சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president foreshadows further economic hardship

இலங்கை ஜனாதிபதி மேலும் பொருளாதார சிரமங்களை முன்னறிவிக்கின்றார்

By Sampath Perera
12 February 2011

Use this version to print | Send feedback
 

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 1948ல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் உத்தியோகபூர்வ முடிவை குறிக்கும் பெப்பிரவரி 4 வருடாந்த சுதந்திர தின உரையை ஆற்றினார். சிங்கள மேலாதிக்கவாதத்தின் பிற்போக்கு கட்டுக்கதைகளை எடுத்துக்காட்டி, வெகுஜனங்களின் விருப்பங்களையும் எதிர்த்து, சம்பளங்கள் மற்றும் தொழில்களை வெட்டுவதற்கான கடினமான முடிவுகளை இப்போது தனியொருவராக நின்று முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ள, தேசியப் பொருளாதாரத்தின் மீட்பராக ஜனாதிபதி தன்னை காட்டிக்கொண்டார்.

நாட்டின் தெற்கில், புனிதக் கோயில் உள்ள கதிர்காமத்திலேயே உத்தியோகபூர்வ சுதந்திர தின வைபவங்கள் நடந்தன. இராஜபக்ஷ கடவுள்களை போற்றுவதற்காகவும் மற்றும் தனது வளர்ந்துவரும் சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு விதமான தெய்வீகப் பண்பை கொடுப்பதன் பேரில் சிங்கள மன்னர்களின் நிலப்பிரபுத்துவ மரபுக்கு உரிமை கோரவுமே இந்த இடத்தை தேர்வு செய்துகொண்டார். இராஜபக்ஷ, கி.மு 161 முதல் கி.மு 137 வரை ஆண்டதாகக் கூறப்படும், கதிர்காமக் கடவுளின் இந்தப் புனித பூமியின் ஆசீர்வாதத்துடன் தாய்நாட்டை ஐக்கியப்படுத்தியதாகக் கூறப்படும் துட்டகைமுனு மன்னருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டார்.

துட்டகைமுனு மன்னனைப்பற்றி குறிப்பிடுவதானது தமிழர்-விரோத இனவாதத்தை கிளறுவதற்காக திட்டமிடப்பட்டதாகும். இந்த புராதன மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை தோற்கடித்ததற்காக சிங்கள மேலாதிக்கவாதிகளால் நீண்டகாலமாக போற்றப்படுபவனாவான். வரலாற்று ஆதாரங்கள் முழுமையற்றதாகவே உள்ளன. ஆனால், இலங்கையில் சிங்கள சமுதாயத்தினதும் பௌத்த மதத்தினதும் காவலனாக துட்டகைமுனுவை சித்தரிப்பதற்காக நூற்றாண்டுகாலமாக பௌத்த மதகுருக்களால் இந்த புராணக் கதைகள் சுரண்டிக்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இராஜபக்ஷ, 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் தீவின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் தன்னையே துட்டகைமுனுவின் சமகாலத்தவராக முன்னிலைப்படுத்தினார். இராஜபக்ஷ 2006 ஜூலையில் யுத்தத்தை மிண்டும் தொடங்கியதோடு, ஐ.நா. அறிக்கையின் படி, மோதலின் இறுதி நாட்களில் இராணுவம் 7,000 தமிழ் பொது மக்களை கொன்றுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், 30,000 முதல் 75,000 வரையான உயர்ந்த எண்ணிக்கையில் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக காட்டியுள்ளது.

இராஜபக்ஷ ஸ்தாபித்ததாக சொல்லப்படும் ஐக்கியம், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமே நிறைவேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களை விசாரணையின்றி புலி சந்தேகநபர்களாக தடுத்து வைப்பது உட்பட, தமிழ் வெகுஜனங்களை அடிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜனநாயக-விரோத வழிமுறைகள், நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்துவதற்கு மாறாக, இனவாத பதட்ட நிலைமைகளையே உக்கிரமடையச் செய்துள்ளது.

இப்போது இராஜபக்ஷ சிங்களம், தமிழ் அல்லது முஸ்லிம் என யாரென்றாலும் சரி, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கு எதிராக அதே இராணுவவாத வழிமுறைகளை பயன்படுத்தத் தயாராகின்றார். மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பொருளாதார அபிவிருத்தி இழந்த வாய்ப்புக்களை மீண்டும் பெறுவதற்கு எந்த தடை வந்தாலும் தனது அரசாங்கம் அதில் இருந்து தலையெடுக்கும் என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார்.

பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ், வியட்னாம் அல்லது கம்போடியாவில் மலிவு உழைப்புக் தளங்களில் வளர்ச்சிகானும் போட்டியின் மத்தியிலும், இலங்கையின் வணிக தட்டுகளுக்கு இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக உள்ள ஒரே வழி, உண்மையான சம்பளத்தையும் வேலை நிலைமைகளையும் வெட்டிக் குறைப்பதன் மூலம் உழைப்புச் சக்தியின் உள்ளூர் விலையை குறைப்பதுவும் பொதுவில் வாழ்க்கை நிலைமையை தரங்குறைப்பதுமே ஆகும்.

 “நாடு பிரசித்தமான முடிவுகளை எடுத்து மெதுவாக அபிவிருத்தியடைய முடியாது என இராஜபக்ஷ வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றத்துக்கு அனுகூலமற்ற மற்றும் கடினமான முடிவுகளும் தேவை என அவர் எச்சரித்தார். எமது சிறுவர்களின் எதிர்காலத்துக்கு வெளிச்சம் சேர்ப்பதற்கு கடினமான மற்றும் சிரமமான முடிவுகளை எடுக்க வேண்டியது முழு தேசத்தினதும் கடமையாகும் என அவர் கூறினார்.

உழைக்கும் மக்களின் சம்பளங்கள் மற்றும் நிலைமைகளை மேம்படுத்துவதாக கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் மீறியதைப் பற்றி இராஜபக்ஷ எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர் வரவு-செலவுத் திட்ட வெட்டு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் விடுத்த கோரிக்கையை அமுல்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு பூராவும் பொதுத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருந்த அவரது அரசாங்கம், பாவனைப் பொருட்களின் விலையை கூட்டியதோடு விவசாயிகளுக்கான மானியங்களையும் வெட்டிக் குறைத்தது.

இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பல முடிவுகளை எடுத்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கட்டுமான முதலீட்டாளர்களுக்கு பெறுமதி மிக்க நிலங்களை கொடுக்க கொழும்பில் இருந்து 66,000 குடிசைவாசிகளை வெளியேற்றும் திட்டம் மற்றும் அதை எதிர்க்கும் குடியிறுப்பாளர்களை அச்சுறுத்துவதற்காக துருப்புக்களையும் பொலிசையும் பாவிப்பதும் இந்த முடிவுகளில் அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கம் பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு பெற்றோர்களின் மீது உயர்ந்த பாடசாலை செலவுகளையும் திணித்துள்ளது. அரசாங்கத் துறையை தகர்ப்பதும் தொடர்ந்தும் நடக்கின்றது. தனியார் துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான பொருளாதார சூழலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என இராஜபக்ஷ அறிவித்தார்.

தனது அரசாங்கத்தின் ஆறுவருட ஆட்சிக்கு ரோஜா நிறம் பூச முயன்ற இராஜபக்ஷ, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பொதுச் சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு வேலையின்மை ஒரு சாதனையளவு குறைந்துள்ளது எனவும் வலியுறுத்தினார்.

யதார்த்தம் முற்றிலும் மாறானது. நிச்சயமற்ற உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி கூட, இலங்கை மக்களில் 28 வீதமானவர்கள் 2 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். பெப்பிரவரி 4 அன்று டெயிலி மிரர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையில் நாட்டின் செல்வத்தினதும் வளத்தினதும் 85 வீதம், சமுதாயத்தில் உயர்மட்டத்தில் உள்ள 15 வீதமானவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் சுமார் 14 வீதமானவர்கள் வேலையற்றுள்ளனர்.

இராஜபக்ஷவின் அரசாங்கமும் ஒட்டு மொத்த ஆளும் தட்டும், சமூக மற்றும் வர்க்கப் போராட்டம் வெடிக்கக் கூடிய ஆபத்தையிட்டு மிகவும் விழிப்புடன் உள்ளது. இத்தகைய வட்டாரங்கள் துனிஷியா மக்களின் அண்மைய எழுச்சி மற்றும் எகிப்தில் புரட்சிகர இயக்கம் சம்பந்தமாக கூருணர்வுடன் உள்ளன. உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் வழிமுறையாக பல தசாப்தங்களாக ஆளும் வர்க்கம் இன மற்றும் மத வேறுபாடுகளை தூண்டிவிடுவதை உக்கிரமாக்கிவரும் இலங்கையில், அதே போன்ற வர்க்கப் பிரச்சினைகள் மத மற்றும் இன வேறுபாடுகளுக்கு குறுக்காக உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் என்ற பீதி காணப்படுகின்றது.

தான் சட்டத்தை நிலைநாட்டும் ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக இராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்தார். அத்தகைய நிலைமைகள் இன்றி, பொருளாதார அபிவிருத்திகள் மட்டும் எமது சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்காது என அவர் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் பற்றிய மக்களின் மனோபாவ மாற்றம் தேவை என அவர் வலியுறுத்தினார்.

உழைக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு சரணடைய வேண்டும் மற்றும் அரசாங்கத்தை சவால் செய்ய முயற்சிக்கக் கூடாது என அவர்களுக்கு இராஜபக்ஷ மெல்லியதாக மூடப்பட்ட எச்சரிக்கையை விடுக்கின்றார். தமிழர்களின் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிரிகளை இடைவிடாமல் நசுக்கிக்கொண்டு அரசாங்கமே முற்றிலும் சட்டத்துக்கு புறம்பாக செயற்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்து விட்ட போதிலும் இராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை புதுப்பிக்கின்றார்.

கடந்த ஆண்டு, இராஜபக்ஷ கொழும்பு குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு பொலிஸையும் துருப்புக்களையும் அனுப்புதற்கு மட்டுமன்றி, பல்கலைக்கழக தனியார்மயமாக்கத்தை எதிர்க்கும் மாணவர்கள் மீது பாய்ந்து விழவும் மற்றும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் குறைந்த சம்பளத்துக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தவும் அவசரகாலச் சட்டத்தில் உள்ள பொலிஸ்-அரச அதிகாரங்களை பயன்படுத்தினார்.

ஜனாதிபதியின் பேச்சை அங்கீகரிக்கும் வகையிலேயே கொழும்பு ஊடகங்கள் பிரதிபலித்தன. நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியை அரசாங்கம் உத்வேகத்துடன் வளநிறைவுடன் மேற்கொள்வதைப் பற்றி இராஜபக்ஷ தொடர்ந்தும் உறுதியாகப் பேசியதன் மூலம் சரியானதையே செய்துள்ளார், என ஐலண்ட் பத்திரிகை பிரகடனம் செய்தது. அதே சமயம், துனிசியா மற்றும் எகிப்தில் போன்ற வெகுஜன எழுச்சிகள் இலங்கையில் வெடிக்காது என தனது வாசகர்களுக்கு உறுதிப்படுத்த முயற்சித்த அந்த ஆசிரியர் தலைப்பு, பெரும் அபிவிருத்தி நடவடிக்கைகள்... பெரும் சம்பளமாகவும் மற்றும் உழைக்கும் மக்களின் கைகளில் வருமானமாகவும் மாறவேண்டும், என வாதிடுகின்றது.

யதார்த்தத்தில், கடந்த தசாப்தத்தில் எகிப்தில் வெளிநாட்டு முதலீடுகளின் துரித வளர்ச்சி, ஒரு குறுகிய தட்டுக்கு மட்டுமே இலாபமளித்து, பெரும்பான்மையான மக்களை வறுமை நிலைக்குள் தள்ளியதோடு தற்போது நடந்துகொண்டிருக்கும் பிரமாண்டமான வர்க்கப் போராட்டங்களை தூண்டிவிட்டுள்ளதைப் போலவே, இலங்கையில் தற்போதைய மற்றும் முன்னைய அரசாங்கங்களின் சந்தை-சார்பு வேலைத்திட்டங்கள் அதே போன்று வெடிக்கும் தன்மைகொண்ட பதட்டங்களை உருவாக்கிவிட்டுள்ளன.