சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Protest in Jaffna demanding information about disappeared

இலங்கை: காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

By our correspondents
21 December 2010

use this version to print | Send feedback

யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில், பொலிஸ் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், காணாமல் போனோர்களின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு கோரி டிசம்பர் 10 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார்கள். இதில் தாய்மார், மனைவிமார் மற்றும் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை பங்கு கொண்டனர்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட 26 வருடகால யுத்தத்தின் போது, குறிப்பாக 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த, மகிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்களின் போது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். பொலிஸ், இராணுவம் மற்றும் துணைப்படைக் குழுக்களும் இத்தகைய காணாமல் போன சம்பவங்களுக்கு நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதிலும், அவை தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என நிராகரித்தன.

இத்தகைய காணாமல் போன சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமன்றி, கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளன. மக்களைக் கடத்திச் செல்லும் இந்த பயங்கர நடவடிக்கைக்கு இழிபுகழ்பெற்ற “வெள்ளைவான்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல் கொடூரமான யுத்தத்தின் ஒரு பாகமாகவும் இராணுவத் தாக்குதல்களை விமர்சிப்போரை வாயடைக்கச் செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம், வாழ்வதற்கான உரிமை, பாகுபாடு மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு (ஐ.எம்.ஏ.டி.ஆர்.) உட்பட பல மனித உரிமை அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போலி இடதுசாரி நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் புதிய மார்க்சிச-மாவோயிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் ஆப்பாட்டத்துக்கு ஆதரவு கொடுத்தன.

ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்டது. மக்கள் ஆர்ப்பாட்டத்துக்காக ஒன்று கூடியிருந்தபோதிலும் ஏற்பாட்டாளர்கள் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்திருந்தனர். மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மற்றும் கொழும்பில் இருந்தும் கூட வந்திருந்தனர். நிகழ்வு இடத்துக்கு போகும் மக்களை அச்சுறுத்துவதற்காக இராணுவம் உடனடியாக பல சந்திகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது. எடுத்துக்காட்டாக, 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வரும்போது மக்கள் எட்டு இடங்களில் இராணுவத்தினால் சோதனையிடப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரத்தில் பொலிஸ் வாகனங்கள் அடிக்கடி ரோந்து சென்றன. ஆர்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து 75 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கலகம் அடக்கும் பொலிசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். டசின் கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மக்களின் நகர்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். பஸ் நிலையத்தில் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக தயாரானதோடு அவர்களை துரத்துவதற்கும் முயற்சி செய்தார்கள். ஆனால் மக்கள் பொலிசாருக்கு அடிபணியாததோடு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தங்களுக்குள்ள ஜனநாயக உரிமைக்காக அவர்கள் வாதாடினார்கள்.

“சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக பிரச்சாரம் செய்கிறது என்ற அறிக்கையை உள்ளடக்கிய அதன் துண்டுப் பிரசுரத்தினை விநியோகித்துக் கொண்டிருக்கும் போது, சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் வே. கமலதாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர்  ஒரு மணி நேரத்துக்கு மேலாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், பிரச்சாரம் செய்வதற்காக கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமைகளை சுட்டிக்காட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் பேசியதன் பலனாக அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக வந்த பத்திரிகையாளர்களுக்கு பொலிஸ் பல இடையூறுகளை விளைவித்தது.

பங்குபற்றியவர்கள், எமது“ பிள்ளைகளை விடுதலை செய், எமது அன்புக்குரியவர்கள் எங்கே?, அவர்களை எங்கே போய்விட்டார்கள்?” போன்ற சுலோகங்களை கோஷித்தார்கள். அவர்கள் காணாமல் போனவர்களின் படங்களைக் காட்சிப்படுத்தினார்கள்.

சோ.ச.க. அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரன்,27, அவரது நண்பரான சிவநாதன் மதிவதனன்,24, ஆகியோர் 2007 மார்ச் 22ம் திகதி புங்குடுதீவில் இருந்து ஊர்காவற்துறையில் வேலணை பிரதேசத்தை நோக்கி வரும்போது காணாமல் போனார்கள். இலங்கை கடற்படை இந்த சம்வத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதை எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டிய போதும், இராணுவம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இந்த குற்றங்களைப் பாதுகாக்கின்றனர்.

சோ.ச.க. இடைவிடாமல் யுத்தத்தை எதிர்த்து வந்துள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை பாதுகாப்புப் படைகளை நிபந்தனையின்றி திருப்பியழைக்குமாறும் கோரிவந்துள்ளது. சோ.ச.க. சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகின்றது. விமலேஸ்வரன் சோ.ச.க. அரசியலை செய்ததன் காரணமாகவே இலக்கு வைக்கப்பட்டார். கடற் தொழிலாளியான விமலேஸ்வரன் வேலணை மற்றும் ஊர்காவற்துறை மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவர்.

இராணுவ அடக்குமுறைக்கும் மற்றும் யுத்தத்தின் போது அழிவுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தமிழர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வருவதையிட்டு அரசாங்கமும் இராணுவமும் மற்றும் பொலிசும் அச்சம் கொண்டிருப்பதையே ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான இந்த ஒடுக்கு முறை நடவடிக்கைகள் காட்டுகின்றன. இராணுவ தாக்குதல்கள், ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களின் படுகொலைகள் உட்பட யுத்தக் குற்றங்களுடன் முடிவுக்கு வந்தது. மக்கள், அவர்களுடைய வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டமையால் கொடுமையான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை மீளக் குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் மோசடித்தனமாக கூறிக்கொள்கிறது. ஆனால் மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் அல்லது கூடாரங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

கடந்த பல வாரங்களில் நடந்த பல ஆர்ப்பாட்டங்கள், மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை வெளிக்காட்டுகிறது. மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயற்பாட்டாளர் உட்பட மாணவர் தலைவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தை கைது செய்யுமாறு கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு வாரகால வகுப்புப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டனர். தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனக் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிசம்பர் 6 இல் வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு வேலை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் போராட்டம் ஒன்றினை நடத்தினார்கள்.

டிசம்பரில் ஜேவிபி மாற்றுக்குழு உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜா மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் மோட்டார் சயிக்கிளில் பிரயாணம் செய்யும் போது காணாமல் போனார்கள். மாற்றுக் குழு உட்பட ஜேவிபி யுத்தத்திற்கும் மற்றும் தமிழர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கும் ஆதரவளித்தது. மாற்றுக் குழு தற்போது “மக்கள் போராட்ட அமைப்பு என தோன்றியுள்ளது. அது அரசாங்கத்தினை விமர்சிப்பதன் மூலம் தமிழர்களின் ஆதரவை நயந்து வாங்க முயற்சிக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது அன்புக்குரியவர்களை கண்டு பிடிப்பதற்காக உண்மையான அக்கறை கொண்டிருந்த போதிலும், ஏற்பாட்டாளர்கள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அவர்கள் ஆற்றிய சுருக்கமான உரை இதை வெளிப்படுத்தியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராஜா கூறியதாவது: இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஐ.நா. விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும். அதுவே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரசாங்கம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக இருக்கின்ற அதேவேளை, தமிழ் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் ஐ.நா. மற்றும் அமெரிக்கா அவர்களை விசாரிப்பற்கு தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்கள். ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கிடையாது. ஆனால் அவர்களின் கவலையானது தங்களின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டதே. தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், வடக்கு மற்றும் கிழக்கு நிர்வாகத்தில் தமது சிறப்புரிமைகளை ஸ்தாபித்துக்கொள்வதன் பேரில் ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த மேலைத்தேய சக்திகளின் அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது திணிக்க முயற்சி செய்கின்றனர்.

நவசமசமாஜக் கட்சியைப் போன்ற முன்னாள் தீவிரவாதிகள் மற்றும் சிதறிய பல குழுக்கள், தமிழ் கூட்டமைப்புக்கும் அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் ஊக்குவிப்பு கொடுக்க ஆப்பாட்டத்தில் பங்கு பற்றின. இந்த ஆதரவு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு முன்னாள் தலைகுனிந்து நடக்கும் புலிகளின் கடந்தகால அவமானம் நிறைந்த இனவாத அரசியலுக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் குழு பல ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியது. மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது கணவன் காணாமல் போன பின்னர் தன்னுடைய நிலமையை விளக்கினார்: எனது கணவர் 2007 ஜனவரியில் கொழும்பு செல்வதற்கான பாஸ் பெறுவதற்காக, யாழ்ப்பாணம் சிங்கள மாகா வித்தியாலயத்துக்கு முன்னாள் உள்ள இராணுவத்தின் சிவில் அலுவலகத்துக்குள் சென்றார். ஆனால் இதுவரை அவர் திரும்பி வரவில்லை. அங்குள்ள இராணுவம் எனது கணவரைப் பிடித்துச் சென்றது என்பது எனக்குத் தெரியும். இன்று வரை நான் அவரை ஒவ்வொரு இடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறேன். அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றேன். நான் ஒரு வீட்டுப் பணியாளராக வேலை செய்கிறேன். எனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக போராடுகின்றேன். நான் பயங்கரமான வறுமை மற்றும் உதவியற்ற நிலமைகளின் கீழ் வாழ்கின்றேன், என அவர் கூறினார்.

ஒரு தாய் தனது மகளான நடராசா நவரஞ்சினியின் போட்டோவை காட்டிக் கொண்டிருந்தார். அவர் 2009 ஆண்டு வன்னியில் காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 27. அழுதுகொண்டிருந்த அந்த தாயார், தனது மகளின் போட்டோவையும் அவர் இருக்கும் இடத்தைக் கோரும் ஒரு மனுவையும் பிடித்துக் கொண்டு இருந்தார். இந்த தாயார், யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாமில் சுமார் 300,000 மக்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் இப்போதும் அகதியாகவே யாழ்ப்பாணத்தில் வாழந்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு பெண் கூறியதாவது: 18 மே 2009 அன்று, யுத்தத்தின் இறுதி நாளில், நாங்கள் மக்களோடு மக்களாக முல்லைத்தீவில் உள்ள வட்டுவாகல் என்னமிடத்தில் இராணுவத்திடம் சரணடைந்தோம். எனது கணவரான மகேந்திரன் முருகதாஸ் (33) இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். நான் அவரை விடுதலை செய்யுமாறு கெஞ்சினேன். ஆனால் இராணுவம் அவரை விசாரித்துவிட்டு விடுதலை செய்வோம், நீங்கள் முகாமுக்கு போங்கள் என்று சொன்னார்கள். [இராணுவக் கட்டுப்பாட்டில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு]

“எனது கணவருடன் 40க்கு மேற்பட்டவர்களை இராணுவம் ஒரு பஸ்ஸில் ஏற்றியதை நான் கண்டேன். நான் அவரைத் தேடி பல முகாம்களுக்கு அலைந்து திரிந்தேன். இதுவரை அவரைப் பற்றி எந்த தகவலும் அறிய முடியவில்லை. இராணுவம் தான் அவரைப் பிடித்தது. அவர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும், என அவர் கோரினார்.