சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US diplomatic offensive tightens strategic encirclement of China

அமெரிக்க இராஜதந்திர தாக்குதல் சீனா மீதான மூலோபாய ரீதியான சுற்றிவளைப்பை இறுக்குகிறது

John Chan
13 November 2010

Use this version to print | Send feedback

கடந்த இரண்டு வாரங்களில் ஆசியாவில் அமெரிக்காவின் தீவிர இராஜதந்திரப் பிரச்சாரமானது, அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால், சீனாவுக்கு எதிரான “முழு மைதானத் தடுப்பு” என்கின்ற மட்டத்திற்கு சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாய் மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் எழுந்து கொண்டிருக்கின்றன.

இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும், மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூ கினியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாய் சுற்றி வளைப்பதற்கு, இருக்கும் கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கோ அல்லது புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்கோ தலைப்பட்டன.

சீனாவின் பிராந்திய அணுத்திறன் கொண்ட எதிரியான இந்தியாவின் நன்மதிப்பைப் பெற ஒபாமா ஆர்வமாய் இருந்தார். புது டெல்லி ஒரு “உலக சக்தியாக” உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான அதன் முயற்சிக்கு ஆதரவளித்தார். கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருக்கும் டியாயு/சென்காகு (Diaoyu/Senkaku) தீவுகள் குறித்த மோதலில் சீனாவுக்கு எதிராய் ஜப்பானுக்கு இராணுவரீதியாய் உதவ அமெரிக்கா அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தை கையிலெடுக்க முடியும் என்பதை கிளின்டன் இருமுறை அழுத்தம்திருத்தமாய் கூறினார். தென் சீனக் கடல் பகுதியில் இருக்கும் தனது மூலோபாய முக்கியத்துவம் உடைய காம் ரான் பே (Cam Ranh Bay) துறைமுகத்தை ”அனைத்து நாடுகளின் கடற்படை கப்பல்களும்” (அமெரிக்கா தான் அநேகமான வாடிக்கையாளர்) வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதிக்க தான் தயாராய் இருப்பதாய் வியட்நாம் அறிவித்தது. தனது இராணுவ வசதிகளை, குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் இருப்பவற்றை, அதிகமான அளவில் அமெரிக்காவுக்கு அணுகலளிக்க கான்பெர்ரா ஒப்புக் கொண்டது.

தென் சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் மலாக்கா நீர்ச்சந்தி மற்றும் இந்தோனேசியாவின் சண்டா/லோம்பாக் நீர்ச்சந்திகள் (Sunda/Lombok straits) போன்ற முக்கியமான இணைப்பு நீர்ப்பாதைகள் ஆகியவற்றை சீனா கட்டுப்படுத்துவதில் இருந்து தடுக்கும் நோக்கத்தையே அமெரிக்க தாக்குதல் கொண்டிருக்கிறது. தனது எண்ணெய் நுகர்வில் மூன்றில் ஒரு பங்கிற்கும், தனது வெளிநாட்டு வர்த்தகத்தில் 70 சதவீதத்திற்கும் சீனா கப்பல்களையே சார்ந்திருக்கிறது என்பதால் இந்த கடல் பாதைகள் தான் அதன் “ஜீவாதாரங்களாய்” உள்ளன. ஒவ்வொரு நாளும் மலாக்கா நீர்ச்சந்தி வழியாக கடக்கும் கப்பல்களில் சுமார் 60 சதவீதம் சீனக் கப்பல்களே.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இத்தகைய “மூச்சுப் புள்ளிகளை” (“choke points”) கட்டுப்படுத்துவதன் மூலம் எதிரி சக்திகளுக்கான முக்கிய எண்ணெய் விநியோக கப்பல் பாதைகளை துண்டிக்கும் திறனை தக்கவைப்பதென்பது அமெரிக்காவின் முக்கியமானதொரு கடல்வழி மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க பொருளாதார சக்தி துரிதமாக வீழ்வதும் சீனா துரிதமாய் எழுச்சி காணுவதுமான நிலையில், குறிப்பாக 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்காவுக்கு இந்த பணியானது முன்னெப்போதையும் விட மிகப் பெரிதாய் எழுந்து நிற்கிறது. சீனா-ASEAN (தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) இடையிலான தடையில்லா வாணிப மண்டலம் சென்ற ஜனவரியில் அமலுக்கு வந்ததில் இருந்து சீனா மற்றும் ASEAN இடையிலான வர்த்தகம் சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, அதே சமயத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் ஆசிய அரசுகளுடன் எந்த தடையில்லா வாணிப ஒப்பந்தத்தையும் தடுக்கிறது.

தனது பாத்திரம் மங்கிக் கொண்டிருப்பதை ஒப்புக் கொள்வது என்பதில் இருந்தெல்லாம் ரொம்பவும் விலகி, அமெரிக்கா தனது எஞ்சியிருக்கும் இராணுவ வலிமை மூலமாக ஆசியாவில் தனது மேலாதிக்க நிலையை தக்கவைத்துக் கொள்ள தீர்மானமாய் உள்ளது. திங்களன்று ஆஸ்திரேலியன் செய்தித்தாளுக்கு அளித்த ஒரு நேர்காணலின் போது, கிளிண்டன் நினைவுகூர்ந்தார்: ”சீன அதிகாரிகள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவிடம் முதலில் கூறுகையில் தெற்கு சீனக் கடல் முழுக்க சீன நலன் கொண்டது என்பதாக சீனா பார்க்கிறது என்று கூறினர். உடனடியாக நான் பதிலடி கொடுத்தேன், நாங்கள் அந்தக் கருத்தில் உடன்படவில்லை என்று.” இதனையடுத்து ஜூலை மாதத்தில் ASEAN கூட்டத்தில் கிளிண்டனின் காட்டமான அறிவிப்பு வெளிவந்தது. தெற்கு சீனக் கடலில் ஸ்ப்ராட்லி மற்றும் பராசெல் தீவுகள் விடயத்தில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ASEAN உறுப்பு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடும் என்று அவர் அறிவித்தார். “வெளியிலிருப்பவர்கள்”, அதாவது அமெரிக்கா, தெற்கு சீனக் கடல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று எச்சரித்து சீனாவும் கோபத்துடன் பதிலிறுப்பு செய்தது.

தெற்கு சீனக் கடலில் “நடமாட்ட சுதந்திரத்தில்” அமெரிக்காவுக்கு “தேசிய நலன்” இருப்பதாக கிளிண்டன் அடுத்து விடுத்த அறிக்கை இன்னும் கூடுதலாய் கோபமூட்டுவதாய் அமைந்திருந்தது. 40,000க்கும் அதிகமான கப்பல்கள் ஒவ்வொரு ஆண்டும் இக்கடல் வழியே சுதந்திரமாகக் கடந்து செல்கின்றன. அமெரிக்கா கோரும் “நடமாட்ட சுதந்திரம்” என்பது அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்களும் போர்க்கப்பல்களும் சீனக் கரை அருகே நீரில் நடமாடுவதற்கும், பிராந்தியத்தில் சீன இராணுவ நடவடிக்கைகள் (நீர்மூழ்கிகள் இடநிறுத்தம் உட்பட) குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்குமான சுதந்திரம் ஆகும். ஒருவேளை ஹவாய் அல்லது சான் டியகோ கரை அருகே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் சீனா உளவுக் கப்பல்களை அனுப்புமானால் அமெரிக்கா சும்மா இருக்குமா, கோபமூட்டும் செயலாக சித்தரிக்கப்படும் அந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் ஆவேசத்துடன் பதிலிறுப்பு செய்யும்.

வியட்நாம், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இராணுவ உறவுகளை ஸ்தாபிப்பது மற்றும் வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா சீனாவின் “முத்து மாலை” மூலோபாயத்திற்கு பதிலடி கொடுக்க முனைகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் மற்றும் கச்சாப் பொருட்களை சுமந்து வரும் கப்பல் பாதைகளை பாதுகாக்கும் பொருட்டு பர்மா , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துறைமுக வசதிகளைக் கட்டி சீன போர்க்கப்பல்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்துவது தான் இந்த முத்துமாலை மூலோபாயம்.

இங்கே தான், ஒபாமா பயணத்தின் இரண்டாவது நிறுத்தமாகி இருக்கும், இந்தோனேசியாவின் முக்கியத்துவம் அமைந்திருக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் ஸ்ட்ராட்ஃபார் குறிப்பிட்டார்: “உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியான பகுதியான மலாக்கா நீர்ச்சந்தி, அதேபோல் சண்டா மற்றும் லோம்பாக் நீர்ச்சந்திகள் ஆகியவற்றில் இது (இந்தோனேசியா) கால்பரப்பி நிற்கிறது. இதனால் இந்தியப் பெருங்கடல், தெற்கு சீனக் கடல் மற்றும் பசிபிக், மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு இடையிலான கடல் பாதைகளில் இது மிக முக்கியத்துவம் பெற்றதாய் ஆகிறது. இந்த கடல் பாதைகள் சீனாவுக்கு வெகுமுக்கிய கச்சாப் பொருட்களை கொண்டுவருகின்றன; இந்த பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் எந்த சக்தியும் சீனா மீது பிரம்மாண்டமான பிடியைக் கொண்டிருக்கும்.”

இதே விடயங்கள் கிழக்கு தீமூர், பபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கும் பொருந்தும், இவையும் முக்கிய கடல் பாதைகள் மீது அமைந்திருக்கின்றன. கடந்த தசாப்தத்தில், பசிபிக் தீவு அரசுகளின் மீது சீனா பொருளாதார உறவுகளையும், இன்னும் இராணுவ உறவுகளையும் கூட ஸ்தாபித்திருப்பதில் அமெரிக்காவில் கவலை நிலவுகிறது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க “தலைமை”யை மறு உறுதி செய்வதில் ஒபாமா நிர்வாகம் உறுதிப்பாட்டுடன் உள்ளது.

இவ்வாறு பபுவா நியூ கினியாவுக்கு பயணம் சென்ற ஹில்லாரி கிளின்டன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகளுடனான தனது சந்திப்பில் ஆசிய-பசிபிக் பிராந்தியம் குறித்து விவாதித்தார்.

அமெரிக்காவின் சிந்தனையில் தெற்கு சீனக் கடல் எந்த அளவுக்கு மையம் கொண்டுள்ளது என்பதை ராபர்ட் கப்லான் வெளிப்படுத்தினார். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் அவர் எழுதினார்: “சீனாவுடனான அமெரிக்காவின் கடுமையான அதிகாரப் போட்டியின் பூகோள இதயமாய் தென் சீனக் கடல் திகழும். இதன் வழியாகத் தான் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் மூன்றில் ஒரு பகுதி நடைபெறுகிறது என்பதோடு ஜப்பான், கொரிய வளைகுடா மற்றும் வடகிழக்கு சீனாவுக்கு செல்லும் ஹைட்ரோ கார்பன்களில் பாதி இதன்வழியே தான் செல்கிறது. இந்த கடல் சீனாவுக்கு மலாக்கா நீர்ச்சந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்கு, இதன்மூலம் கிழக்கு ஆபிரிக்காவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா வையான இஸ்லாமின் ஒட்டுமொத்த வில்கோடுக்கும், அணுகலை உருவாக்கித் தருகிறது.

அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்புகள் முன்னாள் புஷ் நிர்வாகத்தின் கவனத்தை சிதறடித்து சீனா ஆசியா முழுவதிலும் தனது புவிஅரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு அனுமதித்ததாகக் கூறி அவற்றை விமர்சிப்பவர்களில் ஒருவர் தான் இந்த கப்லான். கப்லானின் அடிப்படை யோசனைகளை ஒபாமா நிர்வாகத்தின் “மீண்டும் ஆசியாவில்” கொள்கையில் காண முடியும்.

அமெரிக்காவால் ஒன்றுசேர்க்கப்படும் இந்த சீன-எதிர்ப்பு கூட்டணியானது தனது கடல் பாதைகள் மற்றும் எண்ணெய் வரத்தை பாதுகாப்பதற்கு ஒரு நீலக் கடல் படையை உருவாக்கும் சீனாவின் தாகத்துடன் நேரடியான மோதலில் நிற்கிறது. சென்ற வருடத்தில் பெரும்விற்பனையான சங் வென்மு எழுதிய சீனக் கடல் அதிகாரம் (China Sea Power) என்னும் புத்தகம் உலகளாவிய மேலாதிக்க நிலைக்கான நடப்பு மாபெரும் அதிகாரப் போராட்டத்தில் சீனாவின் பார்வையை சுருக்கமாய் உரைத்தது. சங் எழுதினார்: “இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்த வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் தான் ஆடும் அனைவருமே கவனத்தைக் கொண்டிருக்கிறார்கள்.”

சீனா, ஆசியாவில் தான் உருவாக்கியிருக்கும் சாதக நிலைகளை பலவீனப்படுத்த அமெரிக்காவை அனுமதிக்காது. கம்போடியா ஒரு ஒற்றை நாட்டை (அதாவது சீனாவை) ”மிக அதிகமாய் சார்ந்திருக்கக் கூடாது” என்று ஹிலாரி கிளின்டன் வலியுறுத்திய வெகுசில நாட்களுக்குள் சீன அரசாங்கம் கம்போடியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1.6 பில்லியன் டாலர் கொடுத்திருப்பதோடு அலை பேசி சேவைகளின் (mobile phone services) வளர்ச்சிக்கு 590 மில்லியன் டாலர் கடனுதவியையும் அறிவித்தது. ஒபாமா ஜகார்தா வந்து சேர்ந்து ஒரு நாள் கூட ஆகும்முன், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 6.6 மில்லியன் டாலர்களுடன் ஒரு சீனக் குழு வந்து சேர்ந்தது. நியூயோர்க் டைம்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், “திரு.ஒபாமாவுக்கு சீனா புரிந்துகொள்ள எளிதான ஒரு சவாலை வைத்தது: உங்களது இந்தோனேசிய உபசரிப்பாளரிடம் பணத்தைக் காட்டுங்கள்.”

ஆழமுறும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் செலுத்தப்பட்டு, அமெரிக்கா மற்றும் சீனா இடையில் அதிகரித்துச் செல்லும் மோதலானது உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு பெரும் பேரழிவை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். இலாப அமைப்பையும், போட்டி தேசிய-அரசுகளின் இந்த பயனொழிந்த அமைப்புமுறையையும் தூக்கியெறிவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யவில்லை என்றால், இந்த பெரும்-அதிகாரப் பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் ஒரு புதிய உலகப் போருக்கு இட்டுச் செல்லும்.