சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

WSWS speaks to Tamil immigrants and refugees in France

பிரான்சின் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அகதிகளுடன் WSWS கலந்துரையாடுகிறது

By Athiyan Silva in Paris
28 April 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தவர்களுக்கு விரோதமான மற்றும் இஸ்லாம் விரோத பிரச்சாரங்கள் அதிகமான அளவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்ட் ஆகிய இரண்டு வேட்பாளர்களுமே அதிகமான அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பலியாடுகளாக்கி அவர்கள் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமைகளின் கீழ், பாரிஸ் பகுதியில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அகதிகளுடன் WSWS செய்தியாளர்கள் நேர்காணல் செய்தனர்.

Chapelle
La Chapelle

பிரான்சில் 100,000க்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் அநேகமானோர் 1983 இல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததற்குப் பின் அரசியல் அகதிகளாய் வந்தவர்களாவர். இவர்களில் அநேகமானோர் உணவகங்களில், துப்புரவு வேலைகளில், கட்டுமான வேலைகளில் மற்றும் பிற உதிரி வேலைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலரும் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் அதிகமாய் உணவகங்களில் வேலை செய்கின்றனர்.

ட்ரான்சியில் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தனது நான்கு சிறு பிள்ளைகளுடன் வசிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி கூறினார்: “நான் ஒரு உணவகத்தில் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வேலை செய்கிறேன். ஞாயிறும் கூட வேலை செய்கிறேன் என்றாலும் கூட அடிப்படைச் சம்பளம் தான் எனக்குக் கிடைக்கிறது. இந்த சம்பளம் வாழ்வதற்குப் பத்தாது. என் மனைவி பகுதி நேரமாக துப்புரவு வேலையில் இருக்கிறார். அவருக்கு மாதத்திற்கு 350 யூரோ கிடைக்கிறது. இன்று எல்லாம் மிகவும் விலை கூடி விட்டதான நிலையில், வாழ்வதற்கே ரொம்பச் சிரமமாய் இருக்கிறது.” 

ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கேட்டபோது அவர் மேலும் கூறினார்: “சார்க்கோசி ஹாலண்ட் இருவரது வேலைத்திட்டமும் ஒன்று தான். வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களின் பிரதிநிதிகளே அவர்கள். பிரெஞ்சுத் தொழிலாளிகள் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு அவர்கள் அளிப்பது எதுவுமில்லை. அவர்கள் மேலும் மேலும் சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு எங்களைத் தாக்குவார்கள்.”

ஆவணமின்றி இருக்கின்ற பல தமிழ் அகதிகளை WSWS சந்தித்தது. இவர்களில் அநேகமானோர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள். இவர்களில் அநேகமானோர் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் ஆதரவில் தங்கியிருக்கின்றனர், அல்லது சட்டவிரோதமாய் வேலை செய்கின்றனர். அவர்களது நிலைமை ரொம்ப கேள்விக்குறியானதாகத் தான் இருக்கிறது; வதிவிட அனுமதி அல்லது  வேலை அனுமதி பெற முடியாமல், அவர்களால் சட்டப்பூர்வமாய் வேலை செய்ய இயலாமல் இருக்கிறது என்பதோடு அரசாங்கத்திடம் இருந்து உதவி பெறவும் இயலாமல் இருக்கிறது, இவ்வாறாக அவர்கள் வேலையில்லாமல், வருமானமில்லாமல், முறையான குடியிருப்பு வசதி இல்லாமல் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பலரும் நெடிய மணி நேரங்களுக்கு, 10 மணி நேரத்திற்கும் அதற்கும் அதிகமாயும் கூட, வேலை செய்து சில சமயங்களில் நாளுக்கு 25 யூரோ அல்லது 30 யூரோக்களைத் தான் சம்பாதிக்க முடிகிறது. சில சமயங்களில், ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராய் சட்ட நடவடிக்கை கோர முடியாது என்பதை நன்கு அறிந்து அவர்களின் முதலாளிகள் அவர்களின் சம்பளத்தைத் தராமல் ஏமாற்றுவதும் நடக்கிறது.

வடக்கு பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலை செய்யும் ஒரு அகதி கூறினார்: “நான் இலங்கையின் வடக்கு மாநிலமான கிளிநொச்சியில் இருந்து வந்தவன். அரசியல் அகதியாக 2005 இல் பிரான்சுக்கு வந்தேன். பத்து நாட்களுக்குப் பின்னர், போலிஸ் என்னைக் கைது செய்து விமான நிலையம் அருகேயுள்ள ஒரு கைது முகாமில் வைத்திருந்தனர், பின் மூன்று பிரெஞ்சு போலிஸ் காவலர்களுடன் என்னை கொழும்புக்குத் திருப்பியனுப்பினர். அங்கே இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் என்னை அவர்கள் ஒப்படைத்தனர். பின் குற்றவியல் விசாரணை போலிசார் சித்திரவதைக்கும் கொலைக்கும் புகழ்பெற்ற அவர்களது கொழும்பு தலைமையகத்துக்கு என்னைக் கொண்டு சென்றனர். விசாரணை முடிந்துபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் என்னை நீர்கொழும்பு சிறைக்கு அனுப்பினர்.”

அவர் மேலும் கூறினார்: “2009 ஏப்ரலில் போரின் இறுதிக் கட்டத்தில், போர் வலயப் பகுதிக்குள் நான் மாட்டிக் கொண்டேன். என்னுடைய இரண்டு சகோதரர்களையும் காணவில்லை, ஒருவழியாய் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எனது தாயுடன் வந்து சேர்ந்தேன். அங்கே அவர்கள் என்னை மறுபடியும் கைது செய்து நான்கு வெவ்வேறு இரகசியமறுநிவாரண முகாம்களில் வைத்திருந்தனர். பல சமயங்களில் நான் சித்திரவதைக்குள்ளானேன். துணைஇராணுவக் குழுக்கள் [கருணாவின் குழுக்கள் மற்றும் EPDP] என்னைக் கொல்வதற்கு அச்சுறுத்தின. இறுதியாய் நான் தற்கொலைக்கும் முயன்றேன். இப்போது என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டாவது தடவையாக 2012 இல் பிரான்சுக்கு வந்தேன். OFPRAவுக்கு [அகதிகள் பாதுகாப்பு அலுவலகம்] நான் விண்ணப்பித்தேன், ஆனாலும் இதுவரையிலும் எந்தப் பதிலுமில்லை.”

இத்தகைய கருத்துகள் OFPRA 2011 ஆம் ஆண்டில் இலங்கை குறித்து அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் சிடுமூஞ்சித்தனமான கூற்றுகளை மறுப்பனவாய் இருக்கின்றன. அந்த அறிக்கை கூறுகிறது, “இரு வருட காலத்தில், இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலைமை தீவிரமாய் மாற்றம் கண்டது. அதன் காரணத்தால், ஏறக்குறைய முப்பது வருடங்களாய் ஆயுதமேந்திய மோதல் மற்றும் வன்முறைக்குள் சிக்கியிருந்த வலயப் பகுதிகள் எல்லாம் - இவற்றில் பாதி ஒரு பிரிவினைவாத இயக்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன - அதன்பின் அமைதியடைந்தன: துணை இராணுவக் குழுக்கள் எல்லாம் இனியும் ஆயுதங்களுடன் வெளியில் சுற்றுவதென்பது இல்லை, இவற்றில் பாதி ஆயுதங்களை இராணுவம் பறிமுதல் செய்து விட்டது. அந்தக் குழுக்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாய் மாறி 2011 மார்ச் மற்றும் ஜூலையில் நடந்த உள்ளூர் தேர்தல்களில் அமைதியாகப் பங்கெடுக்கவும் செய்துள்ளன.”

இந்த அறிக்கை பிழையானதாகும். உண்மையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இன்னும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. அத்துடன் கொலை, கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் இன்னும் இந்தப் பகுதிகளில் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.

Bobigny
Bobigny prefecture

 

 

WSWS செய்தியாளர்கள் Bobigny ஆவண வழங்கல் அலுவலகத்திற்கும் விஜயம் செய்தனர். விசாக்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பெறுவதற்காக அக்கட்டிடத்தின் முன்னால் 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்கள் காத்திருந்தனர். சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இவர்களில் பலரும் நள்ளிரவில் இருந்து அல்லது முந்தைய நாளின் இரவு 8 மணியில் இருந்தே கால்கடுக்க அங்கு நின்று கொண்டிருந்தனர்.

காலை 8.30 மணிக்கு அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கத் தொடங்கினர், ஆனால் அவர்கள் எல்லோருக்குமே ஒதுக்கி விடவில்லை. பல அகதிகளும் பல மணி நேரம் காத்திருந்தது வீணாகிப் போனது. அதிகாரிகள் கூட்டத்தைப் பார்த்து கத்தினர்: “இனி டிக்கெட்டுகள் இல்லை, காத்திருக்கத் தான் போகிறீர்கள் என்றால் அது உங்கள் இஷ்டம். ஆனால் பிரயோசனம் எதுவுமில்லை. அதனால் கிளம்புங்கள்.”

ஒரு அகதி கூறினார்: ”இரவு 8 மணியில் இருந்து விசா வாங்குவதற்காகக் காத்திருக்கிறேன். போலிசிடம் காண்பிப்பதற்கென்று என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. என்னை அவர்கள் கைது செய்தால், சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.”

இலங்கையின் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து வந்திருக்கும் 33 வயதான தாஸ் என்ற திருமணமான அகதியுடன் WSWS பேசியது. அவருக்கு வேலையில்லை, இரண்டு குழந்தைகள் இருக்கிறது. உள்நாட்டு யுத்தத்தில் அவர் காயம்பட்டிருந்தார். வவுனியாவில் தமிழ் தேசியவாதப் படை சுட்ட குண்டு இவருடைய காலில் பாய்ந்து விட்டிருந்தது.

தாஸ் 11 வருடங்களாய் பிரான்சில் வாழ்ந்திருக்கிறார், ஆயினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரால் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள முடியவில்லை. இப்போது அவர் பிரான்சில் இருக்கும் சில நண்பர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் உதவியுடன் ஒரு முன் அறையில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார்.

தாஸ் கூறினார்: ”OFPRAவும் அகதிகள் மறுவாழ்வுக் குழுவும் எனது மேல்முறையீட்டை நிராகரித்து விட்டன. இப்போது விசா இல்லாமல் நானும் என் மொத்தக் குடும்பமும் இங்கே வாழ்வதற்கு பெரும் சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நான்கு முறை நான் பிரெஞ்சு போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு வழக்கறிஞர் உதவியுடன் தான் நான் விடுதலையானேன். இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் எங்களது பகுதிகள் இன்னும் இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் ஆக்கிரமிப்பின் கீழ் தான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் எங்கள் வாழ்க்கைக்கு யார் முறையான உத்தரவாதத்தைத் தருவார்கள்? இலங்கைக்குத் திரும்புவது குறித்து என்னால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. சில நாட்களுக்கு முன்னால், நள்ளிரவில் இந்த வரிசையில் நான் காத்திருக்கும் சமயத்தில், சில குண்டர்கள் என்னைத் தாக்கினார்கள். பாருங்கள் தெரியும், என்னுடைய இடது கண்ணில் காயம் இன்னமும் இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு விசாவைக் கொடுத்தால், எங்களுக்கு இந்த நிலை இருக்குமா?”

வசி என்ற 24 வயது மணமாகாத இளைஞர் அகதியுடனும் WSWS பேசியது. பிரான்சில் நான்கு வருடங்களாக வசித்து வரும் இவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

பிரான்சில் மூன்று மாதங்கள் தங்குவதற்கான தற்காலிக விசா மட்டுமே அவரிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் தன்னுடைய விசாவைப் புதுப்பிக்க இந்த அலுவலகத்திற்கு வருகிறார். இலங்கையில் மூன்று வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டு பாதுகாப்புப் படைகளிடம் அவர் சித்திரவதையை அனுபவித்திருக்கிறார். அவரது முதுகிலும் பற்களிலும் காயம் ஏற்பட்டது.

நாம் அவருடன் பேசுகையில் அவர் சொன்னார்: “நேர ஒதுக்கீட்டுக்காக இரவு 10 மணியில் இருந்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன். என்னால் இலங்கைக்குத் திரும்ப முடியாது. அங்கு போலிசாரும் இராணுவமும் பெரும் பிரச்சினைகளை அளிக்கிறார்கள். மூன்று வருடங்கள் சிறையில் இருந்தேன், அவர்கள் என்னை விடுதலை செய்தபோது அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். OFPRA அதிகாரியிடம் இதை நான் விளக்கினால், அவர் கொஞ்சமும் யோசிக்காமல் இது உண்மையல்ல என்கிறார்.”

Cimade அறிக்கை கூறுவதன் படி, 2009 இல் 318 சிறுவர்கள் உட்பட 35000க்கும் அதிகமான வெளிநாட்டினர் கைது முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். 2008 இல் இந்த எண்ணிக்கை 32,268 ஆக இருந்தது. பிரான்சில் இருந்து சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. 2011 இல் இது 32, 922 ஆக இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கான இலக்கு 35,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.