சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German-French conflicts deadlock European Union summit

ஜேர்மனிய மோதல்கள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை முடக்கியுள்ளன

By Peter Schwarz
22 October 2011

use this version to print | Send feedback

இந்த வார இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு யூரோவை ஸ்திரப்படுத்த எந்த முடிவுகளையும் எடுக்காது; ஏனெனில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றிற்கு இடையே வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. மாறாக, யூரோப் பகுதியிலுள்ள 17 அரசுகள் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மீண்டும் அடுத்த புதனன்று பிரஸ்ஸல்ஸில் உதவிப்பொதி நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கக் கூடுகின்றனர்.

முதலில் கடந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, ஐரோப்பியக் கடன் மற்றும் வங்கி நெருக்கடிக்கு விரிவான பிரதிபலிப்பை கொடுக்கும் மற்றும் பல மாதங்களாகக் கொந்தளிப்பில் இருக்கும் பங்குச் சந்தைகள் மற்றும் நிதியச் சந்தைகளை அமைதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு இடையே நடந்த பேச்சுக்களுக்குப் பின், உச்சிமாநாடு ஒரு குறுகிய முன்னறிவிப்பைத் தொடர்ந்து ஒத்திப் போடப்பட்டது.

அப்பேச்சுவார்த்தைகளின்போது மேர்க்கெலும் சார்க்கோசியும் பெரும் எதிர்பார்ப்பில் பரஸ்பர உடன்பாடு ஒன்றை அறிவித்து இம்மாத இறுதிக்குள் நெருக்கடியைத் தீர்க்க உறுதியான, முழுப் பொதி ஒன்றை முன்வைப்பதாக உறுதிமொழி அளித்தனர். ஆனால் அப்பொழுது முதலே உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டதை மீறி வேறுபாடுகள் மிக ஆழ்ந்திருந்தன என்பது தெளிவாயிற்று.

புதன்கிழமையன்று சார்க்கோசி ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு  எதிர்பாராமல் வருகை புரிந்தது மேர்க்கலை சந்தித்தும் தீர்வு எதையும் அளிக்கவில்லை. இரண்டு மணி நேரம் மேர்க்கெலுடனும் ஐரோப்பிய நிறுவனங்களின் பிரதிந்திகளுடனும் பேச்சுக்கள் நடத்தியபின், பிரெஞ்சு ஜனாதிபதி வெறும் கையுடன்தான் திரும்பினார்.

பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே மோதலின் மையக் கருத்து கிரேக்கம் திவால் அடைந்தாலோ அல்லது அதன் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டாலோ, சுமையை எப்படி பகிர்ந்து கொள்ளுதல் என்பது பற்றி ஆகும்; இம்மோதல், வல்லுனர்களின் கருத்துப்படி பெருகிய முறையில் தவிர்க்க முடியாதது ஆகும். விவாதங்கள் நிதிய தொற்றுநோய்க்கு எதிராக மற்ற பெரிதும் கடன்பட்டுள்ள நாடுகளை எப்படிக் தடுப்பது என்பது பற்றிச் சுற்றி வருகின்றன, அதேபோல் நிறைய முதலீடு உட்செலுத்துவதின் மூலம் வங்கிகளைச் சரிவில் இருந்து காப்பாற்றுவது பற்றியும் உள்ளன.

விவாதங்களிலுள்ள பொதுத்திட்டம் என்னும் ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பிலுள்ள (EFSF) 440 பில்லியன் யூரோக்களைப் பயன்படுத்துவது பற்றி ஆகும்; இந்த அமைப்பு மே 2010ல் பாதிப்பிற்குள்ளான யூரோப் பகுதி நாடுகளுக்கு வழங்கப்படுவதற்காக நிறுவப்பட்டது; ஆனால் அதன் செயற்பாடுகள் பின்னர் தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயின் அல்லது இத்தாலி போன்ற பெரிய நாடுகளுக்கு, அதுவும் தீவிரமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளவற்றிற்கு, இந்த 440 பில்லியன் யூரோக்கள் என்பது போதாது என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. ஜேர்மனி நிதியில் அதன் பங்கான 221 பில்லியன் யூரோக்களை அதிகமாக்குவதில் விருப்பம் கொள்ளவில்லை என்பதால், பல திட்டங்கள் வெளிமூலதனம் மூலம் நிதியளிக்கும் வகையில் இந்த நிதியின் ஆற்றலை பெருக்குவதற்காக ஆராயப்படுகின்றன.

ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு ஒரு வங்கி உரிமம் பெற்று அதையொட்டி கூடுதலான நிதிகளை ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து பெறலாம் என்ற திட்டத்தை பிரான்ஸ் முன்வைத்துள்ளது. இதையொட்டி அந்த அமைப்பு 2 டிரில்லியன் அளவிற்குக் கடன்களைக் கொடுக்க இயலும்.

அத்தகைய நடவடிக்கையை ஜேர்மனி உறுதியாக நிராகரிக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கி ஒரு நாணயத்தை அச்சடிக்கும் அமைப்பாக மாறி, யூரோவின் உறுதிக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என அது அஞ்சுகிறது. மேலும் அத்தகைய வெளிமூலதனத்தை ஈர்க்கும் திட்டம்  ஜேர்மனி அது உத்தரவாதம் அளித்துள்ள கொடுக்க வேண்டிய பணத்திற்கான அபாயங்களை அதிகப்படுத்தும். ஐரோப்பிய மத்திய வங்கி பெறும் இழப்புக்கள் ஐரோப்பிய அரசுகளால் ஏற்கப்பட வேண்டும், இதில் ஜேர்மனி அதிகம் கடனைக் கொடுத்துள்ளது.

ஜேர்மனிய அரசாங்கம் மற்றொரு வகை வெளிமூலதனத்தை ஈர்ப்பதை முன்வைக்கிறது. கடன்களைத்தானே கொடுப்பதற்குப் பதிலாக ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு ஒருவித கடன் காப்பீட்டு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என அது கூறுகிறது. இதையொட்டி அது அரசாங்கப் பத்திரங்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்குப் பொறுப்பேற்கும், (20 முதல் 40% வரை இருக்கலாம் என்று பேசப்படுகிறது); வெளிச்சந்தைகளில் கடன்பட்டுள்ள நாடுகள் விற்பனை செய்பவற்றில் இச்சதவிகிதம் இருக்கும். இது நிதியின் பிணை எடுப்புத்திறனை 1 டிரில்லியன் யூரோக்கள் வரை அதிகரிக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

மீட்பு நிதியின் வெளிமூலதனத்தை ஈர்க்கும்தன்மை பற்றிய வேறுபாடுகளைத் தவிர, பேர்லினும் பாரிஸும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்துள்ளவர்கள் எந்த அளவிற்கு இழப்புக்களை ஏற்க வேண்டும் என்பது குறித்தும் உடன்பாட்டைக் காணவில்லை; அதேபோல் இடருக்கு உட்பட்ட வங்கிகளின் இருப்புக்கள் எப்படி மீண்டும் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு உள்ளது.

பிரெஞ்சு வங்கிகள் குறிப்பாக கிரேக்கத்தில் சிக்கலுக்குள்ளாகியுள்ளன; பாரிஸ் ஒரு குறைந்த அளவு கடன் தள்ளுபடிக்கு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் பேர்லின் 50 முதல் 60% வரை தள்ளுபடி செய்யவேண்டும் என்பதற்குத் தன் ஆதரவைக் குறிப்பிட்டுள்ளது. சார்க்கோசி இடருக்கு உட்பட்டுள்ள வங்கிகளுக்கு ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பில் இருந்து நிதி உதவி கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்; ஆனால் மேர்க்கெலோ வங்கிகள் முதலில் தங்கள் இருப்புக்களில் இருந்தே மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டும், அதன் பின் தேசிய அரசாங்கங்களிடம் இருந்து நிதி பெற வேண்டும், கடைசியில்தான் ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு ஆதாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

இப்பிரச்சினைகள் இப்பொழுது பிரஸ்ஸல்ஸில் நீண்ட கூட்டங்களில்  விவாதிக்கப்பட உள்ளன. இன்று யூரோக் குழுவின் நிதி மந்திரிகள் கூடுகிறார்கள்; இதைத்தொடர்ந்து சனிக்கிழமையன்று அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிதி மற்றும் வெளியுறவு மந்திரிகள் கூடுகின்றனர். ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அரசாங்க, அரச தலைவர்கள் கூடுகிறார்கள்; அதன்பின் 17 யூரோப்பகுதி நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.

ஒரு உடன்பாடு ஏற்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்புக்கு வெளிமூலதனத்தை பெறுவது மட்டுமல்லாது வங்கிகள் மூதலதனத்தை அதிகரித்தல், கிரேக்கத்தின் கடன் மறுகட்டமைக்கப்படுதல் ஆகியவற்றைத் தவிர உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் யூரோப் பகுதிக்குள் நெருக்கமான பொருளாதார, நிதியக் கொள்கைகள் பற்றிய விவாதங்களும் அடங்கியுள்ளன.

 தான் கொடுக்கும் பில்லியன்கணக்கான யூரோக்களுக்கு ஈடாக ஜேர்மனி ஒரு விலையைக் கோருகிறது. நிதிய உதவியைப் பெறும் நாடுகள் தங்கள் தேசிய இறையாண்மையின் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும், நிதியப் பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என அது கோருகிறது.

லிஸ்பன் உடன்படிக்கையை சான்ஸ்லர் மேர்க்கெல் மாற்ற விரும்புகிறார்: அதையொட்டி அதிக பற்றாக்குறைகள் உள்ள நாடுகள் மீது ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என வரவேண்டும் என்கிறார் அவர். ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டெர்வெல்லே ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு நேரடியாகவே நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தில் குறுக்கிட்டு அவை திவாலானால் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வகையில் இருக்குமாறு உதவி, ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.

ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரகத்தின் திட்டங்களை அணுகும் வாய்ப்பைக் கொண்டுள்ள Süddeutsche Zeitung பத்திரிகையுடைய கூற்றின்படி, ஐரோப்பிய வழிகாட்டு நெறிகளுக்கு இணங்காத நாடுகள் குறிப்பிட்ட செலவுக் குறைப்புக்களைச் செயல்படுத்த வேண்டும் அல்லது புதிய வருமான வழிவகைகளை நிறுவ வேண்டும்”, அல்லது மிகத் தீவிரமாக நிர்வாகச் செயல்களைச் செயற்படுத்த வேண்டும் என்னும் ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டி நெறிகளை ஏற்க வேண்டும், அதாவது சமூகச் செலவுக் குறைப்புக்களை செய்ய வேண்டும் என்ற அதிகாரத்தை ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு பெற வேண்டும்.

வார இறுதியில் உச்சிமாநாடு உடன்பாடு எதையும் காணவில்லை என்றால், திங்களன்று பங்குச்சந்தைகள் மற்றும் நிதியச் சந்தைகளில் மிகத்தீவிர எதிர்விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் ஒரு சமரசம் ஏற்கப்பட்டால், அது தவிர்க்க முடியாமல் முந்தைய உச்சிமாநாடுகள் பலவற்றின் முடிவுகளை போலவே, நெருக்கடியின் அடுத்த கட்டத்தைத்தான் தொடக்கும்.

ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான ஆழ்ந்த பிளவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவின் மோசமடைந்துவிட்ட மட்டத்தை குறிக்கின்றன. 1957ம் ஆண்டு ரோம் உடன்படிக்கையில் இருந்தே, இந்த இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதுகு எலும்பு போல் உள்ளன; அதேபோல் ஐரோப்பிய ஒருங்கிணைப்புத் திட்டத்தின் முதுகெலும்பாகவும் உள்ளன. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கண்டத்தில் மேலாதிக்கம் கொண்டிருந்த இந்த இரு நாடுகளும் கொண்டிருந்த விரோதப்போக்கு இப்பொழுது மீண்டும் வெடித்து எழுந்துள்ளது.

கடன் பிரச்சினை தற்போதைய நெருக்கடியைத் தூண்டுவதில் ஒரு பங்கைத்தான் கொண்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்து அளக்கப்படும் நிலையில், யூரோப் பகுதியின் கடன் (85%) அமெரிக்காவுடையதைவிட (94%), ஜப்பானுடையதைவிட  (220%) குறைவு ஆகும். ஆனால் ஐரோப்பிய தேசிய அரசுகளிடையேயான போட்டி மற்றும் அவற்றின் அரசாங்கங்கள் நிதிய மூலதனத்தின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து நிற்பது நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வு எதையும் வரவிடாமல் செய்கிறது.