சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany and France demand the reintroduction of border controls

எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஜேர்மனியும், பிரான்ஸும் கோருகின்றன

By Martin Kreickenbaum 
26 April 2012

use this version to print | Send feedback

பிரான்ஸ், ஜேர்மனியின் உள்துறை மந்திரிகளான குளோட் கியோன், ஹென்ஸ் பீட்டர் ஃப்ரேடெரிக் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த முனைகின்றனர். Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கசிந்த பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர்கள் தேசிய அரசாங்கங்கள் தற்காலிகமாக 30 நாள் தற்காலிகமாக உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். கியோன், ஃப்ரேடெரிக் இருவரும் உடன்பட்டுள்ள இத்தகைய நடவடிக்கைக்கான முடிவு வேறுவழியின்றிக் கடைசியாக எடுக்கப்படுவது என்றும், இறுதியில் அந்தந்த நாடுகள் முடிவு எடுக்கும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்குச் சில நாட்கள் முன்பு வெளிவந்த கியோன், ஃப்ரேடெரிக் உடைய கடிதம் ஜேர்மனி அரசாங்கம் தன் பங்கிற்கு நிக்கோலோ சார்க்கோசியின் பிரச்சாரத்திற்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. தீவிர வலதுசாரி தேசிய முன்னணியின் அழுத்தத்தின்கீழ் சார்க்கோசி சில காலமாக தன்னுடைய தேர்தல் வாய்ப்பை பெருக்கிக் கொள்ளும் வகையில் தீவிர நாட்டுப்பற்றை தூண்டுதல் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை பற்றிய சுலோகங்களிடமும் தஞ்சம் அடைத்துள்ளார்.

மார்ச் மாதத் தொடக்கத்தின்போது பிரச்சாரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் கண்டத்தின் வெளிஎல்லைகளில் இருந்து பாய்ந்து வரும் குடியேறுபவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றிய ஷெங்கென் உடன்படிக்கையை -Schengen Agreement- விட்டு பிரான்ஸ் விலகி, ஐரோப்பாவிற்குள் சுதந்திரமாக மக்கள் பயணம் செய்வதை அகற்றிவிடும் என்று அச்சுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் இப்பிரச்சினையில் அங்கேலா மேர்க்கெல் தலைமையில் இருக்கும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆதரவைப் பிரதிபலிக்கிறது.

ஆனால் வெறும் தேர்தல் தந்திரோபாயத்தையும் கடந்த முக்கியத்துவத்தை இக்கடிதம் கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த ஐரோப்பாவிற்குள் இருந்த பழைய தேசியப் பிளவுகள் மீண்டும் திரும்புவது, அதுவும் சிக்கன நடவடிக்கைகளினால் வாழ்க்கைத்தரங்கள் தாக்கப்பட்டுள்ள நேரத்தில் இது நிகழ்வது மற்றொரு எச்சரிக்கைதான்.

ஷெங்கென் உடன்படிக்கை 1995ல் நடைமுறைக்கு வந்தது. இது ஐரோப்பாவிற்குள் பொதுவாக எல்லை கட்டுப்பாடுகளை அகற்றி, மூலதனம், பொருட்கள், நபர்களின் தடையற்ற பாய்தலை அனுமதித்தது. அதே நேரத்தில், கிழக்கு ஐரோப்பா மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வருவோரின் நடமாட்டம் தடைக்கு உட்படுத்தப்படலாம் என்ற வகையில் பரந்த நடவடிக்கைகள் கண்டத்தின் வெளிஎல்லையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டன. மனித உரிமைகள் அமைப்புக்களின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முற்பட்ட 15,000 புலம் பெயர்ந்தவர்கள் ஷெங்கன் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததில் இருந்து எல்லைகளில் இறந்து விட்டனர்.

இந்த உடன்படிக்கையின்படி எல்லைப் பொலிசாரின் அதிகாரங்களை அதிகரித்து இரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் மீதான எல்லைக் கட்டுப்பாட்டையும் அதிகரித்து, அதையொட்டி அகதிகளும், சட்டவிரோத புலம் பெயர்பவர்களும் வேட்டையாடப்பட்டனர்.

ஐரோப்பா நெடுகிலும் வறுமை பெருகிய சூழ்நிலையில், பிரான்ஸும் ஜேர்மனியும் இப்பொழுது தங்கள் உள்நாட்டு எல்லைகளை மீட்க விரும்புகின்றன. ஐரோப்பிய ஆணையத்திற்குள்ளேயே இப்பிரச்சினை குறித்து பரந்த உடன்பாடு உள்ளது. வேறுபாடுகள் அதிகாரப் பங்கீட்டில்தான் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஷெங்கன் உடன்படிக்கைக்கு ஒரு திருத்தம் கொண்டுவரும் கருத்தை முன்வைத்துள்ளது; இது வியாழன் அன்று விவாதிக்கப்பட உள்ளது. பல ஷெங்கன் நாடுகள் குறைந்தப்பட்சமாக 5 முதல் 30 நாட்களுக்கு எல்லைக்கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று இது கோருகிறது. ஆனால் ஃப்ரேடெரிக், கியோன் ஆகியோரின் விருப்பங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை ஆணையத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே இதேபோன்ற செயல்முறை வழக்கத்தில் உள்ளது. ஷெங்கன் உடன்பாட்டின் 23வது விதிப்படி, ஒரு நாடு தன் எல்லைகளை குறைந்த காலத்திற்கு பொது ஒழுங்கு அல்லது உள் பாதுகாப்பிற்குத் தீவிர அச்சுறுத்தல் என்றால் மூடலாம் என்று உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு முழுவதும் இந்த விதி பற்றி பிரஸ்ஸல்ஸ் மற்றும் தேசிய அரசாங்கங்களுக்கு இடையே பலமுறை முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இதன் விளைவாக, பிரெஞ்சு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகவும், ஷெங்கன் உடன்பாட்டை பகிரங்கமாக மீறும் வகையிலும், துனிசியப் புரட்சி ஏற்பட்டவுடனும், நேட்டோ தலைமையிலான லிபியாவிற்கு எதிரான போர் தொடங்கியவுடனும்,  இத்தாலியுடனான தன் எல்லைகளில் தடுப்புக்களை அறிமுகப்படுத்தியது; இதையொட்டி மத்தியதரைக்கடலைக் கடந்து இத்தாலியில் ஏராளமான அகதிகள் நுழைந்திருந்தனர். அதே நேரத்தில் டென்மார்க்கின் முன்னாள் மத்திய-வலது அரசாங்கம் ஜேர்மனியுடனான தன் எல்லையில் பல சோதனைச் சாவடிகளை நிறுவியது.

இந்த ஆண்டு மார்ச் 8ல் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிகள் குழுக்கூட்டத்தில் ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கிரேக்க அரசாங்கம் துருக்கியுடனான தன் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கையில், பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரசு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் உள்துறை மந்திரிகள் கிரேக்க அரசாங்கம் அரசியல் விருப்பை காட்டாமல்அதன் எல்லையை தானியக் களஞ்சியத்தை திறந்துவிடுவதுபோல் திறந்துவைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினர். அந்த நாடுகளின் உள்துறை மந்திரிகள், கிரேக்கம் தன் வெளி எல்லையை திறமையுடன் பாதுகாக்காவிடின், கிரேக்கத்தின் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகம் செய்ய நேரிடும் என்றும் அச்சுறுத்தினர்.

தங்கள் சமீபத்திய முன்முயற்சியை நியாயப்படுத்தி கியோன், ஃப்ரேடெரிக் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தின்ஆவியுரு தோன்றக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்; இது பாதுகாப்பு, மற்றும் பொது ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். கிரேக்கத்துடன் மற்ற தவறிழைக்கும் நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டது.

 தடையற்றுச் செல்லுதல், பயணித்தல் என்பதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் தனிப்பட்ட அரசாங்கங்கள் தங்கள் பொறுப்பைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால், தீயவர்கள் நுழைந்தால், நாம் எல்லைகளில் சோதனைகளை குறுகிய காலத்திற்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேணடும்என்று ஃப்ரேடெரிக் கடந்த வார இறுதியில் கிறிஸ்துவ சமூக ஒன்றிய –CSU- பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.

ஜேர்மனியச் செய்தி ஊடகம் ஃப்ரேடெரிக்கின் உறுதிப்பாடுகளை தயக்கமின்றி அப்படியே எடுத்துக் கொண்டன. Spiegel Online, Süddeutsche Zeitung இரண்டும் கிரேக்கத்தில் 1 மில்லியனுக்கும் மேலான புலம் பெயர்ந்தோர் மத்திய, வட ஐரோப்பாவிற்குள் நுழையும் வாய்ப்பிற்குக் காத்திருக்கின்றனர் என்று கூறின.

உண்மையில், குறிப்பிடப்பட்ட குழுவில் 800,000 பதிவு செய்யப்பட்டுள்ள குடிபெயர்ந்தோர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அல்பேனியா, மசிடோனியா, துருக்கி ஆகியவற்றில் இருந்து வருபவர்கள். இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சிக்கன நடவடிக்கை அவர்களை வேலையற்றோராக, வருமானம் ஏதும் இல்லோதாராக செய்த பின்னர் கிரேக்கத்தில் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பாக வரவேற்கப்பட்டிருந்தனர். ஆய்வு இணையமான Clandestino இன்னும் கூடுதலாக 200,000 புலம் பெயர்ந்தோர் முறையான குடியேறிய அந்தஸ்து இல்லாமல் நாட்டில் உள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.

இந்த நம்பிக்கையேதுமற்ற மக்கள் மீணடும் மேற்கு, வடக்கு ஐரோப்பாவிற்குள் குடிபெயரும் உந்துதலைக் கொண்டுள்ளதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இழிந்த அரசியலினால்தான். ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகளினால் குடிபெயர்ந்தோர் குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பைக்கொண்டுள்ளனர்; அந்த நவடிக்கைகள் வேலையின்மை மற்றும் வறுமையைத் தீவிரமாக்கிவிட்டன.

சமூகநலக் குறைப்புக்களுக்கு எதிரான கிரேக்க மக்களின் பெருகிய எழுச்சியைத் தணிக்கும் வகையில், ஏதென்ஸில் உள்ள அரசாங்கம் குடியேறுபவர்களை பலிகடாக்களாக ஆக்கி, பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, சமூகநலச் செலவுகள் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு அவர்களைத்தான் குறைகூறுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு படைத்த லூக்காஸ் பாப்படெமோஸின் அரசாங்கம் அன்றாடம் குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகளை அனுமதித்துள்ளது. இதையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுடைய கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலரும் சிறைகளிலும் காவல் மையங்களிலும் முடிவைக் காண்கின்றனர். “Operation Broom” என்பதுதான் இத்தகைய குடியேறுபவர்களுக்கு எதிரான திட்டத்தின் பெயர் ஆகும். இதற்கு PASOK ஐ சேர்ந்த குடிமக்கள் பாதுகாப்பு மந்திரி மிகைலிஸ் கிறிசோகோடிஸ்  தலைமைதாங்குகிறார்.

சுகாதார மந்திரி அந்திரேயாஸ் லோவடாஸ் (PASOK), வியாதிகளைப் பரப்புகின்றனர் எனச் சந்தேகப்படுபவர்கள் அனைவரும்கைது செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டு விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது; அதுதான் HIV தொற்றுக்குக் காரணம் என்று நியாயப்படுத்தப்படுகிறது, கருதப்படுகிறது, அவ்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மனித உரிமைகள் அமைப்புக்களும் ஐரோப்பிய குழுவும் அகதிகள், குடியேறுவோர் முகாம்களில் இருக்கும் மனிதாபிமானமற்ற நிலைமைகளைக் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளன. உண்மையான தஞ்சம் தரும் வழிவகைகள் ஏதும் இல்லை. பொலிஸ் ரோந்துக்கள் உண்மையான துப்பாக்கிக்குண்டுகளை துருக்கிய எல்லையில் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு நாடுவோர் ஒருதலைப்பட்சமாக நெரிசல் மிகுந்த முகாம்களில் காவலில் வைக்கப்படுகின்றனர். அங்கு சுகாதாரக் கேடு ஏற்படும் நிலைமைதான் உள்ளதுடன், போதுமான உணவு இல்லை. காவலில் இருக்க மறுப்பவர்கள் அரசாங்க நிறுவனங்களின் உதவியைப் பெறுவதில்லை. எந்த உறைவிடமும் இன்றி, பிச்சை எடுத்துத்தான் வாழவேணடும்.

பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் உள்ள அரசாங்கங்களுக்கு, இதுவும் போதவில்லை. அவை கிரேக்க அரசாங்கத்திற்கு குடியேறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அழுத்தங்களை தொடர்ந்து கொடுக்கின்றன. எல்லைப் பகுதிகளில் கூடுதலான கண்காணிப்பைத்தவிர, பாப்படெமோஸின் அரசாங்கம் கைவிடப்பட்ட இராணுவமுகாம்களை மாற்றியமைத்து இன்னும் 30 காவல் மையங்களை குடியேறுபவர்களுக்காக நிறுவ முற்படுகிறது. இதுவரை, 1,000 புலம் பெயர்ந்தோர் இந்த முகாம்களில் காவலில் உள்ளனர். இத்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு உள்ளது. அது 250 மில்லியன் யூரோ செலவில் மூன்று வரிசைகளில் தடுப்புச் சுவர்கள் முகாம்களில் அமைத்துக்கொடுக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் 150 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர்.

கியோன், ஃப்ரேடெரிக் ஆகியோரின் திட்டங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை. இவை ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் செயல்படுத்தும் நிதிய உடன்பாட்டுடனும் தொடர்பு கொண்டவை. இவை ஐரோப்பிய அரசாங்கங்களை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பெரும் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களைச் செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்துகின்றன. இந்த உடன்பாடு கிரேக்கம் மற்றும் தெற்கு ஐரோப்பாவில் பலரையும் கடும் வறுமையில் தள்ளியுள்ளது. ஐரோப்பாவை சமூகரீதியாக பிரிப்பது என்பது புதிய பாரிய குடியேற்றங்களை தூண்டிவிடலாம் என்று அச்சங்கள் பெருகியுள்ளன. ஜேர்மனிய குடியேறுவோர் அகதிகள் அலுவலகம் ஏற்கனவே கிரேக்கம், ஸ்பெயின் வழியாக ஜேர்மனிக்குள் குடியேறி வந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

எனவேதான் கியோன், ஃப்ரேடெரிக் இருவரும் இப்பொழுது ஐரோப்பாவில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். ஐரோப்பாவை முக்கிய நாடுகளின் சிறையாக மாற்ற அவர்கள் விரும்புகின்றனர்.  அதன் நோக்கம் கிரேக்கம், ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து  வேலையின்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரைத் தடுத்து நிறுத்துவதாகும். இவ்வகையில் இந்த நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் வட ஆபிரிக்காவில் இருந்து வருபவர்களைப் போலவே இழிவாக நடத்தப்படுவர். இவர்களில் பலர் ஏற்கனவே தங்கள் உயிரை ஐரோப்பிய கோட்டையில் நுழையும் முயற்சிகளில் இழந்துவிட்டனர்.