சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On the spot report

Sri Lanka’s flood victims express anger over government’s lack of aid

நேரடி அறிக்கை

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் போதாத நிவாரணம் சம்பந்தமாக கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்

By W.A. Sunil and A. Shanthakumar
19 January 2011

Use this version to print | Send feedback

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கள யதார்த்தம், தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும் ஆரோக்கியமான காட்சிகளுக்கு பரந்தளவில் வேறுபட்டதாக இருக்கின்றது. அரசாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிரித்த முகத்துடன் கமராக்களுக்கு முன்னால் அணிவகுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களையும் துணிகளையும் விநியோகிப்பதை செய்தி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ஆயினும், திரைக்குப் பின்னால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் அரசாங்கத்தின் மீதும் அதன் அலட்சியம் பற்றியும் பரந்தளவு ஆத்திரமும் கோபமும் உள்ளது.

இரண்டுவார கால வெள்ளம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களின் 11 மாவட்டங்களில் சுமார் 300,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். திங்கட் கிழமை 40 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு மேலும் 51 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 25,000 வீடுகள் முழுமையாக அழிந்து போயுள்ளன அல்லது பகுதி சேதமடைந்துள்ளதோடு, சுமார் 400,000 ஏக்கர் (160,000 ஹெக்டயர்) பயிர்கள் நாசமாகியுள்ளன.

திங்கட் கிழமை நண்பகல் அளவில் 58,000 பேர் இன்னமும் இடைத்தங்கல் முகாங்களில் உள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்ததுமுன்னைய புள்ளி விபரத்தில் இருந்து குறைந்துள்ளது. வெள்ள நீர் குறைந்துள்ள நிலையில் பலர் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். பாடசாலைகளை இயங்க வைப்பதன் பேரில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட, பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த முகாங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை வெளியேறுமாறு அரசாங்கம் நெருக்கியுள்ளது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் காத்தான்குடி, நாவலடி, சித்தான்டி, உப்போடை மற்றும் காங்கேயனோடை உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடனும் மற்றும் ஆரையம்பதியிலும் சில கிராமத்தவர்களுடனும் பேசினர். அநேகமானவர்கள் மீனவர்களும் வயல் விவசாயிகளுமாவர். வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் திரும்பி வந்தபோது தமது சிறிய குடிசைகளும் வீடுகளும் தமது உடமைகளுடன் அடித்துச் சென்றிருந்ததை அல்லது சேதமடைந்திருந்ததை கண்டனர்.

கிழக்கு மாகாணமானது இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2006ல் அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய போது இடம்பெயர்ந்த அநேகமான கிராமத்தவர்கள், 2009 மே மாதம் புலிகள் தோல்வியடைந்த பின்னரே மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. சில கிராமங்கள் 2004ல் ஏற்பட்ட அழிவுகரமான சுனாமியினால் மோசமாக சேதமடைந்திருந்தன.

காத்தான்குடி மட்டக்களப்பு நகரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. காத்தான்குடி நகருக்கு பின்னால் உள்ள கிராமத்தில் மக்கள் மிகவும் வறிய நிலைமையில் வாழ்கின்றார்கள். சுமார் 400 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசம் மட்டக்களப்பு கடலேரிக்கு அருகில் இருப்பதோடு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் அல்லது சில தற்காலிக வேலைகள் செய்கின்றனர். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர், மீன்பிடி கூட்டுத்தாபனம் சில மீன்பிடி வலைகளை தடை செய்த போதிலும், மாற்றீடு எதனையும் வழங்கவில்லை.

வெள்ளம் ஏற்பட்ட போது, பிரதேசம் எட்டு அடிகள் தண்ணீரில் மூழ்கியது. மீனவர்கள் தமது தோணிகளையும் அதே போல் வலைகளையும் இழந்துவிட்டனர். கடலேரி கரைக்கு  நெருக்கமாக உள்ள வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு வீட்டுப் பாவனைப் பொருட்களும் தொலைந்துபோய்விட்டன. வயிற்றுப் போக்கு உள்ள பத்துக்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு தான் சிகிச்சையளித்ததாக அந்தப் பிரதேசத்தில் வேலை செய்யும் செஞ்சிலுவைச் சங்க வைத்தியர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். அநேகமானவர்கள் தோல் நோயினாலும் சுவாசப் பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். “தற்போதைக்கு எங்களிடம் உள்ள சாதாரண மருந்துகளைக் கொண்டு சமாளிக்க முடியும். ஆனால், கொசுக்களால் பரவும் நோய்கள் உட்பட ஏனைய சுகயீனங்களால் மேலும் நோய்கள் ஏற்படும் ஆபத்து இருந்துகொண்டுள்ளது,” என அவர் விளக்கினார்.

ஒரு கிலோ அரிசி, 250 கிராம் பருப்பு, 125 கிராம் சீனி மற்றும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தவிர வேறு எதவும் அரசாங்கத்திடம் இருந்த தங்களுக்கு கிடைக்கவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள் அடிப்படை உணவு நிவாரணங்களை வழங்குவதில் உதவுகின்றன.

அருகில் உள்ள ஆரையம்பதி கிராமத்தில் வாழும் மீனவர்களும் இதே கதையை தெரிவித்தனர். தமது அனைத்து மீன்பிடி உபகரணங்களும் மற்றும் கயிறுகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மூன்று வாரங்களுக்கு முன்னர் மழை தொடங்கியதில் இருந்தே, அவர்களுக்கு வேலை இருக்கவில்லை.

40 வயதான நாகலிங்கம் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் (WSWS) தெரிவித்ததாவது: வெள்ளம் வந்த பின்னர் இங்கு வந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட தன்னால் நடந்து செல் முடியாமல் போனது எனக் கூறினார். ஆனால் தேர்தலின் போது அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் நடந்தார். யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்டுள்ள ஒரே ஒரு மாற்றம் என்னவெனில், எங்களால் கொஞ்சம் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால் எங்களது வாழ்க்கை மிகவும் நெருக்கடியில் உள்ளது.

அடுத்த கிராமம் காங்கேயனோடை. அங்கு சுமார் 830 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களது வீடுகள் கடல் ஏரிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்ம ஸ்தாபனங்களில் இருந்து கிடைத்தவை தவிர வேறு எந்த நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை, என ஒருவர் விளக்கினார்.

ஒரு பாடசாலையில் இன்னமும் மலசல கூட வசதி இல்லாத அதே நேரம் ஏனையவையும் சேதமடைந்துள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையுடன் சேர்த்து பிரதேசத்தில் வெள்ளம் வருவதற்கு முன்னரே வசதிகள் போதாதவையாக இருந்தன. உயர்தரம் வரை படிக்கக்கூடிய பாடசாலை ஒன்று மட்டுமே அங்குள்ளது. அதிலும் சில துறைகள் மட்டுமே உள்ளன. சகல முஸ்லிம் தலைவர்களும் அரசாங்கத்துடன் இருக்கின்றனர். கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அரசாங்கத்துடன் இணைவதன் மூலம் முஸ்லிம் மக்கள் உதவிகளைப் பெற முடியும் எனக் கூறிக்கொண்டு அவர்கள் அந்தப் பக்கம் சாய்ந்துவிடுவார்கள். ஆனால், ஏழைகள் எங்களைப் போல் அன்றி, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்மை அடைகின்றனர்., என ஒரு இளைஞர் தெரிவித்தார்.

எல்லாமாக இந்த கிராமங்களில் மோசமான பாதைகளே உள்ளன. முறையான வடிகால் அமைப்பு திட்டம் இல்லாமையினாலேயே வெள்ளம் ஏற்பட்டது என பல குடியிருப்பாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். ஏனையவர்கள், மீள் கட்டுமானத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ள தொகை போதாது என கோபத்தை வெளிப்படுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் இத்தகைய வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு கொடுக்கவுள்ள நட்ட ஈட்டுத் தொகை பற்றி நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்களுக்கு வெறும் 25,000 ரூபாவை (225 அமெரிக்க டொலர்) வீடுகளைத் திருத்த கொடுத்தால், அவர்களால் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? அது போதாது, என ஒருவர் தெரிவித்தார்.

யுத்தத்தை விவரித்த ஒருவர் தெரிவித்ததாவது: நாங்கள் யுத்தத்தின் போது ஆறு மாதங்களுக்கு நாங்கள் காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். எங்கள் வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தன. எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு நட்ட ஈடும் கிடைக்கவில்லை. எங்களுக்கு மீன் பிடியில் இருந்து வெறும் 500 அல்லது 600 ரூபாதான் ஒரு நாளைக்கு கிடைக்கின்றது. ஆனால் அதை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. மீன் பிடி வலைகளை தடை செய்துள்ளதனால் எங்களுக்கு தொழில் இல்லை. எங்களுக்கு முகாம்களில் கொடுப்பதை வைத்தே நாம் வாழ்கின்றோம். அரசாங்கம் எங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை.

62 வயதான மொஹமட் தம்பி கூறுகையில், சுமார் 1,000 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் தமது வீடுகளையும் ஏனைய சொத்துக்களையும் இழந்துள்ளனர். மீன்பிடி வலைகளும் தோணிகளும் சேதமடைந்துள்ளன.  சில வீடுகள் அடியோடு சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் சமையலறையும் ஏனைய அறைகளும் அழிந்துபோயுள்ளன. பாய்கள், கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உட்பட தனி நபர்கள் எங்களுக்கு பெரும் உதவிகளை செய்துள்ளனர்,” என்றார்.

கல்லடியில் நாவலடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு பாடசாலையில் தங்கியிருந்த போதும், அவர்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னதால் மீண்டும் திரும்பி வந்து தமது வீடுகளிலும் உறவினர்கள் வீட்டிலும் தங்கியுள்ளனர். வெள்ளச் சேதங்களின் காரணமாக தமது வீடுகளில் சமைக்க முடியாததால் மக்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் சமைக்கின்றனர். பிரதி அமைச்சர்களான மொஹமட் ஹிஸ்புல்லா மற்றும் வி. முரளிதரனும் (கருணா) அண்மையில் அந்தப் பிரதேசத்துக்கு சென்றிருந்தனர். ஆனால் மக்களின் துன்பத்தை தனிக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.

எமது நிருபர்கள் உப்போடைக்கு சென்ற போது, மக்கள் ஒரு கோயிலில் சமைத்துக்கொண்டிருந்தனர். கிணறுகளில் வெள்ள நீர் நிரம்பியிருந்த போதும், வேறு மாற்றீடு இல்லாததால் மக்கள் அதில் இருந்தே தண்ணீர் எடுக்கத் தள்ளப்பட்டிருந்தனர். 2004ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்தப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மற்றும் இந்த அழிவினாலும் மற்றும் உள்நாட்டு யுத்தத்தினாலும் பெருந்தொகையான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். சுனாமியின் பின்னர் மக்களுக்கு அரச-சார்பற்ற நிறுவனங்கள் சிறிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளன. ஆனால், அரசாங்கம் அவர்களுக்கு மேலதிக உதவிகள் எதனையும் செய்யவில்லை.

கடந்த வாரம், ஆரையம்பதி பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். அரசாங்கம் தேவையானவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என அவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, நிவாரணங்களை அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களுக்கு திருப்பி விடுவதாகவும் குற்றஞ்சாட்டினர். இலங்கையில் இத்தகைய அரசியல் மோசடிகள் வழமையானவையாகும்.

தாம் ஒரு நாள் உணவுக்கு எதவும் பெறாத நிலையில் சிறுவர்கள் உட்பட சுமார் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியர் விளக்கினார். “சட்ட விதிகளை கருதாமல் அரசாங்க அலுவலர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சகலதையும் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால், பணமும் பொருட்களும் இன்றி ஒருவரால் அதை எப்படிச் செய்ய முடியும்? என அவர் கேட்டார்.