சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The American establishment and the British royal pregnancy

அமெரிக்க ஆளும்வர்க்கமும் பிரித்தானிய அரச குடும்ப மகப்பேறும்

By David Walsh
7 December 2012

use this version to print | Send feedback

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியத்தின் மனைவியும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறார் என்னும் அறிவிப்பு பொதுவாக அமெரிக்கச் செய்தி ஊடகம் மற்றும் ஆளும் வர்க்கத்திடமும் பெரும் மகிழ்ச்சி கூச்சல்களை தகுதியற்றவிதத்தில் தோற்றுவித்துள்ளது.

ஏன் இந்த மூடத்தனம்? அல்லது இது மூடத்தனத்தைவிட மிக அதிகமானதா?

முதலில் நாம் அமெரிக்கச் செய்தி ஊடகத்தைப் பற்றிப் பேசுவதால், இதில் புத்தியீனமான தன்மை உள்ளது என்பது உண்மையே. அத்துடன் சமூகப் பேரழிவு மற்றும் முடிவிலாப் போர்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களில் இருந்து பொது மக்கள் கவனத்தை திசைதிருப்பும் தவிர்க்க முடியாத முயற்சியும் அதனுடன் இணைந்துள்ளது.

பல மாதங்களாக முக்கிய தொலைக்காட்சி இணையங்கள், கேபிள் நிலையங்கள் மற்றும் வாரந்திர ஏடுகள் மூச்சு விடாமல் டிசம்பர் 3ம் திகதி ABC News கூறிய "மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மகப்பேறு" குறித்து எதிர்பார்ப்புடன் இருந்தன. ரூபர்ட் மேர்டோக்கின் உடைமையான Fox News "அரச குடும்பத்தின் மகப்பேறு" குறித்து தான் பெரிதும் "களிப்புற்றதாக" அறிவித்து, "கேட்டின் மருத்துவ நிலைமை" அவருடைய உடல்நலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையைக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. டைம் பத்திரிகையின் கூற்றின்படி, "கேம்பிரிட்ஜ் சீமாட்டியின் தாய்மை பற்றிய செய்தி திங்களன்று வெளிவந்தவுடன், உலகம் முழுவதும் பரபரப்புப் பெருமூச்சு பரவியது."

நியூஸ்டேயில் எழுதும் பிரித்தானியாவின் அலெக்ஸ் மெஸ்சி டிசம்பர் 5ம் திகதி அமெரிக்கச் செய்தி ஊடகம் "வின்சர் பிரித்தானிய மாளிகையிலிருந்து வரும் அதன் அவ்வப்பொழுதான ஆட்டிப்படைப்பு ஒன்றினால் பெரும் வெறியீர்ப்பில் ஆழ்ந்துவிட்டது", மேலும் கேம்பிரட்ஜ் பிரபு, சீமாட்டி இடம் இருந்து வந்துள்ள தகவல் "அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்களை அறிமுகமான டிவிட்டர் ஆர்வத்தைத் தூண்டியதுடன், பரபரப்பையும் அதிகப்படுத்திவிட்டது" என்று கூறினார்.

இதே செய்தி ஊடகம் தன் பரபரப்பை பொதுமக்களிடையேயும் புகுத்தியது. அசோசியேட்டட் பிரஸின் நிருபர் ஒருவர் தன்னுடைய வாசகர்களுக்கு "பிரிட்டிஷ் அரியணைக்கு வாரிசு வந்து கொண்டிருக்கிறது—பிரித்தானியர்களைப் போலவே அமெரிக்கர்களும் உவப்பு அடையலாம். இந்த முன்னாள் காலனி அரண்மனைச் செய்தியான முன்னாள் கேட் மிடில்டன் கருவுற்றுள்ளார் என்பதால் களிப்படைகிறது." அவர் தனக்காகத்தான் பேச வேண்டும். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு, இந்நாடு பிரித்தானியாவின் அரச குடும்பத்தினர் வரவிருக்கும் விரிவாக்கம் குறித்து பெரும் பொருட்படுத்தாத்தன்மையைத்தான் காட்டுகின்றது.

ஆனால், ஐயத்திற்கு இடமின்றி, பல தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும், அரட்டைக் கட்டுரையாளர்களும், செய்தியாளர்கள் என்று காட்டிக் கொள்ளும் அவதூறு பரப்பும் பேர்வழிகளும் பெரும் களிப்பைத்தான் வெளிப்படுத்துகின்றனர்.

CNN உடைய ஜேன் வாலெஸ்-மிட்ஷெல் திங்களன்று மாலை தன் பார்வையாளர்களைக் கேட்டார்: "நீங்கள் பரபரப்பாக இருக்கிறீர்களா? நான் உள்ளேன். நாம் ஒரு அவசர செய்தியை அளிக்கிறோம்.... அவர்கள் (இளவரசரும் அவருடைய மனைவியாரும்) மேடையில் இருந்து இறங்கிய கணத்தில் இருந்து பெரும் செல்வாக்குடைய தம்பதிகள் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற வதந்திகள் இருந்தன. ஆனால் இன்று இரவு, அவர்கள் திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நமக்கு உறுதி கிடைத்துள்ளது—கேம்பிரட்ஜ் பிரபுவும் சீமாட்டியும் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் —ஆஹா!— அரியணைக்கு ஒரு வாரிசு."

CNN உடைய HLN மாலை நிகழ்ச்சியான "இன்றிரவு ஷோபிஸ்" என்பதில் தொகுப்பாளர் ஹாமர் கூறினார்: "ஏற்கனவே நாம் கத்தரீன் கருவுற்றிருக்கிறார் என்ற செய்திக்கு வந்த பிரதிபலிப்பை கண்டுள்ளோம். ஒருவேளை அவர் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்றால் என்ன நிகழும்? குழந்தை பற்றிய செய்திகளில் அது அணுகுண்டு வெடிப்புப் போல் இருக்கும்." அவரது நிகழ்ச்சியில் பங்குபற்றிய ரோசி போப்பை அவர் "என் தலை வெடிப்பதை நீங்கள் கேட்கமுடிகிறது, இல்லையா?" எனக்கேட்டார்.

போப் அதற்கு விடையிறுத்தார்: "என்னுடைய தலையும்தான் வெடித்துக் கொண்டிருக்கிறது. இது—அதைப்பற்றி நினைக்கையில் நான் பேச்சற்று உள்ளேன். அத்தகைய சாத்தியம் நம்பமுடியாத அளவிற்குப் பரபரப்புக் கொடுக்கிறது—ஒருவேளை நடக்காது என்றாலும்."

வெள்ளை மாளிகை செய்தி ஊடகச் செயலர் ஜே கார்னே டிசம்பர் 3ம் திகதி செய்தியாளர்களிடம் : "வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒவ்வொருவருடைய சார்பிலும், ஜனாதிபதி, முதல் சீமாட்டியில் இருந்து, நாங்கள் கேம்பிரிட்ஜ் பிரபு மற்றும் சீமாட்டிக்கு அவர்கள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவந்துள்ள மகிழ்ச்சியான செய்திக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்." எனக் கூறினார்

பெயரளவிற்கேனும் குறைந்தப்பட்சம், அமெரிக்கா இன்னமும் ஒரு குடியரசாகத்தான் உள்ளது. எதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒரு செல்வம் படைத்த ஒட்டுண்ணிகள், அர்த்தமற்றவர்கள் மற்றும் மடையர்களின் கூட்டான பிரித்தானிய அரச குடும்பத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்?

அமெரிக்க சுதந்திரப் போராட்டம் (1775-1783) ஒரு பாரிய முக்கிய உலக வரலாற்று நிகழ்வு ஆகும். கிட்டத்தட்ட 25,000 அமெரிக்கப் புரடசியாளர்கள் இந்த மோதலில் போர்க்களத்தில் 8,000 பேரும் மற்ற 17,000 பேர் நோய்வாய்ப்பட்டும் இறந்து போனர். 12,000 பேர் பிரிட்டிஷாரின் கைதிகளாக, பெரும்பாலும் உக்கிப்போன சிறைக்கப்பல்களில் காணாமல்போயினர். காயமுற்றவர்களைப் பற்றிய மதிப்பீடுகள் 25,000 என இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே மொத்த இறப்பு எண்ணிகை ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்களைத் தவிர குறைந்த பட்சம் 50,000 என இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது . இவ்வளவும் 2.4 மில்லியன் என்ற மொத்த மக்கட் தொகையில் இருந்தாகும்.

முன்னாள் காலனித்துவத்தின் மக்கள் அனைவரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், அரசர் மூன்றாம் ஜோர்ஜையும் அரசர் முறையையும் முழு நனவுடன் மீறி சுதந்திர பிரகடனத்தை அறிவித்தனர். பிரித்தானியாவில் இருந்து சுதந்திரத்திற்கு வாதாடிப் போரிட்ட தலைமுறை, முடியாட்சியை ஒரு அமைப்புமுறை என்னும் வகையில் வெறுத்தது.

உதாரணமாக பொது உணர்வு (Common Sense) என்ற புத்தகத்தின் நூலாசிரியரான தீவிரவாத ரொம் பைன் எழுதினார்: "முடியாட்சி என்னும் தீமைக்கு பரம்பரையான தொடர்ச்சி என்பதை நாம் சேர்த்துக் கொண்டுள்ளோம்; முதலாவது ஒரு இழிவானது, நம்மையே தாழ்த்திக் கொள்வது என்றால், இரண்டாவது சரியானது எனகோரப்படுவதுடன் வருங்காலத்தின் மீதும் சுமத்தப்படுகின்ற ஒரு அவமதிப்பு ஆகும். ஆரம்பகாலத்தில் அனைத்து மக்களும் சமமாக இருந்த நிலையில், எவரும் பிறப்பை ஒட்டித் தன்னுடைய குடும்பம் மற்றவற்றின் மீது நிரந்தரமான கூடுதல் விருப்பதைக் கொள்ள வேண்டும் என நிறுவும் உரிமையை கொண்டிருக்கமுடியாது.... அரசர்கள் வாரிசு உரிமையைக் கொண்டிருப்பதின் மடைத்தனத்திற்கு இயற்கையான நிரூபணங்களில் ஒன்று இயற்கை இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதாகும். இல்லாவிடின் இயற்கை மனிதகுலத்திற்கு ஒரு சிங்கத்திற்கு பதிலாகக் கழுதையை கொடுப்பதின் மூலம் இக்கருத்தை அடிக்கடி கேலிக்கு உட்படுத்தியிருக்கும்".

சிறிதும் தளர்வுறா இழிவு முறையில்தான் தோமஸ் ஜெபர்சன் முடியாட்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். 1788 ம் ஆண்டில் பிரான்சில் இருந்து ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்: "ஐரோப்பாவிற்கு வருமுன் நான் முடியாட்சிகளுக்கு விரோதியாக இருந்தேன். இங்கு வந்து அவர்கள் இருப்பதைப் பார்த்தபின் அதே உணர்வை இப்போது பல ஆயிரம் மடங்குகள் கொண்டுள்ளேன். இந்நாடுகளில் அரசரிடம் இருந்து புறப்பட்டது என்று காணக்கூடிய தீமைகள்தான் உள்ளன; அவர்களிடையே குடியரசுவாதத்தின் சிறிய இழையிலிருந்து பெறாத எந்த நல்ல தன்மைகள் எதுவும் இல்லை.

1810 இல் எழுதிய கடிதம் ஒன்றில் ஜெபர்சன் இங்கிலாந்தின் மன்னர் "ஒரு பூஜ்யம்" என்பது மட்டுமின்றி, ஐரோப்பிய அரச குலம் முழுவதுமே "எந்த விலங்கினத்தையும் போல்" சோம்பேறித்தனம், பிற்போக்குத்தனத்தில்தான்" மூழ்கியுள்ளது, அது தொழுவமாயினும், குதிரை இலாயமாயினும், அரசாங்க அறை என்றாலும் சரி, ஒவ்வொரு வகையிலும் களிப்பூட்டப்பட்டு திருப்தியுற்ற நிலையில், "சிந்திப்பதற்கு இட்டுச்செல்வதற்கு எதுவும் இல்லாத வகையில்" உள்ளனர். ஒரு சில தலைமுறைகளில் "வெறும் உடல்கள்தான் உள்ளனவே அன்றி மூளைகள் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்திய பல ஐரோப்பிய அரசர்கள், அரசிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அவர்களை "முட்டாள்கள்", "மடையர்கள்", "உண்மையில் கிறுக்கர்கள்" என்று விவரித்துள்ளார். ஒரு பைபிளின் வார்த்தையுடன் முடிக்கையில் ஜெபர்சன், "இவ்வகையில் அரசர்களுடைய நூல் முடிவடைகிறது; இவர்கள் அனைவரிடத்தில் இருந்தும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவாராக" என்கிறார்.

இரண்டாம் அமெரிக்கப் புரட்சியான உள்நாட்டுப் போர், அடிமைகளாக்கும் சக்திகளுக்கு எதிராக போராடப்பட்டது. இதுவும் வடக்கே இருந்த மிக முற்போக்கான பிரிவுகளில் பிரபுத்துவம் மற்றும் அரச முறைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசுவாதத்திற்கு கொடுக்கப்படும் ஓர் அடியாகும்.

ஆபிரகாம் லிங்கன் இவ்வாறான சொற்றொடர்களுடன் வாதிட்டார்: "ஆரம்ப காலத்தில் இருந்து இரு கொள்கைகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன; அவை தொடர்ந்தும் போராடும். ஒன்று மனிதகுலத்தின் பொது உரிமைகள், மற்றொன்று மன்னர்களின் தெய்வீக உரிமை. எந்த வடிவமைப்பில் அது வளர்ந்தாலும் ஒரே கொள்கையைக் காணலாம். இதே உணர்வுதான், "நீ உழை, பாடுபடு, ரொட்டியைச் சம்பாதி, நான் அதை உண்கிறேன்" என்று கூறுகிறது.

"எந்த வடிவில் அது வந்தாலும், தன்னுடைய நாட்டுமக்களை அடக்க முற்பட்டு அவர்கள் உழைப்பின் பலனில் வாழ விரும்பும் அரசனின் வாயில் இருந்து வந்தாலும், மற்றொரு இனத்தை அடிமைப்படுத்த முற்படுவதை நியாயப்படுத்த முயலும் மனிதனின் மற்றொரு இனமாயினும் சரி, இவற்றில் இதே கொடுங்கோல் கொள்கைதான் உள்ளது."

19ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த அமெரிக்க கலாச்சாரம், மற்றும் சமூக வாழ்வின் மிக ஆழ்ந்த நபர்கள் இதே விரோதப்போக்கைத்தான் முடியாட்சியிடம் காட்டினர். அவர்களுள் முக்கியமானவர் மார்க் ட்வைன் ஆவார். A Connectucut Yankeein King Arthur’s Court (1889) ஐப் படித்த எவரும் பிரெஞ்சுப் புரட்சியின் "பயங்கரத்தன்மை" பாதுகாக்கப்படுவதற்கு ட்வைனின் வாதங்களையும் அவருடைய பொதுவாக பிரபுத்துவத்தை அழிப்பதற்கான சற்றே குருதி கொட்டிய வாதிடலையும் மறக்க முடியாது.

ட்வைன் மேலும் கூறினார்: "ஒரு குற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரியணை ஒருபோதும் இருந்ததில்லை"; "முடியாட்சி முறை, எந்த வகையிலும், மனித குலத்திற்கு ஓர் அவமதிப்பு ஆகும்."

1888 ஆம் ஆண்டு தன்னுடைய நாட்குறிப்பில் நாவலாசிரியர் தெரிவித்தார்: "உலகில் இருக்கும் தற்போதைய ஆண் மன்னர்களை எடுத்துக் கொள்ளுவோம் – அவர்களை அப்பட்டமாக நிர்வாணம் ஆக்குவோம். அவர்களை 500 நிர்வாணப் பொறியியல் தொழிலாளிகளுடன் கலக்க வைத்து, பின்னர் முழுக் குழுவையும் ஒரு சர்க்கஸ் வளையத்திற்குள் அணிவகுத்து வரச் செய்வோம்.—இதற்கு உரிய கட்டணமும் வசூலிக்கத்தான்பட வேண்டும். மக்கள் மன்னர்களை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பார்ப்போம். அவர்களால் முடியாது. அவர்கள் மீது நீல வண்ணம் அடித்தால்தான் பிரிக்க முடியும். புறத்தோற்ற வேறுபாடுகள் இருந்தால் ஒழிய ஓர் அரசனைத் தொழிலாளியிடம் இருந்து பிரித்துக் கூறமுடியாது.

எனவே தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடைய செய்தி ஊடக முகவர்கள் எதற்காக ஆ, ஊ என்றும் இழிந்த முறையிலும் வின்சர் குடும்பம் குறித்து நினைக்க வேண்டும்? அவர்களோ ஆண்டு ஒன்றிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் செலவினை பிரித்தானிய மக்களுக்கு வைக்கின்றனர். அவர்கள் சொந்த, முறையற்ற வகையில் சேர்த்த சொத்தை பரந்த அளவில் கொண்டுள்ளனர் (2010ம் ஆண்டு போர்பஸ் இதழ் இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் அரை பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது).

மிகவும் ஏற்புடைய பதில், அமெரிக்காவின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதலில் உள்ளது. இப்பொழுது அமெரிக்கா, நிதிய-பெருநிறுவன பிரபுத்துவத்தால் ஆளப்படுகிறது. இது கூறமுடியாத அளவிற்கு மூன்றாம் ஜோர்ஜுடனும் ஜெபர்சன் டேவிசுடனும் பிணைப்பு கொண்டுள்ளதே ஒழிய பைன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் அடிமைமுறை அகற்ற விரும்பியவர்கள், ட்வைன் அல்லது அமெரிக்க வரலாற்றின் முக்கிய மனிதர்கள் எவருடனும் அல்ல.

"டோரிக்கள்" கூட்டம் (புரட்சிகரப் போர்க்காலத்தில் கிரீடத்திற்கு விசுவாசமாக இருந்தவர்கள்) மற்றும் "பித்தளைத் தலையர்கள்" (உள்நாட்டுப் போரில் தெற்குப் பகுதிக்கு ஆதரவு கொடுத்தவர்களை) தற்பொழுது அமெரிக்காவை ஆள்பவர்களை, பிரித்தானிய முடியாட்சி மற்றும் அடிமை முறையை எதிர்த்து நிற்பதாக எவரேனும் கற்பனை செய்ய முடியுமா? ஒரு கணம் கூட முடியாது. இவர்கள் அதே மனித மற்றும் சமூக வளத்தில் இருந்து வந்தவர்கள்.

அமெரிக்காவின் பல மில்லியனர்களும், பில்லியனர்களும் அவர்களை சூழ்ந்துள்ளவர்களும் பிரித்தானியாவின் "நெறியான" அரசுமுறை மற்றும் பிரபுத்துவத்தின் இழிந்த பிரிவினரையும் பொறாமையுடன் காண்கின்றனர்; அத்தகைய மதிப்பை தாங்களும் நாடுகின்றனர். "சாதாரண மக்களை" முந்தைய காலத்தில் பிரபுக்கள் பெரிதும் வெறுத்ததைப்போல்தான் வெறுக்கின்றனர்.

கூட்டமைப்பின் துணைத் தலைவர் (ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் லிங்கன் படத்தில் ஒரு பாத்திரமுமான) அலெக்சாந்தர் எச். ஸ்டீபன்ஸுடன் மார்ச் 1861 உரை ஒன்றில் கூறியதாக வரலாற்றாளர் ஜேம்ஸ் மக்பெர்சன் குறிப்பிட்டபடி, பழைய கூட்டமைப்பு அமெரிக்கா என்று அறியப்பட்டது, தவறான கருத்தான அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்பதில் நிறுவப்பட்டது என்பதுடன்தான் அவர்கள் உடன்படுவர். (This Mighty Scourge, 2007)