சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Gujarat court frames Muslims for train fire used to incite 2002 Gujarat pogrom

2002 குஜராத் படுகொலையை தூண்டப் பயன்பட்ட இரயில் எரிந்த சம்பவத்தில் முஸ்லீம்கள் தான் குற்றவாளிகள் என்கிறது நீதிமன்றம்

By Kranti Kumara and Keith Jones
12 March 2011
Use this version to print | Send feedback

குஜராத் மாநிலத்தின் சபர்மதி மத்திய சிறைச்சாலைக்குள் செயல்படும் மாநில விரைவு நீதிமன்ற பெஞ்சு, கோத்ராவில் 2002 பிப்ரவரி 27 அன்று நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் S6 பெட்டி எரிந்த சம்பவத்தில் 31 முஸ்லீம்கள் மீது குற்றத்தை உறுதி செய்துள்ளது. “முன்கூட்டித் திட்டமிட்ட கிரிமினல் சதித் திட்டத்தின் பகுதியாகவே அவர்கள் இவ்வாறு செய்தனர் என்றும் கூறியுள்ளது.

59 பேர் உயிரிழக்கக் காரணமான (இவர்களில் அநேகமானோர் இந்து மேலாதிக்கவாத அமைப்பினர்) இந்த நெருப்புப் பற்றிய சம்பவம்,  மாநிலத்தின் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தால் தூண்டப்பட்ட 2002 குஜராத் படுகொலை என்கிற சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நினைவிலும் வெறுக்கத்தக்க சம்பவங்களில் ஒன்றுக்கு சாக்காய் அமைந்தது. அன்றும் குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி தான் இருந்தார். இந்த ரயில் எரிப்புச் சம்பவத்திற்குக் காரணம்முஸ்லீம்களே என்று அவர் கூறியதன் பின் வெடித்த மூன்று நாள் முஸ்லீம்-விரோத வன்முறையில் குறைந்தது 1200 பேர் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 2,000 வரை இருக்கலாம் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இன்று வரை, குஜராத் படுகொலைச் சம்பவத்தின் போது அவர்களின் வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட பத்தாயிரக்கணக்கான முஸ்லீம்கள் பரிதாபகரமான நிலையிலுள்ள அகதி முகாம்களில் தான் காலம் கழித்து வருகின்றனர்

2002 படுகொலையை மழுப்புவதற்கும் மன்னித்து விடுவதற்கும் அரசின் அரசியல் மற்றும் சட்ட ஸ்தாபிப்பின் தரப்பில் செய்யக் கூடிய ஒரு திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியே கோத்ரா வழக்கில் குஜராத் மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும். சொரணையற்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கமும் உச்சநீதிமன்றமும் இதற்கு உதவியாகவும் உடந்தையாகவும் உள்ளன.

படுகொலை நடந்த இந்த ஒன்பது ஆண்டுகளில், முஸ்லீம் விரோத வன்முறைக்குத் தலைமையான ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் குற்றவாளிகளில் ஒருவர் கூட நீதியின் முன் கொண்டுவரப்படவில்லை. பதிலாக, மத்திய அரசாங்கமும் உச்சநீதிமன்றமும் தொடர்ச்சியாய் பலனற்ற அதிகாரமற்ற விசாரணைகள் மற்றும் விசாரணைக் கமிஷன்களைத் தான் தோற்றுவித்தன, 1992ல் இந்து வலது சாரிகளால் அயோத்தியில் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மதக் கலவரத்திற்கும் 1984ல் அக்டோபர் 31-நவம்பர் 3 வரையான சீக்கிய எதிர்ப்புக் கலவரத்திற்கும் இந்திய அரசு அளித்த எதிர்வினையை துயரமான வகையில் மறுஒளிபரப்பு செய்த வகையாக இது இருந்தது

இப்போது கோத்ரா தீர்ப்பால் 31 முஸ்லீம்கள் (அநேகம் பேர் ஏழைகள்) கோத்ரா எரிப்புக்கு குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நெருப்பு திட்டமிட்டுச் செய்த செயலாகவே இல்லாமல் இருக்கலாம் என்கிற நிலையில், அதுமுன்கூட்டித் திட்டமிட்ட கிரிமினல் சதியின் விளைவு என்பதெல்லாம் மிகை.

31 “பயங்கரவாதிகளுக்கும் முன்னுதாரணமானதொரு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறிய அரசாங்கத் தரப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.ஆர்.படேல் பதினோரு பேருக்கு மரண தண்டனையும் இன்னும் இருபது பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்

கோத்ரா வழக்கு ஒரு சட்டரீதியான கேலிக்கூத்து: போலிசார் சாட்சிகளைத் தொந்தரவு செய்தனர், ஆதாரங்களை ஜோடித்தனர், அரசாங்கத் தரப்பின் முக்கியமான சாட்சியங்கள் தங்களது சாட்சியத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர் அல்லது தாங்கள் கூறியது பொய்யென ஒப்புக் கொண்டனர், அரசாங்கத் தரப்பு வாதத்தில் இருந்த பல பெரும் ஓட்டைகளை நீதிபதி கண்டுகொள்ளவில்லை.

வழக்கு எந்த அளவுக்கு முரண்பாடுடையதாக இருந்தது என்றால் 31 பேரது குற்றத்தை உறுதி செய்த நீதிபதி படேல் மற்ற 63 பேரை விடுவிக்கத் தள்ளப்பட்டார். விடுவிக்கப்பட்டவர்களில் மவுலானா உமர்ஜி என்னும் முஸ்லீம் மதகுருவும் ஒருவர். இவர் தான் சதித்தீட்டத்தை தீட்டியளித்தவர் என்பதாய் வாதிடப்பட்டிருந்தது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியை கொளுத்துவதற்கு “முன்கூட்டித் திட்டமிடப்பட்ட ஒரு கிரிமினல் சதி” இருந்தது என்று கண்டுபிடித்ததன் மூலம், நீதிபதி படேல், கோத்ரா ரயில் எரிந்தது குறித்து மோடியின் பாஜக அரசாங்கம் கூறிய ஆத்திரமூட்டும் வகுப்புவாத அடிப்படையிலான கூற்றுகளுக்கு நீதித்துறையின் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்.

இதற்கு அவர் போலிஸ் மற்றும் அரசாங்கத் தரப்பின் எண்ணற்ற நம்பமுடியாத கூற்றுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததோடு, அந்த ரயில் எரிந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒன்று தான் என்று மத்திய அரசாங்கத்தின் விசாரணை ஒன்று கூறியிருந்தை உதாசீனப்படுத்தவும் வேண்டியிருந்தது. அத்துடன், இந்த நெருப்பு ஒரு பயங்கரவாத சதியின் விளைவு அல்ல என்று பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மறுஆய்வுக் கமிட்டி ஒன்று அளித்திருந்த அறிக்கையை 2009ல் குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருந்ததையும், அதேபோல் ’சதியின் “மூளை”யாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதில் சம்பந்தம் இல்லை’ என்று தானே கண்டுபிடித்த விவரத்தோடு சம்பந்தப்பட்டவையையும் கூட அவர் உதாசீனப்படுத்த வேண்டியிருந்தது.

கோத்ரா ரயில் நிலையத்தில் மூண்ட வாக்குவாதம்

தனது தீர்ப்பு முடிவுக்கு வர, நீதிபதி படேல், தீப்பற்றுவதற்கு சற்று முன்னதாக கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மத அடிப்படையிலான வாக்குவாதத்தின் முக்கியத்துவத்தை மறுத்து, முந்தைய நாள் இரவு கோத்ரா முஸ்லீம்கள் சந்தித்துக் கொண்ட ஒரு கூட்டம் குறித்து சந்தேகத்திற்கிடமான சாட்சிகள் கூறிய நிரூபணமில்லாத கூற்றுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

பிப்ரவரி 27 அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் எப்போதும் போல் கோத்ராவில் நின்றபோது, தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த இந்து கர சேவகர்கள், முஸ்லீம் தேநீர் மற்றும் திண்பண்ட வியாபாரிகளைச் சீண்டிய சமயத்தில் இந்த சண்டை மூண்டிருந்தது. விஸ்வ இந்து பரிஷத் (VHP - இந்து உலக கவுன்சில்) மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆகியவற்றைச் சேர்ந்த சில கரசேவகர்கள் தனது அம்மாவுடன் இருந்த ஒரு முஸ்லீம் சிறுமியைப் பார்த்து அச்சுறுத்தும் வகையில் அசிங்கமாய் எதையோ கூறினர். மற்ற கர சேவகர்கள் எல்லாம் “முஸ்லீம்களைக் கொல்லு” என்று சத்தம் போட்டுக் கொண்டே ஒரு ஆளைப் போட்டு அடித்துக் கொண்டிருந்ததைக் கொண்டு அந்தச் சிறுமியும் அவரது அம்மாவும் ரயில் பிளாட்பாரத்தை விட்டு ஓடி விட்டனர்.

இதற்குள் நூற்றுக்கணக்கில் பெரிய கோபத்துடனான கூட்டம் அங்கு சேர்ந்து விட்டிருந்தது. கர சேவகர்கள் இழிவுபடுத்திய அந்த இரண்டு முஸ்லீம் பெண்களும் போய் விட்டிருந்ததால், அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கக் கூடுமோ என்ற அச்சம் பரவியது. அந்த கூட்டம் இந்து-வகுப்புவாதிகளை விரட்டியது, அவர்களைக் கல்லால் எறிந்து ரயிலுக்குள் ஏறிக் கொள்ளும்படி செய்தது. இந்த வாக்குவாதத்தின் போது ரயிலின் அவசரச் சங்கிலி பலமுறை பிடித்து இழுக்கப்பட்டு ரயில் நின்று போகச் செய்யப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், S-6 பெட்டியில் தீப்பற்றியது, அப்பெட்டி முழுக்க ஏறக்குறைய கரசேவகர்கள் மட்டுமே இருந்தனர்.

கல்லெறியில் இருந்து தப்பிக்க பயணிகள் பெட்டியின் இரும்பு சன்னல்களையும் மற்றும் பெட்டியின் கதவுகள் அனைத்தையும் இறுக்க மூடியிருந்ததால் அதுவே அவர்களுக்கு மரணக்குழி போல் ஆகி விட்டது என்பது உயிர் பிழைத்தவர்களும் ரயில் பெட்டியை சோதித்த பல்வேறு விசாரணையாளர்களும் கூறியதில் இருந்து தெரிய வந்தது.

2002 மே மாதத்தில் போலிஸ் இரயில் எரிந்தது தொடர்பான தங்களது முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது, அவர்கள் கோத்ரா நிலையத்தில் நடந்த வாக்குவாதத்தை அலட்சியமாய் உதாசீனம் செய்து விட்டு ரயில் எரிந்ததற்கு ’முன்கூட்டிய ஒரு சதி’யைக் காரணமாக்கினர்.

இது குஜராத் படுகொலைக்கு முன்னும் பின்னும் முதலமைச்சர் மோடியும் அவரது பாஜக மாநில நிர்வாகமும் கூறிய கருத்துகளுடன் ஒத்துப் போனது. மோடி தான், கோத்ரா சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணை துவங்குவதற்கு முன்பே, இது ஒரு “பயங்கரவாத” நடவடிக்கை என்று வெளிப்படையாய் பிரகடனம் செய்தார். மோடியின் அரசியல் தூண்டுதல்பெற்ற கூற்றுகள் குஜராத் ஊடகங்களால் பெரும் பிரபல்யம் பெற்று அடுத்த நாளில் மாநிலம் முழுவதற்கும் ஒரு பந்த் அல்லது கதவடைப்பு செய்ய அவர் அழைப்புவிடுவதற்கு அவருக்கு ஊக்கமளித்தது. போலிசார் கைகட்டிக் கொண்டு நிற்க அல்லது அவர்களும் முஸ்லீம்-விரோத வன்முறையை ஊக்கப்படுத்த அந்த கதவடைப்பு விரைவாக ஒரு படுகொலையாக ஆனது.

இதற்குப் பின்னர், மோடியும் பாஜகவும் - இதில் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் உண்டு - திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கோத்ரா தாக்குதல் தான் குஜராத்தின் இந்து மக்களைத் தூண்டி விட்டதாகக் கூறி முஸ்லீம்-விரோத வன்முறையை மன்னிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் முனைந்தனர்.

மே 2002ல் போலிசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை கண்ணால் கண்டதாய் கூறப்பட்ட ஒன்பது சாட்சிகளது கூற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது, இவர்கள் அனைவருமே பாஜகவின் உள்ளூர் தலைவர்கள். பிப்ரவரி 27 அன்று காலையில் இந்த ஒன்பது பேரும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்ததாகவும் S-6 பெட்டி எரிவதற்கு முன்பாக அதில் பெருமளவுக்கு எரிதிரவங்கள் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணால் கண்டதாகவும் இந்தக் குற்றப் பத்திரிகை தெரிவித்தது. இந்த சதிச்செயலில் சம்பந்தப்பட்டதாக 41 முஸ்லீம்களை கோத்ரா பாஜக தலைவர்கள் அடையாளம் காட்டினர். கோத்ரா நகராட்சியைக் கைப்பற்றுவதற்கான கடுமையான போட்டியில் இவர்களுக்கு எதிரிகளாய் இருந்த பல முஸ்லீம் நகரசபைக் கவுன்சிலர்களும் இதில் அடங்குவர்.

அந்த ஒன்பது பாஜக தலைவர்களும் பொய் சொல்லியிருந்தது தெரிய வந்த பிறகு இறுதியில் நீதிபதி படேல் அவர்களின் சாட்சியங்களை ஒதுக்கி வைக்கத் தள்ளப்பட்டார். பெட்டி பூட்டப்பட்டிருந்தது என்கிற தீர்மானமான ஆதாரத்துடன் இவர்கள் கூறிய கருத்து முரண்பாடாய் இருந்தது. அதனை விட அப்பட்டமான உண்மை டெகல்கா செய்திப் பத்திரிகையின் ஒரு செய்தியில் வெளிவந்தது. அந்த ஒன்பது பாஜக தலைவர்களில் இரண்டு பேரின் பேச்சினை இப்பத்திரிகை ஒலிப் பதிவாக வைத்திருந்தது. இதில் அந்த இருவரும் தாங்கள் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் அன்று இருக்கவில்லை எனவும், “இந்துத்வாவின் நன்மை கருதி” அதாவது இந்து மேலாதிக்கத்தின் நன்மை கருதி, போலிசின் உதவியுடன் தாங்கள் இவ்வாறு ஜோடிக்கப்பட்ட வகையில் சாட்சியமளித்ததாகவும் தெரிவித்திருந்தனர்.   

இவ்வாறாக நீதிபதி படேல் தனது தீர்ப்பில் பாஜகவின் உள்ளூர் தலைமையால் தவறாகக் குற்றம்சாட்டப்பட்ட 41 முஸ்லீம்களையுமே விடுவிக்கத் தள்ளப்பட்டார், எப்போது?, இந்த 41 பேரும் ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து அந்த ஒன்பது ஆண்டுகளின் பெரும்பகுதியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்னும் கொடூரமான சட்டத்தின் ராட்சசப் பிடியில் சிக்கி துயரப்பட்டு முடிந்த பின்.

இருந்தபோதிலும், கோத்ரா பாஜக தலைவர்களின் பொய்களை அடிப்படையாகக் கொண்டு 2002 மே மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட போலிஸ் குற்றப் பத்திரிகையை சட்டப்பூர்வமாய் ஏற்று கோத்ரா ரயில் பெட்டி எரிந்தது கிரிமினல் சதி தான் என்கிற அரசாங்கத் தரப்புடன் நீதிபதி படேல் முதலாவதாய் சேர்ந்து கொண்டார்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட சதிக் குற்றச்சாட்டின் சாரமாய் அமைந்தது குஜராத் மாநில தடய அறிவியல் ஆய்வக (FSL) விசாரணை ஆகும். 2002 மே மாதத்தில் எரிந்த ரயில் பெட்டியிலான தங்களது முதலாவது ஆய்வுக்குப் பிறகு, இந்த விசாரணையாளர்கள், வெளியிலிருந்து பெட்டிக்குள்ளாக எந்த எரிகிற திரவத்தையும் ஊற்றியிருப்பதற்கு ஆதாரம் எதனையும் தாங்கள் காணவில்லை என்றனர். ஆனாலும், பக்கெட் பக்கெட்டாய் தண்ணீரைக் கொண்டு நீண்ட பல பரிசோதனைகளைச் செய்து பார்த்த பின் FSL சட்டெனத் தர்க்கத்தில் தாவி, யாரோ ஒரு நபரோ அல்லது சில நபர்களோ பெட்டிக்குள் பலவந்தமாய் நுழைந்து சுமார் 60 லிட்டர் வரை எரிதிரவத்தை ஊற்றியிருக்கலாம் என்று கூறுகிறது. FSL கூறுவதன் படி, இதன் பிறகு தான் S-6 பெட்டி எரிக்கப்பட்டது.

ஆயினும், இந்த விளக்கத்தில் ஒரு பெரிய ஓட்டை அப்படியே இருந்தது. முழுக்க மூர்க்கமான இந்து அடிப்படைவாதிகள் நிரம்பிய ஒரு பெட்டிக்குள் எப்படி சதிகாரர்கள் நுழைவது சாத்தியமாக முடிந்தது? இதற்கு விளக்கம் கூற, போலிசார் ஒரு “நட்சத்திர சாட்சியை” 2002 ஜூலையில் முன்நிறுத்தினர். பரியா என்னும் தேநீர் வியாபாரி தான் அவர். இவரது சாட்சியம் தான் நீதிபதி படேலின் தீர்ப்பில் பெரும் பங்கு வகித்திருந்தது. முஸ்லீம்கள் ரயிலுக்கு நெருப்பு வைத்ததைப் பார்த்ததாக சொன்னதோடு மட்டும் பரியா நிற்கவில்லை. ரயிலுக்கு அந்த எரிதிரவத்தை எடுத்துச் செல்ல அவர்கள் பரியாவிடம் உதவி கேட்டதாகவும், அதேபோல் முஸ்லீம்கள் பலரும் சேர்ந்து கரசேவகர்கள் இருந்த S6 பெட்டியை S7 பெட்டியில் இருந்து பிரித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

பரியாவின் சாட்சியம் நம்பந்தகுந்ததாய் இல்லை என்பதைப் பார்த்தாலே தெரியும். மதரீதியான தாக்குதலுக்குச் செல்லும்போது முஸ்லீம்கள் ஏன் ஒரு இந்துவிடம் இருந்து உதவி கோரப் போகிறார்கள், அதுவும் ஒரு மதக் கலவரத்தின் நடுவில்? இன்னும் இருக்கிறது. ரயில்நிலையத்தில் மோதல் வெடித்த போதும் அதனையடுத்து ரயில் பெட்டி எரிந்த சமயத்திலும் தனது மகன் வீட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருந்ததாய் பரியாவின் அம்மா டெகல்கா பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

பானர்ஜி கமிஷன் அறிக்கை மூடிமறைப்பு

2004ல், முந்தைய பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ரயில்வே நிர்வாகம் நெருப்பின் காரணத்தை விசாரிப்பதற்கு தனக்கு உள்ள சட்டரீதியான கடமைப்பாட்டை மேற்கொள்வதற்குத் தவறியதாகக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் கோத்ரா ரயில் பெட்டி எரிந்தது தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி யு.சி.பானர்ஜி தலைமையில்  ஒரு கமிஷனை நியமித்தார். 2006ல் நீதிபதி பானர்ஜி அளித்த ஒரு அறிக்கையில் ரயில் எரிந்ததில் முன்கூட்டி திட்டமிட்டு சதி ஏதும் நிகழ்த்தப்பட்டதான எந்தக் கருத்தையும் அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். S-6 பெட்டியில் கரசேவகர்கள் சட்டத்தை மதிக்காமல் பயன்படுத்திக் கொண்டிருந்த சமையல் ஸ்டவ்கள் ஒன்றோ அல்லது கூடுதலானவையோ களேபரத்தில் தள்ளி விடப்பட்ட போது தான் இந்த நெருப்பு எதிர்பாராமல் பற்றியிருக்கலாம் என்று, தடயவியல் நிபுணர்களின் சாட்சியத்தின் அடிப்படையில், அந்த கமிஷன் முடிவுக்கு வந்தது. முஸ்லீம்கள் கோபமாகக் கல்லெறிந்து கொண்டிருந்த நிலையில் பெட்டிக்கு உள்ளே நிலவிய களேபரமான சூழ்நிலையை எண்ணிப் பார்த்தால் இது பொருந்துகிறது. 

மேலே கூறியதைப் போன்று, நெருப்பு எதிர்பாராமல் நேர்ந்த ஒன்று என்கிற பானர்ஜி கமிஷனின் முடிவை நீதிபதி படேல் தனது தீர்ப்பில் உதாசீனப்படுத்தியிருந்தார். அதற்குப் பதிலாய் குஜராத் அரசாங்கம் உருவாக்கிய நானாவதி கமிஷன் கூறியவற்றின் மீது அவர் சாய்ந்து கொண்டார். குஜராத் படுகொலையைத் தூண்டி விட்டதில் தங்களின் பாத்திரத்தை மூடிமறைக்க பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எந்த அளவுக்கு செல்லத் தயாராய் இருக்கின்றன என்பதையும் அதேபோல் காங்கிரஸ் கட்சித் தலைமையும் அதற்கு உடந்தையாகவே இருக்கிறது என்பதையும் தான் இந்த போட்டிக் கமிஷன்களின் சிக்கலான விவரிப்புகள் எல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.  பானர்ஜி கமிஷனுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் உறுதியான ஆதரவளிக்கவில்லை என்கிற உண்மையில் இருந்து அனுகூலம் பெற்றுக் கொண்ட குஜராத் அரசாங்கமும் பல்வேறு பாஜக சார்புவாதிகளும், அந்த கமிஷன் ரயில்வே அமைச்சரின் ஆதிக்க வரம்புக்கு விஞ்சிய ஒன்று என்றும் வெளிப்படையாக உச்ச நீதி மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதல்ல என்றும் காரணம் கூறி, குஜராத் உயர் நீதி மன்றம் அதனை “சட்டவிரோதமானது, அரசியல்சட்ட விரோதமானது, அதனால் செல்லாது” என அறிவிக்கச் செய்யும்படி செய்து கொண்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பானர்ஜி அறிக்கையை சமர்ப்பிப்பதை இது சட்டப்பூர்வமாக தடை செய்து விட்டது என்றாலும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை.

சுருக்கமாய்ச் சொன்னால் கோத்ரா தீர்ப்பு ஒரு சட்டரீதியான அரசியல்ரீதியான அட்டூழியம் - ஒரு வரலாற்றுக் குற்றத்தை மன்னிப்பதற்கும், அதற்கு அங்கீகாரமளிப்பதற்கும் நோக்கம் கொண்ட ஒரு ஜோடிப்பு. கோத்ரா ரயில் எரிந்த சம்பவம் தொடர்பான ஒரே சதி என்னவென்றால், டெகல்கா பத்திரிகையாளரான ஆஷிஷ் கேதன், மிகச்சரியாக அறிவித்ததைப் போன்று, ரயில் எரிப்பில் முஸ்லீம்களை மாட்டி விடுவதற்கு நரேந்திர மோடி அரசாங்கத்தால் வைக்கப்பட்ட சதி மட்டுமே. படேலின் தீர்ப்பு இந்து மேலாதிக்கவாதக் கட்சியான பாஜகவிடம் இருந்து போற்றுதலைப் பெற்றது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பரவசமடைந்த குஜராத் பாஜக அரசாங்கம் கூறியது: “இது ஒரு முன்கூட்டித் திட்டமிடப்பட்டு துல்லியமாக நிறைவேற்றப்பட்ட சதி என்பதைத் தீர்ப்பு நிறுவியிருக்கிறது, எனவே மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு இதன் மூலம் நிரூபணம் பெற்றிருக்கிறது.” 

இதனிடையே, காங்கிரஸ் கட்சி ஒரு முழுக்க கோழைத்தனமான சமரசகரமான அறிக்கையை விநியோகித்தது: “கோத்ரா விவகாரத்தில் முழுக்க நாங்கள் சொல்லி வந்திருப்பது என்னவென்றால், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதைத் தான் நாங்கள் சொல்லி வந்திருக்கிறோம். எனவே, அப்பாவிகள் சிறையில் இருந்திருக்கிறார்கள், அவர்களில் சிலருக்குப் பார்வை கூட கிடையாது, இன்னும் சிலர் சின்னப் பையன்கள் என்கிற எங்களது நிலைப்பாட்டை இத்தீர்ப்பு நிரூபணம் செய்திருக்கிறது.”

நாடாளுமன்றத்தின் இடது முன்னணித் தொகுப்பிற்குத் தலைமை கொடுக்கிற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி இந்த அதிர்ச்சிகரமான நீதிமன்றக் கேலிக்கூத்தைக் கண்டித்து எந்த அறிக்கையும் விடவில்லை. சென்ற அக்டோபர் மாதத்தில் பாபர் மசூதி வழக்கில் தெளிவில்லாத மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த தரைமட்டமாக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தின் பெரும் பகுதியை இந்து மதவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளுக்கு வழங்குகின்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதி மன்றம் வழங்கியபோது, CPM கட்சி, ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் தாங்கிப் பிடிப்பதில் நீதித்துறையில் தான் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தி அதன் முடிவுகளுக்கு அனைத்து இந்தியர்களும் தலைவணங்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு அறிக்கையை வழங்கியது.

இந்தியாவில் இந்த மட்டத்திற்கு முதலாளித்துவ அரசியல் அரசியல்ரீதியாய் புழுத்து நாறிவிட்டிருக்கிறது. பெரிய கட்சிகள் கோத்ரா ஜோடிப்பை கண்டனம் செய்யத் தவறின என்பது மட்டுமல்ல. அப்படியே கோத்ரா நெருப்பு முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட ஒரு சதியின் விளைவாக இருந்திருந்தால் கூட, குஜராத்தின் ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் அதற்குப் பொறுப்பாக்கி அவர்களுக்கு எதிராக கலவர வன்முறையைத் தூண்டி விட்ட பாஜக மற்றும் அதன் இந்து வலதுசாரிக் கூட்டாளிகளின் மிகப் படுபயங்கரக் குற்றத்தை அது, மன்னிப்பது அல்லது அங்கீகாரமளிப்பது என்பதற்கே போக வேண்டாம், வலுவிலக்கச் செய்து விடாது என்கிற அடிப்படையான அம்சத்தைக் கொண்டு பாஜக மற்றும் இந்து வலதுசாரிகள் போடும் கூச்சலுக்கு இக்கட்சிகளில் எதுவும் பதிலிறுப்பு செய்யவும் இல்லை.

இந்த ஆசிரியர்கள் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்கள்

பாபர் மசூதி தீர்ப்பு: இந்து மேலாதிக்கவாதிகளுக்கு இந்திய உயர்நீதி மன்றம் துணைபோகிறது