சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No to imperialist intervention in Libya!

லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு வேண்டாம்!

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு
19 March 2011
Use this version to print | Send feedback

லிபியாவில் எந்தவிதமான இராணுவத் தலையீட்டையும் உலக சோசலிச வலைத் தளம் திட்டவட்டமாக எதிர்க்கிறது. வியாழனன்று ஐக்கிய நாடுகள் சபையால் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கும் யுத்தத்தை நோக்கிய முனைவு, பெரிய சக்திகளால் முன்வைக்கப்பட்ட போலித்தனமான மனிதாபிமான காரணங்களோடு சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, அது ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டை கொடூரமான ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதையே குறிக்கிறது.

பிரெஞ்சு, பிரிட்டிஷ், அமெரிக்க விமானங்கள் லிபியாவில் குண்டுவீசுவதென்பது மனித உயிர்களைக் காப்பாற்றாது. மாறாக, அது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பலியாக்கி, அந்நாட்டை ஒரு யுத்தக்களமாக மாற்றும். இது ஓர் ஏகாதிபத்திய யுத்தம். லிபியா ஒரு ஒடுக்கப்பட்ட, முன்னாள் காலனித்துவ நாடாகும். இத்தகைய நாடுகளின்மீது ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் இராணுவ தாக்குதல்களை அடிப்படைரீதியாகவும் எந்த சூழ்நிலையிலும் உலக சோசலிச வலைத்தளம் நிராகரிக்கிறது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த யுத்தம் ஜனநாயகரீதியான எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லாமல் நடந்தேறும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்கள் இதனை ஆதரிப்பதற்கான எந்த அறிகுறி இம்மியளவு கூட இல்லை. சமூகத் திட்டங்களுக்கு பணமில்லை என்று அறிவிக்கும் அதே அரசாங்கங்களாலேயே, மீண்டுமொருமுறை, ஒரு யுத்தத்திற்கு பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

கடாபியின் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் ஒரு இரத்தக்கறை படிந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு ஜனநாயக எதிர்ப்பு இயக்கத்தை பலப்படுத்தும் என்று கூறுவோர் பின்வரும் கேள்விக்கு பதிலளித்தாக வேண்டும்: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எழும் அனைத்துவித எதிர்ப்புக்கு எதிராகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் காட்டிவரும் ஆட்சிகளுக்கு எதிராக, இந்த பெரும் சக்திகள் ஏன் இதே மாதிரியான விதிகளைப் பயன்படுத்தவில்லை? அடுத்து, அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படைத் தொகுதியின் (Fifth Fleet) தலைமையிடமாக இருக்கும் பஹ்ரெயினில், ஷேக் அல் கலீஃபா சவூதி ஆதரவுடன், நிராயுதபாணியான போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளி உள்ளார், அதற்கென்ன பதில்? காசாவில் என்ன நடக்கிறது, இதே சக்திகள் தானே இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வதில் சேர்ந்து நிற்கின்றன? யேமனில் என்ன நடக்கிறது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆதரவு-பெற்ற ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலே வெள்ளியன்று சுமார் 50 போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளினாரே?     

லிபியாவிற்கு எதிராக ஓர் இராணுவத் தாக்குதலுக்கு ஒத்துப்பாடும் அரசாங்கங்கள் அல்லது செய்தித்தாள்களில் ஒன்று கூட இந்த வெட்டவெளிச்சமாக இருக்கும் முரண்பாடுகளை விவரிக்க எவ்வித சிரமத்தையும் எடுக்கவில்லை. எவ்வாறிருந்த போதினும், சமீபத்திய சம்பவங்களைத் தர்க்கப்படி பார்த்தால், லிபியாவிற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையின் நிஜமான இலக்கு தெளிவாக உள்ளது.

துனிசிய ஆட்சியிலிருந்து ஜைன் எல் அபிடைன் பென் அலி, மக்கள் பேரெழுச்சியால் தூக்கிவீசப்பட்டு வெறும் இரண்டு மாதங்கள் தான் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதற்கடுத்த ஒரு மாதத்திலேயே எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கும்  தூக்கியெறியப்பட்டார். அவற்றின் விளைவு, மேற்கத்திய சக்திகள் அப்பிராந்தியத்தில் அவற்றின் முக்கியமான இரண்டு கூட்டாளிகளை இழந்துள்ளது. 

அமெரிக்காவும், ஐரோப்பாவும் கடாபியோடும், இந்த சர்வாதிகாரிகளோடும் கடைசி நிமிடம் வரையில் நெருக்கமாக இணங்கியிருந்தனர். லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு இப்போது உரக்க கூச்சலிட்டு கொண்டிருக்கும் பிரான்ஸ், பென் அலிக்கு எதிராக முழுவீச்சில் எழுச்சிகள் இருந்த போது, அவருக்கு பொலிஸ் உதவியை அளிக்க முன்வந்தது.

ஒருசில வாரங்களுக்குப் பின்னர் தான், இந்த பெரிய சக்திகள் வடக்கு ஆபிரிக்காவில் ஓர் இராணுவத் தலையீடு செய்ய ஆயத்தமாகி வருகின்றன. இதிலுள்ள காலஒற்றுமை என்ன? அரசியல் விவகாரங்களில் குருடாகிப் போயிருக்கும் ஒருவரால் மட்டும் தான், இத்தகைய சம்பவங்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளை பார்க்க முடியாமல் போகும்.

ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரியும், மேற்கத்திய சக்திகளின் ஒரு நெருங்கிய கூட்டாளியுமான கடாபிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு, தொடக்கத்தில் வேண்டுமானால் லிபிய மக்களின் நிஜமான துன்பங்களை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி குன்றிய பாலைவன அரசான லிபியாவில் பெரிய சக்திகளின் அசிங்கமான வேலைகளைச் செய்யத் தயாராக இருந்த சக்திகள் உடனடியாக ஒன்றுதிரண்டன. தேசிய இடைக்கால சபை (National Transitional Council) என்றழைக்கப்பட்டதின் பிரபலங்களிடையே அந்த சக்திகள் காணத்தக்கதாய் இருந்தன, இவர்கள் நாட்டின் கனிம வளங்களை மறைமுகமாகச் சுரண்ட சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவாதம் அளித்ததோடு மட்டுமில்லாமல், தங்களின் சொந்த நாட்டின்மீதே குண்டுவீசவும் அழைப்பு விடுத்தனர். தேசிய இடைக்கால சபை என்பது, ஏகாதிபத்திய சக்திகளின் நிலைப்பாட்டிலான நகர்வுக்குப் பதிலிறுப்பாக கடாபியிடம் இருந்து முதுகைத் திருப்பிக் கொண்டு விட்ட பழைய ஆட்சியின் மூத்த அதிகாரிகள் கொண்டதாகும்.    

பல தசாப்தங்களாக லிபியாவின் எரிசக்தி வளங்கள் ஏகாதிபத்திய சதிவேலைகளின் இலக்காக அந்நாட்டை மாற்றியிருக்கும் நிலையில், அங்கு இராணுவத் தலையீடு என்பது அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் முதலாளித்துவ சொத்துக்களின் நலன்களுக்கு எதிராக தீவிரமாக திரும்பியிருக்கும் புரட்சிகர இயக்கங்களை அடக்கி வைக்கவும், ஆக இந்த இரண்டிற்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். கிழக்கில் எகிப்தையும், மேற்கில் துனிசியாவையும் எல்லைகளாக கொண்டிருக்கும் லிபியாவில் இராணுவத்தை நிறுத்துவதென்பது, அரபு உலகம் முழுவதிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களை மிரட்ட பெரிய சக்திகளுக்கு உதவும்.

அந்நாட்டில் வெளிநாட்டுத் துருப்புகள் இராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை நடவாமல் பார்த்துக் கொள்வது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தில் உள்ள குறிப்பு வெறும் கண்துடைப்பாகும். இராணுவ அவசியமென்பது அதன் சொந்த தர்க்கத்தைக் (logic) கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானும் சரி, ஈராக்கும் சரி அமெரிக்கத் துருப்புகளால் உத்தியோகபூர்வமாய் "ஆக்கிரமிக்கப்படவில்லை" என்பதால் அந்த இரண்டு நாடுகளிலும் பத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் நிரந்தரமான பிரசன்னத்தை கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை மாறிவிடாது.

அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் இராணுவத் தலையீட்டில் இறங்க வசதியாய் "பிராந்திய ஆதரவு" என்கின்ற போர்வையை அளிக்கும் வகையில், லிபியாவின்மீது பறக்கத்தடைவிதிக்கப்பட்ட வலயம் ஒன்றுக்கு அரபு லீக் தான் அழைப்புவிடுத்தது என்பது முக்கியமானதாகும். தங்களின் சொந்த ஆட்சிக்கு எதிராக திரும்பிய எதிர்ப்பாளர்களைக் கைது செய்யும், சித்திரவதைப்படுத்தும், சுட்டுத்தள்ளும் வேலைகளில் இருக்கும் சவூதி அரேபியா, பஹ்ரெயின், மற்றும் ஏனைய எமிரேட்களின் பிரதிநிதிகள் எல்லாம், லிபியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதான நோக்கத்தைக் கொண்டிருப்பதாய் கூறி இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்!

பெரிய சக்திகளோ அதீத அடாவடித்தனத்துடன் செயல்பட்டு வருகின்றன. எண்ணெய்வளம் மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றின் மீதிருக்கும் பேராசையைத் தவிரவும், அவர்களிடம் சிந்தித்து முடிவெடுத்த மூலோபாயம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. பில்லியன் கணக்கில் வியாபார உடன்பாடுகளைப் பேச பாரீசில் பெரும் ஆரவாரத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கடாபியை வரவேற்ற ஜனாதிபதி சார்க்கோசி இப்போது, தனது நேட்டோ கூட்டாளிகளை விடுங்கள், தனது சொந்த வெளியுறவுத்துறை மந்திரியைக் கூட கலந்தாலோசிக்காமல் தேசிய இடைக்கால சபையை (National Transitional Council) லிபியாவின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக அங்கீகரித்துள்ளார்.

மத்தியதரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவின் மிக அண்மையில் இருக்கும் ஒரு நாடான லிபியாவில் ஒரு நீண்டகால யுத்தத்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரரீதியான, பூகோள-அரசியல்ரீதியான மற்றும் பாதுகாப்புரீதியான தாக்கங்களைக் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இராணுவ நடவடிக்கையின் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுக்கும் பெரும்பான்மையினர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்குப் பின்னர், மற்றொரு இராணுவ சாகசத்தில் பெரிய விருப்பமில்லாத இராணுவத்தின் பழமைவாத வட்டாரங்களைச் சேர்ந்தவர்களாய் உள்ளனர்.

ஜனாதிபதி சார்க்கோசியும் சரி, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரோனும் சரி இருவருமே தலையீடு செய்வதில் அவர்களின் சொந்த உள்நாட்டு அரசியல் காரணங்களைக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் வீழ்ச்சி கண்டிருக்கும் சார்க்கோசி, ஒரு மூர்க்கமான வெளிநாட்டு கொள்கை மூலமாக அந்நிலையைச் சரிசெய்து கொள்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிய எதிர்ப்பை முகங்கொடுத்துவரும் கேமரோன், அவருடைய முன்மாதிரி மார்கிரட் தாட்சர் 1982 மால்வினாஸ் யுத்தத்தை செய்ததைப் போன்று, லிபியாவிற்கு எதிரான ஒரு யுத்தம் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் என்று நம்புகிறார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களால் பிரிட்டிஷ் இராணுவம் பலவீனப்பட்டிருக்கும் நிலையில், சுயாதீனமாக தலையீடு செய்ய முடியாமல், கேமரோன் அமெரிக்காவை இதில் ஈடுபடுத்த பெரும் பிரயத்தனம் செய்துள்ளார். 

லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்திய சாகசம், ஐரோப்பாவில் பழைய பிளவுகளை மீண்டும் எழுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கை (European Unions Common Foreign and Security Policy-CFSP) மீண்டுமொருமுறை கந்தல்கந்தலாகி நிற்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பில் ஜேர்மன் பங்கேற்கவில்லை, எந்த இராணுவத் தலையீட்டிலும் அது பங்குவகிக்காது என்று வலியுறுத்தியிருக்கிறது. இவ்வகையில் அது பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நேட்டோ கூட்டணிக்கு எதிராக ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசிலின் ஓர் அணியில் நிற்கிறது, இது நீண்டகாலத் தாக்கங்களைக் கொண்டதொரு அபிவிருத்தி ஆகும்.

இந்த அணிகள் ஏற்பட்டிருப்பது, யுத்தத்தின் ஏகாதிபத்திய குணாம்சத்தின் விளைவாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல்முறையாக பிரிட்டனும் பிரான்சும் ஒரு இராணுவ மோதலில் கூட்டாய் பங்கேற்கின்றன, ஜேர்மனி எதிர்க்கின்ற ஒரு நிலைப்பாட்டை அவை எடுத்துள்ளன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜேர்மன் மற்றும் பிரிட்டிஷ் இராணுவங்களுக்கு இடையில் நடந்த கடைசி மோதல் வட ஆபிரிக்காவில் தான் நிகழ்ந்தது என்பதையும் ஒருவர் இங்கே நினைவுகூரலாம்.

அடிப்படையில் லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையெடுப்பதை ஜேர்மனி நிராகரிக்கவில்லை. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. ஆயினும் இன்று வரை, வட ஆபிரிக்காவிலும், மத்தியகிழக்கிலும் இராணுவக் காரணிகளை விட பொருளாதாரக் காரணிகளில் தான் தனது செல்வாக்கின் அடித்தளத்தை அது அதிகமாய்க் கொண்டுள்ளது, அத்துடன் ஏதேனும் இராணுவ சாகசம் செய்து தோல்வி கிட்டுமோ என்கின்ற அச்சமும் அது கொண்டுள்ளது. ஜேர்மனி முழுமையாக பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கிறது. ஏனென்றால் மௌம்மர் அல்-கடாபியின் ஆட்சி முடிந்துவிட்டது; அது நிறுத்தப்பட்டாக வேண்டும், என்று ஜேர்மனியின் யுத்த-தவிர்ப்பை நியாயப்படுத்தும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் பீட்டர் விட்டிங் கூறினார். ஆனால் இராணுவத்தைப் பயன்படுத்துவது எப்போதுமே மிகவும் சிக்கலானது என்பதுடன் அதில் பெரும் அபாயங்கள் இருப்பதையும் நாங்கள் காண்கிறோம், என்றார். 

லிபியாவிற்கு எதிராக ஓர் இராணுவத் தாக்குதல் நடத்துவதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்ளே கருத்துவேறுபாடுகள் இருக்கின்ற போதினும், மனிதாபிமானம் பேசும்" ஏகாதிபத்தியவாதிகள் மத்தியில் முழுமையான, உற்சாகமான ஒப்புதல் உள்ளது. வர்க்க பிரச்சினைகள் மற்றும் வரலாற்று பிரச்சினைகளை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, வார்த்தையளவில் மனிதாபிமானத்தின்" பெயரில் இராணுவ செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் பசுமை கட்சி, சமூக ஜனநாயகவாதிகள், இடது கட்சி, மற்றும் இதுபோன்ற இதரபிற அரசியல் போக்குகளும் இந்த வரிசையில் அடங்கும்.

ஜேர்மன் பசுமை கட்சியினர் 1999இல் யூகோஸ்லாவியா மீது நேட்டோ குண்டுவீச்சை ஆதரித்ததிலிருந்து, யுத்தத்திற்கு ஊக்கமூட்டும் ஆதரவாளர்களாக மாறியிருப்பதோடு, ஏகாதிபத்திய யுத்த பிரச்சாரத்திலும் ஒரு மாற்றீடற்ற பாத்திரம் வகிக்கின்றனர். லிபியாவிற்கு எதிராக ஓர் இராணுவ தலையீட்டிற்குத் தயாரிப்பு செய்யும் விடயத்திலும் இது பொருந்தும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஆதரிக்காததால், பசுமை கட்சியினர் வெளியுறவுத்துறை மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லை தாக்கி விமர்சித்துள்ளனர். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது, என்று பாராளுமன்ற குழுவின் தலைவர் ரெனாட்ட கூனாஸ்ட கூறினார். வெஸ்டர்வெல யுத்த முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதால், சமூக ஜனநாயகக் கட்சியினரும் அவரை விமர்சித்தனர்.

1968 மாணவர் போராட்டத்தில் ஒரு முக்கிய பிரபலமாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய பசுமை கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதி டானியல் கோன்-பென்டிட், லிபிய தேசிய இடைக்கால சபையை அங்கீகரிக்கவும், பறக்கத் தடைவிதிக்கப்பட்ட வலயத்தைக் கொண்டு வரவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இறுதியாக பாராளுமன்றம், பெரும் பெரும்பான்மையுடன், இதுபோன்றவொரு தீர்மானத்தை மார்ச் 10 அன்று நிறைவேற்றியது. 

பசுமைக் கட்சியினருக்கு அடுத்தபடியாக, பிரான்ஸில் உள்ள பல்வேறு போலி-இடது அமைப்புகளும், தேசிய இடைக்கால சபையை (National Transitional Council) அங்கீகரிக்க கோரியுள்ளன. லிபிய மக்களுடனான ஐக்கியத்திற்கான குழுவிடமிருந்து (Committee of Solidarity with the Libyan People) வந்த இதற்கான ஒரு தீர்மானம், கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) ஆகியவற்றின் கைச்சாத்துக்களைத் தாங்கியுள்ளது. ஓர் இராணுவ தாக்குதலைத் தொடங்கிவைத்து, ஜனாதிபதி சார்க்கோசி இப்போது அவர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்.  

மனிதாபிமானம் என்ற வேஷத்தின்கீழ் முன்வைக்கப்படும் அருவருப்பான இந்த யுத்தப் பிரச்சாரத்தை நிராகரிக்க தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. அரசியல் ஒடுக்குமுறை, சமூகச் சுரண்டல், மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டமென்பது முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுகின்ற ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதிலிருந்து பிரிக்க முடியாததாகும்.