சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Darwin commemoration highlights US-Australia military ties

டார்வின் நினைவுநாள் அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவப் பிணைப்புக்களை உயர்த்திக் காட்டுகிறது

By Mike Head
22 February 2012

use this version to print | Send feedback

பல ஆண்டுகளாக உத்தியோகபூர்வமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத, ஜப்பானியர்கள், வட ஆஸ்திரேலிய நகரமான டார்வினை பெப்ருவரி 1942ல் குண்டுவீசித் தாக்கிய ஆண்டுதினம் கடந்த வார இறுதியில் ஒரு தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படும் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வலையில், கில்லார்ட் அரசாங்கம் முதலில் இப்புதிய ஆண்டு நினைவுநாள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை மூன்று மாதங்களுக்கு முன்பு, நகரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வருகையைத் தொடர்ந்து முன்வைத்திருந்தார்.

 

பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டும் பல பிரமுகர்களும், குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்கத் தூதர் ஜேப்ரி ப்ளீக்சும் முன்பு அதிகம் கட்டியம் கூறப்படாத நிகழ்வின் 70வது ஆண்டு நிறைவுதினத்தை ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான நாட்களுள் ஒன்று, அமெரிக்க-ஆஸ்திரேலிய உறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது என்றும் அறிவித்தனர். குண்டுவீச்சை நினைவூட்டும்முகமாக நடாத்தப்பட்ட  விழாக்களில், USS Peary, டார்வின் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் இருந்த 89 அமெரிக்கக் கடற்படையினர் மரணம் அடைந்ததற்கும் மற்றும் $10 மில்லியன் மதிப்பில் டார்வின் அனுபவத்தைப் பாதுகாக்க என்ற தலைப்பில் போர் இடைத்தொடர்புகள் குறித்த அருங்காட்சியகமும் திறக்கப்பட்டது.

 

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக இருண்ட தினம் பற்றிக் குறிப்பிட்ட கில்லார்ட், இது நம்நாட்டின் வரலாற்றில் எப்பொழுதும் ஆஸ்திரேலியாவின் பேர்ல் ஹாபர் எனப் பொறிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். 1942, பெப்ருவரி 19 ஆஸ்திரேலியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போருக்கு முந்தைய இருந்த நீண்டநட்பு உறுதியானதும் எப்போதும் நீடித்திருக்கும்  கூட்டாகவும் மாறியது என்று அவர் அறிவித்தார்.

இதேபோல், உயர்ஆளுனர் க்வென்டின் பிரைஸ் பிரிட்டிஷ் குடியேற்றம் கண்டத்தில் தொடங்கிய தினமான ஜனவரி 26ஐப் போலவே  பெப்ருவரி 19 முக்கியமானது என்றார். அதேபோல் ஆஸ்திரேலிய கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஜனவரி 1, ஆஸ்திரேலிய படையினர் முதலாம் உலகப் போரில் காலிப்போலியில் (Gallipoli) இறங்கிய நாள் ஆகியவற்றைப் போலவும் முக்கியமானது என்றார். 1942 பெப்ருவரி 19க்குப் பின், ஆஸ்திரேலியர்கள் இறுதியில் நம் பாதுகாப்பு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது என்பதைப் பாராட்டி உணரத் தொடங்கினர் என்றார்.

செய்தி ஊடகத் தகவல்களில் முற்றிலும் புதைந்துபோனது ஆஸ்திரேலிய போர்த்தடுப்பு மருத்துவ அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றாகும். இது இப்பொழுது போர்நடவடிக்கைகளை நினைவுகூரும் ஐந்து வருடாந்த தினங்கள் உள்ளன என்று கூறுகிறது. 2008ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் அதில் மூன்றை சேர்த்தது. டார்வின் குண்டுவீச்சிற்குள்ளான தினம், ஆஸ்திரேலியாவிற்கான போராட்ட நாள் (1942-43 பசிபிக் போர்), வணிகக் கடற்படை தினம் (போர்க்காலத்தில் வணிகக் கடல்பாதுகாப்புப் பிரிவினர் பணியாற்றியது)இவை Anzac Day (காலிப்போலி), நினைவுநாள் (இரண்டாம் உலகப்போர்) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. இப்படிச் சேர்க்கப்பட்டவை நம் தேசிய நினைப்பை இராணுவவாதம் ஊடுருவி மேலோங்குவதை எடுத்துக்காட்ட உதவுகின்றன என்று அமைப்பு மேலும் கூறியுள்ளது.

டார்வின் குண்டுவீச்சு நாள் என்று பிரகடனப்படுத்தப்பட்டது உண்மையில் அன்று என்ன நடந்தது என்பதின் மூலம் விளக்கப்பட முடியாததாகும். ஏனெனில் உத்தியோகபூர்வ அக்கறையின்மை சிறுநகரத்தின் பாதுகாப்புமுறைகள் போதுமானவையாக இல்லாததோடு,  தயாராகவும் இல்லாதிருந்தது. குண்டுகள் ஏற்கனவே விழத் தொடங்கும் வரை எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்படவில்லை. ஜப்பானிய விமானங்கள் கிட்டத்தட்ட 250 பேரைக் கொன்றபின், எட்டு கப்பல்கள் மற்றும் 20 விமானங்களை அழித்தபின்னர்தான் எங்கும் பீதி தொடர்ந்தது. இராணுவத்தின் ஆணைகள் குழம்பியிருந்தன, திசையற்று இருந்தன. இதனால் இராணுவத்தில் இருந்து தப்பியோடுதல், கொள்ளை அடித்தல் மற்றும் நகரத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறியது ஆகியவை நேர்ந்தன. இதன்பின் நடந்த நீதி விசாரணை ஒன்று தாக்குதலுக்கு பிரதிபலிப்பு வருந்தத் தக்கது என்று விவரித்தது.

உத்தியோகபூர்வ கட்டுக்கதை இயற்றுவதற்கு மாறாக, ஆஸ்திரேலியா மீது படையெடுப்பதில் ஜப்பான் தீவிரமாக இருந்தது என்பதற்காக டார்வின் தாக்கப்படவில்லை. மாறாக டார்வின் அப்பொழுது டோக்கியோவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஆசிய-பசிபிக் பகுதியின்மீதான கட்டுப்பாட்டிற்கான போரில் ஒரு அமெரிக்க இராணுவத் தலைமையிடமாக இருந்தது.

இந்நிகழ்வுகளை இன்று பெருமைப்படுத்துவது கடந்த போருடன் உள்ள தொடர்பையும் விட அடுத்த போருக்கான தயாரிப்புக்களுடன்தான் தொடர்புகளைக் கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஒபாமா வருகை புரிந்தது, அவருடைய நிர்வாகம் சீனாவிற்கு எதிராக இராஜதந்திர, இராணுவ முறையில் மோதுவதற்கான ஆக்கிரோஷமான உந்துதலில் ஒரு பகுதியாகும். இது இப்பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் எழுச்சி பெறும் பொருளாதாரச் செல்வாக்கை தீர்மானகரமாக அடக்குவதற்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மரைன்களை டார்வினில் தளம் கொள்ள வைக்கும் திட்டங்களை ஒபாமா அறிவித்தார். இதேபோல் ஆஸ்திரேலியத் துறைமுகங்கள் மற்றும் விமானத்தளங்கள் அமெரிக்கப் பயன்பாட்டிற்கு விரிவாக்கப்படும். கூட்டுப் பயிற்சிகள் அதிகப்படுத்தப்படும். பின்னர் ஆஸ்திரேலிய படைகளிடம் பேசிய அவர் இத்தகைய கூடுதலான நிலைப்பாடு தென்கிழக்கு ஆசியா முழுவதும் அமெரிக்க இராணுவச் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்றார். இப்பிராந்தியம் உலகின் மிகச் சுறுசுறுப்பான கடல்வழிப்பாதைகளைக் கொண்டுள்ளது. நம் அனைவருடைய பொருளாதாரங்களுக்கும் அவை முக்கியமானவை ஆகும். நெருக்கடியான காலத்தில் டார்வின் முக்கிய மையமாக இருந்தது என்று ஒபாமா அறிவித்தார்.

பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான இராணுவப் பிணைப்புக்களை கொண்டுள்ள வாஷிங்டனின் தாக்குதல் நிலைப்பாட்டின் முக்கிய கூறுபாடு அமெரிக்கப் படைகளை தென்சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி, லோம்போக், மகஸ்ஸர், சிபுடு, மொன்டோரா ஆகியவற்றிற்குச் செல்லும் சீன வணிகப் பாதைகளை அணுகமுடியாமல் வெட்டிவிடும் சாத்தியப்பாட்டை கொள்வது ஆகும். இந்த நெரிக்கும் இடங்கள் ஊடாகத்தான் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை இந்திய, பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே கப்பல்களால் எடுத்துச் செல்லப்படுகின்றன.

டார்வின் மூலோபாயப் பகுதியில் இருப்பது, இக்கடல்பாதைகளைத் தாக்கக்கூடிய திறன் உள்ள அருகாமையில் இருப்பது என்பது அமெரிக்கத் தூதர் ப்ளீக்கினால் கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் News24 அலைவலிசையில் ஒரு பேட்டியின்போது குறிப்பாக அறிவிக்கப்பட்டது. உலகில் மிக முக்கிய மூலோபாய இடங்களில் டார்வினும் ஒன்று என அவர் விளக்கினார். ஏனெனில் தென்சீனக் கடல் பகுதி மற்றும் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகே அது உள்ளது.

டார்வின் போர் அருங்காட்சியகத்தில் பேசிய ப்ளீக் நகரத்திற்கு வரவிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் பற்றி கட்டியம் கூறினார். ஆனால் உத்தியோகபூர்வமாக கூறப்படும் கருத்தான இதன் நோக்கம் சமாதானத்திற்கு என்பதை வலியுறுத்தினார். விரைவில் அமெரிக்க, ஆஸ்திரேலிய துருப்புக்கள் அருகருகே டார்வினில் பயிற்சிகளை எடுக்கும். இரு நாடுகளும் நம் மக்கள் ஒன்றாக மிகக்கடினமாக, நீண்டகாலமாக உழைத்துவரும் சமாதானத்தை பாதுகாப்பதற்கு உதவும். இதற்காக பல ஆண்களும் பெண்களும் தங்கள் உயிரையே கொடுத்துள்ளனர். என்றார்.

ஜப்பானுக்கு எதிரான 1941-45 அமெரிக்க போரில் சமாதானம் பற்றி ஏதும் இல்லை. அது ஹிரோஷமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அது அமெரிக்காவை மேலாதிக்கம் கொண்ட பசிபிக் சக்தி என நிறுவியது. அதேபோல் இன்று வாஷிங்டனின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிலும் சமாதானம் பற்றி ஏதும் இல்லை. உலகப் பொருளாதார நெருக்கடியின் நடுவே, தன் ஒப்புமையில் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை ஈடுகட்டுவதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் போட்டி நாடுகளை, எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிற்கு குழிபறிக்க இராணுவத்தில் தங்கியுள்ளது.

இதேபோல் வட ஆஸ்திரேலியாவை அமெரிக்கப் படைகளுக்கு தொழிற்கட்சி அரசாங்கம் திறந்துவிடுவதும், பாதுகாப்பு என்று இல்லாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத்தான் காட்டுகிறது; இது சீனாவுடன் எத்தகைய அமெரிக்க மோதல் வந்தாலும் இந்நாட்டை முன்னணியில் நிறுத்தும். டார்வின் நினைவுநாளை திகட்டிப் போகும் அளவிற்கு செய்தி ஊடகம் தகவல் கொடுத்தது ஆஸ்திரேலியாவின் ஆபத்திற்குட்பட்ட வடக்கு பற்றிய அச்சுறுத்தலின் அச்சங்களை அதிகப்படுத்தி, தொழிற்கட்சி அமெரிக்க இராணுவவாதத்திற்கு கொடுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை நியாயப்படுத்துவதற்கும் மற்றொரு பசிபிக் போர் என்னும் உண்மையான ஆபத்துக்களை மூடிமறைக்கவும்தான் பயன்படுகிறது.

தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிற்கும் பசுமை வாதிகள் உட்பட முழு அரசியல் ஆளும்தட்டும் இதில் உடந்தையாக உள்ளன. பசுமைவாதிகள் கடைப்பிடிக்கப்படும் இப்புதிய தினத்தை பகிரங்கமாக வரவேற்றனர். தங்கள் நாட்டிற்காக உயிர்நீத்தவர்களின் தியாகங்களை ஆஸ்திரேலியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை நான் ஊக்குவிக்கிறேன். என்று பசுமைவாதிகளின் முன்னைய இராணுவத்தினரின் விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் செனட்டர் பென்னி ரைட், செய்தி ஊடகத்திற்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் பசுமைவாதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கியப் போர்களுக்கு எதிரானவர்கள் எனக் காட்டிக் கொண்டனர். ஆனால் அவர்களுடைய நிலைப்பாட்டில் கொள்கை அடித்தளம் ஏதும் இருந்ததில்லை. மாறாக அது எப்பொழுதும் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு திரும்பப் பெறப்பட வேண்டும், அதையொட்டி ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்கள் பாதுகாக்கப்படும் என்று விரும்பினர். ஆனால் டார்வின்மீது குண்டுத்தாக்குதல் பற்றி நினைவுகொள்ளப்படும் தினத்தில், பசுமை வாதிகள் அமெரிக்காவிற்கும் கில்லார்ட் அரசாங்கத்திற்கும், சீனாவுடன் மோதலை வளர்ப்பதற்கு முற்றிலும் உறுதி பூண்டுள்ளனர்.

அமெரிக்கக் கூட்டிற்கு உறுதியான, நீடித்த வனப்பான கில்லார்டின் பாராட்டுரை வேண்டும் என்றே அவருடைய அரசாங்கம் வாஷிங்டனுடன் கொண்டுள்ள பிரச்சினைக்கிடமில்லாத உடன்பாட்டை பகிரங்கமாக நினைவுபடுத்துவதாகும். ஒபாமா நிர்வாகம் 2010ல் இவருக்கு முன் பிரதமராக இருந்து கெவின் ரூட்டை அகற்றுவதில் தெளிவான தொடர்பைக் கொண்டிருந்தது. அவர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உறவுகளை நிதானப்படுத்தும் தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இப்பொழுது கில்லார்டின் தலைமையை ருட் சவால்விடத் தயாராக இருப்பது போல் தோன்றுகையில், கில்லார்ட் அமெரிக்காவிற்குத் தன் தளராத உறுதிப்பாட்டை மறுபடியும் கூறுவதற்கு அக்கறையுடன் உள்ளார்.
 

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

Obama lays down the challenge to China
 

Australia lines up with US for war with China