சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Wisconsin struggle at the crossroads

விஸ்கான்சன் போராட்டம் திருப்புமுனையில்

8 March 2011
Jerry White

Use this version to print | Send feedback

அரசுத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலையிட உரிமைகளின் மீது ஆளுநர் ஸ்காட் வால்கர் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் மற்றும் கல்வி, மருத்துவநலன்களை வெட்டும் அவரின் திட்டத்திற்கும் எதிரான போராட்டம் திருப்புமுனையை எட்டியுள்ளன. வெட்டுக்களுக்கு எதிராகப் போராடுவதில் தொழிலாளர்கள் மன உறுதியோடு இருப்பதால், மாநில ஜனநாயக கட்சியினர், குடியரசு கட்சி ஆளுநரின் கோரிக்கைகளுக்கு ஒரு பாதையை குடைய தேடி வருகின்றனர்.

"மாநிலத்திற்கு விரைவில் திரும்பிவிட திட்டமிட்டிருப்பதாக", ஞாயிறன்று விஸ்கான்சனிலிருந்து வெளியேறியிருந்த ஜனநாயக கட்சியின் மாநில செனட்டர்கள் கூறியதாக, திங்களன்று, "Democrats to End Union Standoff" என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது. செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின்படி, "அரசுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டு-பேரம்பேசல் உரிமைகள்மீது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் உட்பட, ஆளுநர் வால்கரின் 'வரவு-செலவு திட்டத்தில் திருத்தும்' சட்டமசோதா மீது ஒரு முழுமையான செனட் வாக்கெடுப்பைக் கொண்டு வர, மாநில செனட் உறுப்பினராக இருக்கும் சிறுபான்மையினர் தலைவர் மார்க் மில்லிர் மற்றும் அவரின் உடனிருக்கும் ஜனநாயக கட்சியினரும் உத்தேசித்துள்ளனர்."

கூட்டு-பேரம்பேசல் உரிமைகள்மீது திரு. வால்கர் விதித்திருக்கும் நிபந்தனைகளில் பெரும் அதிருப்தி இருப்பதை, சமீபத்திய கருத்துகணிப்புகளில் பங்குபெற்றவர்கள் எடுத்துக்காட்டியிருப்பதானது, ஆளுநருக்கும், குடியரசு கட்சியினருக்கும் பெரும் 'பாதகமாக' உள்ளது. அத்துடன் செவ்வாயன்று திரு. வால்கர் முன்மொழிந்த ஒரு பரந்த இரண்டு-ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சட்டமசோதாவில் மாற்றங்களை வலியுறுத்தும் நிலைக்கு, ஜனநாயக கட்சியினரையும் அது அதிகப்படியாக உந்துவதாக மில்லர் நினைக்கிறார் என்று அந்த கட்டுரை குறிப்பிட்டது.

திங்களன்று வெளியான வால்கருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் மில்லர் எழுதினார், "நமக்குள் கருத்து வேறுபாடுகளும், தீவிரமான விவாதங்களும் இருந்தாலும் கூட, ஓர் அறிவார்ந்த சமரசத்தை எட்டவே, மாநில ஜனநாயக கட்சி செனட்டர்கள் விரும்புகிறார்கள் என்பதுடன் அதற்காக அவர்கள் எப்போதும் தயாராகவும் உள்ளார்கள்."

வால்கரிடம் சரணடையும் முறையீடு, குடியரசு கட்சி ஆளுநரை இன்னும் சமரசத்திற்கு கொண்டுவரும் என்பது தொழிலாள வர்க்கத்தின் அறிவை அவமதிப்பதாகும். அந்த சட்டமசோதாவைக் கொண்டு வருவதும், எவ்வித ஒருங்கிணைந்த எதிர்ப்பையும் தோற்றப்பாட்டளவில் சட்டவிரோதமாக்குவதும், வால்கருக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் அவர்களுடைய வர்க்க-யுத்த திட்டத்தைத் தீவிரமாக்க இன்னும் துணிவை மட்டும் தான் அளிக்கும்.

வால்கர் மற்றும் ஜனநாயக கட்சியினரால் இணைந்து உருவாக்கப்படும் எந்த "அறிவுபூர்வமான சமரசமும்", தொழிலாள வர்க்கத்திற்கு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த ஆளுநர் தெளிவுபடுத்தி உள்ளவாறு, இந்த வரவு-செலவுத் திட்ட திருத்த சட்டமசோதாவைக் கொண்டு வருவதும், கூட்டு பேச்சுவார்த்தை உரிமைகளை வெறுமையாக்குவதும், அவர் பத்து ஆயிரக்கணக்கான வேலைகளை அழிக்கவும், இன்னும் கூடுதலாக கூலிகள் மற்றும் நலன்களில் விட்டுக்கொடுப்புகளைக் கோரவும், மற்றும் மாநிலத்தின் 5.6 மில்லியன் மக்கள் எதைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த அடிப்படை சேவைகளை இல்லாதொழிக்கவும் செய்வதற்கான ஒரு முகவுரையே ஆகும்.

வரவு-செலவுத் திட்டத்திலுள்ள வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளிலிருந்து சுயாதீனப்பட்ட போராட்டத்தின் ஒரு புதிய பாதை கண்டறியப்பட வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே, மாநில வரவு-செலவு பற்றாக்குறைக்கு தொழிலாள வர்க்கமே விலை கொடுக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்துள்ளனர். வால்கருக்கு முன்பிருந்த ஜனநாயக கட்சி ஆளுநர் ஜிம் டோய்லெயின் கீழ், அம்மாநிலத்தின் வரலாற்றில், அவர்கள் பெரும் வெட்டுகளைச் செய்திருப்பதாக அவர்களே புகழ்ந்துரைக்கின்றனர். தேசியரீ்யாக ஜனாதிபதி ஒபாமாவுடன், தேசியளவில் கலிபோர்னியா, நியூயோர்க், இலினோய்ஸ் மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள ஜனநாயக கட்சி ஆளுநர்களும், வால்கர் நடத்தும் அரசுத்துறை தொழிலாளர்கள் மீதான செலவின குறைப்பு கொள்கைகள் மற்றும் தாக்குதல்களுக்குக் குறைவில்லாமல் நடத்தி வருகின்றனர்.

விஸ்கான்சனிலும், மற்றும் நாடு முழுவதிலும், வெட்டுக்களைத் திணிப்பதில் ஜனநாயக கட்சியினருடன் தொழிற்சங்கங்களும் ஒத்துழைத்து வருகின்றன. குடியரசு கட்சியினர், தொழிலாள வர்க்கத்தின் எவ்வித ஒருங்கிணைந்த எதிர்ப்பினது சட்டப்பூர்வ அடித்தளத்தையும் இணைந்து தொழிற்சங்கங்களையும் அழிக்க விரும்புகின்ற அதேவேளை, ஜனநாயக கட்சியினர் அரசு தொழிலாளர்கள்மீதும் அவர்கள் அளிக்கும் சேவைகள் மீதும் நாசகரமான தாக்குதல்களை திணிக்க தொழிற்சங்கங்களை தங்களுக்கு உதவும் ஒரு சொத்தாக பார்க்கின்றன.

விஸ்கான்சன் போராட்டம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியில் எழுந்தது. அது வெறுமனே செல்வாக்கு தேடுவதற்கான ஒரு பிரச்சாரமாக இருந்த வால்கரின் சட்டமசோதாவிற்கும், சம்பிரதாயமான போராட்டங்களுக்கும் விடையிறுப்பைக் காட்டியது. ஆனால் அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், பெப்ரவரி 15இல் மாநில தலைநகர் மாடிசனில் 20,000 தொழிலாளர்கள் அணிவகுப்பு நடத்தினர். மேலும் ஆசிரியர்களால் நடத்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி வெளிநடப்புகள், வேலை நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஓர் அலையும், குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் நடந்த சட்டமன்ற வாக்கெடுப்பின்போது மாநில தலைமைச்செயலக கட்டிடத்தின் முற்றுகை போராட்டங்களும் தொடர்ந்தன. சட்டமசோதா கொண்டு வரப்பட்டால் ஓர் வெடிப்பு நிகழும் என்ற அச்சத்தில், ஜனநாயக கட்சியின் மாநில செனட்டர்கள் வாக்கெடுப்பைத் தள்ளிவைக்க மாநிலத்தைவிட்டு வெளியேறினர்.   

தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் தலைவரும், AFL-CIOஇன் செயற்குழுவில் ஓர் உறுப்பினருமான கிரெக் ஜூன்மென் கடந்த வாரம் கூறுகையில், “இந்த விஷயம் விஸ்கான்சன் வீதிகளில் இருந்து எழுந்தது. ஒரு தலைவருக்குரிய மூளைகள் உங்களுக்கு இருக்குமானால், இந்த ஓர் அணிவகுப்பின் முன்னால் வந்து நின்று பாருங்கள்,” என்றார். தொழிற்சங்க அமைப்புகளைப் பொறுத்தவரையில், அவை போராட்டத்தின் முன்னால் வருவதென்பது, அதை அடக்குவதற்கும், இறுதியாக நிர்மூலமாக்க செய்வதற்காகவும் தான் இருக்கும்.     

தங்களின் சட்டபூர்வமான அதிகாரங்களிலும், உறுப்பினர் சந்தா வசூலிக்கும் நடைமுறையிலும் வால்கர் கைவைக்காமல் இருந்தால், அவரின் பொருளாதார முறையீடுகள் அனைத்தையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக விஸ்கான்சின் ஆசிரியர்கள் மற்றும் மாநில தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், ஒரு போராட்டத்தை நடத்துவதாக காட்டும் அவர்களின் போலித்தனத்தையே கேலிக்குரியதாக ஆக்கியது.

ஜனநாயக கட்சியினர் மாநிலத்திற்கு திரும்பியவுடனேயே, இந்த தொழிற்சங்கங்கள், வீதிகளிலிருந்து மக்களைத் திருப்பியனுப்பவும், பாரிய எதிர்ப்புகளைக் குடியரசு கட்சியின் மாநில செனட்டர்களைத் திரும்ப பெற அழைப்பு விடுக்கும் விஷயத்திற்குள் திசைதிருப்பவும், தேர்தலில் ஜனநாயக கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்காகவும், அவற்றின் அதிகாரத்தைக் கொண்டு முடிந்தவரையில் அனைத்தையும் செய்யும்.

பெருநிறுவன மேற்தட்டு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கரங்களில், தாங்கள் முழுவீச்சிலான யுத்தத்தை முகங்கொடுத்து வருவதை விஸ்கான்சினிலும், நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், படிப்படியாக, உணர்ந்து வருகின்றனர். அந்த எதிரி, தொழிலாள வர்க்கத்தை ஏழ்மைப்படுத்தவும், அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள உள்ள எந்தவழிவகையையும் அபகரிக்கவும் தீர்மானமாக உள்ளது.

ஆளும் வர்க்கத்தின் பக்கத்திலிருக்கும் இந்த வர்க்க யுத்தத்தை, தொழிலாள வர்க்கமும் அதேஅளவிற்கு தீர்க்கமான விடையிறுப்புடன் சந்திக்க வேண்டும். இதற்காக தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புகளும், ஒரு புதிய தலைமையும் அவசியப்படுகிறது.

வால்கர் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து இறக்கும் நோக்கத்துடன் ஒரு பொது வேலைநிறுத்தம் தொடங்குவதற்கான தயாரிப்புகளுக்காக, அனைத்து வேலையிடங்களிலும் ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய அடிமட்ட தொழிலாளர்களின் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த போராட்டம் அனைத்து வெட்டுக்களையும் எதிர்க்க வேண்டும். அத்துடன் பொதுக்கல்வி, மருத்துவ நலன் மற்றும் ஏனைய சமூக தேவைகளில் செய்யப்படும் செலவுகளை அதிகரிக்க முறையிடும் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும்.

இத்தகைய சேவைகளுக்கு பணம் இல்லை என்ற கோரிக்கை சமரசமின்றி நிராகரிக்கப்பட வேண்டும். இந்த பொய்மைக்கு பின்னால், அமெரிக்க சமூகத்தில் பரவியிருக்கும் பரந்த சமூக சமத்துவமின்மையை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவதே உள்ளது. இந்த பொய்மை மேல்மட்டத்தில் கட்டுப்பாடில்லாத செல்வவளத்துடன் ஒரு சிறிய மேற்தட்டு இருப்பதையும், பெரும்பான்மை உழைக்கும் மக்களிடையே வறுமையும், தாங்கொணா துன்பமும் அதிகரித்து வருவதையும் ஏற்றுக்கொள்கிறது. மொத்த 50 மாநிலங்களின் ஒட்டுமொத்த வரவு-செலவு பற்றாக்குறை, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய 400 பணக்காரர்களின் செல்வவளத்தில் பத்தில் ஒரு பங்கையும் விட குறைவாகும்.

விஸ்கான்சினில் தொழிலாளர்களை தொழில்துறைசார்ந்து ஒன்றுதிரட்டுவது தான், அந்நாடு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து உடனடியான ஆதரவை வென்று தரும். மேலும் இது வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதில், தொழிலாள வர்க்கத்தின் ஓர் எதிர்-போராட்டத்தையும் ஊக்குவிக்கும்.

இது ஒரேயொரு குடியரசுக் கட்சி ஆளுநருக்கு எதிரான ஒரு போராட்டமல்ல. மாறாக, உழைக்கும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக இருக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டமாகும்.

இதுவோர் அரசியல் போராட்டமாகும்; தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். ஜனநாயக கட்சியினருடனும் மற்றும் இரண்டு-கட்சி அமைப்புமுறையிலிருந்தும் முற்றிலுமாக உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கம் ஒரு பரந்த சமூக இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல், மனித தேவைகளின் அடிப்படையில், செல்வவளத்தை தீவிரமான விதத்தில் மறுபகிர்வு செய்வது மற்றும் பொருளாதார வாழ்வை மறுகட்டமைப்பது உட்பட, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றத்தின் மூலமாக மட்டும்தான், தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்திற்கான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வருகிறது. ஆகவே, எமது கட்சியில் இணையுமாறு, விஸ்கான்சினில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கிறோம்.