சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Mubarak’s speech: only revolution can oust regime

முபாரக் உரை: புரட்சி மட்டுமே ஆட்சியை அகற்ற முடியும்

Bill Van Auken
11 February 2011

Use this version to print | Send feedback

எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஏறக்குறைய மூன்று வாரங்களாக தனது ஆட்சியை உலுக்கியிருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் பெருகும் வேலைநிறுத்த அலைக்கும் வியாழனன்று இரவு தான் அளித்த உரையின் மூலம் நேரடி சவாலை விடுத்துள்ளார்.

முபாரக் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என்று (அவர் ஏற்கனவே நாட்டை விட்டு ஓடி விட்டதாகவும் சில வதந்திகள் கூறின) பரவலாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த பின், தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் அடுத்த செப்டம்பரில் தேர்தல்கள் நடத்தப்பட்டு தனது பதவிக் காலம் முடியும் வரை “அரசியல்சட்டத்தைப் பாதுகாப்பது மற்றும் எகிப்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பது என தனது பொறுப்புகளைக் காப்பதில் உறுதியுடன் இருக்க”ப் போவதாய் அறிவித்தார்.

”தேசிய அளவிலான பேச்சுவார்த்தைகளை”த் தொடர்வது, ”ஸ்திரத்தன்மை அனுமதிக்கையில்” நாட்டின் அரசியல் சட்டத்தில் போலிஸ் அரசு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது போன்ற மேலோட்டமான வாக்குறுதிகளைக் கொண்ட அவரது பேச்சில் அவர் தானே தேர்ந்தெடுத்து துணை ஜனாதிபதியாக்கிய, நெடுங்காலம் ஆட்சியின் இரகசிய போலிசின் தலைவராய் இருந்த ஓமர் சுலைமானுக்கு தனது ஜனாதிபதிக் கடமைகளில் சிலவற்றை பகிர்ந்தளிக்கும் அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் ஒரு முக்கிய கூட்டாளியான சுலைமான் அதனை விடவும் அபாயகரமானதானதொரு உரையை வழங்கினார். எகிப்தின் மில்லியன்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களும் வேலைநிறுத்தம் செய்வோரும் “வீட்டிற்குத் திரும்ப வேண்டும்” “வேலைக்குத் திரும்ப வேண்டும்” என்று அவர் கோரினார். “குழப்பம்” விளைய வேண்டாம் என்றால் ஆட்சியுடன் “கைகோர்க்க” அவர் அவர்களை எச்சரித்தார். “பிரிவினைவாதத்தை” ஊக்குவிப்போர் சொல்வதைக் கேட்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில், மத்திய அலெக்சாண்டிரியாவில் மற்றும் நாடெங்கிலுமான நகரங்களில் கூடியிருந்த மில்லியன்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நம்பமுடியாமல் திகைத்துப் போயினர், அதைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத கோபம் வெடித்தது. முபாரக்கின் வீழ்ச்சியை எதிர்பார்த்து பாடியும் ஆடியும் கொண்டாட்டங்களில் இருந்த கூட்டத்தினர் அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி மீதான தங்களது வெறுப்பு மற்றும் வஞ்சத்தின் அடையாளமாய் காற்றில் தங்களது காலணிகளை உயர்த்திக் காட்டத் தொடங்கினர். ஆயிரக்கணக்கானோர் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து தேசிய அரசுத் தொலைக்காட்சி தலைமையகத்தையும் ஜனாதிபதி மாளிகையை நோக்கியும் நடக்கத் தொடங்கியதாய் கூறப்பட்டது. இரண்டு இடங்களுமே வரிக்கம்பிகளாலும் கனமான துருப்புகளாலும் சூழப்பட்டிருந்தன. அலெக்சாண்டிரியாவில், ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பான்மையினர் நகரின் மையத்தில் இருந்து உள்ளூர் இராணுவத் தளத்தை நோக்கித் திரண்டதாய் கூறப்படுகிறது.

வெள்ளியன்று இன்னும் மில்லியன்கணக்கான மக்கள் வீதிகளில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எகிப்திய இராணுவத்திற்கும் கலகத்தில் இறங்கியுள்ள பரந்த மக்களுக்கும் இடையில் ஒரு இரத்த மோதலுக்கான சாத்தியம் பெருகிக் கொண்டிருக்கிறது. படுகொலை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுமானால், இறந்தோருக்கும் காயமுற்றோருக்குமான முழு அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்பும் அமெரிக்காவில் உள்ள ஒபாமா நிர்வாகத்தின் மீதே உரியதாகும்.

எகிப்திய ஜனாதிபதி பதவியில் தொங்கிக் கொண்டிருப்பதான ஹோஸ்னி முபாரக்கின் முடிவு, ஏமாற்றுகிற அமெரிக்க ஊடகங்கள் கூறுவது போல், தனி மனிதனின் பிடிவாதம் குறித்த அல்லது “இராணுவப் பெருமை” குறித்த விஷயமல்ல.

மாறாக, ஊழலடைந்த முதலாளிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் கொண்ட எகிப்தின் சொந்த ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளும் அத்துடன் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார வளாகங்களுக்குள்ளும் நடந்த தீவிர விவாதங்களின் விளைபொருள் தான் இது.

கீழிருந்தான ஒரு புரட்சிகர சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிற்போக்குத்தனமான ஆட்சியையும் சுற்றிக் கொள்ளும் பாரம்பரிய விவாதம் தான் இதிலும் சம்பந்தப்பட்டுள்ளது. புரட்சிகர அச்சுறுத்தலை இல்லாது செய்ய குறைந்தபட்சம் சராசரியான சலுகைகளேனும் வழங்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு சலுகைகள் அளித்தால் அது புரட்சியை வலுப்படுத்துவதோடு ஆட்சியின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று மற்றவர்கள் எதிர்வாதம் செய்கின்றனர்.

இராணுவத் தலைமை இத்தகையதொரு பிளவுகளால் தான் சூழப்பட்டுள்ளதாக கெய்ரோவில் இருந்தான செய்திகள் கூறுகின்றன. வியாழனன்று இது தன் “உச்சநிலைக் குழு”வைக் கூட்டியது. 1967 மற்றும் 1973ல் இஸ்ரேலுடனான போர் சமயங்களில் மட்டுமே இக்குழு முன்னர் கூட்டப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கூட்டத்தில் முபாரக் இல்லாததில் அவர் வெளியேறுவது உறுதியானதாய்ப் பலர் நம்பினர். தனது உரையில் முபாரக், “அயல்நாட்டிலிருந்தான கட்டளைகளுக்கு” - இங்கு அவர் குறிப்பிட்டது அமெரிக்க உத்தரவுகளை - தலைவணங்கக் கூடாது என்று சபதம் கூறி தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் அபத்தமான முயற்சியில் இறங்கினார்.   

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், எகிப்திய ஜனாதிபதி பதவியில் தொடர்வதையும், நாட்டின் தலைமைச் சித்திரவதையாளரான ஓமர் சுலைமான் “ஒழுங்குமுறைப்பட்ட ஜனநாயக இடைமாற்ற”த்திற்கான ஒருங்கிணைப்பாளராய் இருப்பதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதையும் தான் ஏற்றுக் கொள்வதை முந்தைய நாட்களில் ஒபாமா நிர்வாகம் தெளிவாக்கி விட்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊக்குவித்து வந்திருந்ததைத் தான் முபாரக்கும் சுலைமானும் வியாழனன்று அறிவித்தனர்.

ஒபாமா நிர்வாகத்திற்கும் எகிப்தின் சர்வாதிகாரத்திற்கும் இடையில் இருக்கும் கருத்துவேறுபாடு என்னவாய் இருந்தாலும் அது முழுக்க தந்திரோபாயத் தன்மை மட்டுமே படைத்ததாகும். ஆட்சியின் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பது முபாரக்கை வைத்துக் கொண்டு சாத்தியமாகுமா அல்லது முபாரக் இல்லாமல் சாத்தியமாகுமா, இராணுவம் நேரடியாக அதிகாரத்தைப் பற்றலாமா அல்லது ஏதேனும் இடையிலான கருவிகளைக் கொண்டா என்பதில் அமெரிக்க நிர்வாகத்திற்குள்ளும் அதே போல் எகிப்திய ஆட்சிக்குள்ளேயுமே கூட பிளவுகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவின் பிரதான ஒத்துழைப்பு அரசான இஸ்ரேல் இன்னும் திட்டவட்டமாய் இருந்தது. எந்த ஜனநாயகத் திறப்பும் அனுமதிக்கப்பட முடியாது, ஏனெனில் அது “தீவிரவாதக் கூறுகளை” வலுப்படுத்தும் என்று இஸ்ரேலின் துணைப் பிரதமர் சில்வன் ஷலோம் அறிவித்தார்.

இதனிடையே ஜனாதிபதி பராக் ஒபாமா சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயீத் உடன், மற்றும் மற்ற பெர்சிய வளைகுடா புள்ளிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இவர்கள் அனைவருமே எகிப்திய மக்களுக்கு எதிராய் முபாரக்கை ஆதரிக்க அமெரிக்காவை வலியுறுத்தினர். எகிப்திய சர்வாதிகாரியைத் தூக்கியெறிவதில் ஒரு கிளர்ச்சி வெற்றிபெறுமானால், மற்ற அமெரிக்க-ஆதரவு ஆட்சிகளும் வீழக் கூடும் என்பது தான் அரை பிரபுத்துவ முடியாட்சிகளிலும் அமெரிக்காவிலும் நிலவும் அச்சமாய் உள்ளது.

முபாரக்கின் உரைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாய் எகிப்து தொடர்பாய் ஒபாமா இவ்வாறு அறிவித்தார்: “வரலாறு கட்டவிழ்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது முழுத் தெளிவாய் உள்ளது.” மேலும் கூறினார்: “அடுத்ததாய், நாம் விரும்புவது.....ஜனநாயகத்தை நோக்கிய ஒரு ஒழுங்குமுறைப்பட்ட உண்மையான மாற்றத்திற்கு ஆதரவாக அமெரிக்கா தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்பதை அனைத்து எகிப்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.”

கடந்த இரண்டரை வார நிகழ்வுகள் ஒபாமா நிர்வாகத்தை முழுக்க மதிப்பிழக்கச் செய்திருக்கிறது. மில்லியன்கணக்கான எகிப்திய மக்களுக்கு முன்பாகவும் பிராந்தியம் மற்றும் உலகெங்கிலுமான பரந்த மக்களுக்கு முன்பாகவும் முபாரக் சர்வாதிகாரத்தின் ஒரு குற்றக் கூலிப்படையாய் அது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. “ஜனநாயகம்” குறித்த அதன் வேடதாரித்தனமான வாய்ச்சவடால் எல்லாம் அந்த சமயத்திற்கு விளையாடுவது என்பதற்கு மேல் எதுவும் இல்லை. ”ஒழுங்குமுறைப்பட்ட உண்மையான மாற்றம்” என்கிற பசப்பு வார்த்தைகளுக்குக் கீழுள்ள அதன் உண்மையான நோக்கம் எகிப்தில் அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பரந்த மக்களின் கிளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கும் ஒரு வழியைக் கண்டறிவது தான்.

முபாரக் மற்றும் அவரது சகாக்களின் மீதே மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்திற்கு தங்கியிருந்து விட்ட நிலையில், ஒரு தயார்-நிலை மாற்று அதற்கு இருக்கவில்லை. இத்தகைய ஆசாமிகளை வளர்த்தெடுப்பதற்கும், அதே சமயத்தில் ஆட்சிக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் மக்கள் அடித்தளத்தை பிளவுபடுத்த வேலை செய்வது, நடுத்தர வர்க்கத்தின் அரசியல்ரீதியாகப் பின்தங்கிய அடுக்குகளுக்கும் ஓரளவு வசதியாக இருக்கக் கூடிய பிரிவுகளுக்கும் விண்ணப்பித்து அவர்களை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராய்த் திருப்புவது ஆகிய வேலைகளுக்கும் எல்லாம் அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

எகிப்தில் தான் எதிர்கொள்வது ஒரு சமூகப் புரட்சியை என்பதை அமெரிக்கா தீவிர நனவுடன் அறிந்திருக்கிறது. கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பரவியிருக்கும் ஒரு வேலைநிறுத்த அலை ஆடைத் தொழிலாளர்களில் இருந்து பேருந்து ஓட்டுநர்கள், மருத்துவமனைத் தொழிலாளர்கள், கலைஞர்கள், இரும்பாலைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனைத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், கப்பற்துறை ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் எண்ணிலடங்கா மற்றவர்கள் வரை ஏறக்குறைய நாட்டின் உழைக்கும் மக்களின் ஒவ்வொரு பிரிவையும் போராட்டத்திற்குள் கொண்டுவந்திருப்பதன் மூலம் இது நிரூபணமாகியுள்ளது. தொழிலாளர்கள் ஆலைகளில் உள்ளிருப்பு மேற்கொண்டனர், முக்கிய சாலைகளில் மறியல் செய்தனர், அத்துடன் கலகத் தடுப்பு போலிசாருடன் நேருக்கு நேராய் மோதல்களில் இறங்கினர்.

உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெடிய நெருக்கடியானது உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்த மக்களிடம் அதிருப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ் எகிப்தின் மக்கள் எழுச்சி ஒரு தீப்பொறியாக சேவை செய்து, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் அதனையும் கடந்த பகுதிகள் முழுவதிலும் தொழிலாளர்களை தீவிரமயப்படுத்தி விடும் என்பது அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு மற்ற நாட்டிலும் ஆளும் உயரடுக்கினரிடையே எழுந்திருக்கும் மாபெரும் அச்சமாகும்.

அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட்டத்திற்குள் வந்திருக்கும் எகிப்தின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொருத்தவரை, கடந்த சில வாரங்கள் செறிந்த அரசியல் அனுபவங்களைத் திரட்டித் தந்திருப்பதோடு ஒரு வெகு குறுகிய காலத்தில் நனவையும் அபிவிருத்தி செய்துள்ளது. பொதுவான ஜனநாயக நப்பாசைகளையும், அதேபோல் இராணுவம் சுதந்திரத்திற்கான வாகையாளராய் சேவை செய்ய முடியும் என்பதான நம்பிக்கையையும் நொறுங்கிப் போக நிகழ்வுகள் சேவை செய்துள்ளன. ஆட்சியை புரட்சிகரரீதியாய் அழிப்பது ஒன்று தான் முன்னிருக்கும் ஒரே வழி என்பது முன்னினும் தெளிவாகிக் கொண்டுள்ளது.

ஜனநாயக உரிமைகள், வேலைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றுக்கான மில்லியன்கணக்கான எகிப்தியர்களிடம் இருந்தான கோரிக்கைகள் இணக்கமற்று இருப்பது வெறுமனே ஹோஸ்னி முபாரக் ஜனாதிபதியாக இருப்பதுடன் மட்டுமல்ல, மாறாக நாட்டின் கடுமையான ஒடுக்குமுறை மற்றும் பட்டவர்த்தனமான சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்குப் பொறுப்பான முதலாளித்துவ உடைமைத்துவம் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அமைப்புமுறையுடனும் தான். ஒரு மக்கள் கிளர்ச்சியின் அடித்தளங்களை அமைக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டுவதும், அதன் பின்னால் கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அத்தனை அடுக்குகளையும் அணிதிரட்டுவதும் தான் எகிப்திய புரட்சிக்கு முன் வைக்கப்படும் அவசர அவசியமான கேள்வி ஆகும். இத்தகையதொரு இயக்கம் தான் ஆட்சிக்கு அடித்தளமான இராணுவத்தின் சக்தியை எதிர்கொள்ளவும், கட்டாயப் படைவீரர்களின் பரந்த எண்ணிக்கையினரை வசதியான ஊழலடைந்த மேலிடத்தின் உத்தரவுகளில் இருந்து உடைத்தெடுக்கவும் முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாய் அவசியமாய் இருப்பது, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களோடு ஒன்றுபடுத்தும் சோசலிச சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமை எழுவதாகும். இதன் அர்த்தம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எகிப்தியப் பிரிவைக் கட்டுவதென்பதாகும்.