சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Stock market panic deepens euro crisis

பங்குச்சந்தை பீதி யூரோ நெருக்கடியை ஆழப்படுத்துகிறது

By Peter Schwarz
16 August 2011

use this version to print | Send feedback

கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள பீதி, உலக நிதியியல் அமைப்புமுறையை 2008 பொறிவின் விளிம்பிற்கு இட்டுச்சென்ற எந்தவொரு பிரச்சினையும் தீர்ந்துவிடவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. அதற்கு நேர்மாறாக, கடந்த மூன்று ஆண்டுகளில் உலக பொருளாதார நெருக்கடி இன்னும் ஆழமடைந்துள்ளது.

வாரயிறுதியில் Süddeutsche Zeitung இதழில் வெளியான ஒரு தலையங்கம், உச்சகட்டமாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு இட்டுச்சென்ற 1931 பெருமந்த நிலைக்கு சமாந்தரமாக உள்ளதாக எழுதியது. 1929 வோல் ஸ்ட்ரீட் முறிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், மோசமான நிலைமை கடந்துவிட்டதாக பல பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கையுடன் எழுதினார்கள்.

 என்னவொரு கற்பனைஇன்றைய நெருக்கடி பற்றி ஒருவர் கூறவேண்டுமானால், இரண்டாவது உலக பொருளாதார நெருக்கடி என்று தான் கூறவேண்டும். இதற்கு சமாந்தரமாக என்னவொரு கவலைப்படக்கூடிய எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன,” Süddeutsche Zeitung இதழ் குறிப்பிடுகிறது. இதற்கிடையில், “எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் போலவே, வங்களின் பொறிவு, அரசுகளின் திவால்நிலைமை, மோசமான கடன்விகிதங்கள் அல்லதுஎல்லாவற்றையும்விட படுமோசமாகயூரோ பிராந்தியத்தின் பொறிவுஎன பல நெருக்கடி அலைகள் தொடரும் என்பது தெளிவாக உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவுக்குப் பின்னர், அரசியல்வாதிகள் தாங்கள் 1931 இன் படிப்பினைகளைப் பெற்றிருப்பதாகவும், பணவீக்க கொள்கைக்குள் உலக பொருளாதாரத்தை திணறடிக்கும்படியான தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம் என்றும் கூறி எதிர்த்தனர். ஆனால் வங்கி பிணையெடுப்புகள், மீட்பு பொதிகள் மற்றும் குறைந்த வட்டிவிகிதங்கள் மூலமாக, எந்த வங்கிகள் அவற்றின் பொறுப்பற்ற குற்றவியல்தனமான ஊகவணிகத்தின் மூலமாக நெருக்கடியைத் தூண்டிவிட்டிருந்தனவோ, அதே வங்கிகளுக்குள் அவர்கள் அரசு கருவூலங்களில் இருந்து பில்லியன்களை பாய்ச்சினர்.

இப்போது அரசு வரவு-செலவு திட்டம் நெருக்கடியின் மையத்தில் வந்து நிற்கிறது. வங்கிகளுக்கு அளித்த உதவிகளால் அரசு-கடன் கூர்மையாக அதிகரித்துள்ளது. சான்றாக, அயர்லாந்து அரசு-கடன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, ஸ்பெனினுடையது இரண்டு மடங்கு, அமெரிக்காவினுடையது மூன்றில் ஒரு மடங்கும், ஜேர்மனியினுடையது ஐந்தில் ஒரு மடங்கும் அதிகரித்துள்ளன. வங்கிகள் இப்போது தலைகீழாக மாற்றி பேசுகின்றன. முதலில் அரசு நிதியைப் பயன்படுத்தி மீட்டெடுக்கப்பட்ட அவை, இப்போது கடுமையான செலவின-வெட்டு முறைமைகள் மூலமாக வரவு-செலவு திட்டங்கள் குறைக்கப்பட வேண்டுமென கோருகின்றன.

நிதியியல் சந்தைகளின் கட்டளைகளுக்கு மண்டியிட்டுள்ள அரசாங்கங்கள், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவற்றிற்கு முன்பிருந்த அரசாங்கங்களைப் போலவே பிரதிபலிப்பை  காட்டுகின்றன. அவை பெருமந்த நிலைமையின் படிப்பினைகள் குறித்து வாய்திறப்பதில்லை. அதற்கு மாறாக, புதிய சிக்கன முறைமைகளால் பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளி, அவை பரந்த மக்கள் அடுக்குகளின் வாழ்வாதாரங்களை அழிக்கின்றன.

சமீபத்திய நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள பீதியை இந்த சூழலில் இருந்து பார்க்க வேண்டும். மதிப்பீட்டு பட்டியலில் Standard & Poor அமெரிக்காவை கீழிறக்கியமை மற்றும் ஐரோப்பாவில் ஆழ்ந்துவரும் கடன் நெருக்கடி ஆகியவையே இதற்கான தூண்டுதலாக இருந்தது.

ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரஸால் ஒப்புக்கொள்ளப்பட்ட சமூக வெட்டுக்கள் போதுமானதாக இல்லையென்று நிதியியல் சந்தைகள் கருதியதால் அமெரிக்க அராசங்க பத்திரங்கள் மீது Standard & Poor அதன் மதிப்பைக் குறைத்தது. ஐரோப்பாவில், கிரீஸ், அயர்லாந்து மற்றும் போர்ச்சுக்கல் போன்ற விளிம்பிலுள்ள நாடுகளில் பேரழிவுமிக்க சிக்கன நடவடிக்கைகள் நிதியியல் சந்தைகளுக்கு திருப்திகரமாக இல்லாததால் ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் அரசாங்க பத்திரங்கள் ஊகவணிகர்களின் இலக்காகின.

வெறுமனே யூரோ மண்டலத்தின் விளிம்பிலுள்ள சிறிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும், சமீபத்திய தசாப்தங்களின் பெறப்பட்ட சமூக வெற்றிகளில் கடைசியாக எஞ்சியுள்ளதும் அழிக்கப்படும் வரையில், முதலீட்டாளர்கள் ஓயப்போவதில்லை என்பதை நிதியியல் சந்தைகளின் ஓட்டம் குறித்துக்காட்டியது.

இந்த தகவலைப் புரிந்துகொண்ட அரசியல் மேற்தட்டு உடனடியாக அதற்கு பிரதிபலிப்பு காட்டியது. ஏற்கனவே சமீபத்தில் தான் 79 பில்லியன் யூரோ செலவினங்களை வெட்டியிருந்த இத்தாலிய அரசாங்கம், கடந்தவாரம் கூடுதலாக 45 பில்லியன் யூரோ வெட்டு நடவடிக்கைக்கு உடன்பட்டது. நிதியியல் சந்தைகளுக்கு மறுஉத்தரவாதம் வழங்க ஜேர்மன் அதிபரும், பிரெஞ்சு ஜனாதிபதியும் ஒரு சிறப்பு கூட்டத்தில் இன்று (16.08.2011) சந்திக்க ஒப்புக் கொண்டனர்.

ஐரோப்பிய பொதுப்பத்திரங்களை (common European bonds) அறிமுகப்படுத்துவதென்பது, அதாவது அனைத்து யூரோ பிராந்திய நாடுகளும் கூட்டாக கடனை வழங்குவதென்பது, நிதியியல் விவாதங்களில் இடம்பெற்றிருக்கும் முக்கிய தலைப்பாகும். யூரோ-பத்திரங்கள் என்றழைக்கப்படுபவை, கிரீஸ் போன்ற நாடுகள் ஜேர்மன் கொடுக்கும் அதே வட்டிவிகிதத்தில் அவற்றின் கடனை அடைக்க  அனுமதிக்கும். இதனால் கிரீஸ் இதற்கு முன்னர் அது கொண்டிருந்ததை விட மிக குறைவான வட்டிவிகிதத்தை முகங்கொடுக்கும். அதேவேளை ஜேர்மனி அதன் கடன்களின்மீது உயர்ந்த வட்டிவிகிதங்களை முகங்கொடுக்கும்.

இதனால் தான் ஜேர்மனி இதுவரையில் இதுபோன்ற யூரோ-பத்திரங்களை ஏற்க ஆணித்தரமாக மறுத்து வந்தது. ஏனைய பொருளாதாரங்களை விட ஜேர்மன் பொருளாதாரம் யூரோவால் அதிகமாக பயனடைந்த போதினும், பேர்லின் ஒரு "பரிவர்த்தனை ஐக்கியத்தின்" (transfer union), அதாவது யூரோ மண்டலத்திற்குள் பணக்கார நாடுகளிடமிருந்து ஏழை நாடுகளுக்கு நிதிகளைப் பரிமாறும் முறையின் எவ்வித வடிவத்தையும் நிராகரிக்கிறது.

ஆனால் சமீபத்திய நாட்களில் ஜேர்மன் மீதான அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரயிறுதியில் இத்தாலிய நிதி மந்திரி ஜியூலியோ ரேமொன்ரியின் ஓர் அவசர முறையீட்டில், பொதுப்பத்திரங்களை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார். யூரோ-குழுவின் தலைவர் ஜோன் குளோட் யுங்கர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாணய விவாகாரத்துறை ஆணையாளர் ஒலி ரெஹ்ன் ஆகியோரும் யூரோ-பத்திரங்களுக்கு அழைப்புவிடுத்தனர்.

பல ஜேர்மன் செய்தியிதழ்களில் பிரசுரமான செய்திகளில், நிதியியல் முதலீட்டாளர் ஜோர்ஜ் சோரோஸ் யூரோ-பத்திரங்கள் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக பேசி இருந்தார். “பங்குப்பத்திர மதிப்பீட்டில் 'AAA' இடத்தில் இருக்கும் ஜேர்மன் மற்றும் ஏனைய நாடுகள், எதாவதொரு வடிவத்தில் யூரோ-பத்திர ஆளுமைக்கு உடன்பட வேண்டும். இல்லையென்றால், யூரோ பொறிந்துபோகும்,” என அவர் நிதியியல் நாளிதழான Handelsblatt க்குத் தெரிவித்தார்.

ஆனால் ஜேர்மன் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக யூரோ-பத்திரங்களை நிராகரிக்கிறது. சார்க்கோசி உடனான சந்திப்பில் யூரோ-பத்திரங்கள் குறித்து பேசப்படாது என்று அதிபர் மேர்கெலின் செய்தி தொடர்பாளரும் கூட திங்களன்று விளக்கினார்.

ஆனால் யூரோவைக் காப்பாற்றுவதற்கு இதுவொன்றே வழியென்றால் ஐரோப்பிய பொதுப்பத்திரங்களை ஏற்க பேர்லின் இப்போது தயாராகிவிட்டதாக பல அரசாங்க உறுப்பினர்களை மேற்கோளிட்டு வாரயிறுதியில் Welt am Sonntag பத்திரிகை ஓர் அறிக்கை வெளியிட்டது. பல பில்லியன் டாலர் பிணையெடுப்புகளைக் கொண்டு நிதியியல் சிக்கல்களில் இருக்கும் நாடுகளுக்கு உதவுவது என்ற முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை, அதன் முடிவை எட்டிவருகிறது.

எவ்வாறிருந்த போதினும், பேர்லின் இதுபோன்றவொரு நகர்வை பகிரங்கமாக அறிவிக்க விரும்பவில்லை. மாறாக அது ஒரு நீண்டகால நிகழ்முறையில் "அதன் யூரோ-கூட்டாளிடமிருந்து விட்டுக்கொடுப்புகளை பெற" பேச்சுவார்த்தை நடத்துமென்று Welt am Sonntag விவரித்தது. உள்ளடக்கத்தில், அதிகளவில் கடன்பட்டுள்ள நாடுகள் அவற்றின் பொருளாதார மற்றும் நாணய இறையாண்மையைக் கைவிட்டுவிட்டு, நிபந்தனையின்றி நிதியியல் சந்தைகளின் கட்டளைகளுக்கு அவை அவற்றை ஒப்படைக்க வேண்டும்.

இந்த சூழலில், ஜேர்மன் பொருளாதார மந்திரி பிலிப் ரோஸ்லர், ஒரு "ஸ்திரமான ஒன்றியத்தை" உருவாக்கவும், அதில் இருக்கும் கடினமான மற்றும் வெளிப்படையான கட்டுப்பாடுகள் தானாகவே ஒரே செலாவணியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமெனவும் அறிவுறுத்தி உள்ளார். முதலாவதாக, அனைத்து நாடுகளும் அரசியலமைப்புரீதியில் அனுமதிக்கப்பட்ட சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்தின் ஜேர்மன் மாதிரியை  எடுத்துக்கொண்டு, அவற்றின் தொழிலாளர் சந்தையை ஒரு அழுத்தச்சோதனைக்குள் (stress test) தள்ள வேண்டும். பின்னர் ஓர் ஐரோப்பிய "ஸ்திரப்பாட்டு ஆணையம்" கடன் பயன்பாடு மற்றும் கடன் நிலைமைகளோடு இணங்கிய கண்காணிப்பைப் பயன்படுத்த முடிவெடுக்க வேண்டும். இது, அரசியல் அதிகாரங்களால் மட்டுப்படுத்த முடியாத குறிப்பிட்ட காரணிகளோடு இணங்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு "நிறைவேற்றுக்குழுவாக" செயல்பட வேண்டும்.

அரசியல் முடிவுகளின் நம்பகத்தன்மையில் சந்தைகள் ஓர் "அடிப்படை ஐயப்பாட்டை" வெளிப்படுத்துகின்றன என்ற உண்மையோடு, அதிபர் மேர்கெல் உடன்பட்ட, அந்த முன்மொழிவை ரோஸ்லர்  நியாயப்படுத்தினார். அரசியல் அமைப்புகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமைகளை மதிப்பிட்டதைவிட சந்தைகள் மிகவும் புறநிலையாக மதிப்பிட்டன.

வேறுசொற்களில் கூறுவதானால், எவ்வித ஜனநாயக கட்டுப்பாட்டுக்கும் வெளியில் இருக்கும், பெருமளவிற்கு பேர்லினால் தீர்மானிக்கப்படும் கொள்கைகளைக் கொண்டிருக்கும், ஓர் ஐரோப்பிய அமைப்பிற்கு யூரோ நாடுகள் அவற்றின் நிதியியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை அடிபணிய வைத்திருக்க வேண்டும் என்று ஜேர்மன் அரசாங்கம் கோரிவருகிறது. இதற்கு கைமாறாக, பின்னர் யூரோ-பத்திரங்களைக் கொண்டு பலவீனமான நாடுகளின் கடன்களில் சிலவற்றிற்கு நிதியளிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

பில்லியர் ஜோர்ஜ் சோரோஸூம் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறார். “ஜேர்மனியால் தீர்மானிக்கப்படும் தெளிவான நிதியியல் விதிகளின் அடிப்படையில் இருந்தால், பின்னர் ஜேர்மன் வாக்காளர்களும் யூரோ-பத்திரங்களை ஏற்றுக்கொள்வார்கள்" என்று அவர் Der Spiegel இதழிற்கு தெரிவித்தார்.

ஜேர்மன் வரவு-செலவு திட்டத்தில் என்னமாதிரியான யூரோ-பத்திரங்களின் கூடுதல்சுமை இருக்குமென்பது விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக உள்ளது. இது மொத்தம் ஆண்டுக்கு 47 பில்லியன் யூரோவாகலாம் என Ifo Institute இன் ஒரு பிரதிநிதி கூறினார். ஆனால் இது மிகைப்பட்ட அளவாக இருக்கக்கூடும். நிச்சயமாக என்ன நடக்குமென்றால் ஜேர்மன் அரசாங்கம் கூடுதல் செலவுகளைத் தொழிலாள வர்க்கத்தின்மீது மாற்றும்; அத்தோடு கிரீஸ், போர்ச்சுக்கல், மற்றும் அதிக கடன்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கு பேர்லின் எதை நிர்பந்திக்கிறதோ அதேபோன்ற கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டத்தை அதுவும் பின்பற்றும்.

யூரோவின் தோல்வி ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஜேர்மன் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பாக அமையுமென பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாணய முறையின் ஒற்றுமை உடைந்து போனால், ஐரோப்பிய நிதியியல் மற்றும் வங்கியியல் அமைப்புமுறையும் முற்றிலுமாக பொறிந்துபோகுமென ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் டேனியல் குரோஸ் கணிக்கிறார். ஜேர்மன் பொருளாதாரம் 20 முதல் 30 சதவீதம் வரையில் வீழ்ச்சியடையும். 2009இல், நிதியியல் நெருக்கடி காரணமாக அது வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே வீழ்ச்சி அடைந்தது.

டொச் மார்க் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் அது டாலருக்கு எதிராகவும் மற்றும் ஏனைய ஐரோப்பிய செலாவணிகளுக்கு எதிராகவும் 50 சதவீதம் வரையில் அதன் மதிப்பில் வேகமாக உயர்ந்துவிடக் கூடுமென மக்ரோ-பொருளியல் ஆய்வு பயிலகத்தில் குஸ்டாவ் ஹார்னும், பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் பூர்டாவும் அனுமானிக்கிறார்கள். ஹார்னைப் பொறுத்தவரையில், இது ஏற்றுமதித்துறைக்கு ஒரு பெரும் பேரழிவாக இருக்கும். “அது மத்திய-அளவிலான ஜேர்மன் வியாபாரங்களை ஒரேவீச்சில் வீழ்த்தி அழித்துவிடும்.”

இதற்கிடையில், யூரோ-பத்திரங்கள் பிரச்சினை மீது ஜேர்மன் அரசாங்க கூட்டணியில் ஆழமான பிளவு உள்ளது. பாவரியன் கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), சுதந்திர ஜனநாயக கட்சி (FDP), மற்றும் ஏனைய கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய சமூக பத்திரங்களை ஆணித்தரமாக எதிர்க்கின்றனர். பல ஊடக செய்திகள் இப்போது இந்த பிரச்சினையை, அதிபர் மேர்கெலின் பெரும்பான்மையை இழக்கச்செய்யும் ஓர் அரசியல் வெடிமருந்து பீப்பாவாக கருதுகின்றன.

பசுமைக்கட்சியினரும், சமூக ஜனநாயக கட்சியும் (SPD) இரண்டும் பாயத்தயாராக உள்ளன. பெரும்பான்மை ஜேர்மன் வியாபார வட்டாரங்களில், 'கடுமையான ஐரோப்பிய நிதியியல் விதிகள் மற்றும் ஏனைய சிக்கன முறைமைகளோடு யூரோ-பத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்படும் தற்போதைய கருத்திற்கு இரண்டு கட்சியினருமே பலமான ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில், சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சிக்மார் காப்ரியேல் யூரோ-பத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பத்திரங்களை வைத்திருக்கவிரும்பும் நாடுகள் கடுமையான ஐரோப்பிய கட்டுப்பாட்டிற்கு தங்களைத்தாங்களே அனுமதிக்க வேண்டுமென்பதும் மற்றும் அவற்றின் வரவு-செலவு திட்ட உரிமைகளை விட்டுகொடுக்க வேண்டுமென்பதும் அவரின் முன்நிபந்தனையாக இருந்தது.

ஓர் ஐரோப்பிய நிதிமந்திரியின் நியமனம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளின் வரவு-செலவு திட்டங்கள் மீதான கட்டுப்பாடு, மற்றும் நிதியாண்டு நெறிமுறைக்கு துல்லியமான முறைமைகள் மற்றும் ஊக்கப்பொதிகள் ஆகியவை யூரோ-பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்நிபந்தனைகளாக இருக்கவேண்டுமென பசுமை கட்சியின் தலைவர் செம் ஒஸ்டிமியர் Rheinische Post பத்திரிகைக்கு தெரிவித்தார். அவர் குறிப்பாக இன்னும் அதிகப்படியான சிக்கன முறைமைகளை அறிவுறுத்தினார். யூரோ யாருக்கு வேண்டுமோ அவர்கள் "அதற்கான விலையைக் கொடுக்கவும் தயாராக வேண்டுமென" அவர் தெரிவித்தார்.

பழமைவாத கட்சி, சமூக ஜனநாயக கட்சி அல்லது பசுமை கட்சி என பிரதான கட்சிகள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு இரண்டு விடைகளை மட்டுமே அறிந்துள்ளன: ஒன்று, யூரோவை பாதுகாப்பதில் ஐரோப்பிய நிதியியல் சர்வாதிகாரத்தை அறிமுகப்படுத்துவது, அல்லது இரண்டாவது தேசிய நலன்கள் என்ற பெயரில் ஐரோப்பாவை துண்டாடுவது. இரண்டுமே சமூக நெருக்கடியை ஆழப்படுத்தியும், தேசிய பதட்டங்களை தீவிரப்படுத்தியும் பேரழிவுக்குத் தான் இட்டுச் செல்லும்.

மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி, ஆழமான வர்க்க போராட்டங்களை நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருகிறது. துனிசியா, எகிப்து, கிரீஸ், ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் ஏனைய பல நாடுகளில், தொழிலாளர்களும் இளைஞர்களும் நிதியியல் மூலதனத்தின் அதிகார ஆணைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கால் அவர்கள் வழிநடத்தப்பட்டால் மட்டும் தான், அத்தகைய போராட்டங்கள் வெற்றி பெறமுடியும்.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட்டு, வங்கிகள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளில் மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள அவற்றின் தலையாட்டிகளின் கட்டளைகளுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த வேண்டும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் ஸ்தாபிப்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த ஐரோப்பா முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவது அவசியமாகும்.