சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Maruti Suzuki and Haryana government mount vendetta against auto workers

இந்தியா: மாருதி சுசுகியும் ஹரியானா அரசாங்கமும் வாகனத் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு எதிராக வன்மத்தைத் தீவிரப்படுத்துகின்றன

By Arun Kumar
4 August 2012

use this version to print | Send feedback

மாருதி சுசுகி ஆஃப் இந்தியா (MSI)நிறுவனத்தின் மானேசர் கார் ஒன்றுசேர்ப்பு ஆலையில் நிலவுகின்ற மிருகத்தனமான வேலைச் சூழலை சவால் செய்கின்றமைக்காக இந்நிறுவனமும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் மற்றும் அதன் போலிசும் இந்தத் தொழிற்சாலையின் 3,000 தொழிலாளர்களுக்கு எதிராக வன்ம நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான இந்நிறுவனம் ஜூலை 21 முதலாக தனது மானேசர் ஆலையின் மொத்தத் தொழிலாளர்களுக்கும் கதவடைப்பு செய்திருக்கின்றது. புது டெல்லியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கக்கூடிய இந்த ஆலையை நிரந்தரமாய் மூடுகின்றதான அச்சுறுத்தலையும் இதன் தலைவரான ஆர்.சி.பார்கவா விடுத்திருக்கிறார். MSI இன் தலையசைப்பின் பேரில், போலிஸ் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கைது செய்திருக்கிறது. நிறுவனத்தின் எடுபிடியாக செயல்படும் சங்கத்திற்கு எதிராய் சென்றவருடத்தில் தொழிலாளர்கள் நிறுவிய ஒரு சுயாதீனமான சங்கத்தின் அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

ஜூலை 18 அன்று தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் வெடித்ததும் ஒரு முதுநிலை மேலாளரின் மரணத்தில் முடிந்ததுமான  ஒரு ஆவேசமான கைகலப்பு மோதலையே இந்த சமீபத்திய தாக்குதல்களுக்கான சாக்காக நிர்வாகமும் அரசாங்கமும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்த கைகலப்பை தொழிற்சங்கத் தலைவர்கள் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டும் நிறுவன நிர்வாகம் அவர்கள் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதியச் செய்வதற்கு முனைகிறது. ஜூலை 18 சம்பவத்தில் தொடர்புடைய எந்த ஒரு தொழிலாளரையும் நிறுவனத்தில் இருந்து அகற்றுவதற்கும் அது உறுதி பூண்டிருக்கிறது.

உண்மையில் ஜூலை 18 மோதல் என்பது, உலக சோசலிச வலைத் தளம் முன்னதாக கூறியிருந்ததைப் போல, நிர்வாகத்தின் திட்டமிட்ட சீண்டலே. ஒரு சூப்பர்வைசர் ஒரு தொழிலாளியை தரக்குறைவாக சாதியைச் சொல்லித் திட்டியதற்கு அத்தொழிலாளி எதிர்ப்பு தெரிவித்ததற்குப் பின் நிறுவனத்தின் அதிகாரிகள் அந்தத் தொழிலாளியை சஸ்பெண்ட் செய்தனர். இந்த சஸ்பென்சன் நடவடிக்கையால் கோபமுற்ற தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பதிலாக அந்த சூப்பர்வைசர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU)( நிறுவனம் அங்கீகரிக்க மறுத்து வந்திருக்கிற சுயாதீனமான தொழிற்சங்கம்) தலைவர்கள் இந்தப் பிரச்சினையை நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், நூற்றுக்கணக்கிலான நிறுவன ஏற்பாட்டு அடியாட்கள் தொழிலாளர்களை மிருகத்தனமாய் தாக்கி ஒரு பெரும் மோதலுக்குச் சீண்டினர்.

இந்த கைகலப்பில் ஆலை வளாகத்திற்குள் தீ வைக்கப்பட்டு அதனால் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு சேதம் விளைந்ததோடு ஒரு முதுநிலை மேலாளர் எரிந்து மரணமடைந்தார். தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஆட்கள் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 100 பேர் இந்த மோதலிலும் தீயிலும் காயமுற்றனர். (காணவும்: இந்தியா: தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையை மாருதி சுஜூகி ஆரம்பிக்கிறது)

உடனடியாக போலிஸ் படை நிறுத்தப்பட்டு அவர்கள் MSWU ஒருங்கிணைப்புச் செயலாளரான யோகேஷ் குமார் உள்ளிட்டு பல பத்து தொழிலாளர்களைக் கைது செய்தனர். அதன்பின், MSWU இன் அனைத்து பிற நிர்வாகிகளுக்கு எதிராகவும் அத்துடன் மோதலில் சம்பந்தப்பட்டவர்களாய் நிறுவனத்தால் பெயர் கூறப்பட்ட மற்ற தொழிலாளர்களுக்கு எதிராகவும் கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

ஆகஸ்டு 1க்குள்ளாக, போலிஸ் MSWU தலைவர் ராம் மேஹர் மற்றும் பொதுச் செயலாளர் சரப்ஜித் சிங் மற்றும் தொழிற்சங்கத்தின் அத்தனை அலுவலக நிர்வாகிகளும் உட்பட 114 தொழிலாளர்களைக் கைது செய்திருந்தது.

கடந்த 14 மாத காலங்களின் சமயத்தில் மாருதி சுசுகி நிர்வாகத்தினை திடமாக ஆதரித்து வந்திருக்கக் கூடிய ஹரியானா அரசாங்கம் சம்பவத்தின் மீது விசாரணை நடத்துவதற்கு போலிஸ் உதவி ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்கி தொழிலாளர்-விரோத வேட்டையை விரிவுபடுத்துவதற்கான ஒரு சமிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஒரு பெரும் தொழிற்துறைப் பகுதியான மானேசர் தொடர்ந்து போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களின் களமாக ஆகியிருக்கும் நிலையில் அங்கு ஒரு சிறப்பு போலிஸ் படையை நிரந்தரமாய் நிறுவவிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

தொழிலாளர் கிளர்ச்சி என்கிற பேரில் எந்தவிதமான வன்முறையும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதில் எங்களது அரசாங்கம் மிகத் தெளிவாய் இருக்கிறதுஎன்று ஹரியானாவின் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை அமைச்சரான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்தார். பாதுகாப்பையும் எங்களது முழு ஆதரவையும் உறுதியளித்து மாநிலம் முழுவதிலுமிருக்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை நாங்கள் அனுப்பியிருக்கிறோம், அத்துடன் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாய் எந்த எல்லைக்கும் செல்வதற்கு நாங்கள் தயாராய் இருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சி அமைச்சர் அதன்பின் குறிப்பாக MSI பாராட்ட விழைந்தார்: மாருதி ஒரு சீரிய தொழிலாளர் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. நல்ல ஊதியம் கொடுக்கிறார்கள். போதுமான ஊக்கத்தொகைகளும் கொடுக்கிறார்கள்.

உண்மையில், அதிகமான பொருத்து வேகம், ஓய்வு என்பதே ஏறக்குறைய இல்லாத நிலை, அத்துடன் தொழிலாளர்களின் கஷ்டங்கள் குறித்த குரல் எங்குமே ஒலிப்பதற்கு அது காட்டும் குரோதம் ஆகியவை உட்பட்ட நிறுவனத்தின் மிருகத்தனமான நடைமுறைகள் தான் தொடர்ந்த தொழிலாளர் மோதல்களின் மூலவேராக இருந்து வந்திருக்கின்றன.

மானேசரிலேயே இருக்கும் சுசுகி பவர்டிரெயின் இந்தியா லிமிடெட் (SPIL), கீர்கி தவுலாவில் இருக்கும் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா (SMI), மற்றும் குர்கானில் இருக்கும் மாருதி சுசுகியின் ஆலை ஆகிய மூன்று பிற சுசுகி ஆலைகளிலும் ஹரியானா போலிஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் MSI இன் மானேசர் ஆலை சகாக்களுக்கு ஆதரவான அனுதாப வேலைநிறுத்தப் போராட்டங்களில் SPIL மற்றும் SMI தொழிலாளர்கள் இணைந்து கொண்டனர்.

இப்போது கதவடைப்பு செய்யப்பட்டிருக்கும் மானேசர் கார் ஒன்றுசேர்ப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இதேபோன்ற நடவடிக்கை எதிலும் அத்தொழிலாளர்கள் மீண்டும் ஈடுபட்டு விடுவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே போலிஸ் இந்த ஆலைகளில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

குர்கான் மாவட்ட நீதிமன்றம் மானேசரில் இருக்கும் தொழிற்சாலை மாதிரி நகரம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 வது பிரிவை உத்தரவிட்டிருந்தது. இப்பிரிவு ஒரு சிலருக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆட்கள் கூடுவதைத் தடை செய்கிறது. 2005 ஆம் ஆண்டின் ஹீரோ ஹோண்டா தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை நினைவுகூர்ந்து ஜூலை 25 அன்று நடத்தப்படவிருந்த ஒரு பேரணியைத் தடுக்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது. மானேசர் MSI தொழிலாளர்களுக்கு ஆதரவாய் குரல் எழும்புவதைத் தடுக்கும் பொருட்டான ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகவும் இது செய்யப்பட்டது என்பது தெளிவு.

சென்ற வருடத்தின் போது மானேசர் மாருதி சுசுகி ஆலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான நான்கு மாத கால போராட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம், கதவடைப்பைத் திணிப்பதற்கும் அத்துடன் ஆலை உள்ளிருப்புப் போராட்டத்தை உடைப்பதற்கும் என இரண்டிலும் உதவுவது உட்பட நிறுவனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து போலிஸை நிறுத்தி வந்திருக்கிறது. அதன் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலாளர்கள் நிறுவனம் கட்டளையிட்ட ஒரு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்கிற நிறுவனத்தின் கோரிக்கையை ஆதரித்தனர். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மானேசர் ஆலையின் அமைதியின்மைக்கு வெளியிலிருந்தான கூறுகள் மீது பழி சுமத்தினர். அக்கூறுகள் மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கீழறுக்க விரும்பியதாக அவர்கள் கூறினர்.

மானேசர் தொழிலாளர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டைக்கு நியாயம் கற்பிப்பதற்காகவும் மேலதிக பதில் தாக்குதல்கள் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு அங்கீகாரமளிக்கும் பொருட்டுமான ஒரு அருவருப்பான முயற்சியில், MSI இந்த ஆலையின் அமைதியின்மையில் நக்சலைட்டுகள் (அதாவது மாவோயிச கெரில்லாக்கள்)சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை விசாரிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறது. இந்தியாவின் முன்னாள் உள்துறைச் செயலாளரான ஜி.கே.பிள்ளை எகானாமிக் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்: கொஞ்ச காலமாகவே நகரப் பகுதிகளில் இருக்கும் தொழிலாளர் அமைப்புகளுக்குள் நக்சல்கள் ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள் என்கிற தகவல் அரசாங்கத்திடம் இருக்கிறது.

சென்ற ஆண்டில், மானேசர் MSI தொழிலாளர்கள், அற்பமான கூலிகள், ஒப்பந்த ஊதிய முறை, எதேச்சாதிகார வேலை விதிகள் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்கள் பலியாக்கப்படுவது ஆகியவை உள்ளிட்ட கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக ஒரு தீர்மானமான போராட்டத்தை நிகழ்த்தினர். இரண்டு ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களையும் பல வார கால வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் அவர்கள் நடத்தினர். பல சந்தர்ப்பங்களில் இவர்களது போராட்டம் இந்தியாவில் தொழிற்சாலைகள் அடர்ந்த பகுதிகளில் ஒன்றான குர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியில் ஒரு பரந்த தொழிலாள வர்க்க எழுச்சியைத் தூண்டுவதற்கு அச்சுறுத்தியது.

இறுதியில் மானேசர் MSI தொழிலாளர்கள் அவர்களது முதன்மையான கோரிக்கைகள் வெற்றி பெறாத நிலையிலேயே வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தம் பெற்றார்களென்றால், அதற்குக் காரணம் குர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியில் செல்வாக்கு கொண்டிருந்த தொழிற்சங்க கூட்டமைப்புகள் - அதிலும் குறிப்பாக ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)உடன் இணைந்த அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU)ஆகியவை - அவர்களது போராட்டங்களைத் தனிமைப்படுத்தியது தான்ஸ்ராலினிசத் தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் எல்லாம் நிறுவனத்துடன் ஒரு சமரசத்துக்கு வருமாறு MSEU க்கு  தொடர்ந்து நெருக்குதலளித்தன என்பதோடு மானேசர் தொழிலாளர்களை தொழிலாள வர்க்கத்திற்கு ஆதரவாய் திரும்ப வலியுறுத்தாமல், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கும், அதன் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நீதிமன்றங்களுக்கும் ஆதரவாய்த் திரும்ப வலியுறுத்தின.

ஸ்ராலினிஸ்டுகள் இதே துரோகப் பாத்திரத்தையே தொடர்ந்து ஆற்றி வருகின்றனர். குர்கானில் ஜூலை 27 அன்று நடந்த தொழிலாளர்களின் ஒரு கூட்டத்தில் பேசிய CPI இன் நாடாளுமன்றவாதியும் AITUC இன் பொதுச் செயலாளருமான குருதாஸ் தாஸ்குப்தா ஜூலை 18 சம்பவத்திற்கு சிபிஐ (மத்திய புலனாய்வுக் கழகம்) விசாரணை வேண்டுமெனக் கோரினார். இதேபோல், சிஐடியுவும் தனது அறிக்கையில், அரசாங்கம் தொழிலாளர்களை வேட்டையாடுவதையும் பயமுறுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் ஜூலை 18 சம்பவத்திற்கு ஒரு சுயாதீனமான விசாரணையை அமைக்க வேண்டும் என்றும் கோரியது. இதனிடையே CPM இன் பஞ்சாப் மாநிலக் குழு, ஹரியானாவின் தொழிலாளர் துறை அமைச்சர் அவரது தொழிலாளர்-விரோத மனோநிலையைக் கைவிட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவர் பதவிக்குரிய பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

இப்படியாக, நிறுவனமும் அரசும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் தாக்குதலுக்கு மானேசரின் MSI தொழிலாளர்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், ஸ்ராலினிஸ்டுகளோ, இந்தத் தாக்குதலின் மையமாய் இடம்பெற்றிருக்கக் கூடிய காங்கிரஸ்-கட்சி தலைமையிலான அதே மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு விண்ணப்பம் செய்வதை நோக்கி அவர்களைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.