சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

The war in Libya and the crisis of the European Union

லிபிய யுத்தமும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியும்

By Peter Schwarz
30 May 2011

Use this version to print | Send feedback

லிபிய யுத்தமானது உலக அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.

துனிசியா மற்றும் எகிப்தில் புரட்சி வெடித்த வெறும் சில வாரங்களுக்குப் பின்னரும், மௌம்மர் கடாபிக்கு எதிராக எதிரெழுச்சி என்றழைக்கப்பட்டது தொடங்கிய வெகுசில நாட்களுக்குப் பின்னரும், உண்மையில் ஒரேயிரவில் அந்நாட்டின் மீது குண்டுவீசும் முடிவு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் யுத்தங்களிலிருந்து வேறுபட்ட வகையில், அந்த தாக்குதலுக்கான உந்துதல் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக முன்னாள் ஐரோப்பிய காலனித்துவ சக்திகளான பிரான்ஸ் மற்றும் பிரிட்டனால் முன்னெடுக்கப்பட்டது (இப்போது இத்தாலியாலும் முன்னெடுக்கப்படுகிறது). அவற்றோடு அமெரிக்கா பின்னர் சேர்ந்து கொண்டது. 1956இல் சூயஸ் கால்வாய் யுத்தத்தை கைவிட அவை நிர்பந்திக்கப்பட்டதற்குப் பின்னர், பிரான்ஸூம் பிரிட்டனும் முதல்முறையாக மீண்டுமொருமுறை அரேபிய பிராந்தியத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த யுத்தம் உத்தியோகபூர்வமாக ஒரு "மனிதாபிமான" தலையீடாக குணாம்சப்படுத்தப்படுகிறது. இந்நகர்வு, பப்லோவாதிகளில் இருந்து சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினர் வரையில், போலி-இடதுகளால் ஆதரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிக வெளிப்படையாகவே ஓர் ஏகாதிபத்திய தேவையின் முனைவாகும். இது அந்த பாலைவன அரசுகளின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் குறித்ததாகும்: அதாவது ஆபிரிக்காவின் மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளை கைப்பற்றுவது, அவற்றைச் சுற்றி பழைய ஏகாதிபத்திய சக்திகளும், எழுச்சியடைந்த சக்தியான (சீனாவிற்கும்) இடையிலான ஒரு யுத்தம் தூண்டப்படுவதையும், அத்துடன் அப்பிராந்தியத்திலுள்ள ஏகாதிபத்திய நலன்களை அச்சுறுத்துகின்ற வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு புரட்சியை ஒடுக்குவது ஆகியவற்றைக் குறித்ததாகும்.

எந்த தீவிரத்தோடு யுத்தம் அபிவிருத்தி அடைந்ததோ அது, பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயும் மற்றும் அந்த நாடுகளுக்குள்ளேயே கிளர்ந்தெழுந்த வர்க்க விரோதங்களுக்கும் இடையிலான கசப்பான மோதலின் விளைவாகவாகும். பெரும்பாலான யுத்தங்களைப் போலவே, லிபியாவில் நிகழும் யுத்தமும் பகுதியாக உள்நாட்டு அரசியல் உந்துதல்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது சமூக மோதல்களிலிருந்து கவனத்தை திசைத்திருப்பி, அவற்றை வன்முறையாக ஒடுக்குவதற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்க உதவுகிறது. சார்க்கோசி மற்றும் பெர்லொஸ்கோனி இருவருமே தொழிலாள வர்க்கத்தின் மீது வெறுக்கத்தக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளனர். இருவருமே பல மாதங்களாக அதீத வெறுப்புக்கு ஆளாகியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்தில் ஏப்ரல் 19 அன்று வெளியான முன்னோக்கான "லிபிய யுத்தமும், ஏகாதபத்தியங்களுக்கு இடையில் தீவிரமடைந்துவரும் மோதல்களும்" என்ற கட்டுரை, “ஒருபுறம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் அதிகரித்துவரும் கசப்பான மோதல்களையும், மறுபுறம் ஜேர்மனியின்" மீதும் கவனத்தைக் கொணர்ந்திருந்தது. அந்த நிலைமை லிபிய யுத்தம் வெடித்ததில் பகிரங்கமாக வெளிப்பட்டிருந்தது. ஜேர்மனி அதன் பாரம்பரிய கூட்டாளிகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக முதல்முறையாக ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசிலுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒரு பொது கூட்டணியை ஏற்படுத்தியது. லிபியா மீதான தீர்மான வாக்கெடுப்பில் தவிர்த்துவிட்ட அது, யுத்தத்திலும் பங்கெடுக்கவில்லை. அதேவேளை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து, மோதலில் ஆதிக்கம்செலுத்த விழைந்தன.

இந்த பிரச்சினை ஒரு தற்செயலான நிகழ்வல்ல. மாறாக ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் இடையில் நிலவும் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் நெருக்கடிகளின் உச்சக்கட்ட நிலையின் விளைவாகும். பிராங்கோ-ஜேர்மன் அச்சு, 1957 ரோம் உடன்படிக்கையிலிருந்து ஐரோப்பிய சமூகத்தின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதுகெலும்பாக உள்ளது. யுத்தத்திற்கு பிந்தைய ஐரோப்பாவின் அரசியல் சூழலை வடிவமைப்பதிலும், பெரிய நாடுகள் யூரோவை ஒரு பொதுவான ஐரோப்பிய செலாவணியாக ஏற்றுக் கொள்வதிலும் அவ்விரு நாடுகளும் பிரதான பாத்திரம் வகித்துள்ளன.

ஐரோப்பாவின் அரசியல் மற்றும் இராணுவ ஐக்கியத்தைக் காப்பாற்றும் ஒரு கொள்கையை பல தசாப்தங்களாக கொண்டிருந்த நிலையில், பேர்லினால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கப்பட்ட ஒரு யுத்தத்தில் பங்கெடுத்ததன் மூலமாக இந்த நிலையை அமெரிக்கா தோற்றப்பாட்டளவில் சிதைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் (.நா) பாதுகாப்பு சபையில் லிபியா மீதான வாக்கெடுப்பு குறித்த ஒரு சூடான விவாதம் ஜேர்மனியில் தான் தொடங்கியது. அனைத்து கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகளும், அவர்களுடன் பல ஊடக விமர்சகர்களும், வெளியுறவுத்துறை மந்திரி கீய்டோ வெஸ்டெர்வெல்ல செய்த வாக்கெடுப்பைத் தவிர்ப்பது என்பது ஒரு "பெரும் பிழை" என்று என ஒத்துக்கொண்டிருந்தனர். ஜேர்மன் யுத்தத்தில் பங்கெடுக்காது என்று தீர்மானித்தாலும் கூட, அது அதன் பாரம்பரிய கூட்டாளிகளுக்கு எதிராக BRIC நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்றழைக்கப்படும் நாடுகளுடன் பொதுவான ஓர் நிலைப்பாட்டை எடுக்க எந்த காரணமும் இல்லையென்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

Spiegel Online இல் வெளியான ஒரு விமர்சனம் பின்வரும் வார்த்தைகளுடன் விமர்சிக்கிறது: “இதுவரையில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்குப் பின்னால் ஜேர்மனி நிலைப்பாடெடுக்க வேண்டியதாக இருந்தது. அதை எப்போதும் எளிமையாக செய்துவிட முடியாது. சிலவேளைகளில், ஈராக் யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைப் போல, அது சாத்தியமில்லாமலும் இருந்தது. அப்போது, இரண்டு முக்கிய கூட்டாளிகளில் யாரையேனும் ஒருவரை ஜேர்மன் மத்திய குடியரசு தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் அது இருவரையும் ஒரேசமயத்தில் எதிர்க்காது என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது ஜேர்மன் அரசியலின் இந்த அடிப்படை நெறியிலிருந்து அந்த அரசாங்கம் வெளியில் வந்துள்ளது.”

வரலாற்றை சிறிது திரும்பி பார்ப்போம்

பாதுகாப்பு சபையில் ஜேர்மன் வாக்கினால் ஏற்பட்ட எச்சரிக்கை ஒலியைப் புரிந்துகொள்ள, ஒருவர் ஒருகணமேனும் வரலாறைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அரசியல்ரீதியாக ஒதுக்கப்படுகிறோம் என்ற அச்சம் ஏற்கனவே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜேர்மன் அதிபர் ஒட்டோ வொன் பிஸ்மார்க்கின் வெளியுறவு கொள்கையில் நிறைந்திருந்தது. அவர் "கூட்டாளிகளின் தீயகனவு" என்று பேசியிருந்தார்.

1871இல் ஜேர்மன் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டமை, அடிப்படையில் ஐரோப்பிய கண்டத்தின் மீதிருந்த அதிகார சமநிலையை மாற்றியது. “அதிகார சமநிலை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது,” என்று ஜேர்மன் பேரரசின் ஆரம்பவிழாவின் போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் டோரிகளின் (Tories) தலைவர் பென்ஜமின் திஸ்ரேல் (Benjamin Disraeli) கருத்து தெரிவித்தார். அப்போது வரையில், பிரிட்டன் தான் கேள்விக்கிடமில்லாத பிரதான உலக சக்தியாக இருந்து வந்தது. பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா போன்ற பிரதான சக்திகள் ஐரோப்பிய கண்டத்தின் மீது அதிகார சமநிலையைக் கொண்டிருந்த போதினும், பிரிட்டன் கடல்மீது கட்டுப்பாட்டை கொண்டிருந்தது. புரூஷ்ய மேலைதிக்கத்தின்கீழ் ஜேர்மனி ஐக்கியமானதோடு சேர்ந்து, அந்த கண்டத்தின் மையத்தில் ஒரு புதிய பிரதான சக்தி உருவானது. அது பழைய பாரிய சக்திகளின் நிலைமையை அச்சுறுத்தியது.

பிஸ்மார்க்கின் வெளியுறவு கொள்கையானது, இந்த பிரதான சக்திகள் ஜேர்மனுக்கு எதிராக ஒருபக்கமாக திரள்வதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர், பால்கனில் துருக்கிப் பேரரசின் மரபுரிமையின் மீதிருந்த முரண்பாட்டை மனசாட்சியின்றி தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏனைய சக்திகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, அதன் மூலமாக அதிகார சமநிலையை தக்க வைத்துக்கொள்ள, ஒரு சிக்கலான கூட்டணி முறையை உருவாக்கினார்.

எவ்வாறிருந்த போதினும், முதன்மையாக ஜேர்மனி உள்நாட்டு பொருளாதார திரட்சியோடு தொடர்புபட்டிருந்த வரையிலும் மற்றும் அதன் சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த வரையிலும் மட்டும் தான் பிஸ்மார்க்கின் ஒழுங்குமுறையினால் இயங்க முடிந்தது. 1890இல் இருந்து இந்த நிலைமை நீடிக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில், முதலாம் வில்ஹெல்ம் இறந்தார். சில தடுமாற்றங்களுக்குப் பின்னர் அவருடைய பேரன் இரண்டாம் வில்ஹெல்ம் அந்த இடத்திற்கு வந்தார். பிஸ்மார்க் உடனான அவரின் மோதல் அதிபரின் இராஜினாவிற்கு இட்டு சென்றது. ஆகவே தான், பிஸ்மார்க்கின் ஒழுங்குமுறையின் பொறிவும், ஜேர்மன் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களும் பெரும்பாலும் அந்நாட்டின் மிக முக்கிய தலைமையின் மாற்றங்களால் விளக்கப்படுத்தப்படுகின்றன.

ஜேர்மனியின் குறிப்பிடத்தக்க பொருளாதார உயர்வு தான் தீர்மானகரமான காரணியாக இருந்தது. மூலப்பொருட்கள் மற்றும் உலக சந்தைகளை கைப்பற்றுவதற்காகவும் மற்றும் அத்துடன் அதன் மூலதன திரட்சிக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காகவும்  தேவையையும் ஏற்படுத்தியது. இது கடல்கடந்த தேசங்களை அதிகாரத்தில் கொண்டிருந்த பிரிட்டிஷிற்குப் போட்டியாக ஒரு கடற்படையைக் கட்டியமைப்பதில் சென்று முடிந்தது. கிழக்கில் ஜேர்மன் மூலதன முதலீட்டிற்கு வழிகோலும் பாக்தாத் இரயில்வே திட்டம் மற்றும் ஜேர்மன் பேரரசை விரிவாக்கும் காலனித்துவ நாடுகளை தேடிச் செல்லுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தியது. ஜேர்மனியின் சூழ்நிலையை ட்ரொட்ஸ்கி பின்னர் சூத்திரமாக தொகுத்தளித்தார்: “ஜேர்மனியின் உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் அதிகளவில் உயர்ந்துவரும் நிலையிலும், அவர்கள் எந்தளவிற்கு அதிகமாக இயங்கு சக்தியை (dynamic power) பெற்றுக்கொள்கிறார்களோ, அந்தளவிற்கு அதிகமாக அவர்கள் ஐரோப்பிய அரசு அமைப்புமுறையின் குரல்வளையை நெருக்குவார்கள். அந்த அமைப்புமுறையானது, ஏழ்மைமிக்க பிராந்திய மிருகக்காட்சிசாலைக்குள் இருக்கும் கூண்டு அமைப்புமுறையைப் போல இருக்கிறது.”

அந்த சூழ்நிலை பின்னர் பிஸ்மார்க்கைத் தடுக்க விரும்பும் அளவிற்கு அபிவிருத்தி அடைந்தது. 1902இல் ஜேர்மனி பெருமளவிற்கு தனிமைப்படுத்தப்படும் விதத்தில், ஏனைய பிரதான சக்திகள் ஜேர்மனுக்கு எதிராக அவற்றின் படைகளை ஒன்றிணைத்தன. பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த கூட்டணியை எதிர்க்கும் விதத்தில், ஆஸ்திரியா-ஹங்கேரியை மட்டும் அதன் கூட்டாளிகளாக கொண்டிருக்கும் நிலைக்கு ஜேர்மனி விடப்பட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்த மோதல்களில் ஈடுபட்டிருந்த நேச அணிகள் அந்தநிலையில் பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர், வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய சமூகத்திற்குள் மேற்கு ஜேர்மன் அரசை ஒருங்கிணைத்ததன் மூலமாக "ஜேர்மன் பிரச்சினை" தணிக்கப்பட்டது. ஜேர்மன் மத்திய குடியரசின் அளவு ஜேர்மன் பேரரசின் அளவில் சுமார் பாதியளவிற்கு தான் இருந்தது என்ற உண்மையால் இது இலகுவாக்கப்பட்டிருந்தது. பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான தீவிர அரசியல், பொருளாதார கூட்டுழைப்பு அபிவிருத்தியடைந்தது இன்றும் பிரான்ஸும் ஜேர்மனியும் முக்கிய பொருளாதார பங்காளியாக இருக்கின்றன.

ஜேர்மன் பிரச்சினை" மீண்டும் வருதல்

ஆனால் 1990இல் ஜேர்மன் மறுஐக்கியத்துடன் சேர்ந்து, “ஜேர்மன் பிரச்சினை" மீண்டுமொருமுறை கூர்மையானது. ஜேர்மன் மறுஐக்கியத்தாலும், இரும்புத்திரையின் வீழ்ச்சியாலும் ஐரோப்பிய சமநிலை குழப்பத்திற்குள்ளானது. அப்போது பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் இத்தாலிய அரசாங்கங்கள் ஜேர்மன் மறுஐக்கியத்தை எதிர்த்தன என்பது நன்கு அறியப்பட்டதே. ஆனால் அவைகளால் அதை தடுக்க முடியவில்லை.

இறுதியாக, ஒரு பொதுவான ஐரோப்பிய செலாவணியை அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதன் மூலமாகவும் ஜேர்மனியை அடக்கி வைக்க வேண்டுமென ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்மூலமாக பொருளாதார ரீதியில் வளர்ந்திருந்த அதன் அண்டை நாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க முடியுமென்று பிரான்ஸ் நம்பியது. செலாவணிரீதியிலான ஒன்றியத்திற்கு முன்னர் ஒரு ஐரோப்பிய அரசியல் ஒன்றியத்தை முன்னெடுப்பதற்கான ஜேர்மனின் ஆரம்பகட்ட முறையீட்டை அதிபர் ஹெல்மட் ஹோல் கைவிட்டார். மாறாக  பொதுவான சந்தையினதும் ஒரு தனி நாணயத்தினதும் தர்க்கவியலின் அடித்தளத்தில் ஐரோப்பா படிப்படியாக நெருக்கமாக வளர்ச்சியடைவேண்டும் என்றார். 

அதை தொடர்ந்து வந்த ஆண்டுகளில், யூரோவின் பொருளாதார இயக்கவாற்றல் அமைதியான ஐரோப்பிய விரிவாக்கத்திற்கும், உறுதிப்படுத்தலிற்கும் இட்டுச்செல்லும் என்று பரவலாக நம்பப்பட்டது. 2000இல், அப்போதைய ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஜொஸ்கா பிஷ்ஷர் (பசுமை கட்சி) ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அதிகமான மக்கள் முன்னிலையில் ஓர் உரையாற்றினார். அதில் அவர், ஓர் ஐரோப்பிய கூட்டாட்சியின் இலக்கை வலியுறுத்தினார். 2007 வாக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 27 உறுப்பு நாடுகளோடு விரிவடைந்தது. 1999இல் ஏட்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ, 2002இல் நாணயங்களாகவும், யூரோ நோட்டுகளாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து அது 17 ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் உத்தியோகபூர்வ செலாவணியாக இருந்து வருகிறது.

எவ்வாறிருந்த போதினும், அரசியல் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிப் போக்கு அதிகளவில் தடுமாற்றத்திற்கு உள்ளானது.

ஏற்கனவே 1990களில், யூகோஸ்லாவிய நெருக்கடி தொடர்பாக ஐரோப்பிய சக்திகளால் ஒரு பொதுவான அணுகுமுறைக்கு உடன்பட முடியவில்லை. அந்நாட்டை உறுப்பினர் அந்தஸ்திலிருந்து விரைவில் நீக்கவிட ஜேர்மன் அழுத்தம் அளித்த நிலையில், பிரான்ஸூம், இங்கிலாந்தும் அத்தகைய ஒரு போக்கை எதிர்த்தன. இது அமெரிக்காவின் பங்கிற்கு தலையீடு செய்ய கதவுகளை திறந்துவிட்டது. அது அதற்கடுத்து தொடர்ந்து வந்த யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த நுழைந்தது.

2003இல், ஈராக் யுத்தம் ஒரு பொதுவான ஐரோப்பிய வெளியுறவு கொள்கைக்கான திட்டங்கள் மீது மற்றொரு அடியைக் கொடுத்தது. அதில் ஐரோப்பா ஆழமாக பிளவுபட்டது. இங்கிலாந்தும், போலாந்தும் அந்த யுத்தத்தை ஆதரித்த நிலையில், ஜேர்மனியும், பிரான்ஸூம் அதில் பங்கெடுக்க மறுத்தன.

2005இல், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் நடத்தப்பட்ட வெகுஜன வாக்கெடுப்பில் ஒரு வரைவு ஐரோப்பிய அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டது. 2009இன் இறுதியில் அதற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட லிஸ்பன் உடன்படிக்கை, ஒரு மோசமான மாற்றீடென்பதை நிரூபித்தது. எந்த ஐரோப்பிய அரசாங்கமும் அதன் வெளியுறவு கொள்கை நலன்களை ஒரு பொதுவான ஐரோப்பிய பாதைக்கு அடிபணியச் செய்ய தயாராக இல்லை என்பதற்கு பிரபலமல்லாத காத்ரீன் ஆஸ்தன் ஐரோப்பிய வெளியுறவுத்துறை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதே போதுமான சான்றாக உள்ளது.

லிபியாவில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையோடு, ஐரோப்பாவிற்குள் பிளவுகள் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளன. பிரான்ஸூம், பிரிட்டனும் அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் இப்போதிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பிற்கு வெளியில் செயல்பட்டு வருகின்றன. ஈராக் யுத்தத்தில் நிகழ்ந்த அதிகார விளையாட்டைப் போலில்லாமல், இந்த பிளவு "பழைய" மற்றும் "புதிய" ஐரோப்பாவிற்கும் இடையில் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒருபுறம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஒரு வெகுசில மேற்கத்திய ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலும் மற்றும் மற்றொருபுறம் ஜேர்மனிக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலும் ஏற்பட்டிருக்கும் பிளவாகும்.

வடக்கு ஆபிரிக்காவில் ஜேர்மனின் நலன்கள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் வாக்கெடுபில் ஜேர்மனி கலந்துகொள்ளாததை, ஜேர்மன் பேரரசின் கொள்கையை 120 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த முதலாம் வில்ஹெல்ம் மற்றும் அவரின் அதிபர் பெர்ன்ஹார்ட் வொன் பூலோவ்வின் அகநிலையான விருப்பங்கள் மட்டத்திற்கு குறைத்துவிடுவதுபோல் வெளியுறவுத்துறை மந்திரி வெஸ்டெர்வெல்லவின் தரப்பில் செய்த தனிப்பட்ட நோக்கமாக கொள்ள முடியாது. இரண்டுமே நீண்டகால போக்குகள் மற்றும் நிகழ்வுகளின் விளைவுகளாகும். அந்த காலகட்டத்திற்குள் அபிவிருத்தி அடைந்துள்ள ஜேர்மன் மற்றும் பிரான்ஸிற்கு இடையிலுள்ள வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார வேறுபாடுகளின் தர்க்கரீதியிலான விளைவாக வெஸ்டெர்வெல்லவின் கலந்துகொள்ளாமை உள்ளது.

வட ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் ஜேர்மனி அதன் சொந்த நலன்களைப் பின்தொடர்கிறது. இந்த நலன்கள் பிரான்சின் நலன்களோடு மோதுகின்றன. லிபிய யுத்தத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், “ஜேர்மனின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க கொள்கை" என்பதன்மீது சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் பயிலகம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது குறிப்பிடுகிறது, “1990களில் இருந்து இன்றுவரையில் மெஹ்ரெப் ஓரளவிற்கு ஜேர்மன் வெளியுறவு கொள்கையில் மிகக்குறைந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆனால் அதில் ஜேர்மன் நலன்களின் ஒரு தெளிவான சூத்திரமாக்கலின் எந்த அறிகுறியும் இல்லை. இருந்த போதினும், கடந்த தசாப்தத்தில் ஜேர்மன் வெளியுறவு கொள்கையில் அப்பிராந்தியத்தின் முக்கியத்துவம் மூன்று காரணங்களுக்காக படிப்படியாக அதிகரித்துள்ளது. அவை: எரிசக்தி பாதுகாப்பு குறித்த முக்கிய பிரச்சினை, புலம்பெயர்வை தடுத்து நிறுத்தும் முயற்சிகள், பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம் ஆகியவையாகும்.

எரிசக்தி வினியோகந்தான் தலையாய முன்னுரிமையாகும். அவ்வாய்வின்படி, “இந்த அரசுகளிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஜேர்மனின் எரிசக்தி வினியோகத்தில் கொண்டிருக்கும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. லிபியா இன்று ஜேர்மனியின் நான்காவது முக்கிய எண்ணெய் வினியோக நாடாக உள்ளது, அல்ஜீரியா எட்டாவது இடத்தில் உள்ளது.”

அரேபிய உலகில் ஜேர்மனி மற்றும் பிரான்சின் முரண்பாடான நலன்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மத்தியதரைக்கடல் ஒன்றியம் என்றழைக்கப்பட்டதன் மீது எழுந்த பிரச்சினையின் போது மேலே வந்தது. 2007இல் பதவி ஏற்றதில் இருந்தே சார்க்கோசி, மத்தியதரைக்கடல் ஒன்றியத்தை உருவாக்க தீர்மானமாக இருந்தார். கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்துவரும் ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கிற்கு எதிர்பலத்தை உருவாக்கும் விதத்தில், அனைத்து மத்தியதரைக்கடல் நாடுகளையும் பிரான்ஸ் தலைமையின்கீழ் ஒன்றிணைக்க அது நோக்கம் கொண்டிருந்தது. சார்க்கோசியின் திட்டங்கள் பேர்லினில் கடும் எதிர்ப்பை சந்தித்தன. பிரெஞ்சு காலனித்துவ அபிலாஷைகள் மீள்-எழுவதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் முன்னணி பாத்திரத்திற்கு சவால் விடுக்கும் என்று அஞ்சப்பட்டது. வட ஆபிரிக்கா மீதான ஜேர்மன் நலன்களும் அச்சுறுத்தலின்கீழ் வரும் என்றும் நம்பப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு ஆய்வு குறிப்பிடுவதாவது: “உண்மையில் மத்தியதரைக்கடல் எல்லையோரங்களில் இருக்கும் நாடுகளை உள்ளடக்குவதை மட்டுமே கொண்டிருக்கும், பிரான்ஸ் முன்மொழியும் மத்தியதரைக்கடல் ஒன்றியம், தெளிவாக அப்பிராந்தியத்தில் பிரெஞ்சு செல்வாக்கை பாதுகாப்பதற்கும், விரிவாக்குவதற்கும் ஒரு கருவியாக கருதப்பட்டது. பிரான்சின் சிறப்பு பாத்திரம் முக்கியமாக ஜேர்மன் வியாபாரங்களுக்கு எதிர்மறையான விளைவுகளைக் கொண்டுள்ளது. ஜேர்மன் பொருட்கள் நம்பத்தகுந்தவையாக மதிக்கப்படுகின்றன; ஜேர்மன் நிறுவனங்கள் முழுமையாக போட்டியில் முன்நிற்கின்றன; மேலும் மெஹ்ரெப் அரசாங்க அதிகாரிகள் எப்போதும் ஜேர்மனின் பெரும் தலையீட்டிற்கு அழைப்புவிடுக்கின்றனர். ஆனால் ஒப்பந்தங்கள் என்று வரும் போது, பெரும்பாலும் பிரெஞ்சு வியாபாரங்கள் தான் அந்த உடன்படிக்கையை முடித்து கொள்கின்றன.”

வட ஆபிரிக்காவில் நலன்களை கொண்ட ஒரே நாடு ஜேர்மன் மட்டுமல்ல: “போட்டி நீண்டகாலமாகவே சூடாகி வருகிறது என்பதுடன் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பல சர்வதேச நாடுகளின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது: அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், மற்றும் அதிகளவில் சீனா, இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்க அரசுகளும் கூட எரிசக்தி மற்றும் பாதுகாப்பு கூட்டுறவை (ஆயுத விற்பனை உட்பட) பார்க்கின்றன. இவை பிராந்திய போக்குவரத்து உள்கட்டமைப்பின் விரிவாக்கத்திலும், பொதுவில் கட்டுமானத்துறை ஒப்பந்தங்களிலும் ஈடுபாடு காட்டுகின்றன.”

சீனாவின் ஈடுபாடு எந்தளவிற்கு உள்ளது என்பது 75 சீன நிறுவனங்களும், 36,000 சீன தொழிலாளர்களும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றிருந்த போது, லிபிய யுத்த வெடிப்பில் வெளிப்பட்டது. குறிப்பிடத்தக்க விதத்தில், மத்தியதரைக்கடல் ஒன்றியத்தை எதிர்த்த ஒரே வட ஆபிரிக்க நாடு லிபியா மட்டும் தான்.

இறுதியாக 2008 கோடையில் மத்தியதரைக்கடல் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டு மே 2010இல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. ஆனால் ஜேர்மனி அதன் நிலைப்பாட்டை பாதுகாப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றது. வெறுமனே மத்தியதரைக்கடல் நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் மத்தியதரைக்கடல் ஒன்றியத்தில் கூட்டாளிகளாக உள்ளன. இந்நிலைமை பிரான்ஸ் அப்பிராந்தியத்தில் அதன் சொந்த போக்கை நடைமுறைப்படுத்த அதிக சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனது முனைப்பை மீண்டும் முன்னெடுப்பதற்கு சார்க்கோசி இப்போது லிபியச் சம்பவங்களை பயன்படுத்தி வருகிறார். துனிசியா மற்றும் எகிப்தில் எழுந்த புரட்சிகள், குறிப்பாக பதவியிலிருந்து துரத்தப்பட்ட பென் அலி மற்றும் முபாரக் ஆகியோரோடு மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த பிரான்ஸிற்கு ஒரு பெரும் அடியாக இருந்தன. முபாரக், சார்க்கோசியுடன் சேர்ந்து, மத்தியதரைக்கடல் ஒன்றியத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். ஜேர்மனி அதன் பங்கிற்கு, பதவியிலிருந்து துரத்தப்பட்ட ஆட்சியாளர்களை தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்தவர்களோடு வியாபாரம் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அது பெற்றிருப்பதாக நம்பியது.

கடாபிக்கு எதிரான எதிரெழுச்சியை அவரின் சொந்த நலன்களுக்காக பயன்படுத்த லிபியா, சார்க்கோசிக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தது. சார்க்கோசியின் வெளியுறவுத்துறை மந்திரிக்கே கூட ஆச்சரியமளிக்கும் வகையில், பெங்காசியில் இடைக்கால சபையை முதன்முதலாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த சார்க்கோசி, இராணுவ தலையீட்டிற்கும் அழுத்தம் அளித்தார். அவரின் அந்த முயற்சி பிரிட்டிஷ் பிரதம மந்திரி கேமரூனாலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினாலும் ஆதரிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி

ஜேர்மன் மற்றும் பிரான்சின் கருத்துவேறுபாடுகள் வெளியுறவு கொள்கை விவகாரங்களோடு மட்டும் மட்டுப்பட்டு இருக்கவில்லை. யூரோவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் கூட அபாயத்திற்குள் ஆழ்த்திய பொருளாதார மற்றும் நிதியியல் விவகாரங்களிலும் கூர்மையான முரண்பாடுகள் நிலவுகின்றன.

ஹெல்முட் ஹோல், ஜொஸ்கா பிஷ்ஷர் மற்றும் ஏனையவர்கள் எதிர்பார்த்தபடி யூரோவின் அறிமுகம் ஐரோப்பாவில் பெரும் ஒற்றுமைக்கு இட்டுச் செல்லவில்லை. அதற்கு பதிலாக அது பொருளாதார மற்றும் சமூக கருத்துவேறுபாடுகளை தீவிரப்படுத்தியது. ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு இடையில் அதிகரித்துவரும் முரண்பாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முறிவும் எவ்விதத்திலும் தற்செயலான நிகழ்வல்ல என்பதை பெரும் எண்ணிக்கையிலான புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

யூரோ அறிமுகத்தால் ஜேர்மன் பொருளாதாரம் பெரும் ஆதாயத்தைப் பெற்றுள்ளது. ஜேர்மன் ஐக்கியமான ஆண்டான 1990க்கும், 2008க்கும் இடையில் ஜேர்மன் ஏற்றுமதி, 348 பில்லியன் யூரோவிலிருந்து 984 பில்லியன் யூரோவிற்கு, ஏறத்தாழ மூன்றுமடங்கு அதிகரித்துள்ளது. இறக்குமதிகளும் கணிசமான அளவிற்கு 293 பில்லியன் யூரோவிலிருந்து 806 பில்லியன் யூரோவாக அதிகரித்துள்ளது.

ஜேர்மன் வெளிநாட்டு வர்த்தகம்\யூரோ பில்லியனில்

குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகத்தில் உபரி (surplus) அதிகரித்திருப்பது முக்கியத்துவமிக்கதாகும். 1990 மற்றும் 2008க்கு இடையில் அது மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மறு-ஐக்கியத்திற்கு பின்னர் ஆரம்பத்தில் அது வீழ்ச்சி அடைந்தது. அப்போது ஜேர்மன் பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகத்தைவிட உள்நாட்டு வர்த்தகத்தை சார்ந்திருந்தது. ஆனால் 1990களின் போது வெளிநாட்டு வர்த்தகத்தில் உபரி தொடர்ச்சியாக அதிகரித்தது. 2000 மற்றும் 2005க்கு இடையில், ஆண்டுக்கு 22 சதவீதம் உயர்ந்தபோது அது அதிகபட்ச உயர்வாக இருந்தது. 2007இல் அது சாதனையளவாக 200 பில்லியன் யூரோவை எட்டியது.

அடிப்படையில் ஜேர்மன் ஏற்றுமதியிலும், வெளிநாட்டு வர்த்தக உபரியிலும் ஏற்பட்ட உயர்விற்கு மூன்று காரணிகள் பங்களிப்பளித்தன. ஒன்று யூரோவின் அறிமுகம், மற்றொன்று கிழக்கு ஐரோப்பாவிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம், மற்றொன்று 2010 செயல்திட்ட சீர்திருத்தங்களால் (Agenda 2010) உருவான மலிவு-கூலி துறையின் அதிகரிப்பு ஆகியவையாகும்.

நாணய ஏற்ற-இறக்கங்களுக்கு எதிராக ஐரோப்பாவிற்குள் ஜேர்மனியைப் பாதுகாத்த யூரோ, ஒப்பீட்டளவில் சர்வதேச அளவில் நாணய  மதிப்பையும் குறைவாக வைத்திருந்தது. இதன் மூலமாக ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் ஜேர்மனியின் ஏற்றுமதி தொழிற்துறை பலமடைந்தது.

2008இல், ஜேர்மன் ஏற்றுமதியில் 63 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், 43 சதவீதம் யூரோ-மண்டல உறுப்பு நாடுகளுக்கும் சென்றது. ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு யூரோவில் செலுத்தப்பட்டன. இவ்விதத்தில் அவை நாணய ஏற்ற-இறக்கங்களில் இருந்து சுயாதீனமாக இருக்கச்செய்தன.

யூரோவின் மூலமாக, ஜேர்மனியின் நாணய செயற்கையாக குறைமதிப்பில் வைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அவற்றின் தேசிய நாணய பயன்பாட்டில் கொண்டிருந்திருந்தால், கிரேக்க டிராச்மா, இத்தாலிய லிரா மற்றும் பிரான்சின் பிராங் போன்ற பணவீக்க நாணய எதிராக டொச் மார்க்கின் பெறுமதி கூர்மையாக உயர்ந்திருக்கும். அது ஒருவேளை அமெரிக்க டாலருக்கு எதிராகவும், ஜப்பானின் யென்னுக்கு எதிராகவும் கூட உயர்ந்திருக்கும். ஆனால் யூரோ அறிமுகத்தால், நாணய உறவுகள் ஸ்திரமாக இருந்தன.

2008 இல் ஜேர்மன் ஏற்றமதி

யூரோ அறிமுகத்திற்குப் பின்னர் விலைவாசியும், சராசரி கூலிகளும் பலவீனமான ஐரோப்பிய நாடுகளில் உயர்ந்தபோது, ஜேர்மனியில் அவை மிகச் சிறியளவில் தான் உயர்ந்தன. இது முக்கியமாக ஷ்ரோடர் நிர்வாகத்தின் 2010 செயல்திட்டத்தின் காரணமாக நடந்தது. அத்திட்டம் பெருமளவிற்கு குறைந்த மலிவு-கூலித் துறையை உருவாக்கியது; அத்துடன் கூலிகளையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துவிட்ட அது, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அதன் விளைவாக, 2000 முதல் 2010 வரையில், ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட ஜேர்மனியில் ஒரு அலகிற்கான உழைப்பு செலவுகள் (unit labour costs) குறைவாக இருந்தது. ஜேர்மனியில் அது ஆண்டுக்கு வெறும் 0.7 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. அதேவேளை அது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆண்டுக்கு சராசரியாக 2.1 சதவீதமாக இருந்தது. கிரீஸில், அவை ஆண்டுக்கு 3 சதவீதமாகவும், போர்த்துக்கலில் 2.7 சதவீதமாகவும், ஸ்பெயினில் 2.6 சதவீதமாகவும் இருந்தது. பிரான்சில் அவை ஜேர்மனியைவிட மிக வேகமாக இரண்டு மடங்கு அதிகமாக ஒரே ஆண்டில் 1.9 சதவீதமாக உயர்ந்தது.

2000-2010 ஒரு அலகிற்கான உழைப்புச் செலவின் வருடாந்த அதிகரிப்பு

இந்த விளைவு ஐரோப்பாவின் பொருளாதார சமநிலையின்மையில் ஒரு பாரிய உயர்வாக இருந்தது. ஜேர்மனின் வெளிநாட்டு வர்த்தகம் உபரியில் சென்றுகொண்டிருந்த நிலையில், பிரான்சிலும் பிரிட்டனிலும் பற்றாக்குறைகள் வளர்ந்தன. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக, 2008இல் மதிப்பிடப்பட்ட ஜேர்மனியின் வெளிநாட்டு வர்த்தக உபரி 7.1 சதவீதமாக இருந்தது. பிரான்ஸ் 3.5 சதவீத பற்றாக்குறையையும், பிரிட்டன் 6.6 சதவீதத்தையும், போலாந்து 6.8 சதவீத பற்றாக்குறையையும் பதிவு செய்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு விரிவாக்கத்திலிருந்தும் ஜேர்மனி ஆதாயமடைந்தது. பழைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அதன் ஏற்றுமதி பங்களிப்பு கணிசமான அளவிற்கு குறைந்திருந்த போதினும், புதிய அங்கத்துவ நாடுகளுக்குள் ஜேர்மன் ஏற்றுமதி இரட்டிப்பாகியது. இந்த நாடுகள் ஜேர்மனிக்கு ஒரு உற்பத்தி விரிவாக்கப்பட்ட ஆலையாகவும் செயல்பட்டன. கார்கள், இயந்திரங்கள் போன்ற முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியை மட்டுமின்றி, மாறாக "நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனை" என்றழைக்கப்பட்டதையும் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிபரங்கள் உள்ளடக்கி இருந்தன. பண்டங்கள் அவற்றின் உற்பத்தி செயல்முறையின் போது பல முறை எல்லைகளைக் கடந்து சென்றால், இந்த "பூகோளமயமாக்கல் தாக்கங்கள்" புள்ளிவிபரங்களில் கருத்திலெடுக்கப்பட்டு, செயற்கையாக அவற்றை அதிகரித்தது.

2008 இல் வர்த்தக நிலுவை

சர்வதேச வர்த்தகத்தை பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகள் ஐரோப்பாவில் மட்டுமல்ல, மாறாக உலகளவிலும் ஒரு கணிசமான மாற்றத்தைக் கண்டுள்ளது. ஏற்றுமதித் துறையில் அமெரிக்கா ஜேர்மனியைக் கடந்து சென்றுள்ளது. அதேவேளை ஜப்பான் கூர்மையாக பின்னோக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் உண்மையில் இதில் முன்னணியில் சீனா உள்ளது. 1990இல் $62 பில்லியனாக இருந்த அதன் ஏற்றுமதிகள், 22 மடங்கு உயர்வுடன், 2008இல் $1.4 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளன.

2008(கடும்நீல) மற்றும் 1995(நீலநிற) ஜேர்மன் ஏற்றுமதி

சர்வதேச பொருளாதார உறவுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றொரு முக்கிய அளவுகோலாக உள்ளது. அதை பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு -OECD- பின்வருமாறு வரையறுக்கிறது: “வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது ஒரு நாட்டில் இருக்கும் ஓர் உள்நாட்டு நிறுவனம் ஒரு நீண்டகால இலாபத்தை அடையும் நோக்கத்துடன் மற்றொரு நாட்டில் இருக்கும் ஓர் உள்நாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதாகும்.”

உலகின் பெரும் ஏற்றுமதி நாடுகள்- பில்லியன் டொலரில்

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூலதன ஏற்றுமதியின் இயங்குமுறையின் மூலமாக வெளிநாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவதே அதன் நோக்கமாகும். மூலதன ஏற்றுமதியை லெனின் ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஏற்கனவே வரையறுத்துள்ளார். அவர் எழுதியதாவது, “கட்டுப்பாடற்ற போட்டி முரண்பாடின்றி அதிகாரம் செலுத்தியபோது, பண்டங்களின் ஏற்றுமதியானது பழைய முதலாளித்துவத்தின் அடையாளமாக இருந்தது. முதலாளித்துவத்தின தற்போதைய  நிலையில்  ஏகபோகம் ஆதிக்கம் செய்யும்போது, மூலதனத்தின் ஏற்றுமதியே முதலாளித்துவத்தினது அடையாளமாக காணப்பட்டது”.

கடந்த இரண்டு தசாப்தங்களின் போது, இந்த துறையில் கணிசமான அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியின் உயர்ந்த ஏற்றுமதி உபரியின் அடித்தளத்தில், அது ஒரு முக்கிய மூலதன ஏற்றுமதியாளராக ஆகியுள்ளது. 1990இல் இருந்து, வெளிநாடுகளில் ஜேர்மனியின் மூலதன முதலீடு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. அதேவேளை ஜேர்மனியில் வெளிநாட்டு மூலதன முதலீடு நான்கு மடங்கே அதிகரித்துள்ளது.

எவ்வாறிருந்தபோதினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதத்தை பொறுத்த வரையில், அத்துடன் ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களிலும், பிரிட்டன் மற்றும் பிரான்சின் முன்னாள் ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) ஜேர்மனியைவிட தொடர்ந்து முன்னணியில் உள்ளன.

2008இல், பிரிட்டனின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 57 சதவீதமாக இருந்தது. இது பிரிட்டனை பிரான்ஸ் (50 சதவீதம்) மற்றும் ஜேர்மனிக்கு (40 சதவீதம்) முன்னால் கொண்டு போய் நிறுத்துகிறது. ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களில், பிரான்சின் €1.3 ட்ரில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஜேர்மனியின் €1.2 ட்ரில்லியன் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வெளிநாட்டு நேரடி முதலீடு €1.8 ட்ரில்லியனாக இருந்தது. €3.5 ட்ரில்லியன் மதிப்புடன் முதலிடம் அமெரிக்காவிற்கு போனது.

மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜேர்மனின் வெளிநாட்டு நேரடி முதலீடு முக்கியமாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் திரண்டிருந்தன. 2004இல், 50 சதவீதம் பழைய ஐரோப்பிய ஒன்றிய அரசுகளிலும், 30 சதவீதம் அமெரிக்காவிலும் முதலீடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 6 சதவீதம் புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. வெறும் 1 சதவீதம் மட்டுமே சீனாவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.

சர்வதேச நிதியியல் நெருக்கடியின் விளைவுகள்

இப்போது வரையில் குறிப்பிடப்பட்ட அனைத்து புள்ளிவிபரங்களும் 2008 சர்வதேச நிதியியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முந்தையதாகும். இந்த நெருக்கடி ஒரு வரலாற்று திருப்புமுனையாக உள்ளது. அடிமட்டத்தில் திரண்டிருந்த அனைத்து பொருளாதார முரண்பாடுகளும், புரட்சிகர தாக்கங்களோடு பாரிய அரசியல் மற்றும் சமூக அதிர்வுகளின் வெளிப்படையான விளைவுகளுடன் வெளிப்பட்டன. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களுக்கு முன்னர் இருந்த காலங்கட்டங்களைப் போன்றே அதிகரித்திருக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கடுந்தாக்குதலுடன் இணைந்துள்ளது.

நெருக்கடிக்கு முன்னரே கூட, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் முடமாக்கப்பட்டு இருந்தன என்பதோடு சமூக பாதுகாப்பு அமைப்புமுறையும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில், முதலாளித்துவத்தின் மீட்டமைப்பு பேரழிவுமிக்க விளைவுகளைக் கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் தரமான கல்வி மற்றும் மருத்துவ முறைகள் என்று ஒன்றும் கிடையாது. விலைவாசிகள் விரைவில் மேற்கு ஐரோப்பாவின் விலையை  அண்மித்துக்கொண்டாலும் கூட, சில இடங்களில் தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மேற்கில் வழங்கப்பட்டதைவிட பத்தில் ஒரு மடங்கு கூலிகளே கிடைத்தது.

2006இல், பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் ஒரு முழுநேர பணியாளரின் சராசரி ஆண்டு வருமானத்தை பின்வரும் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சம்பளங்கள் டென்மார்க்கில் 43,000க்கும், பல்கேரியாவில் 1,900க்கும் இடையில் வேறுபட்டிருந்தது. ஆகவே ஒரு பல்கேரிய தொழிலாளி, அவரின் சக டென்மார்க் தொழிலாளியைவிட இருபது மடங்கு குறைவாக சம்பாதித்தார். கிரீஸும் ஸ்பெயினும் அவற்றிற்கிடையில் சுமார் 20,000 வேறுபாட்டைக் கொண்டிருந்தன. இது டென்மார்க் கூலியைவிட பாதிக்கும் குறைவாகும். இருப்பினும் பல்கேரிய கூலியை விட பத்து மடங்கு அதிகமாகும்.

2006 இல் சராசரி வருடாந்த வருமானம்(10 பணியாளர் அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில்

 

சர்வதேச நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள் நாசகரமான வடிவங்களை எடுத்து வருகின்றன. வங்கிகள் அவற்றின் ஊகவணிக இழப்புகளைச் சமாளிக்க, அவற்றிற்கு அளிக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான தொகைகள், தொழிலாளர் வர்க்கத்தினால் விலைகொடுக்கப்பட்டு மீட்டெடுக்கப்படுகின்றன. இந்த செயல்முறை ஐரோப்பாவின் எல்லைகளில் இருந்து தொடங்கி மத்தியை நோக்கி வருகிறது.

ஹங்கேரி, ருமானியா, கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகியவை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளன. மதிப்பு கூட்டு வரிகள் (value-added taxes) உயர்ந்ததாலும், வேலை குறைப்புகள் மற்றும் நிதியியல் வெட்டுக்களோடு சேர்ந்து பொதுத்துறை சீரழிக்கப்பட்டதாலும், அவை விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசியை உயர்த்திவிட்டு விட்டு, மக்களின் வாழ்க்கை தரங்களை 20 முதல் 30 சதவீதம் வரையில் குறைத்து வருகின்றன. இந்த ஏற்கெனவே ஏழ்மையான நாடுகளில் வாழ்க்கை தாங்கமுடியாத நிலைக்கு வந்துள்ளது. 

கிரீஸில், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட முதலிரண்டு சிக்கன நடவடிக்கை திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரங்களை 30 சதவீதத்திற்கு குறைத்துவிட்ட நிலையில், அங்கே பாப்பன்ட்ரூ (Papandreou) அரசாங்கம் வெகு சமீபத்தில் மற்றொரு சிக்கன நடவடிக்கையையும் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியியல் உதவியைக் கோரிய பின்னர், போர்த்துக்கலும் இதேபோன்ற ஒரு சிக்கன நடவடிக்கை திட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தில், பொது மருத்துவ முறை, இலவச கல்வி மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய வெற்றிகளை சீரழிக்கும் ஒரு சிக்கன நடவடிக்கை திட்டத்தை கமரூன் அரசாங்கம் நிறைவேற்றியது.

ஜேர்மனியிலும் பிரான்சிலும் சமூக தாக்குதல்கள், தற்போது ஓய்வூதிய வயதை அதிகப்படுத்துவது, தொழிலாளர் சந்தையை இன்னும் கூடுதலாக இலகுவாக்குவது, சுகாதார நலன் பெறுபவர்கள் மீது அழுத்தத்தை அதிகரிப்பது, மலிவு-கூலி தொழிலாளர்களை விரிவாக்குவது ஆகியவற்றில் குவிந்துள்ளன. ஆனால் இது இத்துடன் முடிந்து போய்விடாது.

1923இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஐரோப்பாவை ஒரு பலாத்காரமாக பிரிக்கப்பட்ட, பிளவுபட்ட, இயலாமல்போன, குழம்பிப்போன, துண்டுதுண்டாக சிதறிய ஒரு மனக்குழப்பமுற்ற இடமாக வர்ணித்தார். இன்று, இந்த போக்குகள் மீண்டுமொருமுறை செல்வாக்கு பெற்று வருகின்றன. ஏழை நாடுகள் மலிவான கடன்களைப் பெற்று, குறைந்தபட்சம் பொருளாதார செல்வவளத்துடன் இருப்பது போன்ற பிரமையை உருவாக்கி இருந்த அதேவேளையில், ஜேர்மனியின் ஏற்றுமதி யூரோவால் ஆதாயம் பெற்றிருந்த அந்த நாட்கள் எல்லாம் முடிந்து போய்விட்டன. ஆளும் வர்க்கம் ஓர் ஐக்கிய ஐரோப்பா மீதான அதன் திட்டத்திற்கு முதுகை காட்டத் தொடங்கியுள்ளது. அவை தீவிரமாக தேசிய நலன்களைப் பின்தொடர தொடங்கியுள்ளன. இந்த அபிவிருத்தியின் விளைவாக அதிகரித்துள்ள இராணுவமயமாக்கலின் மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்படுகின்றன.

ஜேர்மனி மற்றும் ஏனைய வடக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆளும் மேற்தட்டுகளுக்குள் உயர்ந்துவரும் பல குரல்கள், யூரோ மிகவும் செலவுமிக்கதென்றும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக ஒரே செலாவணி முறை கைவிடப்பட வேண்டுமென்றும் முறையிடுகின்றன. ஒரே செலாவணி முறையை ஒருசில வடக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வைத்திருக்கலாம் என்ற கண்ணோட்டம் (இதுவரையில் இந்த நிலைப்பாடு, Save Our Money என்ற அவருடைய புத்தகத்தில் எழுதிய ஹன்ஸ்-ஓலாஃப் ஹென்கெல் போன்ற ஒருசில தனிநபர்களின் கருத்தாக இருந்தது) ஆதரவைப் பெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ ஆகிய இரண்டையுமே எதிர்க்கும் பிரான்சில், தேசிய முன்னனி அல்லது True Finns போன்ற ஜனரஞ்சகவாத வலதுசாரி கட்சிகள், ஊடகங்களின் ஆதரவுடன் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஜேர்மனியில் ஹென்கல் மற்றும் திலோ சராஜின் போன்ற வலதுசாரி ஜனரஞ்சகவாதிகள் பொதுமக்களிடையே அவர்களின் கருத்துக்களைப் பரிமாறுவதற்கு பல உரையாடல் நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நிதியியல் ஸ்திரப்பாட்டு அமைப்புமுறையை (European Financial Stabilization Mechanism) ஸ்தாபிப்பது பற்றி ஜேர்மனிக்கும், பிரான்சிற்கும் இடையில் பெரும் மோதல்கள் அதிகரித்துவருகின்றன. ஜேர்மனி கடன் மறுகட்டமைப்பு முறையைப் (debt restructuring exercise) பரிந்துரைக்கின்ற அதேவேளையில் (இது கிரீஸிற்கு வெளியிலிருந்து கடன் வழங்குவதை நீக்கிவிட்டு விட்டு, அதன் வங்கியியல் துறையை ஒரு பொறிவிற்கு இட்டுச்செல்லும்), தனக்கு பாதகமாக முடியும் என்ற அச்சத்தில் பிரான்ஸ் அதுபோன்ற ஒரு வழியை நிராகரிக்கிறது.

யூரோவைத் கைவிடுவது என்பது பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளின் நிலைநோக்கை மாற்றியமைப்பதை உட்கொண்டுள்ளது. இதுகுறித்து இப்போதுவரையில் விளக்கமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், சில போக்குகள் வெளிப்படையாக உள்ளன.

2009இல், பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஜேர்மன் ஏற்றமதிகள் 19 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. ஆனால் 2010இல், அது அந்த இழப்புகளை மீட்டெடுத்தது. ஏறத்தாழ அது 2008இன் சாதனை அளவை எட்டியது. யூரோ-மண்டலத்திற்குள் ஏற்றமதிகள் நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விடவும் அவை குறைவாகவே இருந்தன என்ற போதினும் வெறும் 14 சதவீதம் மட்டுமே உயர்ந்து. சீனாவிற்கான ஜேர்மனியின் ஏற்றுமதி 44 சதவீதம் உயர்ந்தது. அவ்வாறே ரஷ்யாவிற்கு 28 சதவீதம் உயர்ந்தது.

ஜேர்மனியின் ஏற்றுமதி மீதான நிதிய நெருக்கடியின் தாக்கங்கள்

ஜேர்மன் அதன் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு ஐரோப்பாவைக் கடந்து விரிவாக்கி வருகிறது. லிபியாவிற்கு எதிரான யுத்தத்தில் நிலவும் முரண்பாடுகளுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த யுத்தம் முக்கியமாக எண்ணெய்க்காகவும், ஏற்றுமதி சந்தைகளுக்காகவும், மூலதான ஏற்றுமதிக்காகவும், ஒட்டுமொத்த அரேபிய பிராந்தியத்தில் புரட்சிகளை ஒடுக்குவதற்குமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒரு தீவிர காலனித்துவ கொள்கைக்கு திரும்பி இருப்பதை இந்த சூழலில் இருந்து பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் நெருக்கடியை பார்க்கையில், அவற்றின் ஜேர்மன் போட்டியாளர் விஷயத்தில் கடந்தகாலத்தில் அவற்றின் கரங்களை பலப்படுத்த உதவிய அதே பாரம்பரிய முறைகளுக்கு அவை திரும்பி வருகின்றன.

இராணுவ விவகாரங்களில், பிரிட்டனும் பிரான்ஸூம் மேலைதிக்கத்தை கொண்டுள்ளன. ஜேர்மனி இராணுவ செலவுகளுக்காக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது. பிரான்ஸ் 1.6 சதவீதமும், பிரிட்டன் 2.8 சதவீதமும் (இது இரண்டு மடங்கையும் விட அதிகமாகும்) செலவிடுகின்றன. ஆனால் இரண்டு நாடுகளுமே, அமெரிக்காவால் முட்டுகொடுக்கப்படுகின்றன. அமெரிக்கா இராணுவ செலவுகளுக்காக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தைச் செலவிடுகிறது.

2009 இல் இராணுவச்செலவீனம்

1890இல் எல்லா தரப்பிலிருந்தும் "ஒதுக்கப்பட்டு" இருந்ததாக ஜேர்மனி உணர்ந்த போது இருந்ததைப் போன்றே, அது அதன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வாய்ப்புகளையும், வழிகளையும் தேடும். வெளியுறவு கொள்கையின் நிலைநோக்கை மாற்றுவதென்பது, ஜேர்மன் இராணுவத்தின் பங்கினை அதிகரிப்பதில் இருந்து தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். எவ்வாறிருந்த போதினும் இரண்டுமே உள்ளார்ந்த மோதல்களும், நெருக்கடிகளும் இல்லாமல் முன்னெடுக்கமுடியாது.

ஐரோப்பாவில் அரசியல் நெருக்கடி

ஐரோப்பாவில் நிகழும் மாற்றங்கள் அனைத்து முதலாளித்துவ கட்சிகளையும் ஓர் ஆழமான நெருக்கடிக்கு இட்டு சென்றுள்ளது. மத்தியதட்டு வர்க்கங்களின் துண்டுதுண்டாக உடைவதற்கு அப்பால், “மக்கள் கட்சிகள்" என்றழைக்கப்படுபவைகளின் சமூக அடித்தளங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகளின் நிலைநோக்கு மாற்றப்படுவதால், தவிர்க்கமுடியாமல் அது அரசியல் பதற்றங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இத்தாலியில் உள்ள பழமைவாத அரசாங்கங்கள் அனைத்தும் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளன. தற்போது தேர்தல்கள் நடத்தப்பட்டால் அவற்றால் அதிகாரத்தைத் தக்க வைப்பதென்பது சாத்தியமில்லை.

இதுவரையில், தொழிலாள வர்க்கத்திடம் ஒரு சுயாதீனமான தலைமையோ அல்லது ஓர் அரசியல் முன்னோக்கோ இல்லாததால் ஆளும் வர்க்கங்களால் இந்த நெருக்கடியை தம்மால் கையாள முடிந்தது. 1990களில் இருந்து, அவை அவற்றின் ஆட்சியைக் காப்பாற்றி கொள்ள முதன்மையாக சமூக ஜனநாயகக் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் சார்ந்திருந்தனஇங்கிலாந்தில் டோனி பிளேயரின் புதிய தொழிற்கட்சியையும் (New Labour), ஜேர்மனியில் பசுமை கட்சியையும், ஷ்ரோடர் மற்றும் பிஷ்ஷரின் கூட்டணியில் இருக்கும் சமூக ஜனநாயக் கட்சியையும், பிரான்ஸில் ஜோஸ்பனின் நிர்வாகத்தையும், இத்தாலியில் புரோடியையும் சார்ந்திருந்தன. இந்த செயல்முறையின் விளைவாக, சமூக ஜனநாயகக் கட்சியினர் தம்மைத்தாமே மதிப்பிழக்கச்செய்துகொண்டதோடு, அதிலிருந்து மீண்டும் மீண்டெழவும் இல்லை.

அப்போதிருந்து தொழிலாள வர்க்கத்தை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவும், ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் முதலாளித்துவம் அதிகளவிற்கு முன்னாள் இடதுகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ சக்திகளின் பக்கம் திரும்பியுள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் வீழ்ச்சியால் ஆதாயம் அடைந்த மற்றும் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை எட்டிய பிரெஞ்சு பப்லோவாதிகள், இவ்விதத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். ட்ரொட்ஸ்கிசத்துடனான எவ்வித பொதுவான தொடர்பினையும் உடைத்துக் கொண்டதன் மூலமாகவும், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை (NPA) ஸ்தாபித்ததன் மூலமாகவும் அவர்கள் அவர்களின் "வெற்றிக்கு" பிரதிபலிப்பைக் காட்டினர். புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி முன்னில்லாத வகையில் வெளிப்படையாகவே ஒரு முதலாளித்துவ, ஏகாதிபத்திய-ஆதரவு கட்சியாக செயல்படுகிறது. சார்க்கோசிக்கு எதிரான வேலைநிறுத்த போராட்டத்தை ஒடுக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகித்த NPA, தற்போது லிபியாவிற்கு எதிரான நேட்டோ யுத்தத்தை நியாயப்படுத்தி வருகிறது.

ஜேர்மனியில், சமூக ஜனநாயகத்தின் வீழ்ச்சியைத் தடுத்துநிறுத்த சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள்-ஸ்ராலினிஸ்டுகளால் ஸ்தாபிக்கப்பட்ட இடது கட்சியும் இதேபோன்ற ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. அது எல்லா குட்டி-முதலாளித்துவ தீவிரவாதிகளையும் தனது பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், முதலாளித்துவ அரசியலின் அழுகியநிலை, வலது-சாரி மற்றும் பாசிச போராட்டங்கள் தழைத்தோங்கும் ஒரு நிலையை எட்டியுள்ளது. பிரெஞ்சு கருத்துக்கணிப்புகளில் சார்க்கோசியின் UMPஐ விட தேசிய முன்னணி (National Front) முன்னால் நிற்கின்றது. பின்லாந்தின் சமீபத்திய தேர்தல்களில் True Finns மொத்த வாக்குகளில் ஐந்தில் ஒரு பங்கை பெற்றுள்ளது. ஹங்கேரியில், ஆளும் பெர்டெஸ்ஜ் (Fidesz) கட்சி ஹார்தே (Horthy) ஆட்சியின் சர்வாதிகார பாரம்பரியத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறது. இத்தாலி, ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, மற்றும் சுவிட்சர்லாந்தில் வலதுசாரி வெகுஜன கட்சிகளும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

முதலாளித்துவ "இடது" மற்றும் "தீவிர-இடது" (far-left) வலதிற்கு மிக நெருக்கமாக சென்றுவிட்டன என்பதோடு அதிகரித்துவரும் சமூக போராட்ட அலையை தமக்கு சாதகமாக்க அதிதீவிர-வலதை (ultra-right) அனுமதித்துள்ள நிலையில் தமது வெற்றிக்கு நன்றி கூறிக்கொள்கின்றனர். சான்றாக ஜனவரியில் தம்முடைய தந்தை ஜோன்-மரீ லு பென்னிடமிருந்து தேசிய முன்னணியின் தலைமையை பெற்ற மரீன் லு பென் அவருடைய கவனத்தை சமூக விவகாரங்களின் பக்கம் திருப்பியுள்ளார். சில கருத்துக்கணிப்புகளின்படி, தொழிலாளர்களின் சில பிரிவுகளின் ஆதரவையும் வென்றுள்ளார்.

அதேநேரத்தில் அதிதிவீர-வலது ஊடகங்களிடமிருந்தும், பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறுகின்றன. அவை அவற்றின் வெளிநாட்டினரை எதிர்க்கும் திட்டங்களைக் கைக்கொண்டும் அல்லது நேரடி கூட்டணி மூலமாகவும் இதுபோன்ற போராட்டங்களுக்கு பாதை அமைக்கின்றன. பிரான்சில் இஸ்லாமோபோபியா (Islamophobia) மற்றும் வெளிநாட்டவர் எதிர்ப்புவாதம் (xenophobia) ஆகியவை உத்தியோகப்பூர்வ அரசாங்க கொள்கைகளாக உள்ளன. அதாவது பாடசாலைகளில் முக்காடுகளுக்கு தடை மற்றும் பர்தாவிற்கு தடை போன்ற முடிவுகள் "இடதுசாரிகள்" என்றழைக்கப்படுபவர்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆளும் UMPஇன் ஓர் அணி, தேசிய முன்னணியுடன் தேர்தல் கூட்டணி வைக்க ஆலோசனை வழங்குகிறது.

தீவிர-வலதுசாரிகளின் இந்த ஆதரவை தொழிலாள வர்க்கம் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கத்தை ஒடுக்க பாசிச முறைகளைப் பயன்படுத்துவதற்கான முதலாளித்துவத்தின் விருப்பம் அதிகரித்து வருகிறது.

ஜேர்மனியில், வெளிநாட்டவர் எதிர்ப்புவாதம் மற்றும் இனவாதத்தை வளர்த்தெடுக்கும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் நிலவுகின்றன. திலோ சார்ராஜின் அவருடைய இனவாத குப்பைகளை கொட்டித் தீர்க்க ஊடகங்களால் வாய்ப்பளிக்கப்பட்டமை, அதற்கொரு சான்றாகும். சார்ராஜினுக்கு கிடைத்த ஆதரவின் முக்கிய ஆதாரம், மத்தியதட்டு வர்க்கத்தில் பெரும் செல்வசெழிப்புடன் இருக்கும் ஒரு பிரிவிடமிருந்து வந்தது. ஆனால் தற்போது மற்றொரு அரசியல் அபிவிருத்தியான பசுமைக் கட்சியின் எழுச்சி ஆதிக்கம் செலுத்துகிறது.

பசுமை கட்சியினரின் அரசியல் மூலங்கள் அறுபதுகள் மற்றும் எழுபதுகளின் எதிர்ப்பு போராட்டங்களில் வேரூன்றி உள்ளன. இந்த விஷயத்தில் பிரெஞ்சு முன்னாள்-இடதுகளோடு இணைந்த இணைகளும் உள்ளன. பசுமைக் கட்சியினர் ஏற்கனவே 1990களின் பிற்பகுதியில் பகிரங்கமாகவே ஓர் ஏகாதிபத்திய கட்சியாக திரும்பியிருந்த இருந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த கட்சியாக அவர்கள், ஜேர்மன் இராணுவவாதத்தை புதுப்பிப்பதிலும், 2010 திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்தனர். தமது சொந்த கட்சிக்குள் இருந்த எதிர்ப்புக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சி அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரை பசுமைக் கட்சி ஆதரித்தது. இப்போது ஏனைய அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு பொதுவான நெருக்கடி நிலைமையின்கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக குட்டி முதலாளித்துவ அடுக்குகளை அவர்கள் ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளது. இதுதான் அவர்கள் வேலைதிட்டத்தின் உள்ளடக்கம். இந்த வேலைத்திட்டம் சமரசமற்ற நிதியியல் சிக்கன வெட்டுக்களோடு சேர்ந்து, சிறிது சுற்றுச்சூழல், சிறிது அடையாள அரசியல், மற்றும் சிறிது மாற்று அரசியல் ஆகியவற்றால் கலந்திருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) கடமைகள்

ஐரோப்பாவில் நிகழும் நெருக்கடியின் அபிவிருத்தி அடைந்த இயல்பு, சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (Partei für soziale Gleichheit, PSG), அதன் ஐரோப்பிய சக-சிந்தனையாளர்களுக்கும் பெரும் அரசியல் சவால்களை முன்வைக்ககின்றது. நெருக்கடியின் அடுத்த கட்டம் எவ்வாறு அபிவிருத்தி அடையும் என்று கணிப்பது கடினம். ஆனால் இந்த நெருக்கடி ஆழமடையும் என்பதுடன் நீண்டகாலத்திற்கு தொடரும் என்பதை கூற முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகள் அதன் முதுகில் குத்தினாலும் கூட, அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ளாது. எதிர்ப்புகள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் சமீபத்திய மாதங்களில் பார்த்திருக்கிறோம். துனிசியா மற்றும் எகிப்து புரட்சிகளும், அத்துடன் அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் மீள்-எழுச்சியும் சர்வதேச முக்கியத்துவம் கொண்டவையாகும்.

இந்த போராட்டங்களுக்கு தலைமையும், முன்னோக்கும் வழங்கும் பொறுப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மீதும், அதன் ஜேர்மன் பிரிவான PSG மீதும் தங்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் செய்த வேலைகள் இந்த கடமைக்கு எங்களைத் தயார்படுத்தி உள்ளன.

1985-86இல், பிரிட்டிஷ் தொழிலாளர்கள் புரட்சிக் கட்சியின் விட்டோடிகளிடம் இருந்து நாங்கள் உடைத்து கொண்டோம். சர்வதேசிய வாதத்தில் இருந்து உடைத்துக் கொண்ட அக்கட்சி, ஸ்ராலினிசம், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தை நோக்கி திரும்பியது. இந்த உடைவு இல்லாமல் இருந்திருந்தால், நாங்களும் இன்று இடது கட்சியின் (Left Party) முகாமில் இருந்திருப்போம். அப்போதிருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களைப் பற்றிய எங்களுடைய கண்ணோட்டங்களை அபிவிருத்தி செய்து விரிவாக்கியதுடன், PSGஐ ஸ்தாபித்து, உலக சோசலிச வலைத் தளத்தையும் உருவாக்கினோம்.

இடது கட்சி மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சிக்கு எதிரான எங்களுடைய போராட்டமும், எங்களுடைய போராட்டத்திற்குள் பிராங்பேர்ட் பள்ளியின் சித்தாந்தங்களைக் கலக்கும் முயற்சிகளுக்கு எதிரான எங்களுடைய வாதமுறையும் தற்போதைய சூழ்நிலையில் எங்களை அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும் தயார்படுத்தி உள்ளது. “சோசலிசத்திற்கான இன்றைய போராட்டம்" என்ற முழக்கத்தின்கீழ், அமெரிக்காவில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கூட்டங்கள், எங்களின் வேலைதிட்டம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு பெரும் ஒத்திசைவைக் கண்டு வருவதை எடுத்துக்காட்டியது.

ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதென்பது, பசுமை கட்சிகள் போன்ற போலி-இடதுகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிராகவும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட அடக்குமுறைக்கு எதிராகவும் ஒரு நிரந்தரமான அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறது. இவ்விரு பணிகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடிக்கு பின்னிப்பிணைந்துள்ளன.

செப்டம்பரில் நடைபெறவிருக்கும் பேர்லின் மாகாண தேர்தலில் எங்களின் பங்கெடுப்பும் இவ்விதத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. பல விஷயங்களில், ஐரோப்பாவின் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பேர்லினில் ஒரு திரண்ட வெளிப்பாட்டைக் காண்கின்றன. அந்நகரம் வேலைவாய்ப்பின்மை மற்றும் மலிவு-கூலி தொழிலாளர்களால் குணாம்சப்படுத்தப்பட்டு உள்ளது. முதலாளித்துவ முகாமில், பசுமை கட்சியினர் குட்டி-முதலாளித்துவ முன்னாள்-இடதுகளின் ஆதரவுடன் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் இடது கட்சியின் ஒரு கூட்டணியை முகங்கொடுத்துள்ளனர். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) ஆகியவை மிகக்குறைவாகவே முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

எமது பிரச்சாரம், அவ்விரண்டு முகாம்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டங்களுக்கு புதிய உறுப்பினர்களை வென்றெடுப்பதிலும், அவர்களை அரசியல்ரீதியாக பயிற்றுவிப்பதிலும் கவனம் செலுத்தும்.

எமது இந்த பிரச்சாரத்தை ஐரோப்பிய மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் முன்னெடுத்து செல்வோம். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசு எனும் இந்த முன்னோக்கு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களுக்கு எதிரான மற்றும் அத்துடன் அதன் அதிதீவிர-வலது எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும். தொழிலாள வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து ஐரோப்பிய பொருளாதார ஐக்கியம் என்பது அத்தியாவசியமானதாகும். ஆனால் இந்த வேலையை முதலாளித்துவத்திடமோ அல்லது அதன் ஐரோப்பிய அமைப்புகளிடமோ விட்டுவிட முடியாது. அவற்றின் கொள்கைகள் ஐரோப்பாவில் பிளவுகளையும், முரண்பாடுகளையும் ஆழப்படுத்தி வருகின்றன. அது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடும், சோசலிச வேலைத்திட்டத்தை உணரச் செய்வதோடும் பிரிக்க முடியாதபடிக்கு இணைந்துள்ளது.

1926இல், “ஐரோப்பாவும், அமெரிக்காவும்" என்ற தம்முடைய உரையில் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு அறிவித்தார்: “புரட்சி முதலில் எங்கே வெடிக்கிறது என்பதோ அது எந்த வேகத்தில் அபிவிருத்தி அடையும் என்பதோ விஷயமல்ல. ஐரோப்பாவின் பொருளாதார ஐக்கியம் தான் அதன் சோசலிச மறுகட்டுமானத்திற்கு இன்றியமையாத முதல் நிபந்தனையாக உள்ளது. 1923இன் பிற்பகுதியில் கம்யூனிச அகிலம், ஒருங்கிணைந்த சோசலிச ஐரோப்பிய அரசுகளை உருவாக்க ஐரோப்பாவை பிளவுபடுத்தியவர்களை விரட்டியடித்து, அதை ஒன்றுபடுத்துவதற்காக பிளவுபட்ட ஐரோப்பாவின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியது அவசியமென்று வலியுறுத்தியது.”

முற்றும்