சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police fire on protesting free trade zone workers

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் மீது இலங்கைப் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம்

By W.A. Sunil and Ruwan Liyanage
1 June 2011

Use this version to print | Send feedback

திங்கட் கிழமை, இலங்கை அரசாங்கத்தின் தனியார் துறைக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய (சு.வ.வ) தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொலிசார் வன்முறைத் தாக்குதலை நடத்தினர். இதன் விளைவாக வெடித்த மோதலின் போது பொலிசார் இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மொத்தமாக 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்ததோடு சுமார் 100 பேர் வரை கைது செய்யப்பட்டார்கள்.

ஆயிரக்கணக்கான துருப்புக்கள் அணிதிரட்டப்பட்ட இந்த மோதலை அடுத்து, அரசாங்கம் சுதந்திர வர்த்தக வலயத்தினை இரண்டு நாட்களுக்கு இழுத்து மூடியது. கொழும்புத் தலை நகருக்கு நெருக்கமாக உள்ள இந்தப் பிரதேச ஆயிரக் கணக்கான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டிருந்தன. சகல வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சுதந்திர வர்த்தக வலயத்துக்கு வெளியில் வாழும் எந்தவொரு தொழிலாளியும் உள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அண்மைய மாதங்களில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பொலிஸ் பாய்ச்சல் இதுவாகும். பெப்ரவரியில், கட்டுநாயக்கவில் ஒரு ஆடை உற்பத்தியாளரான ஹொங் கொங்குக்கு சொந்தமான ப்ராடெக்ஸ் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியதோடு, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பல தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

திங்கட் கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்ட  சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்துக்கு [FTZGSWU] நேரடியாக எதிரானதாகும். ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக மே 23ல் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியே இந்தப் போராட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், விளைபயனுள்ள வகையில் சம்பளம் வெட்டப்படவுள்ளதோடு, மற்றும் சம்பளத்தில் வெறும் 15 வீதத்துக்கு சமமான தொகையை மாதாந்தம் ஓய்வூதியமாகப் பெறும் தகைமையை அடைய, ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்திருக்க வேண்டும் எனக் கோருகிறது.

மூன்று வலயங்கள் உள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில், வலயம் 1 இல் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றத்தை தொடக்கி வைத்தனர். சுமார் காலை 9.30 மணியளவில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டார்கள். இது, பொலிஸ் தலையீடு வரும் வரையில் அமைதியாக இடம் பெற்றது.

தொழிலளர்களின் படி, காலை 11.30 க்கும் மதியத்துக்கும் இடையில் வலயம் 1 பிரதான வாயிலால் உள் நுழைந்த பொலிசார், எதிப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தடிகளாலும் கண்ணீர் புகைக் குண்டுகளாலும் தாக்கத் தொடங்கினர். தொழிலாளர்கள் தமது பாதுகாப்புக்காக பின்வாங்கி தொழிற்சாலைகளுக்குள் சென்ற போதும், வலுகட்டாயமாக உள்ளே நுழைந்த பொலிசார், தொடர்ந்தும் தாக்கினர். கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கையில் கிடைத்தவற்றை கொண்டு எதிர்த்துத் தாக்கினார்கள். உடனடியாக பொலிசார் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அவர்களில் பலர் காயமடைந்ததோடு ஓருவரின் நிலை கவலைக்கிடமானது.

பொலிஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர், மாலை 3 மணியளவில் வலயம் 2 மற்றும் 3 இல் இருந்து வந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டு, பொலிஸ் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், கைது செய்யப்பட்ட தமது சக தொழிலாளர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்கள். இதன் போது சுமார் 40,000 தொழிலாளர்கள், அநேகமாக இளம் பெண்கள், இணைந்து கொண்டார்கள். அவர்கள் சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதிக்குள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததோடு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பொலிசாரால் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போது, அரசாங்கம் பொலிஸ் விசேட அதிரடிப் படையையும் நூற்றுக்கணக்கான சிப்பாய்களையும் அணிதிரட்டியது. திரும்பி வேலைக்கு செல்லுமாறு இராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதிலும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தொழிலாளர்கள் கோரினர். பொலிசார் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தை கற்களால் தாக்கினர்.

உயர் மட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததாகவும் பல பொலிஸ் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. நிலையத்தை தாக்கிய சுமார் 500 தொழிலாளர்கள் மீது பொலிசார் மீண்டும் கண்மூடித் தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து, குறைந்த பட்சம் எட்டு பேருக்காவது காயமேற்படுத்தினர்.

ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆயுதங்களை அபகரிக்க முயற்சித்ததாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறிக்கொண்டார். இந்தக் குற்றச்சாட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை பொலிஸ் மா அதிபர் நியாயப்படுத்தினார். பெரும் கூட்டம் தாக்கிய போது பொலிசார் வானத்தில் சுட்டதோடு பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது சுட்டனர், என அவர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பிரகடனம் செய்தார்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசிய ஒரு தொழிலாளி, கைது செய்யப்பட்ட பலர் கடும் காயமடைந்திருந்ததால் அவர்களால் நடக்கக் கூட முடியவில்லை என்றார். அவர்களது ஆடைகள் குருதியில் நனைந்திருந்தன. கைப்பற்றிய தொழிலாளர்களை அடித்தும் உதைத்தும் பொலிசார் தெருவழியே இழுத்துச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் வாசிகளும், கொழும்புக்கு நெருக்கமாக உள்ள பியகமவில் அமைந்துள்ள மற்றும் தெற்கில் கொக்கலையில் அமைந்துள்ள சுதந்திர வர்த்தக வலயங்களின் தொழிலாளர்களும் பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்தனர்.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்க உறுப்பினரான ஒரு பெண் தொழிலாளி WSWSக்குத் தெரிவித்ததாவது: இது தொழிலாளர்களுக்கு எதிரான யுத்தம். மிருகங்களை தாக்குவது போல் பொலிசார் எங்களை தாக்கினர். எங்களை அடிக்க மூங்கில் மற்றும் பொல்லுகளைப் பயன்படுத்திய அவர்கள், கடைசியாக எங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் இணைய வேண்டாம் என எங்களது தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டது. சக தொழிலாளர்களை பொலிஸ் தாக்கும்போது எங்களால் எப்படி இணையாமல் இருக்க முடியும்? பொலிசார் தொழிற்சாலை கட்டிடங்களையும் வாகனங்களையும் கூட மோசமாக சேதமாக்கினர்.

 “எங்களது பணத்தை திட்டமிட்டுக் கொள்ளையிட நாம் அரசாங்கத்தை அனுமதிக்க மாட்டோம், இந்த [ஓய்வூதிய] மசோதா தூக்கியெறியப்படும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும். எங்களது உரிமைகளை காக்க நாம் மரணத்தைக் கண்டு பயப்படப் போவதில்லை, என அவள் வலியுறுத்தினாள்.

கட்டுநாயக்கவில் ஒரு நடைபாதை வியாபாரி குறிப்பிட்டதாவது: இந்த அரசாங்கம் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்கின்றது! அற்ப சம்பளத்துக்காக இந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு வேதனையுடன் உழைக்கின்றனர். பொலிசார் அவர்களை எவ்வளவு கொடூரமாக தாக்கினார்கள் பாருங்கள். எனது ஆத்திரத்துக்கு எல்லை இல்லை.

இந்த அமைதியின்மை நேற்று பியகம சுதந்திர வர்த்தக வலயம் வரை பரவியது. அன்சல் லங்கா கம்பனியின் சுமார் 1,000 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக ஒரு தொழிலாளி தெரிவித்தார். எங்களது தொழிற்சங்கம் [FTZGSWU] எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இணைய வேண்டாம் என எங்களை கேட்டுக்கொண்டது. ஆனால் நாங்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, தொழிற்சங்கம் எங்களை பிரச்சாரத்தில் பங்குகொள்ள அனுமதித்தது. எவ்வாறெனினும், இந்த சட்டத்துக்கு எதிராக போராட உண்மையான வேலைத் திட்டம் எதுவும் கிடையாது. சட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், அதை நாம் முழுமையாக தோற்கடிக்க வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் சம்பந்தமான இந்த பகைமை, கசப்பான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. FTZGSWU, சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டணி, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டிலான அரசாங்க தொழிலாளர்கள் ஐக்கிய சம்மேளனம் உட்பட, 26 சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு (JTUA), மே 23 அன்று ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த போதிலும், பின்னர் எந்தவொரு விளக்கமும் இன்றி அதை இரத்துச் செய்தது.

தொழிற்சங்கங்கள் இப்போது தொழிலாளர்களின் சீற்றத்தை தணிப்பதற்கு அவநம்பிக்கையுடன் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. திங்கள் மாலை நடத்திய நிருபர்கள் மாநாட்டில், அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னிணியைச் (ஜே.வி.பீ.) சார்ந்த தனது தொழிற்சங்கம், செவ்வாய் கிழமை மூன்று சுதந்திர வர்த்தக வலயங்களிலும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதாக அறிவித்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து 12 சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் இந்த அமைதியின்மை பரவுவதை தடுப்பதே சமரசிங்கவின் குறிக்கோளாகும். இவற்றில் 120,000 தொழிலாளர்கள் இருப்பதோடு அவர்கள் நாட்டின் ஏற்றுமதி வருமானத்துக்கு தீர்க்கமானவர்களாவர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் எழுச்சியினால் திகைப்படைந்துள்ளதோடு, தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்துக்கான குவிமையமாக அது ஆகிவிடும் என்பதையிட்டும் பீதிகொண்டுள்ளது. திங்களன்று மாலை, இரண்டு மாதங்களுக்கு ஓய்வூதிய சட்டத்தை இடை நிறுத்துவதாகவும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய சட்டத்தை அமுல்படுத்துவதில்லை எனவும் அறிவித்தது.

தொழிற்சங்கங்கள் இந்த அறிவித்தலை கொண்டாட விரைந்தன. நேற்று ஜே.வி.பீ. நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, இந்த இடை நிறுத்தத்தை ஒரு வெற்றி என புகழ்ந்தார்.

இராஜபக்ஷ சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை சாந்தப்படுத்த வெறுமனே தந்திரோபாயமாக முயற்சித்த அதேவேளை, அந்த மசோதாவை காலங்கடந்து அறிமுகப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களதும் எதிர்க் கட்சிகளதும் ஆதரவை எதிர்பார்க்கின்றார். சர்வதேச நாணய நிதியம், 2009ல் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கத்துக்கு கொடுக்க விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக, சந்தையை அடிப்படையாகக் கொண்ட முதுமை ஓய்வூதிய நிதியத்தை உருவாக்க வலியுறுத்தியது.

தற்போது, பெண் தொழிலாளர்கள் தாம் மணம் முடிக்கும் போது, அல்லது 50 வயதை எட்டும் போது சட்டப்பூர்வ நலன்புரி நிதியத்தில் தமது முழு சேவைக்காலப் பணத்தையும் பெற முடியும். இந்த ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டால், ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும், மற்றும் 60 வயதை எட்டிய பின்னரே அவருக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். பெருந்தொகைப் பணத்துக்கு பதிலாக, அவர்கள் சிறிய மாதாந்த ஓய்வூதியத்தையே பெறுவர். ஒரு மதிப்பீட்டின்படி, குறைந்த சம்பளம் பெறும் ஒரு ஆடைத் தொழிற்சாலை தொழிலாளி, மாதமொன்றுக்கு வெறும் 1,900 ரூபாய்களையே (17.27 அமெரிக்க டொலர்) பெறுவார்.

இராஜபக்ஷ பொலிஸ் வன்முறைகளை மூடி மறைப்பதற்கு முயற்சித்ததோடு அதில் அரசாங்கத்தின் பொறுப்பை மறுத்தார். திங்களன்று நடந்த மோதல்களை விசாரிப்பதற்கு அவர் ஓய்வுபெற்ற நீதிபதி மஹாநாம திலகரட்னவை நியமித்தார். சுதந்திர வர்த்தக வலய வளாகத்துக்குள் பொலிசாரை நிலைகொள்ள கட்டளையிட்டது யார் என்பதை கண்டு பிடிப்பதே இந்த விசாரணையின் குறிக்கோள் என சண்டே டைம்ஸின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, பொலிசாரை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியதாக அந்த பத்திரிகை கூறிக்கொள்கின்றது. இது கேலிக்கூத்தான கூற்றாகும். உயர் மட்டத்தில் இருந்து கட்டளையிடப்படாமல் இத்தகைய இரத்தக்களரி பொலிஸ் தாக்குதல் நடந்திருக்க முடியாது.

இந்த விசாரணையின் உண்மையான குறிக்கோள், சுதந்திர வர்த்தக வலயம் பூராவும் ஒரு வேட்டையாடலை நடத்துவதற்கான தயாரிப்பில் போராளிக் குணம் கொண்ட தொழிலாளர்களை அடையாளங் காண்பதே ஆகும். 

ஆசிரியர்கள் பரிந்துரைத்துள்ள கட்டுரை:

இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை பாதுகாத்திடு