சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP launches campaign to release Sri Lankan political prisoners

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது

Statement of the Socialist Equality Party (Sri Lanka)
4 October 2011

use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி, பொலிஸ் மற்றும் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோரும் பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சாரமானது ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்

குறைந்த பட்சம் 6,000 தமிழ் அரசியல் கைதிகள், இராணுவத்தால் நடத்தப்படும் இரகசிய சிறை முகாங்களில் பயங்கரவாத சந்தேக நபர்களாக குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் 280,000 பொது மக்களை தடுப்பு நிலையங்களில் அடைத்து வைத்தது. அனைவரும் அன்றி, அநேகமானவர்கள் இப்போது மீளக் குடியேற்றப்பட்டுள்ள அதே வேளை, சுமார் 11,000 இளைஞர் யுவதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, புலி ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் இராணுவத்தின் நெருக்கமான கண்காணிப்பின் கீழேயே இருக்கின்றனர்.

தீவின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் பல நூறு தமிழர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர்.  2009 மே மாதத்தின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதே வேளை, ஏனையவர்கள் அதற்குச் சமமான ஜனநாயக விரோத சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே, இந்த யுத்தம் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதுடன் சம்பந்தப்பட்டிருந்தது. ஆளும் வர்க்கம் தனது ஆட்சியை தூக்கி நிறுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமிழர் விரோத பேரினவாதம் பிரதான கருத்தியல் உபகரணமாக பயன்பட்டுவருகின்றது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால், மூன்று தசாப்த கால யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரமும் சட்டங்களும், தமது தொழில், சம்பளம், நலன்புரி சேவைகள், இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை பாதுகாக்க முயற்சிக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அவசரகாலச் சட்டங்களின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட அத்தியாவசிய சேவை கட்டளைகள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தங்களை குழப்புவதற்காக படையினர் நிலை நிறுத்தப்படுவதோடு எதிர்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக படையினருடன் பொலிசாரும் பயன்படுத்தப்படுகின்றனர். அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறை வைப்பது உட்பட தமது அரசியல் எதிரிகளை மௌனமாக்கி நசுக்குவதற்கு இந்த அவசரகாலச் சட்டத்தையும் ஏனைய அதிகாரங்களையும் பயன்படுத்தியுள்ளது. இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதில் ஜெனரல் சரத் பொன்சேகாக மைய வகிபாகம் ஆற்றியிருந்தாலும், அவர் ஒரு ஆபத்தான அரசியல் பகைவனாக ஜனாதிபதி இராஜபக்ஷவால் கருதப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட்டில், அவசரகாலச் சட்டத்தை அகற்றுவதாக அரசாங்கம் பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில் அறிவித்தது. எந்தளவுக்கு வெட்கக் கேடானது! இந்த சோடனை நகர்வுகள் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதுள்ள எந்தவொரு அனுதாபத்தாலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, இந்த பிராந்தியத்தில் தமது நலன்களை அடைவதற்காக இலங்கையில் மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்கின்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது. அவசரகாலச் சட்டங்கள் அகற்றப்பட்ட உடனேயே, அரசாங்கம் வேறு ஒரு சாக்கில் அதே விதிகளை அமுல்படுத்தியது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, புனர்வாழ்வு என்ற பெயரின் கீழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்தாமல் நீண்ட காலத்துக்கு தடுத்து வைத்திருக்க முடியும், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அங்கீகாரத்துடன் அந்த காலத்தை நீடிக்கவும் முடியும். இந்த சட்டம், சித்திரவதைகளின் மூலம் பெறப்படுபவை உட்பட ஒப்புதல் வாக்குமூலங்களை கைதிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கின்றது.

அதே சமயம், அரசாங்கம் அத்தியாவசிய சேவை கட்டளைகளை பிறப்பிப்பதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முதல் தடவையாக அது அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தடை செய்வதற்காக இந்த சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், தொழிற்சங்க நடவடிக்கைகள், அதே போல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான எந்தவொரு பிரச்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளதோடு சிறை வைத்தல், தண்டம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை கைப்பற்றுதல் உட்பட்ட தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட முடியும்.

அரசாங்கம் இலங்கையின் 22 மாவட்டங்களுக்கும் மூன்று ஆயுதப் படைகளையும் அனுப்பி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அனுமதியளிக்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தையும் புதுப்பித்துள்ளது. நடப்பில் உள்ள முதலாளித்துவ முறைமைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் நசுக்குவதற்கு சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் அரசாங்கத்தால் இராணுவத்தை அணிதிரட்ட முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இத்தகைய சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கே ஒரு அழிவுகரமான குற்றப்பத்திரிகையாகும். இலங்கையிலும் உலகம் பூராவும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலைமையின் கீழ், ஜனநாயக வழிமுறைகள் மூலம் ஆட்சி செய்ய முதலாளித்துவம் முற்றிலும் இலாயக்கற்றுள்ளது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும், தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக வர்க்க யுத்தத்துக்கு தயாராவதையுமே அது சமாதானம் என கூறிக்கொள்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை பெருந்தொகையாக அடைத்து வைத்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆயினும், விசாரித்து குற்றத் தீர்ப்பு வழங்குவது ஒரு புறம் இருக்க, ஒருவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை. ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக கைது செய்யப்பட்ட ஏனைய பலர் சிறையில் இருந்த போதிலும் அநேகமானவர்களுக்கு குற்றச்சாட்டுக்கள் கிடையாது.

ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடும் அதே வேளை, உண்மையான குற்றவாளிகள் உயர்மட்ட அரசாங்க அலுவலகங்களில் உள்ளனர். ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் படி, யுத்தத்தின் கடைசி மாதங்களில் 40,000 தமிழ் பொது மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் யுத்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாக கூறப்படுபவர்களில் ஜனாதிபதி இராஜபக்ஷ, அவரது சகோதரர் கோடாபய இராஜபக்ஷ, மற்றும் ஏனைய உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் ஜெனரல் பொன்சேகா உட்பட இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள், இராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயகம் அற்றது என அடிக்கடி குற்றஞ்சாட்டிய போதிலும், அவர்களது எதிர்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டவையும் முற்றிலும் பாசாங்குத்தனமானவையும் ஆகும். இனவாத யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவளித்த இந்த இரு கட்சிகளும், யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என வலியுறுத்தியதோடு, இராஜபக்ஷவின் அவசரகால அதிகாரங்களை புதுப்பிக்கவும் வாக்களித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பவர்களாக கூறிக்கொண்டாலும், குற்றஞ்சாட்டுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற அவர்களது கோரிக்கை வெகுஜன தடுத்து வைப்புக்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்வதாகும். சோசலிச சமத்துவக் கட்சி, சகல கைதிகளும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவர்களில் அநேகமானவர்களுக்கு தீர்ப்பளிப்பது ஒரு புறம் இருக்க, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களே கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களது சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், தமிழ் கூட்டமைப்பு தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. அது தமிழ் முதலாளித்துவத்துக்கு சில சிறப்புரிமைகளை வழங்கும் அதிகாரப் பரவலாக்கல் தீர்வு ஒன்றை எட்டுவதன் பேரில் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ஏலப் பொருளாகவே தனது பிரச்சாரத்தைப் பயன்படுத்துகின்றது. தமிழ் கூட்டமைப்பு தனது குறிக்கோளுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் உதவியை நாடுகின்றது. இது இத்தகைய சக்திகளின் இயக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு பிற்போக்கு செயற்பாடாக மட்டுமே அமையும்.

எமது ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதன் மூலம் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து தொழிலாள வர்க்கத்துக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற வறியவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படும் என நாம் எச்சரிக்கின்றோம். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்கு எதிராகவும், தலை நகரை தெற்காசியாவின் நிதிய மையமாக மாற்றும் இராஜபக்ஷவின் பகட்டான நோக்கத்தின் பாகமாக கொழும்பில் குடிசைகளில் வாழும் 75,000 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையின் முதல் கட்டத்திலும் ஏற்கனவே பாதுகாப்பு படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளன. 

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, இடைவிடாமல் யுத்தத்தை எதிர்த்த, தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்த மற்றும் சகல ஒடுக்குமுறை சட்டங்களையும் ஒழித்துக்கட்டக் கோரிய ஒரே கட்சியாகும். அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்பது, யுத்தத்தினதும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களதும் தோற்றுவாயான, நெருக்கடி நிறைந்த இலா முறைமைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டும் அரசியல் போராட்டத்துடன் பிரிக்க முடியாமல் கட்டுண்டுள்ளது.

ஆறு தசாப்தகால இனவாத அரசியல் மற்றும் மூன்று தசாப்த கால யுத்தத்தில் இருந்து தோன்றிய தீர்க்கப்படாத ஜனநாயகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புச் சபையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கின்றது. இந்தக் கோரிக்கையானது, அரசியல் போராட்டத்துடன் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ளது. சோசலிச வழிமுறைகளை அமுல்படுத்துவதன் பேரில், தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான போராட்டத்தில், கிராமப்புற வெகுஜனங்களுக்கும் தலைமை வகித்து தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்தியக் துணைக் கண்டத்திலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒன்றிணைந்த பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்கப் போராடுகின்றது. இந்த முன்நோக்குக்காக அரசியல் ரீதியில் போராடுவதற்குத் தேவையான புரட்சிகரத் தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறு நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.