசியல் நிகழ்சிநிரல்

''இயக்க ஆற்றலற்ற நிலையை'' (Inertia) போற்றிப் பாடிக்கொண்டிருப்பதுடன், மறுத்தலியல் மற்றும் அவநம்பிக்கைவாதத்திற்குள் பின் நவீனத்துவவாதிகளின் ஒரு பிரிவு மூழ்கிப்போய்விட்டது என்பது உண்மைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்போக்கு ஜேர்மன் தத்துவத்தில் பற்றற்று இருந்தமைக்காக இன்று பிரெஞ்சு புத்திஜீவிகள் வருத்தப்பட வேண்டும். இரண்டு புத்திஜீவிகள், Luc Ferry மற்றும் Alain Renaut ஆகிய இருவரும் நாம் ஏன் நீட்ஸ்சியன்களாக இருக்கவில்லை (Why We're Not Nietzscheans) என்ற தலைப்பில் புத்தகம் எழுதும் அளவிற்கு சென்றார்கள். ஆனால், அடிப்படையான சமூக மாற்றத்தை செய்யலாம் என்பதையிட்டு ஐயுறவுடன் இருந்தபோதும், பின்நவீனத்துவவாதிகள் அவர்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளார்கள் என்ற உண்மையை புறக்கணிப்பது பிழையானது.

பின்-நவீனத்துவவாதிகளின் கருத்துப்படி, அனைத்து "பெரும் கதையாடல்களும்" அதாவது, ஒரு முற்போக்கான வழியில் உலகத்தை மாற்றுவதற்கான புரிந்துகொள்ளக் கூடிய முயற்சிகள் படு தோல்வியடைந்துவிட்டன. சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி என்ற அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மதிப்பிழந்துவிட்டது மற்றும் ஸ்ராலினிசத்தின் பொறிவானது சிறப்பான முறையின் அடிப்படையில் சமூகத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்பதாகும்.

மாற்றீடாக தொடர்ந்து இருக்கும், பின்நவீனத்துவ இயக்கத்தின் இன்னொரு குழுவின் தலைவரான Michel Foucault ஆல் ஒரு வேளை, மாற்றீடானது சிறப்பான வகையில் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதுகிறார், ''மாபெரும் மறுப்புக்கான இடமேதும் இங்கில்லை, புரட்சியின் ஆன்மாவோ, அனைத்து கிளர்ச்சிகளின் மூலமோ அல்லது தூய புரட்சிகர விதியோ இங்கில்லை. பதிலீடாக எதிர்ப்பின் பன்முகத்தன்மை அங்கு இருக்கிறது. அவைகளில் ஒவ்வொன்றும் ஒரு பிரத்தியேகமான தன்மையுடன் இருக்கின்றன.''

Deleuze, Guattari and Lyotard உடன் இணைந்து Foucault நுண்ணிய-அரசியல் மற்றும் நுண்ணிய போராட்டங்களுக்கான அபிவிருத்தியின் அவசியத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார். இப்படியான ஒரு மூலோபாயம், தனியொரு விடயங்களுக்கான அரசியல் போக்குகளுக்கு-- அதாவது, பிரிவினைவாதிகள், ஒவ்வொரு வகையறாக்களை சேர்ந்த தேசியவாதிகள், சுற்றுச் சூழல்வாதிகள், பெண்ணிலைவாதிகள் மற்றும் இவ்வாறானோருக்கு வக்காலத்துவாங்குவதற்கான ஒரு தெளிவான அழைப்பைக் கொண்டிருக்கிறது.

சோகல் மற்றும் பிரிக்மொண்டின் அணுகுதலில் இருக்கும் பலவீனம்

பின்-நவீனத்துவவாதிகளை பற்றிய அவர்களின் கூர்மையான விமர்சனத்திற்கு இடையில், சோகலும் பிரிக்மொண்ட்டும் எதிர்தரப்பினர் கொண்டிருக்கும் ஓர் அடிப்படையான பொதுப்புள்ளியையும் ஏற்று பகிர்ந்து கொள்கிறார்கள் ---அதாவது, இயங்கியல் மீதான வெறுப்புணர்வு. பின்-நவீனத்துவ சிந்தனையாளர்களில் பிரபலமான பெரும்பான்மையானவர்கள் தாங்கள் இயங்கியலை வெறுப்பவர்கள் என்பதை இரகசியமாக வைத்திருக்கவில்லை: "மற்ற எல்லாவற்றையும் விட நான் அதிகமாக வெறுத்தொதுக்குவது என்னவென்றால் ஹெகலியனிசத்தையும், இயங்கியலையும் தான் ("I Have Nothing More to Admit" , Semiotext, Giles Deleuze, 1977)

இயங்கியல் மேலான (மற்றும் வாழ்வு!) வெறுப்பானது கீழ்காணும் இரகசிய வார்த்தைக்குள் வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் இது பொருத்தமான எடுத்துக்காட்டாக இல்லை. Felix Guattari இடம் இருந்து ஒரு மேற்கோள், "இருத்தலானது, எல்லை பிரிக்கப்படாத நிகழ்ச்சிப் போக்கு என்ற வகையில், ஒரு பிரத்தியேகமான எந்திரங்களுக்கிடையிலான செயல்பாடாக இருக்கிறது. அது ஒருமுகப்படுத்தப்பட்ட இருத்தல் சார்ந்த தன்முனைப்புக்களை முன்னிலைப்படுத்தல் மீது தானே மட்டுமீறித்திணிக்கிறது. அத்துடன், இந்த எல்லை பிரிக்கப்படாமைகளுக்கு பொதுமைப்படுத்தப்பட்ட சொற்றொடரியல் இல்லை என்பதை திரும்பவும் கூறுகிறேன். இருத்தலானது இயங்கியல் அல்ல, பிரதிநிதித்துவப்படுத்தலும் அல்ல. அது வாழ்வதற்கு கடினமானது! ( Intellectual Impostures, பக்கம். 158).

சோகலும், பிரிக்மொண்ட்டும் கூட இயங்கியலை எதிர்க்கிறார்கள். இதன் விளைவாக, விஞ்ஞான முறையிலான அவர்களின் சொந்த விளக்கமும் பலவீனமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளின் கருத்துக்களுக்கும், அவற்றின் விஞ்ஞான தத்துவங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை வலியுறுத்த வேண்டி, விஞ்ஞான முறைகளானது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் பயன்படுத்தப்படும் பகுத்தறிவு மனப்பான்மையில் இருந்து தீவிரமாக வேறுபட்டிருக்கவில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்" (பக்கம் 54), இருந்தபோதினும் அவர்கள் பின்னர் இந்த குறிப்பை தகுதியுடையதாக மாற்ற, "இந்த தொடர்பை நீண்ட தூரத்திற்கு தள்ளி செல்வது அப்பாவித்தனமானதாக இருக்கும்" என்று குறிப்பிடுகிறார்கள் (பக்கம் 55).

உண்மையில், விஞ்ஞான அபிவிருத்தியின் வரலாறு, விஞ்ஞான முறை மற்றும் கண்டுபிடிப்புகள் வெறுமனே பொது அறிவின் தர்க்க நீட்சி இல்லை என்ற உண்மைக்கு சான்றுரைக்கிறது. இந்த நூற்றாண்டின் முதல் சகாப்தம் அணுவின் விஞ்ஞான விளக்கத்தின் அபிவிருத்தியால் தூண்டிவிடப்பட்ட கருத்தியல் சர்ச்சையின் கலகத்தைக் கண்டது. ஒரு மின்சக்தி புலத்தில் இருக்கும் ஓர் அணுவின் பாரம்பரிய அடிப்படை துகளான திடப்பொருளின் "மறைவு" ஆனது, சடத்தின் இருப்பிற்கும் அதேமாதிரி உலகின் புறநிலை அறிவிற்கான மனிதனின் ஆற்றலுக்கும் முன்னால் ஒரு கேள்விக்குறியை இடுவதற்கு விஞ்ஞானிகளையும், மெய்யியலாளர்களையும் (Mach, Bogdanov) இட்டுச்சென்றது.

சட வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகத்துடன் 1908 ல் லெனின் விவாதத்தில் கலந்துகொள்கிறார். அதில், சடத்துவ (பொருளாயத) உலகின் புறநிலை இயல்பையும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் உலகினை சரியாக அறிவதற்கான சாத்தியத்தையும் மனிதன் கொண்டிருக்கிறான் என்பதைப் பேணுவதற்கு அவர் மெய்யியல் சார்புநிலைவாதத்துடன் போராடினார். அதே நேரம், அணுபற்றிய பொது அறிவு கருத்துப்பாட்டிற்கும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியில் இருந்து வளர்ச்சிபெறும் வெளிப்படுத்தல்களுக்கும் இடையிலான முரண்பாடு, மனித சிந்தனை மற்றும் சடப்பொருள் பற்றிய இயங்கியல் விளக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என அவர் தெளிவுபடுத்தினார்.

மெய்யியல் சார்புநிலைவாத விடயம் புதிய சோவியத் அரசின் கலாச்சார, கருத்தியல் போக்காளர்களுக்கு மத்தியிலும் கூட சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாய் இருந்தது. பியூச்சரிஸ்ட் (வருங்காலவாதிகள்) இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதிநிதிகளினால் எழுதப்பட்ட தத்துவ படைப்புகளுக்கு பதிலளிக்கையில், செல்வாக்கு மிகுந்த சிகப்பு கன்னி நிலம் (Red Virgin Soil) என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான அலக்ஸ்சான்டர் வொறன்ஸ்கி, Chuzhak மற்றும் ஏனையவர்களின் படைப்புகள் பற்றி கருத்துரைத்ததாவது :

''இவைகள் அனைத்தும் மார்க்ஸ், பிளெக்கானோவ் மற்றும் லெனினது இயங்கியலுடன் பொதுவில் எதையும் கொண்டிருக்கவில்லை. இவைகளுக்கும் மேலாய், ஒரேவகையான படைப்புக்களில் முழுமையான சார்புநிலைவாத காற்று வீசுவதுடன், உறுதிப்பாட்டின் அனைத்து அறிவையும் மறுதலிக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளான நாமும் சார்பியல்வாதிகள் தான் ஆனால் எமது சார்பியல்வாதம் முற்றுமுழுமையானதல்ல மாறாய், சார்பானது.... தோழர் Chuzhak, அனைத்தும் ஓடுகிறது, அனைத்தும் மாறுகிறது என உறுதியாகக்கூறிய Heraclitus இன் படி விவாதிக்கவில்லை, மாறாய், 'அனைத்தும் ஓடுகிறது, அனைத்தும் மாறுகிறது' என்பதனால் ஒரே நீரோட்டத்தில் இரண்டு தடவை கால்வைப்பது சாத்தியமற்றது என பரிந்துரை செய்த Zeno இன் படி விவாதிக்கிறார். Heraclitus ஒரு இயங்கியல் வாதி, Zeno மாறாநிலைவாத (Metaphysical) சார்பியல்வாதியாக இருந்தார். முதலாளித்துவ அறிஞர்களின் கூடாரத்தில் இப்போது இப்படிப்பல சார்பியல்வாதிகள் உள்ளார்கள்'' (அலெக்்சான்டர் வொறன்ஸ்கி, வாழ்வையறிதலாக கலை. ப.107)

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் நான்காம் அகிலத்திற்குள் ஒரு குட்டிமுதலாளித்துவ போக்குக்கு எதிரான போராட்டத்தில், சடவாத இயங்கியலின் விரிவான விளக்கத்திற்கு லியோன் ட்ரொட்ஸ்கி தனது சக்திவாய்ந்த சொந்தப் பங்களிப்பை செய்தார். இளம் லியோத்தாரின் சில குறிப்பிட்ட கருத்துப்பாடுகளை கொண்டிருந்த அன்றைய எதிர்ப்பு அணியின் முன்னணி கோட்பாட்டாளரான ஜேம்ஸ் பேர்ன்ஹாம் (James Burnham), சோவியத் யூனியனில் ஒரு முதலாளித்து வடிவம் மீளமைக்கப்பட்டுள்ளது என வாதித்தார்.

ட்ரொட்ஸ்கி தனது இயங்கியலின் சுருக்கமும் பொருள் நிறைந்ததுமான விரிவான விளக்கத்தை கீழ்க்காணும் எச்சரிக்கையுடன் முடிக்கிறார்: ''தற்கால விஞ்ஞான சிந்தனையில் உள்ள இயக்கத்தின் விதிகளை இயங்கியல் தர்க்கம் வெளிப்படுத்துகிறது. சடவாத இயங்கியலுக்கு எதிரான போராட்டமானது குட்டிமுதலாளித்துவ வாதிகளின் கடந்த காலத்தையும், பழமை வாதத்தையும், பல்கலைக் கழக வாதிகளின் தற்பெருமை வாதத்தையும், அத்துடன் அது..... மறுபிறப்பு தொடர்பான சிறு நம்பிக்கைப் பொறியையும் வெளிப்படுத்துகிறது'' (Leon Trotsky, In Defence of Marxism).

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள் --ரஷ்யாவில் சோசலிச அரசியல் மற்றும் புத்திஜீவித எதிர்ப்புக்களை 30களில் உடல்ரீதியாக அழித்தது, அதனுடன் இணைந்து தேசியவாதத்தையும் மற்றும் மார்க்சிச இயங்கியலையும் முற்றும் தவறான வழியில் அது அணைத்துக்கொண்டது-- சோசலிச தொழிலாளர் இயக்கத்தினை சீரழித்ததுடன், சார்பியல்வாதம் மற்றும் அறிவீனத்தையும் ஊக்குவித்ததன் மையமாக இருந்தது.

சார்பியல்வாதிகளின் படைதான் சக்திவாய்ந்த முறையில் பின்நவீனத்துவத்தின் தற்கால சிந்தனைப்பள்ளியின் பரவுதலை விரிவாக்கியது. அதேநேரம் சிந்தனையில் மிக புதியதை தாம் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் அந்த இயக்க அங்கத்தவர்களின் கூற்றில் வஞ்சகத்தையும், சீரழிவையும் தவிர வேறொன்றும் இல்லை.

அவர்களது தத்துவார்த்த கதாநாயகர்கள், முக்கியமாக அறிவொளி கால ஆண்டுகளின் 19 நூற்றாண்டு எதிராளிகளான Nietzsche, Schopenhauer, Kierkegaard ஆவார்கள். கருத்துப்பாடுகளிலும், கருத்துக்களிலும் புதியனவை சுட்டிக்காட்டுவதற்கு மாறாக, பின்நவீனத்துவவாதிகளின் வித்தியாசமான ஆய்வுகளும், உரைப் பகுதிகளும் உண்மையான விஞ்ஞான விதிமுறைக்கான ஒரு அவமதிப்பையும் கலாச்சார அவநம்பிக்கைவாதம், தனிமனிதவாதம், இருண்மைவாதத்தை பரவவிடுவதுடன் வரலாற்று உண்மையினை மறுத்தலானது ஒரு கருத்தியல்ரீதியான முட்டுச் சந்துக்கு வந்துவிட்டதையும், நீண்டகாலத்திற்கு முன்னரே நீராவியாய் வெளியேறிப்போன ஒரு சமூக ஒழுங்கினது திரிக்கப்பட்ட ---பொய்மைப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பையும் சுட்டிக்காட்டுகிறது.

சோகல் மற்றும் பிரிக்மொண்டின் அணுகுமுறையில் பலவீனங்கள் இருந்தபோதும், இருவரும் கல்விநிறுவன நிலையினை உடைத்துவிட்டு பின்நவீனத்துவ சிந்தனையின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். அவர்களது இந்தப் புத்தகம் பரந்துபட்ட மக்களால் வாசிக்கப்படவேண்டும்.