சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French National Assembly debates anti-immigration law

பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சட்டத்தை விவாதிக்கிறது

By Kumaran Ira
7 October 2010

Use this version to print | Send feedback

செப்டம்பர் 28இல், பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை மேலும் இறுக்கமாக்குவதற்கான ஒரு சட்டவரைவின் மீது விவாதத்தைத் தொடங்கியது. பர்க்காவிற்கு தடைவிதித்ததைப் போன்றும், பிரான்சிலிருந்து ரோமாக்களை நாடுகடத்த குறிவைத்தது போன்றும் இந்த சட்டவரைவும் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக முறைமைகளுக்கு எதிரான ஓர் அலையின் ஒரு பாகமாக உள்ளது. நவ-பாசிச வாக்கெடுப்பிற்கு முறையிடுவதன் மூலமாக, அவர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவருடைய கொள்கைகளுக்கு நிலவி வரும் எதிர்ப்புகளுக்கு பிரதிபலிப்பைக் காட்டி வருகிறார்.

ரோமாக்களை பிரான்சை விட்டு நாடு கடத்துவதை இலக்காக கொண்ட சார்கோசியின் இனரீதியான கொள்கை மீது எழுந்த முந்தைய விமர்சனங்களிலிருந்து அதை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்தது. இந்நிலையில் தான், இந்த சட்டவரைவின் மீது விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரோமாகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பாரபட்சமாக நடத்திக் கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், செப்டம்பர் 30இல், ஐரோப்பிய ஒன்றியம் ஒழுங்கு நடவடிக்கையை அர்த்தமற்ற அடித்தளங்களின்கீழ் கொண்டு வந்து தள்ளிப்போட தீர்மானித்தது. எவ்வாறிருப்பினும், 'பிரித்தெடுப்பதில் ரோமா முகாம்களை முக்கிய இலக்காக்குமாறு' சார்க்கோசி பொலிஸிற்கு உத்தரவிட்டிருந்தார் என்பதை கசிவுற்ற பிரெஞ்சு அரசாங்க ஆவணங்கள் தெளிவாக எடுத்துக்காட்டின.

தற்போதைய இந்த சட்டவரைவு நிறைவேற்றப்பட்டால், இது கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது புலம்பெயர்ந்தோர் சட்டமாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் உட்பட, ஆவணமற்ற தொழிலாளர்களின் உரிமைகளை இந்த சட்டமசோதா தடுக்கிறது. அதன்மூலம் அவர்களை வெளியேற்றுவதை சுலபமாக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்ந்தோருக்கான விதிமுறைகளில் இருக்கும் சில முறைமைகளை பிரெஞ்சு சட்டத்திற்குள் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்ந்தோர் விதிகளில், “return directive" என்பது சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வகைசெய்கிறது; அத்துடன் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்குமே மீண்டும் நுழைய முடியாத வகையில் தடை விதிக்கிறது.

பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அவர்கள் நாடு கடத்தப்பட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரைக்கும், “சென்கென்" (“Schengen”) உடன்படிக்கையின்கீழ் மீண்டும் பிரான்சிற்கும், ஏனைய பிற நாடுகளுக்கும் திரும்புவதற்கு தடைவிதிக்கவும் இந்த சட்டவரைவு அனுமதிக்கிறது. இந்த காலகட்டத்தின் போது, அந்த அயல்நாட்டவர் பிரான்சிற்குள் சட்டபூர்வமாக கூட நுழைய அனுமதிக்கப்படமாட்டார்.

தேசிய சட்டமன்றத்தில் விவாதம் தொடங்குவதற்கு சற்று முன்னர் பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர்துறை மந்திரி எரிக் பெஸ்சோன் இந்த சட்டவரைவை ஆதரித்து France 24க்கு கூறியதாவது: “நாங்கள் சட்டபூர்வமான புலம்பெயர்வை, குறிப்பாக வேலை நிமித்தமாக வருவதை ஊக்குவிக்க விரும்புகிறோம்; ஆனால் அதேசமயம், நாங்கள் சட்டவிரோத புலம்பெயர்வு வலையமைப்புகளுக்கு எதிராக போராட விரும்புகிறோம். மேலும் அகதிகளைப் பொறுத்த வரையில், புலம்பெயர்ந்தவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்நாட்டின் ஒத்துழைப்புடன், எங்கள் கொள்கைகளை நாங்கள் ஒருமித்து வைக்க விரும்புகிறோம்.”

பிரான்சிற்குள் முறையான எல்லை நுழைவாயில் வழியாக நுழையாத வெளிநாட்டு குழுக்களைக் தடுப்புக்காவலில் வைப்பதற்கான தற்காலிக மண்டலங்களை (ad hoc transit zones) அமைக்க இந்த சட்டவரைவு வழிசெய்கிறது. இன்று, விமானநிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வெளிநாட்டு இரயில் நிலையங்களில் ஏற்கனவே இதுபோன்ற மண்டலங்கள் உள்ளன. இந்த இடைக்கால மண்டலங்கள் பிரெஞ்சு பிராந்தியத்தை சேர்ந்ததில்லை என்ற நிலையில், அவற்றில் தடுப்புக்காவலில் வைக்கப்படும் தனிநபர்களுக்கு உரிமைகள் தடுக்கப்பட்டிருக்கும் என்பதுடன் அவர்கள் விரைவான வெளியேற்றத்தையும் முகங்கொடுக்க வேண்டியதிருக்கும்.

அமெரிக்காவைச் சேர்ந்த சிவில் சுதந்திரங்களுக்கான மனித உரிமைகள் குழு, இம்மாதிரியான இடைக்கால மண்டலங்களில் குழந்தைகளை வைத்திருந்தமைக்காகவும், குழந்தைகளைத் திரும்பவும் அவர்கள் பிறந்த நாட்டிற்கு அனுப்பினால் அங்கே குழந்தைகளின் குடும்பங்கள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் மூலமாக அவர்களுக்கு போதிய கவனிப்பு கிடைக்குமா என்பதையும் கூட பார்க்காமல் பிரெஞ்சு அதிகாரிகள் குழந்தைகளை அனுப்பிவிடுகின்றார்கள் என்பதற்காகவும் ஏற்கனவே பிரெஞ்சு அதிகாரிகளை விமர்சித்துள்ளது.

நோயின் மரணப்பிடியிலிருக்கும் ஓர் அயல்நாட்டவர் அவருடைய நாட்டில் போதியளவிற்கு சிகிச்சைப் பெற முடியவில்லை என்றால், அவரைப் பிரான்சில் தங்க அனுமதிக்கலாம் என்பதாக இதுவரை இருக்கிறது. ஆனால் இந்த சட்டவரைவானது, பிரான்சில் தீவிர நோயில் இருப்பவர்களுக்கும் கூட இருப்பிடத்தை அளிக்க தடைகளை விதிக்கிறது.

மேலும் இந்த சட்டவரைவு பிரெஞ்சு குடியுரிமையைப் பெறக்கோரும் புலம்பெயர்ந்தவர்களை, “குடியரசின் முக்கிய கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளைக்" கடைபிடிக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுகிறது. அத்துடன் "பிரெஞ்சு குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் சாசனத்தில்" புலம்பெயர்ந்தவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் கோருகிறது.

'வெளிநாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தவர்கள் எவரேனும், கடந்த 10 ஆண்டுகளில் 'பொது அதிகாரிகளோடு மோதலில் ஈடுபடுதல்' போன்ற சில குறிப்பிட்ட குற்றங்களைச் செய்திருந்தால் அவர்களின் பிரெஞ்சு குடியுரிமையை நீக்குவது' என்பது தான் இந்த சட்டவரைவில் இருக்கும் மிக முரண்பாடான முறைமையாக உள்ளது. சார்கோசி ஜூலை 30இல் கிறனோபிளில் பேசிய மற்றும் தற்போது பிரபலமாக இருக்கும் அவருடைய சட்ட-ஒழுங்கு உரையில் பின்வருமாறு கூறியதன் மூலமாக இந்த முறைமையை வெளிப்படையாகவே வெளியிட்டார்: “ஒரு பொலிஸ்காரரின், சட்டத்தைப் பாதுகாக்கும் முகவரின், அல்லது எந்தவொரு அரசுதுறை பிரதிநிதியின் வாழ்க்கையையும் வெளிநாட்டில் பிறந்த ஒரு நபர் வேண்டுமென்றே அச்சுறுத்தியிருந்தால், அவரின் குடியுரிமையை இரத்து செய்ய இதில் இடமுள்ளது."

“பிறந்தநாடு, இனம், அல்லது மதம் என எவ்வித வேறுபாடும் இல்லாமல் எந்த நாட்டு குடிமக்களையும் சட்டத்தின்முன் பிரான்ஸ் சமமாகவே நடத்தும்," என்ற அரசியலைப்பின் விதி 1ஐ இந்த முறைமை மீறுகிறது.

மக்கள் எதிர்ப்பைச் சந்தித்த ஓய்வூதிய வெட்டுக்கள் போன்ற அவருடைய மக்கள்விரோத கொள்கைகளுக்கு எழுந்த பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில், சார்கோசி புலம்-பெயர்ந்தவர்களுக்கு எதிரான முறைமைகளைத் தயாரித்து கொண்டிருக்கிறார். அவருடைய 2011 நிதித்திட்டம், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருக்கும் நிதிப்பற்றாக்குறையை 8.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்க 40 பில்லியன் யூரோவை சமூக செலவினங்களில் இருந்து குறைக்க திட்டமிடுகிறது.

மிகவும் அவமதிப்புக்குள்ளானவராகவும், 72 சதவீத விகித மக்களின் அதிருப்தியுடனும் இருக்கும் சார்க்கோசியும், அவருடைய அரசாங்கமும் ஆழமான நெருக்கடியில் உள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சார்க்கோசியின் பிரச்சாரமானது, புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பைக் கிளறிவிடுவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி, இந்த பரந்த பெரும் அதிருப்தியைத் திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியாகும்.

'இந்த ஆண்டில் மட்டும் 30,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை பிரான்சிலிருந்து வெளியேற்றுவது' என்பதை அவருடைய அரசாங்கம் இலக்காக கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் வாக்கில், 15,000 நபர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.

குறிப்பாக, சமீபத்தில் குடியேறிய குடிமக்களிடமிருந்து குடியுரிமையைப் பறிக்கும் கொள்கை பெரும் சச்சரவை எழுப்பியுள்ளது—இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளுடன் இணைந்திருந்த விச்சி ஆட்சியில் தான் கடந்தமுறை இதுபோன்ற முறைமைகள் நிறுவப்பட்டன. அந்த கொள்கைகள் பெரும்பாலும் யூதர்களைக் குறிவைத்திருந்தது. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றத்தின் போது சுமார் 73,000 பிரெஞ்சு யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

Le Monde பத்திரிகை குறிப்பிட்டதைப் போல, “பிரான்சில் 1927க்குப் பின்னர், விச்சி ஆட்சி தான் 50,000 அயல்நாட்டு குடியேற்றங்களைக் கண்காணிக்க ஓர் ஆணையத்தை—ஜூலை 22, 1940இல்—அமைத்தது. சுமார் 15,000 மக்கள் (இவர்களில் 40 சதவீதத்தினர் யூதர்கள்), 'கடந்தகால தவறுகளின்' பெயரில் அவர்களின் குடியுரிமையை இழந்தார்கள்."

அரசியல்ரீதியாக ஆத்திரமூட்டல்களில் ஈடுபடுதல் மற்றும் இதற்கு இணையான எந்தவித நடவடிக்கைகளையும் மறுத்ததின் மூலமாக பிரெஞ்சு அதிகாரிகள் இந்த விஷயத்திற்கு பிரதிபலிப்பைக் காட்டி இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்கள் "சற்றே நல்ல பிரெஞ்சுகாரர்களாக" தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று புலம்பெயர்ந்தோர்துறை மந்திரி பெஸ்சோன் எரிச்சலூட்டும் விதமாகவும், இறுமாப்போடும் குறிப்பிட்டார்.

இந்த சட்டவரைவை முன்வைப்பதற்கு ஒருநாள் முன்னால், அவர் Le Parisien பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது: “அயல்நாட்டவர்கள் 'சற்றே நல்ல பிரெஞ்சுகாரர்களாக' ஆகிவிட்டால், அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஆனால் அதுவொரு அருமையான செய்தியென்று தான் நான் நினைக்கிறேன். 'நல்ல பிரெஞ்சுகாரர்களாக' இருப்பதென்பது, ஒருவருடைய வரலாற்றை, ஒருவரின் தோற்றத்தை, அல்லது ஒருவரின் பிரெஞ்சு கலாச்சாரத்தைத் திரும்பிப்பார்ப்பது என்பதாகாது. என்னுடைய அமைச்சகம் நல்ல பிரெஞ்சுகாரர்களை உருவாக்கும் ஓர் இயந்திரமாக இருந்தால், நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்."

யூதர்களும் அல்லது இடதுசாரி கண்ணோட்டங்களைக் கொண்ட நபர்களும் பாசிச அதிகாரிகளுக்கு "நல்ல பிரெஞ்சுகாரர்களாக" இல்லாததற்காக பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டதைப் போல, பெஸ்சோன் சாதாரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்தும் விதமே, அதன்வகையில் எரிச்சலூட்டுவதாக உள்ளது. ஒரு பிரபலமான விஷயத்தில், விச்சியின் உள்துறை மந்திரி Pierre Pucheu, ஜேர்மன் தளபதி கார்ல் ஹோட்ஸைக் படுகொலை செய்தமைக்கு எதிரான ஒடுக்குமுறையாக, தூக்கிலிடுவதற்கு 50 கம்யூனிஸ்ட் பிணையாளிகளை — Guy Môquet மற்றும் டிரொட்ஸ்கிசவாதியான Marc Bourhis ஆகியோரும் இதில் உள்ளடங்குவர்— தேர்ந்தெடுத்தார். இந்த மாற்றுதிட்டதார்கள், முன்னாள் வீரர்களின் இந்த பட்டியல் "நல்ல பிரெஞ்சுகாரர்களைக்" கொண்டிருக்கிறது என்று விவரித்ததன் மூலமாக Pucheu அவருடைய தேர்ந்தெடுப்பை நியாயப்படுத்தினார்.

முதலாளித்துவ சோசலிச கட்சி (Parti Socialiste-PS) மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சியான புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (Nouveau Parti Anticapitaliste-NPA) போன்ற "இடது" என்று அழைக்கப்படுவதிடமிருந்து எவ்வித தீரமான அரசியல் எதிர்ப்பையும் அது முகங்கொடுக்கவில்லை என்பதால், அரசாங்கத்தால் இத்தகைய கொள்கைகளை எடுத்துச்செல்ல முடிகிறது. மேற்கூறிய கட்சிகள் சார்கோசியின் ஜனநாயக-எதிர்ப்பு முறைமைகள் மற்றும் சமூக மக்கள் விரோத கொள்கைகளோடு உடன்படுகின்றன. இத்தகைய சக்திகளால் சார்கோசியின் நவ-பாசிச கொள்கைகளை எதிர்ப்பதில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த முடியாது என்பதுடன் அவை அதற்கு விரோதமாகவும் இருக்கின்றன.

அவருடைய ஆலோசகர்கள் பத்திரிகைகளுக்கு தெரிவித்த விதத்தில், இத்தகைய கொள்கைகள் அரசியல்ரீதியாக நவ-பாசிச தேசிய முன்னணியை (Front National -FN) ஊக்குவிக்கின்றன. எவ்வாறிருப்பினும், தம்முடைய பாசிச முறைமைகளுக்கு "இடதிடமிருந்து" எவ்வித முக்கிய எதிர்ப்பும் இல்லை என்பதில் நனவுபூர்வமாக உள்ள சார்க்கோசி, நவ-பாசிச வாக்குகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க, மேலும் கூடுதலாக வலதிற்கு நகர விரும்புகிறார் என்பதையே அவர்களின் கருத்துக்கள் தெளிவாக்குகின்றன.

செப்டம்பர் 30இல், நாளிதழ் Le Parisien ஒரு கட்டுரையை பிரசுரித்தது. வரவிருக்கும் 2012 ஜனாதிபதி தேர்தல், 2002 ஜனாதிபதி தேர்தலைப் போன்ற அதேநிலைமையைத் தான் தோற்றுவிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேர்தல் கன்சர்வேடிவ் Jacques Chirac க்கும், பிரதம மந்திரி லியோனெல் ஜோஸ்பனை ஓரங்கட்டிவிட்டு முன்னுக்கு வந்திருந்த தேசிய முன்னனியின் ஜோன்-மரி லு பென்னுக்கும் இடையில் தேவையில்லாமல் இரண்டாம் சுற்றை உருவாக்கியது. எவ்வாறிருப்பினும், 2012இல் UMPஐ தேசிய முன்னணி ஓரங்கட்டிவிடும் என்று சார்கோசியின் ஆலோசகர்கள் அஞ்சுகிறார்கள்.

தேசிய முன்னணியின் தலைவியாக வளர்ந்து கொண்டிருக்கும் லு பென்னின் மகள் மரியான் அளிக்கப்பட்ட கருத்துக்களை Le Parisien மேற்கோள் காட்டி இருந்தது: “வலதின் பிரிவுகள் மற்றும் அதன் முறிந்துபோன வாக்குறுதிகளால் ஒருவேளை நாம் இரண்டாம் சுற்றுக்கு வந்திருக்கலாம். இரண்டாம் சுற்றில் வெற்றிபெற நம்முடைய நோக்கம், 16 முதல் 20 சதவீத வாக்குகளைப் பெறுவதற்கு இடையில் இருக்க வேண்டும்." UMPஇன் அனுதாபிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஜோன்-மரி லு பென்னின் மகள் மீது நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள் என்று Le Parisien குறிப்பிட்டது.

மார்ச்சில் நடந்த பிராந்திய தேர்தலில் 13 சதவீதத்தை எட்டியதன் மூலமாக தேசிய முன்னணியின் வாக்கு கணிசமாக உயர்ந்தது. Le Parisien குறிப்பிட்டதாவது: “மார்ச் மாத பிராந்திய தேர்தல்கள் தீவிர-வலதின் உயர்வால் பாத்திரப்படுத்தப்பட்டது. தம்முடைய கிறனோபிள் உரையுடன் இந்த கோடையில் உச்சத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி... முழுமையாக வலதின் பக்கம் திரும்பியுள்ளார். உண்மையில் மரீன் லு பென்னை தமக்கொரு அச்சுறுத்தலாக நிக்கோலா சார்க்கோசி காண்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்கு பதினெட்டு மாதங்களுக்கு முன்னர், 2007இல் [சார்கோசிக்காக] வாக்களித்தவர்களை மீண்டும் வென்றெடுக்க, தேசிய முன்னணியின் அரசியல் மாகாணத்தில் போட்டியிடுவது என்று சார்கோசியின் மூலோபாயவாதிகள் தீர்மானித்திருந்தார்கள். இந்த கோடையின் சட்ட-ஒழுங்குமீறலே இதற்கு சான்றாக உள்ளது."