சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan’s summer floods: A man-made disaster

பாகிஸ்தானிய கோடை வெள்ளம்: ஒரு செயற்கைப் பேரழிவு

By Ali Ismali
13 January 2011

Use this version to print | Send feedback

பேரழிவான வெள்ளம் முதலில் பாகிஸ்தானைத் தாக்கி ஆறு மாதங்களுக்கும் அதிகமாய்க் கடந்து விட்ட நிலையில், அப்பேரழிவால் உருவான துயரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லியன்கணக்கான குடும்பங்களின் மீதும் ஒட்டுமொத்தமாய் உழைக்கும் மக்களின் மீதும் தொடர்ந்து தனது துயரகரமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் மற்றும் அதன் சர்வதேசக் கூட்டாளிகளின், குறிப்பாக அமெரிக்கா,  மீதான அதிர்ச்சிகரமான குற்றப்பத்திரிகையாக இந்த துயரம் அமைந்துள்ளது.

முன்கண்டிராத வெள்ளம் சுமார் 2,000 மக்களைப் பலி கொண்டது. ஆனால் இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் (ஆயிரக்கணக்கில் இல்லையென்றால்) அதன்பின் நோயிலும் பட்டினியிலும் உயிர்துறந்திருக்கலாம் என்று பரவலாய் நம்பப்படுகிறது.

அத்துடன் உணவின்மை, மன அழுத்தம் மற்றும் குளிர் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ளத்திற்குத் தப்பிய மில்லியன்கணக்கான மக்கள் நிமோனியாவுக்கும் மற்ற சுவாசக் கோளாறுகளுக்கும் ஆட்படும் அபாயத்தில் இப்போது இருக்கின்றனர். 7 மில்லியன் மக்கள் வீடின்றி இருக்கின்றனர் என்றும் அவர்கள் இந்த வாட்டும் குளிர் மாதங்களில் உயிருடன் போராடுகின்றனர் என்றும் குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில் வந்த ஒரு சமீபத்திய செய்தி தெரிவிக்கிறது. ஐநாவின் கூற்றுப்படி, 800,000 குடும்பங்கள் இப்போதும் அவசர உதவி, குறிப்பாக உணவு மற்றும் அடிப்படை உறைவிடம், அவசர அவசியப்படும் நிலையில் இருக்கின்றன. வெள்ளத்தால் பயிர்கள் அழிந்ததாலும் விவசாய நிலத்தின் பெரும் பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கியிருப்பதாலும் 2011 ஆம் ஆண்டில் உணவு உதவி அவசியப்படும் மக்களின் எண்ணிக்கை 500,000 வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும்பதிவுசெய்யப்படாத முகாம்களில் துயரமான நிலைகளில் வாழ்வதால் (வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான புகலிடங்களாக பாகிஸ்தானிய அரசாங்கம் அங்கீகரிக்க மறுக்கும் உத்தியோகப்பூர்வமற்ற வசிப்பிடங்கள்) மேற்கூறிய மதிப்பீடுகள் குறைவானதாய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நாடு 3 பில்லியன் டாலர் அளவுக்கு விவசாயத் துறையில் சேதாரத்திற்கு ஆளாகி இருக்கிறது. இது சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடையே பெரும் வருவாய் இழப்புகளையும் வேலை இழப்புகளையும் உருவாக்கியுள்ளதோடு கடுமையான உணவு விலை ஏற்றங்களுக்கும் காரணமாகி உள்ளது. ஏற்கனவே அபிவிருத்தி குன்றிய நிலையில் இருந்த பாகிஸ்தானின் சமூக உள்கட்டமைப்பும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 பள்ளிகள் அழிந்து விட்டன, பொதுக் கட்டிடங்களுக்கான சேதார மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாய் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. சுமார் 2,500 மைல்கள் நீளத்திற்கு நெடுஞ்சாலைகளும் சுமார் 3,500 மைல்கள் நீளத்திற்கு தொடர்வண்டிப்பாதையும் சேதாரமுற்றுள்ளன அல்லது அழிந்து விட்டன. மொத்த சேதார மதிப்பீடு சுமார் 10 பில்லியன் டாலர்கள். வெள்ளம் என்பது ஒரு இயற்கை நிகழ்வாய் இருந்தாலும், மில்லியன்கணக்கான மக்கள் குழப்பகரமான வகையில் இடம்பெயர நேர்ந்ததும் பெரும் சேதார அழிவுகளும் சமூகரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவாகும்.

பருவக் காற்று மழை பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நிகழவே செய்கின்றன, வெள்ளமும் வழக்கமாக நிகழவே செய்கிறது. ஆனாலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் வெள்ளப் பாதிப்பைக் குறைந்தபட்சத்தில் பராமரிப்பதற்கு அவசியமான வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மற்றும் எச்சரிக்கை அமைப்புமுறைகளையும் உருவாக்கத் தவறின. 2005 காஷ்மீர் பூகம்பத்தைப் போன்ற (இதில் பத்தாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்) பெரிய அளவிலான இயற்கைப் பேரழிவுகளை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தான் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. எதிர்பார்க்கிற வகையில், தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைக்கும் மக்களும் தான் அரசாங்க அலட்சியம் மற்றும் திட்டமிடல் பற்றாக்குறையின் பிரதான பலிகளாய் இருக்கின்றனர்.

1970களில் நிகழ்ந்த கடுமையான வெள்ளங்களுக்கான பதிலிறுப்பில், 1977ல் பாகிஸ்தான் கூட்டரசு வெள்ள ஆணையத்தை ஸ்தாபித்தது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதும் வெள்ளத்தினால் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் சேதாரம் ஏற்படாமல் பாதுகாப்பதுமே இந்த ஆணையத்தின் நோக்கம் ஆகும். 2010 வரை 900 மில்லியன் டாலர்களை வெள்ள மேலாண்மைக் கட்டுமானத்திற்காக செலவு செய்ததாக இந்த ஆணையம் கூறியிருக்கிறது. ஆயினும், மிகக் குறைந்த வேலை தான் உண்மையில் நடந்தேறியுள்ளது. எந்த ஒரு மையமான திட்டமும் இல்லை என்பதோடு தடுப்பணை கட்டுவதென்பது பல சமயங்களில் அரசுக்குப் பதிலாக செல்வம் படைத்த நிலச்சுவான்தாரர்களால் தான் தனியார் மூலம் நடந்தது. வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகத்தக்க இடங்களில் வசித்த சாதாரண மக்களில் பலரும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் விவசாயத் திட்டங்களுக்கு இலஞ்சம் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் விளைவாக, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான வெள்ளங்களுக்கு பாகிஸ்தான் ஒட்டுமொத்த தயாரிப்பின்றி இருந்தது. 

பேரழிவு கட்டவிழ்ந்த போது, வெள்ளத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் மீது எந்த முறையான மேலாண்மையும் இல்லை என்பது வெளிப்படையானது. சில உள்ளூர் அதிகாரிகள் தங்களது தடுப்பணைகளை வலுப்படுத்திய அதே சமயத்தில், பலரும் தங்களது தடுப்பணைகள் உடைவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அத்துடன் எந்த மதகுகள் திறக்கப்பட வேண்டும் என்பது பணம் படைத்தவர்களும் சக்திவாய்ந்தவர்களும் தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கைப்புரட்டு செய்யப்படுவதாக இருந்தது.

அரசாங்க அலட்சியமும் திட்டமிடல் பற்றாக்குறையும் குறிப்பாக சிந்து மாகாணத்தில் பேரழிவான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் உயரடுக்கின் கையாலாகாத்தனமும் அலட்சியமும் விளங்கப்பட்டது. அதிகரித்த நீர் சிந்துப் பள்ளத்தாக்கின் தெற்குவாக்காக கடல் நோக்கி தான் எழுந்து வந்ததால் சிந்து அதிகாரிகளுக்கு சுமார் இரண்டு மாதங்கள் காலம் இருந்தது. ஆயினும் தடுப்பணைகளைப் பாதுகாப்பதற்கோ அல்லது வெள்ள அச்சுறுத்தலுக்கு ஆளான மக்களை இடம்பெயர்த்துவதற்கோ எந்த ஒருங்குபட்ட முயற்சியும் இருக்கவில்லை.

"சிந்து மாகாணத்தின் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் முக்கியமான நிலப்பண்ணையார்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்து அவர்களின் மற்றும் முக்கியமாகக் கருதப்படும் மற்றவர்களின் நிலங்களின் வழியாகச் செல்லும் நீரைத் தடுக்க மட்டும் கரையை உயர்த்தினர். இதில் மற்ற பிராந்தியங்கள் பலியாகி விட்டன, இவை வெள்ள நீருக்கு இலக்காகும் வகையில் விட்டு விடப்பட்டன என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். மேலும் அதிகரித்த நீர் சிந்து மாகாணத்தின் மக்கள்நெரிசல் மிகுந்த இடங்களுக்குள் புகாமல் தடுக்கும் வகையில் தடுப்புகள் கட்டுவதை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு மூத்த தலைவரும் உழைப்பு மற்றும் மனிதவளத் துறையின் மத்திய அமைச்சருமான குர்ஷீத் ஷா தடுத்து விட்டதாக பாகிஸ்தானிய செய்தித் தாள் எக்ஸ்பிரஸ் டிரைப்யூன் தெரிவிக்கிறது. அமைச்சர் கும்பலின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையிலும் நெருக்கடியை மாகாணத்தில் ஏழை மக்கள் மட்டும் சுமக்கும் வகையிலும் செய்யும் வகையாகத் தான் ஷாவின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.  

இந்த கறைபடிந்த அரசியல்வாதிகள் வெள்ளத் தடுப்பு வழிகாட்டல்களை தங்களது சொந்த நலன்களின் பேரில் மீறாதிருந்திருந்தால் தெற்கு பஞ்சாபில் உள்ள முஷாபர்கர் மாவட்டத்திலும் வெள்ளம் பெருமளவுக்குத் தடுக்கப்பட்டிருக்க முடியும் என்று கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டரில் சென்ற செப்டம்பரில் வந்த ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது.

நீரளவு அதிகரித்த போது நீர்ப்பாசன அதிகாரிகள் வலது கரையில் வெள்ளப் பகுதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பகுதியின் பக்கம் நீரைத் திருப்பி விட்டிருந்தால் ஜனத்தொகை மிகுந்த முஷாபர்கர் மாவட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் திட்டமிட்டு மதகுகள் இடது பக்கமாய்த் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 50 பேருக்கும் அதிகமாய்க் கொல்லப்பட்டதோடு 1.5 மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்த்தப்பட்டனர். இந்த முடிவினால் நூற்றுக்கணக்கான பள்ளிகளும் அழிந்தன. வெள்ளத்திற்கெனக் ஒதுக்கிட்ட பகுதிக்குள் நீரைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள பஞ்சாபில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட இரண்டு சக்திவாய்ந்த நிலப்பண்ணைக் குடும்பங்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு நெருக்குதலளித்ததாகக் கூறப்பட்டது. முஷாபர்கர் வெள்ளம்மனிதனால் தோன்றியது என்பதாய் அதிகாரிகள் பலரும் வருணித்ததாக கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் தெரிவித்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) உடன் தொடர்புபட்ட நிலப் பண்ணைகள் தங்களது பயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஒதுக்கிட்ட வெள்ளப் பகுதியின் பக்கம் நீரைத் திருப்பி விடா வண்ணம்நீர்ப்பாசனப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு நெருக்குதல் அளித்தனர் என்று தேசிய நாடாளுமன்றத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினரான ஜம்ஷெட் தஸ்தி குற்றம் சாட்டியிருந்தார்.

அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தால் விளைந்த மக்கள் கோபத்தையும், அத்துடன் நாடெங்கிலும் அரசியல்வாதிகளும் நிலப்பண்ணைகளும் தங்கள் சொந்த நிலங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு விவசாய அதிகாரிகளை நெருக்குதல் அளித்து தங்களுக்கு ஏற்ற வகையில் மதகுகளைத் திறக்கச் செய்தனர் என்கிற செய்திகளும் வெளியானதையும் அடுத்து, சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உச்சநீதி மன்றம் ஒரு விசாரணையைத் துவக்கத் தள்ளப்பட்டிருக்கிறது.

முறையற்ற வகையில் வெள்ள நீர் திருப்பப்பட்டது குறித்து அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி உச்சநீதி மன்றம் அனைத்து மாகாண அரசாங்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த செய்திகள் எல்லாம் பாகிஸ்தானின் உயரடுக்கிற்குள்ளான ஒரு புதிய விரோதத்திற்கான மூலவளமாகவும் ஆகும் சாத்தியமிருக்கிறது. ஏனென்றால் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மற்றும் ஸ்தாபகமான அரசியல் கட்சிகள் இருந்துமான அரசியல்வாதிகள் வெள்ளப் பேரழிவுக்கும் பரிதாபகரமான நிவாரண முயற்சிக்குமான பழியை தங்களது எதிரிகள் மீது போடுவதற்கு முனைவதன் மூலமும் தேசிய-இன போட்டிகளைத் தூண்டி விடுவதன் மூலமும் வெள்ள நிலைமைக்கு பதிலிறுப்பு செய்தனர்.

டிசம்பர் 14 அன்று, உச்ச நீதி மன்றம் மாகாணங்களில் இருந்து வந்த அறிக்கைகளைப் பார்வையிட ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் ஒரு பிரதிநிதியைக் கொண்ட ஒரு நான்கு-உறுப்பினர் குழுவை நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை ஜனவரி மத்தியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பெரும் சேதத்திற்குக் காரணமாய் விளையும் வகையில் சிந்து மாகாணத்தில் மதகுகள் திறக்கப்பட்டது குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்தும்.

இந்த விசாரணை பெருமளவில் மூடிமறைக்கும் என்பதும் எந்த அரசியல்வாதி அல்லது சக்திவாய்ந்த நிலப்பண்ணைகளும் அவர்களது பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக தண்டனை பெறப் போவதில்லை என்பதும் நடைமுறைரீதியாக அறியப்பட்ட ஒன்றாகும்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மீதான மக்கள் கோபம் தணிந்திருக்காத அதே சமயத்தில், பாகிஸ்தானிய ஊடகங்கள் வெள்ளப் பேரழிவு, அதன் காரணங்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்த தனது மொத்த நாட்டத்தையும் ஏறக்குறைய கைவிட்டு விட்டது. தசாப்தங்களில் நேர்ந்திருக்கக் கூடிய மிகப்பெரும் மனிதநேயப் பேரழிவு என்று ஐநா குறிப்பிட்டிருக்கக் கூடிய ஒன்றினை ஆய்வதற்கு உள்ள இந்த ஆர்வக் குறைவு எங்கிருந்து எழுகின்றதென்றால், பாகிஸ்தான் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் தலைவிதிக்கு உயரடுக்கினர் காட்டும் அதிர்ச்சிகரமான அலட்சியத்தில் இருந்தும், வெள்ளத்தைக் குறித்து தீவிரமாய் விசாரித்தால் அது பாகிஸ்தானிய முதலாளித்துவ சமூக ஒழுங்கின் மீது தான் விரல் நீட்டும் என்பதை அது அறிந்து வைத்திருப்பதில் இருந்தும் எழுகிறது.

சாதாரண பாகிஸ்தானியர்களை ஆவேசத்திற்குள்ளாக்கிய ஷபாஸ் விமானத்தள சர்ச்சை விவகாரத்திலும் ஊடக ஸ்தாபிப்புகள் பெருமளவு அமைதி காக்கவே செய்திருக்கின்றன.

சென்ற ஆகஸ்டு மாதத்தில், சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாபாஸ் விமானத்தளம் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றும் பொருட்டு பலூசிஸ்தானை நோக்கி வெள்ள நீரை பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிந்தே திருப்பி விட்டிருந்தது அம்பலமானது. 2001 இலையுதிர் காலத்தில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுத்ததில் தொடங்கி இந்த விமானத்தளம் அமெரிக்க விமானப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது. பாகிஸ்தானிய விமானப் படையும் பாகிஸ்தானிய அரசாங்கமும் தொடர்ந்து மேற்கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், ஜகோபாபாத் மாவட்டத்தின் பெரும்பகுதியும் அருகிலுள்ள பலூசிஸ்தானில் ஜாபராபாத் மாவட்டமும் வெள்ள நீரில் மூழ்கியிருந்த போது இந்த விமானத் தளம் மட்டும் தப்பியது எப்படி என்பதற்கு அவை இதுவரை விளக்கமளிக்கவில்லை. வெள்ளநீரை விமானத்தளத்திற்கு வெளியே திருப்புகிற முடிவினால் 800,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டனர்.

பாகிஸ்தானின் சாதாரண மக்களின் அடிப்படையான தேவைகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போருக்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின் ஆதரவை வைக்கும் முடிவு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களில் ஒரு சிறு எதிர்ப்புக் குரலைக் கூட எழுப்பத் தவறியது. பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு முற்றுமுதலாய் அடிபணிந்து கிடப்பதற்கான இன்னுமொரு உதாரணமாய் இச்சம்பவம் இருந்தது. இன்னும் சொன்னால், பாகிஸ்தான் வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், வடமேற்கில் பழங்குடிப் பகுதிகளில் சட்டவிரோதமான அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து ஏராளமான மக்களைத் தொடர்ந்து பலி வாங்கிக் கொண்டிருந்தன.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கம் கவிழாமல் தடுப்பதற்கு போதுமான உதவியை மட்டும் அமெரிக்க அரசாங்கம் வழங்கியிருக்கிறது. நாட்டின் கொந்தளிப்பான நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடக் கூடாது பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க நலன்களைச் சிக்கலில் ஆழ்த்தி விடக் கூடாது என்பது தான் ஒபாமா நிர்வாகத்தின் பிரதானக் கவலையாக இருக்கிறது.

பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகள் என்று சொல்லப்படுவனவற்றிலான துயரமான வறுமை என்பது காலனியத்தின் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையின் அத்துடன் அதன் உள்ளூர் முகவர்களான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாகும். தொடங்கப்பட்ட நாள் முதலாகவே ஒரு சார்பு நாடாகவே இருந்து வரும் பாகிஸ்தான் அந்நிய சக்திகளை, குறிப்பாக அமெரிக்காவை முழுமையாக சார்ந்த நிலையிலேயே தொடர்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பரந்த இடைவெளி கணிசமாய் அதிகரித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தும் பாகிஸ்தானின் உயரடுக்கு தனியார்மயப்பட்ட அரசுச் சொத்துகளை பறிமுதல் செய்வதன் மூலமும் பாகிஸ்தானை மலிவு-உழைப்புக் களமாக உருமாற்றுவதன் மூலமும் தன்னை கூடுதலாய் வளப்படுத்திக் கொள்வதற்கே முனைந்து வருகிறது.

ஏற்கனவே கடன் சுமையில் தத்தளிக்கும் நாட்டின் அரசாங்கச் செலவினங்களில் இன்னும் மிருகத்தனமான வெட்டுகளை அமல்படுத்த  இப்போது சர்வதேச நாணய நிதியம் கோரிக் கொண்டுள்ளது. இது உள்கட்டமைப்பை கூடுதலாய் அழிக்கவே செய்யும் என்பதோடு பாகிஸ்தானை வருங்காலத்தில் இதேபோன்ற பேரழிவுகளுக்கு எளிதில் இலக்காகும்படி விட்டு விடும்.

மேலும் 1947ல் இந்திய துணைக்கண்டத்தை இந்துக்கள் பெரும்பான்மையுடனான இந்தியாவாகவும் முஸ்லீம் பாகிஸ்தானாகவும் வகுப்புவாத அடிப்படையில் பிரித்து எல்லைக்கோடுகள் செயற்கையாகத் திணிக்கப்பட்டது இரண்டு நாடுகளின் வழியாகவும் ஓடும் நதிகளுக்கான திறம்பட்ட நம்பகமான வெள்ள மேலாண்மையை ஸ்தாபிப்பதை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கிறது. நீர் ஆதாரங்களின் காரணத்திலான சண்டை என்பது இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கான மூலாதாரங்களில் ஒன்றாய் இருக்கிறது.

உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளாக பூர்த்தி செய்யப்பட முடியாது என்பதை பாகிஸ்தான் பேரழிவு மீண்டும் ஒருமுறை விளங்கப்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவற்ற காலாவதியான இலாப அமைப்பைத் தூக்கியெறிவதற்கு பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைக்கும் மக்களும் நனவுடன் நடத்தும் போராட்டத்தின் பகுதியாகவே இயற்கைப் பேரழிவுகளின் தாக்கத்தைக் குறைந்தபட்சமாய் பராமரிப்பதற்கு அவசியமான சமூக உள்கட்டமைப்பும் அறிவார்ந்த திட்டமிடலும் ஏற்படுத்தப்பட முடியும்.