சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialism and Egypt’s “democratic transition”

ஏகாதிபத்தியமும் எகிப்தின் ஜனநாயக இடைமாற்றமும்

Alex Lantier
7 February 2011

Use this version to print | Send feedback

எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கும், முஸ்லீம்  சகோதரத்துவ அமைப்பிற்கும், முகமது எல்பரேடேயின் மாற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அரசியல் மோசடி வகையிலான ஒரு துரோகச் செயல்பாடாகும். முபாரக் ஆட்சிக்கு எதிரான புரட்சிகர இயக்கத்தைக் குழப்புவதும், ஒடுக்குவதும், எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதும், வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கான ஒரு நம்பகமான கருவியாக நாட்டைப் பாதுகாப்பதும் தான் அவர்களது நோக்கமாகும்.

ஜனநாயக இடைமாற்றம் என்பதான ஒரு வெறுப்புமிழும் முத்திரையுடன் எகிப்திய துணை ஜனாதிபதி ஓமர் சுலைமான் மூலம் தரகு செய்யப்படும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒபாமா நிர்வாகம் அளிக்கும் ஆதரவு எதிர்பார்க்கத்தக்கதாய் இருக்குமளவுக்கு பிற்போக்குத்தனமானதாகவும் இருக்கிறது. மீண்டுமொரு முறை, ஜனநாயகத்திற்கு மரியாதை செலுத்துகிறதான அமெரிக்காவின் வார்த்தைஜாலங்கள் எல்லாம் வேடதாரித்தனமான பொய்களாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முபாரக்குடன் பேசுவதற்காக கெய்ரோவுக்கு அனுப்பப்பட்டிருந்த முன்னாள் தூதரான பிராங்க் விஸ்னர், சர்வாதிகாரி முபாரக் ஒரு அதிமுக்கிய பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருந்ததாய் வெளிப்படையாய் அறிவித்தபோது ஒபாமா நிர்வாகத்தின் உண்மையான நோக்கங்கள் வெளிப்பட்டு விட்டன.

இந்த இடைமாற்றத்திற்கு முபாரக்கும் வாஷிங்டனும் துணை ஜனாதிபதியான ஓமர் சுலைமானை தேர்வு செய்திருப்பதில் இருந்தே இந்த அமெரிக்கத் திட்டங்களின் பிற்போக்குத்தனமான தன்மை அம்பலப்படுகிறது. இந்த மனிதர் தான் முபாரக் ஆட்சியின் படுமோசமான குற்றங்களில் தொடர்புபட்டவராய் இருந்ததோடு தனிப்பட்ட வகையில் பங்குபெற்றவராயும் இருந்தார். ஏறக்குறைய தனது கைகளில் இரத்தக் கறையினை அவர் கொண்டுள்ளார்.

எகிப்தில் சித்திரவதைக்கான சிஐஏ குத்தகையின் ஏற்பாட்டாளரான சுலைமான், மமுத் ஹபீபை (பாகிஸ்தானில் போலியான பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சித்திரவதைக்கென எகிப்துக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலியக் குடிமகன்) அவரே தாக்கியிருக்கிறார். பின் ஹபிப் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு 2005ல் விடுதலையானார்.

2003ல் ஈராக்கில் அமெரிக்கா சட்டவிரோதமாய் ஆக்கிரமிப்பு செய்வதற்கு போலியான ஆதாரங்களைத் தயாரிப்பதற்கும் சுலைமான் உதவினார். அந்தப் போருக்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து பின் ஷேக் அல்-லிபி எகிப்திய காவலுக்கு மாற்றப்படுவதை சுலைமான் மேற்பார்வை செய்தார். அல் கொய்தாவுக்கு ஈராக் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை வழங்கியதாக கூறுவதற்கு ஒப்புக் கொள்ளும் வரை அல்-லிபி சித்திரவதை செய்யப்பட்டார். இந்த போலி வாக்குமூலம் அமெரிக்க வெளியுறவுச் செயலரான கொலின் பவுல் போருக்கு அழைப்பு விடுத்து ஐநாவுக்கு அளித்த 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் இடம்பிடித்தது

பயங்கரவாதத்தின் மீதான போரின் அரசியல் கட்டுக்கதைகளான ஜனநாயக மேற்கத்திய அரசாங்கங்களின் விழுமியங்களுக்கும் முஸ்லீம் சகோதரத்துவம் போன்ற இஸ்லாமியவாதிகளுக்கும் இடையிலான போராட்டமே மத்திய கிழக்கின் முக்கிய அம்சம் என்பதான கூற்றுகள் எல்லாம் அம்பலப்பட்டு நிற்கின்றன. உண்மையில், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் பிரதான புரட்சிகர சக்தியாக எழுந்து நிற்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் இடையில் தான் பிரதான மோதல் உள்ளது.

ஆரம்பத்தில், இஸ்லாமிய செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் எதேச்சாதிகார ஆட்சி ஒரு அத்தியாவசியமான கேடாக இருப்பது தான் மத்திய கிழக்கு முழுவதிலும் சர்வாதிகாரங்களையும் முடியாட்சிகளையும் அமெரிக்கா ஆதரிப்பதற்கான காரணமாய் வழங்கப்பட்டது. இப்போது, அமெரிக்கா தனக்கு நம்பகமான ஒரு எதேச்சாதிகார ஆட்சியைக் காப்பாற்றுவது என்னும் இன்னும் அடிப்படையானதாய் தான் காணும் ஒரு நோக்கத்தைக் காப்பாற்றும் தனது போராட்டத்தில் இஸ்லாமியவாதிகளை ஒரு அவசியமான கேடாய் அணுகுகிறது. 

இக்கொள்கையின் கீழமைந்த வர்க்கக் காரணங்கள் ஒரு நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. எகிப்துக்கான வரைபடமாய் துருக்கியை அந்தக் கட்டுரை தூக்கிப்பிடித்தது. இஸ்லாமிய AKP அரசாங்கத்தின் திறந்த மற்றும் கட்டுப்பாட்டு விலக்கக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட மும்முரமாய் இயங்கும் தனியார் துறைக்கு துருக்கிய இராணுவம் ஆதரவளிக்கும் முறையை முபாரக் ஆட்சி பின்பற்றுவதற்கு டைம்ஸ் விரும்பியது. இந்த கொள்கைகள் துருக்கியை ஒரு முக்கிய மலிவு-உழைப்பு ஏற்றுமதிப் பொருளாதாரமாய் மாற்றியிருக்கின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை துருக்கி அடிப்படையாய் ஏற்றுக் கொண்டிருப்பதன் ஒரு அடையாளமாக இஸ்ரேலுடன் அமைதியான அதே சமயத்தில் நல்ல உறவுகளை துருக்கி பராமரிப்பதையும் டைம்ஸ் மேற்கோள் காட்டியது. 

எகிப்திய தொழிலாளர்களில் பாதிப் பேர் ஒரு நாளைக்கு $2 அல்லது அதற்கும் குறைவான ஊதியங்களில் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை செய்திகள் அறிவிக்கும் நிலையில், இராணுவ ஆட்சியும் அதன் மஞ்சள் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்க முடிகிற காலம் வரை உலகளாவிய முதலீட்டாளர்கள் எகிப்தினை இன்னும் திறந்து விடுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதாவது எகிப்து அமெரிக்க இராணுவத்தின் ஒரு நம்பகமான கூட்டாளியாக, மலிவு உழைப்புக்கு நன்கு காவல் செய்யப்படும் ஒரு ஆதாரவளமாக, அத்துடன் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு கோட்டையாக பராமரிக்கப்பட வேண்டும்.

உலக ஏகாதிபத்தியத்தின் கட்டை விரலின் கீழ் இருக்கும் ஒரு நாடான எகிப்துடனான அமெரிக்க உறவுகளில் இருக்கும் அரைக் காலனித்துவ தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அனைத்து அரசியல் பேரங்களிலும் வேசங்களிலும், எகிப்திய தொழிலாள வர்க்கத்தின், விவசாயிகளின் மற்றும் இளைஞர்களின் கவலைகளோ நலன்களோ கண்டுகொள்ளப்படுவதே இல்லை. பரந்த மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எரியூட்டிய சமூக மற்றும் அரசியல் உரிமைகளில் ஒன்று கூட நிவர்த்தி செய்யப்படப் போவதில்லை. போலிஸ் அரசை இல்லாதொழிப்பது, நாட்டுப்புறத்தில் பெரும் நிலப்பண்ணைகளின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வருவது, மற்றும் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவது ஆகிய அடிப்படையான சமூக மாற்றங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அத்தகையதொரு மாற்றத்தில் அக்கறை கொண்ட சமூக சக்திகளான தொழிலாளர்கள், எகிப்தின் ஒடுக்கப்பட்ட கிராமப்புறப் பகுதி மக்கள், மற்றும் இளைஞர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து  ஒரு கொடூரமான காட்டிக் கொடுப்பைத் தவிர வேறு எதனையும் பெறப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களையும், சர்வதேச மூலதனத்தின் முதலீடுகளையும், மற்றும் எகிப்திய ஆளும் வர்க்கத்தின் செல்வத்தையும் பாதுகாத்துக் கொண்டு சித்திரவதையாளர்கள் தான் ஆட்சியில் தொடர்வார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஐயப்பாட்டிற்கு இடமின்றி கூறுகிறது: ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்திற்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே எகிப்தின் உழைக்கும் மக்களின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள் சாதிக்கப்பட முடியும். உண்மையான ஜனநாயகத்திற்கு வேறெந்த பாதையும் இல்லை. எனவே, எகிப்தின் முதலாளித்துவ அரசு எந்திரத்திற்கும் மற்றும் சுலைமானின் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒரு மாற்றினை முன்வைப்பதற்கு மக்கள் பிரதிநிதித்துவத்தின் சுயாதீனமான அமைப்புகளைக் கட்டுவதற்கும் அரசியல் தலைமையின் வெற்றிடத்தை முறையாய் நிரப்புவதற்கும் ஒரு அதிமுக்கியமான அவசியம் இருக்கிறது.