சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The assault on the Greek working class

கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்

Peter Schwarz
2 June 2011

Use this version to print | Send feedback

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகளும் சோவியத் ஒன்றியமும் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் “சோசலிசத்தின் தோல்வி” பற்றி இடைவிடாது பறைசாற்றின. நிலைகுலைவதற்கு முன்னதாய் அந்தச் சமூகங்கள் எதிர்கொண்ட பொருளாதாரச சிரமங்கள் எல்லாம் ’சமூகமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவுடனான திட்டமிட்ட பொருளாதாரம் சாத்தியமற்றது’ என்பதற்கான ஆதாரமாய் காட்டப்பட்டன.

யதார்த்தத்தில், ’தங்களது சொந்த தனியந்தஸ்துகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததோடு, அதே சமயத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒடுக்கியும் முதலாளித்துவ உலகச் சந்தைக்குள் ஒருங்கிணைவதற்கு முனைப்பும் காட்டி வந்த கறைபடிந்த அதிகாரத்துவங்களின் ஆட்சி’என்கிற இந்த நாடுகளின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணத்தை விசாரணை செய்ய எவரொருவரும் அக்கறை காட்டவில்லை:  

ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பாவுக்குக் கூறப்பட்ட அதே தகுதிவகைகளைக் கொண்டு ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் நடப்பு நெருக்கடியை ஒருவர் ஆராய்வாரானால், முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டிருக்கின்றது என்கிற முடிவுக்குத் தான் ஒருவர் வர முடியும், அதிலும் மிக மிகக் கண்கூடான வகையில். கிரீஸில் - போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் ஸ்பெயினிலும் இதையொத்த வகையிலேயே நடந்து கொண்டிருக்கிறது - இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு வரலாற்று நிலைக்குலைவு. ”சுதந்திர சந்தை”யின் கைங்கரியம் மீதான இத்தகையதொரு அதிர்ச்சிகரமான குற்றப்பத்திரிகையை மார்க்சே கூட சிந்தித்துப் பார்த்திருக்க முடியாது. முதலில் சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு நாடு நாசம் செய்யப்பட்டது, இப்போது அந்நாடு ஒரு மொத்தமான சரிவை நோக்கிச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் சர்வதேச நிதி முதலைகளுக்கு இரையாக வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது.  

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் ஜோர்ஜ் பாப்பான்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கத்தால் திணிக்கப்பட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்திருப்பதோடு பலரது வேலைகளையும் அழித்திருக்கிறது. எதிர்பார்க்கக் கூடிய வகையில், இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் கிரேக்க பொருளாதாரத்தை ஒரு ஆழமான மந்தநிலைக்குள் மூழ்கடித்திருப்பதோடு நிதிநிலைப் பற்றாக்குறை மற்றும் கடன் நெருக்கடி என்கிற தப்பிக்கவியலாத ஒரு நச்சு வட்டத்தை மோசமடைய செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இரண்டுமே ஒரே மருந்தையே கூடுதலாய் பரிந்துரை செய்து பதிலிறுப்பு செய்கின்றன, இவை அரசுச் சொத்துக்களை மலிவுத் தள்ளுபடியில் தள்ளி விடுவதற்கு கிரேக்க அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்கின்றன. அரசுக் கட்டிடங்களும் அத்துடன் தொடர்வண்டி, அஞ்சல், தொலைத்தொடர்பு, நீர், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் லாட்டரிகள் போன்ற அரசுப் பொது நிறுவனங்களும் ஒரு பங்குரிமை நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட இருக்கின்றன, அத்துடன் அதிகமான ஏலம் கேட்பவருக்கு விற்கப்படவும் இருக்கின்றன. இத்தகைய தனியார்மயமாக்க நடவடிக்கைகளின் பின்விளைவுகள் நன்கறிந்ததே: வேலை வெட்டுக்கள், ஊதிய வெட்டுக்கள், விலை உயர்வு, சேவைக் குறைபாடுகள் மற்றும் புதிய முதலாளிகளுக்கு கொழுத்த இலாபங்கள் அதே சமயத்தில் அரசுக்கு அதன் வருவாயின் முக்கியமான பாகத்தின் இழப்பு.  

பாப்பான்ரூ அரசாங்கம் செலவின வெட்டுக்களின் இன்னுமொரு சுற்றையும் அறிவித்துள்ளது. அரசு வேலைகளில் பத்துக்கு ஒரு காலியிடம் நிரப்பப்பட இருக்கிறது, முன்னர் இது ஐந்துக்கு ஒன்று என இருந்தது. ஒட்டுமொத்த நிர்வாகங்களுமே மூடப்பட்டு பொது முதலீடுகள் வெட்டப்பட இருக்கின்றன. விளைவு மந்தநிலை இன்னும் ஆழமாகும்.

கூடுதலாய் சிக்கன நடவடிக்கைகளுக்கு அதிகமாய் வலியுறுத்தி வாதாடுபவர்கள் யாரென்றால் யூரோவை அறிமுகம் செய்ததன் மூலம் அதிகமாய்ப் பலனடைந்திருக்கும் அரசாங்கங்கள் தான், இதில் முதலாகவும் முதன்மையாகவும் நிற்பது ஜேர்மன் அரசாங்கம். வாக்குறுதியளிக்கப்பட்ட செலவின வெட்டுக்கள் கறாராக அமல்படுத்தப்படாவிட்டால் கிரீசுக்கான எந்த உதவியையும் நிறுத்தி விடுவதற்கு நிதியமைச்சர் Wolfgang Schäuble எச்சரித்துள்ளார். அத்தகையதொரு நடவடிக்கை நாட்டை உடனடியாக திவால்நிலைக்குக் கொண்டுபோய் விடும்.

ஜேர்மன் டாப்லாய்டு பத்திரிகைகளும் அமைச்சர்களின் கூட்டமொன்றும் Schäubleக்கு ஆதரவாய் நிற்கிறது. ”கிரேக்க சோம்பேறிகள்” தங்கள் “வசதிக்கு மீறி வாழ்க்கை நடத்தினர்” என்று கூறி ”அவர்களது” கடனை  “நமது” பணத்தைக்க் கொண்டு அடைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து அவை வஞ்சத்திற்குத் தூபம் போட்டு வருகின்றன.

ஆயினும் பிரச்சினை “நீங்கள்” மற்றும் நாங்கள், அதாவது ”ஜேர்மனியர்”களுக்கும் “கிரேக்கர்”களுக்கும் இடையில் அல்ல. கிரேக்க நெருக்கடி ஒரு தேசியப் பிரச்சினை அல்ல, மாறாக இது ஒரு வர்க்கப் பிரச்சினை. கிரேக்க மக்களிடம் இருந்து கடைசி சென்ட் பணத்தையும் பிழிந்தெடுத்து விடத் துடிக்கும் அதே நிதித் துறை நலன்கள் தான் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதிலும் ஊதியங்கள் மற்றும் சமூக நலங்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்துக்கு நலம்பயக்கக் கூடிய ஒவ்வொரு சமூக வேலைத்திட்டத்தையும் வெட்டுவதை நோக்கமாய்க் கொண்ட ஒரு பெரும் எதிர்ப்புரட்சித் தாக்குதலின் பாகம் தான் இந்த கிரேக்க சிக்கன நடவடிக்கைகள்.

பணம் அநாமதேயமாகி விட்டது. பணம் எவ்வாறு கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்கள் மற்றும் மகா செல்வந்தர்களின் பைக்குள் செல்கிறது என்பதைத் துல்லியமாக வரைந்து காட்டுவது கடினம். ஆனால் நடந்து வருவது அது தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

போஸ்டன் கன்சல்டிங் குரூப் தொகுத்திருக்கும் சமீபத்திய “உலகளாவிய சொத்துநிலை அறிக்கை” கூறுவதன் படி, ரொக்கம், பங்குகள், பத்திரங்கள் மற்றும் நிதிகளிலான தனியார் முதலீட்டாளர்களின் உலகளாவிய சொத்துக்கள் 8 சதவீதம் வரை அதிகரித்து 122 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி நெருக்கடிக்கு முந்தைய உச்சத்துடன் ஒப்பிட்டால் இது 20 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அதிகரிப்பாகும். ஆக, மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் சர்வதேச நிதி நெருக்கடியின் பின்விளைவுகளால் துன்பப்பட்டுக் கொண்டிருக்க, பொறுப்பானவர்களோ முன்னெப்போதையும் விட லாபத்தில் கொழுக்கின்றனர். உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை வைத்திருக்கிற குடும்பங்களின் எண்ணிக்கை சென்ற வருடத்தில் 1.5 மில்லியன் வரை அதிகரித்து மொத்தமாய் 12.5 மில்லியன் வரை உயர்ந்தது. உலக மக்கள்தொகையில் இது ஒரு சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கை தான் என்றாலும் உலகச் சொத்துக்களில் 35 சதவீதம் இவர்கள் வசம் இருக்கிறது. 

உலகின் மிகவும் கடன்பட்ட நாடான அமெரிக்காவில் தான் சொத்துக்கள் மிகப்பெருமளவில் தனிநபர்களிடம் குவிந்திருப்பதும் காணக் கூடியதாய் இருக்கிறது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் தனது வாழ்க்கைத் தரங்களில் முண்கண்டிராத ஒரு தாக்குதலுக்கு முகங் கொடுத்து வரும் அதேவேளையில் வசதியான அமெரிக்கர்களின் முதலீடு செய்த மூலதனமோ சென்ற ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்து 38.2 டிரில்லியன் டாலருக்கு உயர்ந்தது. இந்த அம்சத்தில் இங்கிலாந்தைத் தான் ஐரோப்பியத் தலைவர் என்று கூற வேண்டும் (7.9 டிரில்லியன் டாலர்), இங்கே அரசாங்கம் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான ஒரு சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அடுத்ததாக 7.4 டிரில்லியன் டாலர்களுடன் ஜேர்மனி நிற்கிறது. இத்தொகை கிரீஸின் மொத்த அரசுக் கடனையும் விட 17 மடங்கு அதிகமாகும்.  

சொத்துக்களின் மறுபங்கீடு தேசியக் குரோதங்கள் தீவிரமுறுவதுடன் கைகோர்த்து நிகழ்கிறது. கிரேக்க கடன் பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மோதலில் யூரோ பலியாக அச்சுறுத்தி அது ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. சென்ற நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களைத் தூண்டிய போட்டி அரசுகள் மற்றும் அதிகாரத் தொகுப்புகளின் அமைவுக்குள் மீண்டும் விழுகின்ற அச்சுறுத்தலை ஐரோப்பா கொண்டிருக்கிறது.

தேசியவாதத்தின் வளர்ச்சி என்பது நெருக்கடியின் கூர்முனை தங்களது அண்டை நாடுகளின் மீது விழுவதை உறுதிசெய்து கொள்வதற்கு முனைகின்ற ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான மோதும் நலன்களின் ஒரு விளைவாக இருக்கிறது. அதேசமயத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த தேசியவாதம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு எரியூட்டப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள், ஜேர்மனியர்கள், புலம்பெயர்ந்த மக்கள் மற்றும்/அல்லது முஸ்லீம்கள் ஆகியோர் இந்த நெருக்கடிக்கான பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர், ஆளும் உயரடுக்கு தனது சுவடுகளை மறைத்துக் கொள்ள முடிவதோடு எல்லை கடந்த ஒற்றுமையையும் தடுத்து விட முடிகிறது. 

தொழிலாள வர்க்கம் இந்த சவாலைக் கையிலெடுத்து இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்கள் இடையே ஆவேசத்திற்கோ, கோபத்திற்கோ மற்றும் எதிர்ப்புக்கோ எந்தப் பஞ்சமும் இல்லை. கிரீஸின் ஏராளமான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஸ்பெயினின் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களிலும் இந்தப் பண்புகள் வெளிப்பட்டு நிற்கின்றன. பற்றாக்குறையாய் இருப்பது அரசியல் முன்னோக்கும் தலைமையும் தான். சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய முன்னாள் தொழிலாளர் அமைப்புகள் எல்லாம் எதிர்ப் பக்கத்திற்குப் போய் ரொம்ப காலமாகி விட்டது. சமூக ஜனநாயகக் கட்சிகள் நிதி மூலதனத்திடம் இருந்தான உத்தரவுகளை ஏற்றுக் கொள்கின்றன என்பதோடு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் காண்பது போல தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் முக்கிய கருவிகளாய்ப் பயன்படுகின்றன. தொழிற்சங்கங்கள் எல்லாம் சிக்கன நடவடிக்கைகளைத் தவிர்க்கவியலாததாகக் கருதுவதோடு எந்த எதிர்ப்புக்கும் குழிபறிக்கின்றன அத்துடன் சர்வதேச ஒற்றுமை எதனையும் நிராகரிக்கின்றன. அதிகப்பட்சமாய் கொந்தளிப்பை வடித்து விடுவதையும் எதிர்ப்புகள் கையை மீறிச் சென்று விடாமல் தடுப்பதையும் நோக்கமாய்க் கொண்ட பலனற்ற தேசிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.

இதோடு பல முன்னாள் இடது குழுக்களும் சேர்ந்து கொள்கின்றன. இவை தொழிலாளர்களை பழைய திவாலாகிப் போன கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கட்டிப் போடுகின்றன, அவர்களின் பாதையை மாற்றுவதற்கு அவர்களுக்கு நெருக்குதலளிப்பது தான் ஒருவர் செய்ய முடியும் என்று அதற்குக் காரணம் கூறுகின்றன.

நடப்பு நெருக்கடிக்கு தேசிய-அரசு மற்றும் முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள்ளாக எந்தத் தீர்வும் கிடையாது. கடுமையான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களின் மூலம் யூரோவை “மீட்சி” செய்தாலும் சரி அல்லது ஏராளமான அரசுகளின் திவால்நிலைகளைத் தொடர்ந்து அது நிலைகுலைந்து போனாலும் சரி தொழிலாள வர்க்கத்துக்கு அதன் பின்விளைவுகள் பேரழிவான ஒன்று தான். வங்கிகளும் பெருநிறுவனங்களும் தனியார் முதலாளிகளின் கையில் இருந்து கொண்டு அவை அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்து கொண்டிருப்பது தொடர்கின்ற வரை, அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களைத் தொடர்வதே நிகழும்.

எதிர்ப்புக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலமைந்த ஒருங்கிணைந்த, எல்லைகடந்த அணுகுமுறை அவசியமாகிறது. முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பேற்க முடியாது எனவே அதற்கான விலையைக் கொடுக்க நிர்ப்பந்திக்கிற அத்தனை முயற்சிகளையும் அது திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும். ஐரோப்பாவில் இருக்கிற பல்வேறு வலது மற்றும் “இடது” முதலாளித்துவ அரசாங்கங்கள் பெரு வணிகத்தின் இலாப நலன்களுக்கு மேலாக சமூகத்தின் நலன்களை உயர்த்தி நிறுத்துகிற தொழிலாளர்’ அரசாங்கங்களைக் கொண்டு இடம்பெயர்க்கப்பட வேண்டும். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒரு கருவியாய் விளங்குகிற ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தால் இடம்பெயர்க்கப்பட வேண்டும்.

இது தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் ஐரோப்பியப் பிரிவுகள் போராடி வருகின்ற வேலைத்திட்டமாகும்.