சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா 

18thsummit held amid growing geopolitical tensions

ஆசியன் உச்சிமாநாடு பூகோள அரசியல் அழுத்தங்களுக்கு இடையே நடைபெற்றது

By Joseph Santolan 
11 May 2011
Use this version to print | Send feedback

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் எனப்படும் ASEAN உடைய 18வது உச்சிமாநாடு மே 7-8 திகதிகளில் ஜகர்த்தாவில் நடைபெற்றது. பலதரப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளும் அரசியல் மோதல்களும் வெடிப்புத் தன்மையில் உள்ளன. கூட்டத்திற்கு முன்னிழல் கொடுக்கும் வகையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெருகிய முறையிலுள்ள விரோதத் தன்மை நிறைந்த பூகோள அரசியல் அழுத்தங்கள் இருந்தன.

2014ல் ASEAN மாநாட்டிற்கு பர்மா தலைமை தாங்கும் வாய்ப்பு உள்ளமை பற்றியும்; அதேபோல் கிழக்கு திமோர் ஆசியானில் அதன் 11வது உறுப்பினராகச் சேரவுள்ளது; வணிகத்திற்கு வசதியாக பிராந்திய அளவில் ஒரு பொது நாணயத்தைத் தோற்றுவிப்பது; மெகோங் ஆற்று நீர் முறையில் பகிர்வுப் பூசல்கள்; தென் சீனக் கடலில் பெருகும் மோதல்கள்; பணவீக்கமும் விலைகள் உயரும் அபாயாமும்; அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நலன்கள்; மற்றும் தாய்லாந்து, கம்போடியாவிற்கு இடையேயுள்ள எல்லைப் பிரச்சினை ஆகியவைகள் உச்சிமாநாட்டை எதிர்கொண்ட பிரச்சினைகளாகும். ஒவ்வொரு பிரச்சினையும் தீர்வு காணப்படாமல் கூட்டம் முடிந்தது. ஒவ்வொரு தோல்வியிலும் வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கின் கைரேகைகள் பதிந்திருந்தன.

அமெரிக்கா இக்கூட்டத்திற்கு தன் புதிய தூதரான டேவிட் லீ கார்டனை முதல் தடவையாக அனுப்பி வைத்திருந்தது. உறுப்பினரல்லாத இரண்டாவது நாடு அமெரிக்கா ஆகும்; ஜப்பான் முதல் நாடாகும். இந்த பிராந்திய மாநாட்டிற்கு இவை இரண்டும் தனியே தூதர்களை அனுப்பிவைத்துள்ளன. இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடு பெருகுவதை உறுதிப்படுத்தும் தெளிவான நடவடிக்கையில், ஜனாதிபதி ஒபாமா நவம்பர் 2010ல் ஆசியானுக்கு ஒரு தூதர் பதவியைத் தோற்றுவித்து மார்ச் 2011ல் அப்பதவிக்கு கார்டனைப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கார்டனின் வாழ்க்கைக் குறிப்பு பலவற்றை வெளிப்படுத்துகிறது. AIG, லெஹ்மன் பிரதர்ஸ், Bear ஸ்டேர்ன்ஸ், மெரில் லின்ச் ஆகிய நிறுவனங்களின் நலன்களுக்கு வாதிடும் சர்வதேச பத்திர சட்ட நடவடிக்கைகளுக்கான வக்கீல் ஆவார் அவர். மேலும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை வழக்குகளிலும் வாதிடுபவர். தென்கிழக்கு ஆசிய உளவுத்துறை, ராஜதந்திரச் சமூகத்தில் அறியப்படவில்லை என்றாலும், ஒபாமாவின் ஜனாதிபதிப் பிரச்சாரத்தின்போது உயர்மட்ட நன்கொடையாளர்கள் 35 பேரில் அவரும் ஒருவர். அரை மில்லியன் டாலர்களுக்கும் மேலாக “bundling” எனக் குறிப்பிடப்படும் முறையின் கீழ் நன்கொடை அளித்தவர்நண்பர்கள், சக ஊழியர்களிடம் இருந்தும் பணத்தை வசூலித்து சொந்த வரம்பை மீறிய நன்கொடை அளித்தவர். நிதிய மூலதனம் இவரிடம் ஒரு முக்கிய அந்தஸ்த்தைக் கண்டுள்ளது. அது விரைவில் விரிவடையும் தென்கிழக்கு ஆசியச் சந்தைகளில் பங்கு பெறுவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

ஆசியான் உறுப்பு நாடுகள் மூலோபாய அரசியல் விவாதங்களையும் மேற்கொண்டனர். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அப்பகுதியில் தங்கள் வணிக நலன்களை விற்பதற்கு பெருமுயற்சிகளை மேற்கொண்டன. அமெரிக்க அரசாங்கத்தின் நிறுவனமான வெளிநாட்டுத் தனியார் முதலீட்டு நிறுவனம் (Overseas Private Investment Corporation- OPIC) மே 5ம் தேதி ஜகர்த்தாவில் தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் அணுகுவதற்கான வாய்ப்பு என்னும் தன் பிரிவைத் தொடக்கியது. OPIC உடைய பணி பற்றிய அறிக்கை, அதுதனியார் முதலீட்டைத் திரட்டி உலகின் முக்கிய சவால்களைத் தீர்க்க உதவுகிறது. அவ்வாறு செய்கையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் முன்னேற்றம் கொடுக்கிறது…. இது அமெரிக்க வணிகங்கள் எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் காலடி பதிப்பதற்கு உதவுகிறது …. முதலீட்டாளர்களுக்கு நிதியம் அளித்தல், உத்தரவாதங்கள் கொடுத்தல், அரசியல் இடர்களில் காப்பீடு கொடுத்தல், தனியார் பங்கு முதலீடுகளுக்கு நிதியளித்து ஆதரித்தல்போன்றவற்றைச் செய்கிறது. OPIC யின் தலைமை நிர்வாக அதிகாரி எலிசபத் லிட்டில்பீல்ட் மாநாட்டின் தொடக்கத்தில், “நாங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தென்கிழக்கு ஆசியாவை தேர்ந்தெடுத்துள்ளோம். நேரம் இப்பொழுது வந்துவிட்டது. இதுதான் எழுச்சி பெறும் சந்தை, பொருளாதார வல்லுனர்களும் முதலீட்டாளர்களும் ஒரே மாதிரியான ஆர்வத்தை இதில் காட்டுகின்றனர்” 250 பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்தனர். அவற்றுள் GE, Google, AT&T ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்ப EU-ASEAN வணிக உச்சிமாநாட்டை நடத்தியது. முன்னூறு ஐரோப்பியப் பிரதிநிதிகள் ஆசிய வணிகப் பிரதிநிதிகளை சந்தித்து EU-ASEASN தடையற்ற வணிக உடன்பாட்டிற்கான விபரங்களை தொகுக்க முயன்றனர். கிட்டத்தட்ட 218 பில்லியன் அமெரிக்க டொலர் வணிகம் ஆசியான் நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்றது. உச்சிமாநாட்டில், ஐரோப்பிய வணிகங்கள் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். தனி ஐரோப்பிய நாடுகளும் தனிப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகளைக் கொண்டன. உதாரணத்திற்கு பிரான்ஸ் ஒரு வணிக வரி, காப்புவரி உடன்பாட்டை பிலிப்பைன்ஸுடன் மேற்கொண்டது. உச்சிமாநாட்டில் இவ்வாறு இருதரப்புப் பேச்சுக்கள் நடைபெற்றதானது உலக வணிகப் பேச்சுக்களின் தோஹா சுற்றுக்களுக்குப் பின் பலதரப்பு முறையின் சரிவு நிகழ்ந்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆசியான் உச்சிமாநாடு தொடங்குமுன், மியன்மார் 2014ல் ஆசியானுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு அதற்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியது. அம்மாநாடு லாவோஸில் அந்த ஆண்டு நடைபெற உள்ளது. லாவோஸ் தலைமை தாங்குவதாக இருக்கிறது. 2005ல் தலைமை தாங்கும் வாய்ப்பு மியன்மாருக்கு இருந்தது கடக்கப்பட்டுவிட்டது. அது ஜனநாயகத் தேர்தல்களை நடத்தினால் அத்தகுதி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. 2010ல் நடைபெற்ற தேர்தல்களை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கு வாதிடும் Aung San Suu Kyi வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, பர்மிய அரசாங்கம் தனக்கு அப்பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. லாவோஸ் தன் உரிமையை அந்த ஆண்டு மியன்மாருக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டதும், இம்மாற்றம் பற்றி ஒரு விரைவான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் Eurasia Review  வில் வந்துள்ள ஒரு கட்டுரைப்படி, அமெரிக்கா 2014ல் பர்மாவிற்கு தலைமை கொடுக்கப்பட்டால் ஆசியானில் செயல்படாது என எச்சரித்துள்ளதாக கூறுகிறது. ஏனெனில் அந்நாட்டில் இருக்கும் மோசமான மனித உரிமை பதிவுகளின் நிலைப்பாடு இதற்குக் காரணம் ஆகும். இது ஒரு சிறிதும் குறைவற்ற பாசாங்குத்தனம் ஆகும். வாஷிங்டன் குண்டர்கள், சர்வாதிகாரிகளுடன் உலகம் முழுவதும் தன்னுடைய மூலோபாய பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு எவை என்றாலும் இணைந்து செயல்படுகிறது. ஆனால் இங்கு பணயத்தில் இருப்பது மியன்மாரின் சீனாவுடனான நெருக்கமான இராணுவப், பொருளாதார உறவுகள் ஆகும். சீனா போக்குவரத்துப் பாதைகள் மற்றும் எரிசக்தி குழாய்திட்டங்களை அந்நாட்டில் வங்காள விரிகுடாவிலிருந்து யுன்னன் மாநிலம் வரை கட்டமைத்து வருகிறது. பெய்ஜிங் தன்னுடைய மலாக்கா ஜலசந்தி வழியே மத்திய கிழக்கு, ஆபிரிக்காவிலிருந்து முக்கிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதிலுள்ள நம்பகத்தன்மைக் குறைக்க முற்படுகிறது. அப்பாதை இராணுவ அளவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

அமெரிக்க அழுத்தத்திற்கு ஆசியான் அடிபணிந்து, பர்மிய மனித உரிமைகள் பற்றிய சான்றைக் குறிப்பிட்டு, 2014ல் அமைப்பிற்கு யார் தலைமை தாங்குவர் என்பது பற்றித் தீர்மானத்தை இயற்றவில்லை. ஆசியான் அமெரிக்க சார்புடைய சர்வாதிகார பெர்டினாண்ட் மார்க்கோஸ், சுகர்ட்டோ, லீ குவன் யூ ஆகியோரால் நிறுவப்பட்டது. எனவே அதற்கு அல்லது வாஷிங்டனுக்கு மனித  உரிமைகள் பற்றிய வனப்புரை சிறிதும் பொருந்தாது.

கிழக்குத் திமோர் ஆசியானில் 11வது உறுப்பினராக வரும் நிலையில் உள்ளது. ஆனால் இப்பிரச்சினையிலும் உறுப்பினர்கள் உடன்பாடு காணவில்லை. பாங்காக் நாளேடு நேஷன் மே 10 பதிப்பில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று இப்பிளவு சீனாவின் பெருகிய பங்கு திமோரில் இருப்பது அந்நாட்டை ஆசியானில் ஒரு மாற்றீடு போல் செய்யும் என்ற கவலைகளை விளக்கியுள்ளது. நேஷன் கருத்துப்படி சில ஆசியான் உறுப்பினர்கள் கிழக்குத் திமோரை உடனடியாகச் சேர்த்து சீனச் செல்வாக்கைக் குறைக்க முயலவேண்டும் என்று விரும்பினர். ஆனால் மற்றவர்கள் 1997ல் உறுப்பினர் தகுதி பெற்ற பர்மாவைச் சுட்டிக்காட்டினர். சீனாவின் செல்வாக்கைக் குறைப்பது என்பதற்கு முற்றிலும் மாறாக, ஆசியானில் அனுமதி என்பது அதை இன்னும் விரைவுபடுத்திவிட்டது.

திரைக்குப் பின்னால், மேகோங் ஆற்றின் நீர் இருப்புக்கள் மற்றொரு பூசலுக்குரிய பிரச்சினை ஆயிற்று. வியட்நாமின் துணை வெளியுறவு மந்திரி Pham Binh Minh Voice of  Vietnam இடம் அவ்வாறு தெரிவித்தார். உச்சிமாநாட்டில் வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவை Xayaburi அணையைக் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு லாவோஸிடம் அழுத்தம் கொடுத்தன. அந்த அணை வியட்நாமிற்கு நீர் பெறுவதைக் குறைத்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் முடிக்கப்பட்ட மெகோங்கின் மேல் பகுதிகளிலுள்ள சீன அணைகள் ஆறு கீழேச் செல்லச் செல்ல அங்கு உள்ள நாடுகளுக்குக் கூடுதலாக அச்சுறுத்தைக் கொடுக்கின்றன.

2002ல் ஆசியான் வளர்ச்சி வங்கி பெரிய மேகாங் துணைப்பகுதி ஒன்றைத் தோற்றுவித்தது. இந்தப் பொருளாதாரக் குழுவில் சீனா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை அடங்கியுள்ளன. இது நெடுஞ்சாலைகள், அணைகள், குழாய்த்திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சீனாவின் செல்வாக்கை வெளிப்படையாகக் குறைக்கும் வகையில், வாஷிங்டன் Lower Meking முன்முயற்சியைத் தோற்றுவித்தது. இதில் Greater Mekong Subregion ல் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், சீனா தவிர, அடங்கியுள்ளன. அமெரிக்கா நீர்ப் பிரச்சினையைப் பயன்படுத்தி துணைப் பகுதியில் சீனச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது.

இதேபோல் சீன-அமெரிக்கப் போட்டி தென் சீனக் கடல் பற்றி உச்சிமாநாட்டிலும் பிரதிபலித்தது. இது ஒரு முக்கியமான கடல்வழியாக சீன எரிசக்திக்கு மத்திய கிழக்கு, ஆபிரிக்காவிலிருந்து வருபவற்றிற்கு உள்ளது. மேலும் இது அதன் உரிமையிலேயேயுள்ள எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிற்கான ஆதாரத் திறனையும் கொண்டுள்ளது. ASEAN 2002 தென் சீனக் கடலில் நாடுகள் நடந்து கொள்ள வேண்டிய நெறி பற்றிய அறிவிப்பை (Declaration of Conduct of Parties in the South China Seas) கட்டுப்படுத்தும் நெறியாகச் செய்ய இருந்தது. இந்த உடன்பாடு சீனா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள மோதல்களை தீர்க்க ஒரு கருவியை அளித்திருக்கிறது. இவை அனைத்தும் தென் சீனக் கடலில் போட்டிக் கூறுபாடுகளைக் கொண்டுள்ளன. மூடிய கதவுகளுக்குப் பின் விவாதங்கள் நடந்தபோதிலும்கூட, எந்த இறுதி முடிவும் அடையப்படவில்லை.

தனக்கும் போட்டி நாடுகளுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுக்கள் வேண்டும் என்று சீனா நீண்ட காலமாக அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் ஜூலை 2010ல் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் தலையிட்டு பலதரப்புப் பேச்சுக்கள் வேண்டும், அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என்று அறிவித்தார். இந்த அமெரிக்க அறிக்கையை தேவையற்ற தலையீடு என்று சீனா நிராகரித்தது. ஆசியான் உறுப்பு நாடுகள் ASEAN-அமெரிக்க உச்சிமாநாடு செப்டம்பர் 2010ல் நியூ யோர்க்கில் நடந்தபோது கிளின்டன் அறிக்கைக்கு ஆதரவு கொடுத்தது போல் தோன்றியது. ஆனால் சீனாவிடமிருந்து அவை கணிசமான பொருளாதார, இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

தற்பொழுது தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையேயுள்ள எல்லை மோதல் உச்சிமாநாட்டில் செய்தி ஊடகத்தினர் தகவல் கொடுப்பதற்கு ஆதிக்கத்தைக் கொண்டது. அமெரிக்கா, சீனா இரண்டுமே இரு நாடுகளிலும் முக்கிய பொருளாதார, அரசியல் நலன்களைக் கொண்டுள்ளன. ஆனால் கம்போடிய உறவுகள் சீனாவிடம் வலுவான சார்பு கொண்டவை. தாய்லாந்தோ வரலாற்றளவில் அமெரிக்காவுடன் பிணைப்புக் கொண்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் பகிரங்கமாக கடினச் சொற்களை எதிரெதிரே பயன்படுத்தினர். ஆசியான் மத்தியஸ்த்தினால் மோதலைத் தீர்க்க முடியவில்லை.

இறுதியாக, இப்பகுதியில் அனைத்து அரசாங்கங்களையும் பணவீக்கம் எதிர்கொள்கிறது. இது இந்தோனிசிய ஜனாதிபதி யுதோயோனாவை தன்னுடைய ஆரம்ப உரையின் போது உணவு விலைகள் பற்றிய வலுவான கவலைகளை எழுப்ப வைத்தது. ஜப்பான், சீனா, கொரியாவுடன் சேர்ந்து ஆசியான் தட்டுப்பாடு ஏற்பட்டால் உறுப்பு நாடுகளின் தேவைக்காக அளிப்பதற்கு ஒரு அரிசி இருப்புக்கள் தோற்றுவிக்க ஒப்புக் கொண்டது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தைவான் ஏற்கனவே அதன் இருப்புக்களிலிருந்து 10,000 மெட்ரிக் டன்களை மே 6ம் தேதி உயரும் விலைகளைக் கட்டுப்படுத்த விடுவித்தது. பிலிப்பைன்ஸும் ஒருவேளை அரிசித் தட்டுப்பாட்டை எதிர்நோக்கலாம். ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோவறியவரிலும் வறியவருக்குபரிதாபத்திற்குரிய உதவித் தொகுப்பை அளித்து அரிசி விலை உயராமல் தடுக்க வேண்டும் என்று முயன்றுள்ளார்.

பிலிப்பைன்ஸ் போன்ற நாடுவறியவரிலும் வறியவர் என்று பேசும்போது, இச்சொற்றொடர் ஊட்டமின்மை, நோய்கள், பெருந்திகைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பூகோள அரசியல் தந்திர உத்திகள் ஜகர்த்தாவில் நடைபெறுகையில், அப்பகுதி முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் வாடினர். உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்கையில், ஆசியான் தலைவர்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தந்திரோபாயங்களை கையாள முற்படுவது மட்டும் இல்லாமல், சமூக அழுத்தங்கள் தோன்றக்கூடிய அபாயங்கள் பற்றியும் அச்சத்துடன் காண்கின்றனர். மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா போன்றவற்றில் நடைபெறும் எழுச்சியை ஒத்து இங்கும் எளிதில் அவை வெடிக்கலாம்.