சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

Fifty years since the murder of Patrice Lumumba

பாட்ரிஸ் லுமும்பா கொலையின் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்

By Tom Eley
22 January 2011

Use this version to print | Send feedback


பாட்ரிஸ் லுமும்பா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 17 அன்று கொங்கோவில் காலனித்துவ எதிர்ப்பு போராட்ட தலைவரும், அதன் முதல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியுமான பாட்ரிஸ் லுமும்பா சிறையில் இருந்து அகற்றப்பட்டு இரவின் இருளில் அமெரிக்காவினதும் பெல்ஜியத்தினதும் ஒப்புதலுடன் சுட்டுக் கொல்லும் படையினரால் கொலை செய்யப்பட்டார்.

லுமும்பாவும் அவருடைய இரு நண்பர்களான மாரிஸ் எம்போலா, ஜோசப் ஒகிடோ ஆகியோரும் மரங்களில் கட்டிவைக்கப்பட்டு ஒருவரின் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல வாரங்களுக்குப் பின்னர் தப்பியோட முயன்றபோது சீற்றமுற்ற கிராம மக்களால் அவர் கொல்லப்பட்டார் என்ற லுமும்பாவின் மரணம் பற்றிய உத்தியோகபூர்வ விபரம் தொடர்பான கேள்விகள் எழுந்தபோது பெல்ஜியர்கள் திரும்பி வந்து, சடலங்களை மறுபடியும் வெளியே எடுத்து, அவற்றைச் சிதைத்து, அவற்றை அமிலங்களில் கரைத்து, லுமும்பாவின் பற்களையும் உடலில் பாய்ந்திருந்த தோட்டாக்களையும் அகற்றி நினைவுப்பொருட்களாக எடுத்துசென்றனர்.

கொங்கோவை 1960 வரை ஆட்சி புரிந்து வந்த பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா இந்தக் கொடூரக் கொலையில் இருந்து தங்கள் குருதிக்கறை படர்ந்த கைகளைக் கழுவிவிட ஒருபொழுதும் முடியவில்லை. ஆயினும் அந்நேரத்திலும், இப்பொழுதும்கூட, வாஷிங்டன்தான் லுமும்பா மரணத்திற்கு பின்னணியில் இருந்த முக்கிய சக்தி என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இக்கொலை  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. ஆபிரிக்க நாடுகளின் சுதந்திரம் என அழைக்கப்பட்ட கூற்றின் வெற்றுத்தனத்தையும் விளக்கிக்காட்டியதுடன், அதன் அபத்தமான எல்லைகள், உண்மையில் தற்கால நவீன அரசியல் யதார்த்த்த்தின்  தன்மையே ஐரோப்பிய சக்திகளின் கொள்ளை முறைகளில் இருந்துதான் விளைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றது..

ஒரு சோசலிஸ்டாக இல்லை என்றாலும், கொங்கோ அதன் பரந்த தாதுப்பொருள் செழிப்பைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்னும் லுமும்பாவின் கோரிக்கைதான் அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு காரணமாயிற்று. ஏனைய  புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆபிரிக்க நாடுகளின் நம்பகத்தன்மையும் அவர் கொலையால் மங்கிப் போயின; அதன்பின் கண்டத்தின் தலைவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் லுமும்பாவின் மரணத்தையும் கணக்கில் எடுக்கவேண்டியிருந்தது.

மரபுரீதியான தேசிய சுதந்திரத்தின் தோல்வியை கொங்கோவினை விட வேறெங்கிலும் தெளிவாக கண்டுவிடமுடியாது. 1960ல் மற்றொரு தனி CIA ஆட்சிசதிக்கு ஆதரவளித்த லுமும்பாவின் முன்னாள் உதவியாளர் ஜோசப் மொபுட்டு 1965ல் லுமும்பா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டபோது அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். தெற்கு ஆபிரிக்கா முழுவதும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு எதிரான  ஒரு அமெரிக்க ஆதரவாளனாக இருந்த மொபுட்டு கொங்கோவில் ஆட்சியில் இருந்தபோது, அதற்கு ஜைர் என்று ஒரு பெயரையும் இட்டார். அவர் 1997ம் ஆண்டு படையெடுத்து வந்த ருவாண்ட, உகண்ட படைகளால் அகற்றப்படுவதற்கு முன் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்களை கொள்ளையடித்தார். அப்பகுதியில் ஐரோப்பா வரைந்த எல்லைகளின் மரபியத்தால் 1990களின் ருவாண்டா நெருக்கடி கொங்கோவிலும் பரந்தபோது  அடுத்த தசாப்தத்தில் அது அநேகமாக 5 மில்லியன் உயிர்களைக் குடித்தது.



ஜோசப் மொபுடு ஜனாதிபதி நிக்சனுடன் வெள்ளை மாளிகையில்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கணிசமான தொழிலாள வர்க்கமும் அதன் பழங்குடி மக்களும் கடுமையான வறிய நிலையில் வாழ்கின்றனர். சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பு 46 ஆண்டுகள்தான். 1,000 உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் 114 குழந்தைகள் தங்கள் முதல் ஆண்டு நிறைவுப் பிறந்த நாளைக் கூடக் காண்பதில்லை. 195 குழந்தைகள் ஐந்து வயது வரைகூட வாழ்வதில்லை. இருக்கும் அற்பசொற்பமான கட்டுமானமும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இந்த பல இன, மொழிவழிப் பிரிவுகள் நிறைந்த 70 மில்லியன் மக்கள் வாழும் நாட்டின் உயர்மட்டத்தில் ஒரு மிகச் சிறிய, பல மில்லியன்களையுடைய செல்வந்தர் தட்டு, தங்கள் செல்வச் செழிப்பை இப்பொழுதும் உலகின் மிக ஊழலான அரசாங்கங்களில் ஒன்று எனத் தரமிடப்பட்டுள்ளதுடன் தொடர்பு கொண்டுள்ளதின் மூலம் அடைந்து வாழ்ந்து வருகிறது. அதேபோல் இந்தத் தட்டினர் கொங்கோவின் தாதுப்பொருள் செழிப்பான யுரேனியம், பித்தளை, தங்கம், தகரம், கோபால்ட், வைரங்கள், மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவற்றை ஐரோப்பிய அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இலாபமடைந்து வருகின்றன.

பாட்ரிஸ் லுமும்பாவின் எழுச்சி

கொங்கோலியப் பகுதியான கசாயியில் மின்வசதி அற்ற ஒரு சகதிச் செங்கல்லினால் எழுப்பப்பட்ட வீட்டில் பாட்ரிஸ் லுமும்பா வளர்ந்தார். கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் பள்ளிகளில் அவர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்; அவருடைய ஆசிரியர்களை கவர்ந்து அவர்  தன்னை ஸ்ரான்லிவில் இல் (இப்பொழுது கிசன்கானி) ஒரு அஞ்சல்துறை எழுத்தராக இருத்திக் கொண்டார். இப்பதவியை அவர் 1954ல் பெற்றார். இங்குத்தான் லுமும்பா அரசியல் வாழ்வில் நுழைந்து ஒரு தொழிலாளர் சங்கத்திற்காக இயங்கி பெல்ஜிய தாராளவாத (லிபரல்) கட்சியில் சேர்ந்தார்.

1957ம் ஆண்டு லுமும்பா லியோபோல்ட்வில் இல் (இப்பொழுது கின்ஷாசா) ஒரு மதுபானத் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்தார். விரைவில் அவர் மற்ற தேசியவாதிகளுடன் சேர்ந்து MNC (Movement National Congolais) எனப்பட்ட தேசிய கொங்கோலிகளின் இயக்கம் என்பதை நிறுவினார். MNC பெல்ஜியத்தில் இருந்து சுதந்திரத்தை பெறபோராடி, பரந்த நாட்டில் பல பழங்குடிமக்கள் குழுக்களையும் ஒன்றாக இணைக்க முற்பட்டது.

லுமும்பா விரைவில் தன்னை முக்கிய கொங்கோலியத் தேசியவாதியாக நிறுவிக் கொண்டார். பெல்ஜிய தாராளவாதிகளுக்கு அவர் ஆதரவு கொடுத்தபோதிலும், அவர் அதிகாரிகளால் ஒரு ஆபத்தான தீவிரவாதி என்று கருதப்பட்டார். அவருடைய சொல்வன்மைக்காக அவர் பெரும் புகழ் பெற்றார்; அனைத்துக் கருத்துக்களின்படியும் பெரும் தைரியத்தையும் உறுதியான கருத்துக்களையும் கொண்டிருந்தார். பல ஆபிரிக்கத் தலைவர்களை வாங்கியது போல், அவரை விலைக்கு வாங்கமுடியவில்லை என்பதால், காலனித்துவ அரசு அதிகாரிகள் லுமும்பா கைதுசெய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு அக்டோபர் 1959ல் ஸ்ரான்லிவில் இல்கலகங்களைத் தூண்டியதற்காக சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார்.

ஒடுக்குமுறை இருந்தபோதிலும்கூட, தேசிய இயக்கங்களுக்கு ஒரு சதாகமான காலம் போல் தோன்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், காலனித்துவ பகுதி மக்களிடையே ஒரு புரட்சிகர எழுச்சி முதலில் ஆசியாவில் உருவாகிப் பின்னர் ஆபிரிக்காவிற்கும் பரவியது. பழைய காலனித்துவ ஆதிக்க நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை நசுக்க முற்பட்டன (பிரான்ஸ் வியட்நாம் மற்றும் அல்ஜீரியாவில் செய்யத் தவறியது போல்) அல்லது தங்கள் நலன்களைக் காப்பாற்ற பிரிட்டன் வகுப்புவாத முறையில் தெற்கு ஆசியாவில் செய்ததைப் போல் பெயரளவிற்கான சுதந்திரம் கொடுக்க தந்திரங்களைச் செய்தன.



ஆபிரிக்கா காலனித்துவ முறையில் இருந்து விடுபடல்

கொங்கோவின்மீது கட்டுப்பாட்டு நழுவிய நிலையில், அல்ஜீரியாவில் அதன் அண்டை நாடு பிரான்சிற்கு பேரழிவு தழுவுவதைப் பற்றியும் உணர்ந்த பெல்ஜியம் ஜனவரி 18, 1960ல் பிரஸ்ஸல்ஸில் ஒரு மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டது; அதில் அதன் மதிப்புடைய ஏகாதிபத்திய இருப்பின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட விவாதம் நடக்கும். இது மே மதம் நடக்கவிருக்கும் தேசிய தேர்தல்களை அடுத்து ஜூன் இறுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லுமும்பாவை சிறையில் இருந்து விடுவிக்கும் கட்டாயத்திற்கு பெல்ஜியர்கள் உட்பட்டனர்; ஏனெனில் அவருடைய கட்சிதான் டிசம்பர் 1959ல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் மிக அதிக வாக்குளைப் பெற்றிருந்தது; ஓராண்டிற்கு ஒரு நாள் குறைந்த நிலையில் அவர் பெல்ஜியன் கொலைகாரர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மே 11-25 தேர்தல்களில் கொங்கோலிய அரசியலின் ஒரே உண்மையான தேசிய நபராக, பெல்ஜியர்களின் சங்கடத்திற்கு இடையே, லுமும்பா வெளிவந்தார். பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும்கூட, NCM பாராளுமன்றத்தில் வேறு எந்தக் கட்சியையும்விட அதிக வாக்குகளையும் இடங்களையும் பெற்றது. அத்துடன் அராசங்கம் அமைக்கும் உரிமையையும் பெற்றது. பிரதம மந்திரியாக லுமும்பா தேர்ந்தெடுக்கப்பட்டார், பழங்குடி மக்கள் தளத்தைக் கொண்ட கட்சியின் தலைவரான ஜோசப் காசா-வுபு ஜனாதிபதிக்கு சற்றே குறைவான பதவியில் இருத்தப்பட்டார்.

ஜூன் 30 அன்று முறையாகச் சுதந்திரம் அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் பெல்ஜியத்தின் அரசர் பௌடௌவின் கொங்கோலிய மக்களுக்கு இருக்கும் காலனித்துவவகை கட்டமைப்புகளின் மரபுகளை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு தயை பொருந்தி உரை ஒன்றை நிகழ்த்தி, பெல்ஜிய ஆட்சியை நாட்டு மக்களுக்கு முற்றிலும் நலன்களைக் கொடுத்த காலம் என்றும் அளித்தார். உண்மையில் 1885ல் இருந்து 1908 வரை கிட்டத்தட்ட எட்டு மில்லியன் கொங்கோலியர்கள் கட்டாயத் தொழில் முறையை ஒட்டியும் பௌடௌனின் பாட்டனார் லியோபோல்டின் சொந்த ஆட்சியின் பயங்கரவாத அரசியலினாலும் மடிந்து போயினர்.


Lumumba being forced to eat his own speech 
while under arrest

தன்னுடைய உரையில் லுமும்பா பெல்ஜியப் பிரதிநிதிகள் குழுவை அரசர் கூற்றிற்கு வெளிப்படையான சவாலைக் கொடுத்ததின் மூலம் சீற்றத்திற்கு உட்படுத்தினார். சுதந்திரம் பற்றி அவர் கூறுகையில், “எந்தத் தன்மானமுடைய கொங்கோலியும் போராட்டத்தின் மூலம்தான் சுதந்திரம் அடையப்பட்டது என்பதை மறக்கமாட்டார் என்றும், அது அன்றாடம் நிகழ்ந்த போராட்டம், பேரார்வ, உயர்சிந்தனைப் போராட்டம் என்றும் இதில் இடர்களோ அல்லது துயரங்களோ பங்கு பெற்றவர்களுக்கு குறைந்துவிடவில்லை என்றும், அதற்காக மக்கள் தங்கள் வலிமையையும் குருதியையும் கொடுத்தனர். கண்ணீர், தீ, குருதி ஆகியவற்றைக் கொண்டிருந்த இப்போராட்டம் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம், எங்கள் இதயங்ளின் அடித்தளத்தில் இருந்து பெருமிதம் கொள்கிறோம். ஏனெனில் இது பெருமைமிக்க, நியாயமான போராட்டம், நம்மீது கட்டாயமாக சுமத்தப்பட்ட இழிவான அடிமைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றியமையாதது.” என்றார்.

துன்புறுத்தும் பணி பற்றி நாம் அறிவோம், பசியை விரட்டவோ, நல்ல ஆடை உடுத்தவோ, நல்ல வீடுகளில் வசிக்கவோ, நமக்குப் பிரியமான குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவோ அனுமதிக்காத ஊதியங்களுக்கு ஈடாக நம்மிடம் இருந்து அக்கடுமையான பணி உறிஞ்சப்பட்டது…. நாம் துன்பங்கள், அவமதிப்புக்கள், அடிகள் என்று காலை, நண்பகல், இரவெல்லாம் வாங்கியதைப் பொறுத்தோம், ஏனெனில் நாம் நீக்ரோக்கள்…. சட்டபூர்வ நெறிகள் என்ற பெயரில்  நம்முடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டோம், உண்மையில் வல்லமை தான் சரி என்ற நிலையில் அவை செய்யப்பட்டன. அடக்கு முறை மற்றும் சுரண்டலுக்கு அடிபணிய மறுத்தவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டு அங்கு படுகொலையுண்டதையும் நாங்கள் ஒருபொழுதும் மறக்க மாட்டோம்.”

பாட்ரிஸ் லுமும்பா அழிக்கப்படுதல்

அதே உரையில் லுமும்பா கொங்கோ ஜனநாயகக் குடியரசு இப்பொழுது பெல்ஜியத்துடன் ''சமமானது'' என்று அறிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு என்ற முறையில்தான் அத்தகைய அறிக்கை உண்மையாகும். அனைத்து முக்கிய மூலதனமும், குறிப்பாக சுரங்கத் தொழில் ஐரோப்பியர்களுடைய கரங்களில்தான் இருந்தது. கொங்கோ முழுவதிலும் 30 கறுப்பின கல்லூரிப் பட்டதாரிகள்தான் இருந்தனர்; இராணுவ அதிகாரி ஒருவர்கூட கறுப்பினத்தவரும் இல்லை, ஒரு சில கறுப்பினத்தவர்தான் ஆட்சித் துறையில் மேலாளர்களாக இருந்தனர். மக்களை எப்பொழுதும் அரசை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருத்திய பெல்ஜியக் கொள்கையின் விளைவுதான் இது.

பயிற்சி பெற்ற ஆபிரிக்க அதிகாரிகள் இல்லாத நிலையை உணர்ந்த லுமும்பா தான் பதவியை ஏற்ற உடன் புதிய தேசிய இராணுவத்தின் பொறுப்பை பெல்ஜியர்களின் கீழ் வைக்க முடிவெடுத்தார். இது கொங்கோலிய படையனருக்கு கோபத்தை அளித்தது. லியோபோல்ட்வில் பிரிவின் பெல்ஜியத் தளபதி எமில் ஜான்ஸென்ஸ் ஆபிரிக்க படையனரை ஆத்திரமூட்டும் விதத்தில் அவர்களை ஒருங்கே இணைத்து கோஷ அட்டையில்சுதந்திரத்திற்குப் பின்=சுதந்திரத்திற்கு முன் என எழுதினார். நிகழ்வுகளை மோசமாக்கும் வகையில் இராணுவ அதிகாரிகளை தவிர அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் லுமும்பா ஊதிய உயர்வுகளைக் கொடுத்தார்.

ஜூலை 5ஐ ஒட்டி, நாடு முழுவதும் இராணுவம் ஒரு வெளிப்படையான புரட்சியில் இருந்தது. ஐரோப்பியர்கள் ஏராளமானோர் நாட்டை விட்டு ஓடினர். குடியேறியவர்களுக்கு ஆபத்து என்ற கருதப்பட்ட அச்சறுத்தலை பெல்ஜியம் பயன்படுத்தி நாட்டின்மீது மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது; இது நாட்டின் ஒருவார இறைமையை வெளிப்படையாக மீறிய செயலாகும். அப்பேரழிவை எதிர்கொள்ளும் வகையில், லுமும்பா இராணுவத்தை கொங்கோலிய தேசிய இராணுவம் (Armee Nationale Congolaise) என்று மறுசீரமைக்க உறுதிபூண்டார். இப்புதிய படைக்கு தன்னுடைய செயலாளரான ஜோசப் மொபுட்டுவைப் பொறுப்பாக்குவது என்ற சோகம் விளைவித்த முடிவையும் எடுத்தார்.

மொபுட்டு ஒரு பெல்ஜிய கூலி முகவர் என்பதை லுமும்பா அறிந்திருக்கவில்லை. 1960லேயே பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் அவர் அமெரிக்க இராஜதந்திரிகளால் முன்கொண்டுவரப்பட வேண்டியவர் என்று அடையாளம் காணப்பட்டிருந்தார். கொங்கோவின் எதிர்கால சொத்துகள் பற்றிய குறிப்பில் பெல்ஜியத்தில் இருந்த அமெரிக்க தூதர் வில்லியம் பர்டன், “ஒரு பெயர் மீண்டும் மீண்டும் குறிப்பிடத்தக்கது. அது எவருடைய பட்டியலிலும் இல்லை, ஏனெனில் அவர் ஒரு உத்தியோகபூர்வ பிரதிநிதிக்குழு உறுப்பினர் அல்ல, அவர் லுமும்பாவின் செயலராக இருந்தார். ஆனால் அனைவருமே இவர் பெரும் திறன் படைத்தவர் என்பதில் உடன்பட்டிருந்தனர்.”

லுமும்பா பதவியேற்ற சில நாட்களிலேயே மோய்ஸ் ஷோம்பே கட்டங்கா மாநிலம் சுதந்திரமானது என அறிவித்து உடனடியாகப் பெல்ஜியத்தின் ஆதரவையும் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட 6,000 படையினரின் ஆதரவையும் பெற்றார். கடங்கா பித்தளை, யுரேனியம், தகரம், துத்தநாகம், யூரேனியம் மற்றும் கோபால்ட் தாதுப்பொருட் செல்வத்தில் செழிப்பு கொண்டிருந்து. இது பெல்ஜியச் சுரங்க நிறுவனமான Union Miniereஇன் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. விரைவில் மற்றொரு பிரிவினை இயக்கம் மற்றொரு தாதுப்பொருட்கள் செழிப்பு உடைய கசேய் மாநிலத்தில் ஏற்பட்டது; அங்கு லுமும்பாவின் முன்னாள் நண்பரில் ஒருவரான ஆல்பர்ட் கலோன்ஜிசுரங்க நாடு என்று பெயரிட்டு ஒரு புதிய நாடு என்று அறிவித்தார்.

கொங்கோ மற்றும் பெல்ஜியத்தில் (ஒரு மூன்றாந்தர, விரைவில் சரியும் ஏகாதிபத்திய சக்தி) இருந்த சூத்திரதாரிகள் அமெரிக்காவின் ஆதரவில்லாமல் செயல்பட்டிருக்க முடியாது.

வெளியுறவுக் கொள்கைகளில் இன்றும் தொடர்ந்திருப்பது போல், நியூயோர் டைம்ஸ் அரசாங்கப் போக்கை வெளிப்படுத்தும் முக்கிய பங்கைக் கொண்டு லுமும்பா அகற்றப்படுவதற்கான கருத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்டது.

தேர்தல் நேரத்தில்கூட, அதன் பக்கங்கள் இளம் தேசியவாதியை தீமையாக சித்தரிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. தொடர் கட்டுரைகளில் டைம்ஸ் பலமுறையும் லுமும்பாவைஒரு சர்வாதிகாரி”, “ஆட்சியாளர்”, “இறைதூதுவர் என்று கூறிப்பிட்டு அநேகமாக ஒவ்வொரு தகவலிலும் அவர் அஞ்சல் எழுத்தராக இருந்துபண மோசடிக்காக சிறைக்குச் சென்றவர் என்றும் குறிப்பிட்டது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களான லுமும்பா தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டார், பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து $200,000 நிதியைப் பெற்றார் என்றும் டைம்ஸ் வெளியிட்டது.

தேசியபாதுகாப்புக் குழுவின் ஆகஸ்ட் 18ம் திகதிக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்வைட் ஐசனோவர் மத்திய உளவுத்துறை அமைப்பின் (CIA) தலைவர் ஆலென் டல்லஸிடம் லுமும்பாஅகற்றப்பட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கொங்கோமற்றொரு கியூபாவாக மாறாது என்றும் கூறினார். ஆகஸ்ட் 24ம் தேதி CIA தலைவர் ஆலென் டல்லஸ், நிலையத் தலைவர் லாரி டெவ்லினுக்கு லுமும்பாஅகற்றப்படலாம் என்று இசைவு கொடுத்து அதற்காக படுகொலை உட்பட எதிலும் ஈடுபடலாம் என்று தகவல் தந்தி கொடுத்தார்.

இத்தகவல் 2001 வரை வெளிவரவில்லை. அமெரிக்க செனட் குழுவிற்கு அக்கூட்டத்தின் குறிப்புக்களைப் பதிவு செய்த ரோபர்ட் ஜோன்சனால் வெளிப்படுத்தப்பட்டது. “15 வினாடிகளுக்கு அதிர்ச்சியான மௌனம் நிலவியது, அதன் பின் கூட்டம் தொடர்ந்தது என்று ஜோன்சன் 1975ல் சர்ச் ஆணைக் குழுவிற்கு (Church Committee) கொடுத்த இரகசியச் சாட்சியத்தில் நினைவு கூர்ந்தார். CIA ஐசனோவர் உத்தரவை முதலில் லுமும்பாவிற்கு விஷம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வி அடைந்ததின் மூலம் செயல்படுத்தத் தொடங்கியது.

பெல்ஜியத்திலும் படுகொலைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன அப்பொழுது ஆபிரிக்க விவகாரங்களின் மந்திரியாக இருந்த Count Harole d’Aspremont கொங்கோவில் இருந்த பெல்ஜிய அதிகாரிகளுக்கு அக்டோபர் மாதம் ஒரு தந்தி அனுப்பினர்; “முக்கிய நோக்கம் கொங்கோ, கட்டங்கா மற்றும் பெல்ஜியத்தின் நலன்களைத் தொடர்வதற்கு லுமும்பா உறுதியாக அகற்றப்பட வேண்டும் என்பது தெளிவு.” என்று அதில் கூறப்பட்டது.

அண்டைநாடான ரொடிசியாவில் தன் கணிசமான நலன்கள் பற்றிக் கவலை கொண்ட பிரிட்டனும் படுகொலைக்கு தன் இசைவைக் கொடுத்தது. செப்டம்பர் 1960 பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக ஆவணம் ஒன்று, உயர்மட்ட அதிகாரி ஒருவரின் கருத்தை (பின்னர் அவர் M15 யின் தலைவரானார்), “லுமும்பா பிரச்சினையில் இரு தீர்வுகளைத்தான் நான் காண்கிறேன். ஒன்று அவரைக் கொல்லுவது என்னும் எளிய முறையின் மூலம் காட்சியில் இருந்து அவர் அகற்றப்படுவது என்பதாகும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் ஆகியவை அவருக்கு எதிராகச் சேர்ந்த நிலையில், அதிகாரத்தின்மீது அவருடைய பிடி தளர்ந்த நிலையில், லுமும்பா சோவியத் ஒன்றியத்திடம் ஆதரவை நாடினார். சோவியத் பாதுகாப்பு மந்திரி ஜோர்ஜி ஜுக்கோவ் ஆகஸ்ட் 26ம் தேதி லியோபோல்ட்வில் க்கு வந்தார். லுமும்பாவிற்கு குறைந்த அளவு உதவியையும்ஆலோசகர்களையும் சோவியத் ஒன்றியம் அளித்தது. இந்த ஆதரவு அவருடைய மறைவைத்தான் துரிதப்படுத்தியது.

செப்டம்பர் 5ம் தேதி ஜனாதிபதி கச-வுபு, லுமும்பா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த அரசியலமைப்பிற்கு புறம்பான ஆணை பாராளுமன்றத்தில் இரு தனித்தனி நம்பிக்கை வாக்குகளை லுமும்பா பெற்ற அளவில் தோல்வியுற்றது. கச-வுபுவும் லுமும்பாவும் தனித்தனி உத்தரவுகளை, விசுவாசமான இராணுவத்தின் தலைவராக இருந்த மொபுடுவிற்கு, மற்றவரைக் கைது செய்ய பிறப்பித்தனர்.

செப்டம்பர் 14ம் தேதி CIA ஆதரவுடன் செயல்பட்ட மொபுடு லுமும்பாவை லியோபோல்ட்வில் இல் வீட்டுக்காவலில் வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் முழுமையான ஆட்சிசதியை கொண்டுவந்து பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு இரண்டையும் தற்காலிகமாக செயல்படாமல் வைத்தார்.


ஐக்கிய நாடுகள் சபை பொதுச்
செயலாளர் டாக் ஹாமர்ஷோல்ட்

டாக் ஹாமர்ஷோல்டின் கீழ் இருந்த ஐக்கிய நாடுகள் சபை லுமும்பாவை வீழ்த்துவதில் தீவிரமாக ஒத்துழைத்தது. நெருக்கடிநலை காரணமாக கபடமற்ற முறையில் லுமும்பாவினால் அழைக்கப்பட்ட .நாவின்சமாதானப் படையினர் விசுவாசமான கொங்கோலிய படையினர்களுக்கு போக்குவரத்திற்கு விமானங்களைக் கொடுக்க மறுத்தனர். இது அவை கட்டங்கா மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பக்கம் சேர்ந்திருந்ததை காட்டியது. லுமும்பா நம்பிக்கை வாக்கு பெற்றபின், தலைநகரின் ஒரே வானொலி நிலையத்தையும் ஐ.நா. மூடியது. அதனால் அவர் பாராளுமன்றத்தில் பெற்ற வெற்றிகூட மக்களுக்கு ஒலிபரப்பப்பட முடியவில்லை. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை சோவியத் யூனியன் லுமும்பாவிற்கு உதவிவழங்க தனது விமானப்படை தளங்களையும் பயன்படுத்த மறுத்தது

நவம்பர் 22, 1960ல் ஐ.நா. பொது மன்றம் கச-வுபுவின் பிரதிநிதிக்குழு மற்றும் வலுவான இராணுவநபர் ஜோசப் மொபுட்டுவை அங்கீகாரம் செய்து வாக்களித்து, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த லுமும்பாவிற்கு விசுவாசமான ஆறு பிரதிநிதிகளை அங்கீகரிக்கவில்லை.

நவம்பர் 27ம் தேதி தன்னுடைய வீட்டுக்காவலில் இருந்து லுமும்பா தப்பி, தன்னுடைய வலுவான அரசியல் கோட்டையான ஸ்ரான்லிவில் க்கு தப்பிச்செல்ல முயன்றார். டிசம்பர் 1 அன்று அவர் மொபுட்டுவின் படைகளால் கைப்பற்றப்பட்டார். சிறையில் இருந்து லியோபோல்ட்வில் விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் அவரை இராணுவத்தினர் ஒரு காட்சிப் பொருள் போல் ஒரு டிரக்கின் பின்புறத்தில் கைகளைப் பின்னே கட்டி இருத்தி, கூட்டத்தை அவரை எள்ளி நகையாட அழைத்தனர். மொபுட்டுவிற்கு முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் தான்தான் முறையான கொங்கோப் பிரதம மந்திரி என்று உறுதியளித்த தன் உரையின் ஒரு பிரதியை லுமும்பா மென்று விழுங்கக் கட்டாய்படுத்தப்பட்டார்.

பதவியிறக்கப்பட்ட தேசியத் தலைவர் முதலில் ஒரு கிளர்ச்சியாளர் என்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று மொபுட்டு அறிவித்தார். லியோபோல்ட்வில் இல் இருந்து 86 மைல் தொலைவிலுள்ள தைஸ்வில் க்கு ஒரு இராணுவ முகாமிற்கு லுமும்பா பின்னர் அனுப்பப்பட்டார். சிறைக் காவலர்களை கிட்டத்தட்ட தன் பக்கம் லுமும்பா அங்கு ஈர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களில் பெரும்பாலானவர்கள் லுமும்பாவிற்கு இன்னும் ஆதரவு கொடுத்த நிலையில் d’Aspremont பிரபு அவர் தைஸ்வில் இல் இருந்து பிரிவினை கட்டங்கா மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் ஷோம்பியின் கரங்களால் நிச்சயமாக மரணத்தைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முதலில் CIA இன் ஒப்புதலைப் பெற்றது. ஜனவரி 17 அன்று கட்டங்காவிற்கு விமானத்தில் செல்லுகையில் லுமும்பா, எம்போலோ மற்றும் ஒகைட் ஆகியோர் கடுமையாக அடிக்கப்பட்டதால் விமானம் மோதிவிடும் ஆபத்தில் உள்ளது என விமானியை கூற வைத்தது. அன்றைய தினம் பிற்பகுதியில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்திற்கு இன்னும் பெரும் உளைச்சலைக் கொடுக்கிறது. 2001ல் பெல்ஜியத்தில் நடந்த பாராளுமன்ற விசாரணை ஒன்று பௌடின் மற்றும் காலனித்துவ அதிகாரிகள் லுமும்பா இறக்க வேண்டும் என்று விரும்பினர் என்றும் கட்டங்காவிற்கு அனுப்பிவைக்கும்போது அவர் கொல்லப்படுவார் என்பதை அறிந்திருந்தனர் என்று கூறினாலும் இதற்கான பொறுப்பை ஒப்புக் கொள்வதில் தயக்கம் காட்டியது.



ரேகன் நிர்வாகத்தில் பாதுகாப்பு
மந்திரியாக இருந்த பிராங்க் கார்லுக்கி

ஆட்சிசதி மற்றும் படுகொலை ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், இதுபற்றி எத்தகைய உத்தியோகபூர்வ ஒப்புதலும் இருந்ததில்லை. புஷ்ஷின் அரசியல் சந்ததியுடன் அரசியலில் நெருக்கமான உறவுகளைக் கொண்ட முக்கிய குடியரசுக் கட்சித் தலைவரான பிராங் கார்லுக்கி (ரேகன் நிர்வாகத்தில் பாதுகாப்பு மந்திரி என்னும் அந்தஸ்திற்கு உயர்ந்தவர்) CIA செயலராக கொங்கோவில் தூதரக அலுவலர் என்று மூடிமறைக்கப்பட்ட பதவியில் இருந்து இரகசியமாகச் செயல்பட்டார். 2001ல் திரையிடப்பட்ட லுமும்பா என்னும் படம் வெளிவருவதை வழக்குத் தொடர்ந்து அவர் கொங்கோலிய தலைவர் கொல்லப்படுவது பற்றி எடுக்கப்பட்ட முடிவில் தன் பெயர் வெளிவராமல் வெற்றிகரமாகத் தடுத்தார்.

படிப்பினைகள்

சுதந்திரம் வந்த நேரத்தில் பெல்ஜியக் கொங்கோ, தென்னாபிரிக்காவை அடுத்து துணை சகாரா ஆபிக்காவில் மிகப்பெரிய தொழிலாள வர்க்கத்தைக் கொண்டிருந்தது. கொங்கோலியத் தொழிலாளர்கள் நாட்டின் சுரங்கத் தொழில்களை ஒட்டி சர்வதேச முக்கியத்துவத்தை மகத்தான முறையில் கொண்டிருந்தனர். இது 1959 ல் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் புலனாயிற்று. அப்பொழுது கொங்கோ தொழிலாளர்கள் சுதந்திரம் பற்றிய விடயத்தை முன்வைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளால் ஒரு குறுகிய காலத்தில் லுமும்பா அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத்திலும் சமத்துவத்திலும் ஆபிரிக்காவிலும் தொழிலாள வர்க்கத்தை ஒரு உறுதியான சக்தியாகக் காணவில்லை. உண்மையில் லுமும்பாவின் சில நடவடிக்கைகளான வெளிநாட்டுப் பொருட்கள்மீது காப்புவரிகள் சுமத்தியது, லியோபோல்ட்வில் இல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை முறித்தது, இராணுவத்தின்மீது பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது போன்றவை ஓரளவிற்கு மக்களின் உணர்வில் அவரை விரோதப் போக்கிற்கு உட்படுத்தியிருக்கலாம்.

ஆனால் பெரும் துன்பியல், ரஷ்ய புரட்சியையும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியில் அதன் தத்துவார்த்த விரிவாக்கமான உலகப் பொருளாதாரத்திற்கு தம்மை அடிபணியவைத்துக்கொண்ட முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவுகளால், அமெரிக்கா மற்றும் பிரான்சில் 18ம் நூற்றாண்டு இறுதியில் அடையப்பெற்ற ஜனநாயகப் புரட்சிகளுடன் தொடர்புடைய அடிப்படைப் பணிகளைக்கூட பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட நாடுகளின் அடைய முடியாது என்ற 20ம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் மத்திய மூலோபாய அனுபவங்களை ஆபிரிக்க மக்களிடம் இருந்து மறைத்து வைத்ததாகும். இப்பணிகள் தொழிலாள வர்க்கத்தினால்தான் செய்யப்பட முடியும்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவமும் அத்துடன் இணைந்திருந்த உலகம் முழுவதிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் சுதந்திரப் போராட்டங்களில் இப்படிப்பினைகளை மறைப்பதில் முக்கிய பங்கை கொண்டிருந்தன. லுமும்பாவிற்கு உதவுவதில், உலக அரங்கில் அதன் மற்ற நடவடிக்கைகளை அனைத்திலும் இருந்தது போல் மாஸ்கோவின் முக்கிய நோக்கம் தன் நலன்களைப் பாதுகாக்க ஒரு பேரம் பேசும் நிலையைப் பெறுதல் என்பதாகத்தான் இருந்தது. அந்தப் பார்வையை ஒட்டி, எல்லா இடங்களிலும் அது தேசிய அரசியல் கருத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்தது, அவற்றில் ஆபிரிக்க பாரம்பரியவாதம் (Pan-Africanism) என்பதும் அடங்கியிருந்தது. அத்தகைய தெளிவற்ற திட்டங்கள் கண்டத்திற்கான அரசியல் ஐக்கியம் என்பதை விவாதத்தில் இருந்து அகற்றிவிடவில்லை.

துன்பியலான முறையில் எதிர்மறையானவிதத்தில் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கு சரியென நிறுவப்பட்டது. கொங்கோ மற்றும் ஆபிரிக்க நிகழ்வுகள் அனைத்திலும் இந்நிலை காணப்படலாம். ஒவ்வொன்றிலும் சுதந்திரம் என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குப் புதிய வண்ணத்தை கொடுத்தது. ஊழல் மலிந்த தேசிய முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் தங்கள் செல்வக்கொழிப்பிற்காக அரசை கொள்ளையடித்தன. லுமும்பா பின்பற்ற முயன்ற ஆபிரிக்க பாரம்பரியவாதிகளான (Pan-Africanists) நியேரே, நெருமா மற்றும் கென்யாட்டா போன்றவர்கள் கூட இந்த விதியில் இருந்து தப்பவில்லை.

வட ஆபிரிக்க நாடான துனிசியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் நிகழ்வுகள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியையும், புரட்சிகரத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் வெகுஜன இயக்கத்தின் பலமற்ற தன்மை ஒரு தெளிவான புரட்சிகர முன்னோக்கு, வேலைத்திட்டம், தலைமை ஆகியவை இல்லாததால் அப்படியே உள்ளது.

ஆபிரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச மார்க்சிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாவதனால்தான், ஐரோப்பிய சக்திகள் மற்றும் அமெரிக்காவினால் தூண்டுதல் பெறும் இன, மத, தேசிய பிளவுகள் அகற்றப்பட்டு ஆபிரிக்கா ஒன்றுபடுத்தப்பட முடிவதுடன்,  கண்டத்தின்மீதுள்ள ஏகாதிபத்திய ஆதிக்கமும் முற்றாக துடைத்தெறியப்பட முடியும்