சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Drones come to the US

ஆளில்லா போர் விமானங்கள் அமெரிக்காவினுள் நுழைகின்றன

Bill Van Auken
21 February 2012

use this version to print | Send feedback

மத்திய விமான ஆணையத்தின் 63 பில்லியன் டாலர் நிதி-ஒதுக்கீட்டு சட்டமசோதாவில் செய்யப்பட்ட பெரிதும் கவனத்தை ஈர்க்காத ஒரு  திருத்தம் அமெரிக்காவின் ஜனநாயக உரிமைகளில் அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டுள்ளன.  

“FAA நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்த சட்டம்-2012” (FAA Modernization and Reform Act of 2012) என்ற சட்டமசோதாவைச் சட்டமாக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பெப்ரவரி 14இல் கையெழுத்திட்டார். அது பொதுவாக ஆளில்லா போர் விமானங்கள் (Drone) என்றழைக்கப்படும் ஆளில்லாத வான்வழி விமானங்களை (Unmanned Aerial Vehicles -UAV) அமெரிக்கா முழுவதிலும் பரந்தளவில் பயன்படுத்துவதற்கு வழியைத் திறந்துவிடுகிறது.  

இந்த மாத தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட அந்த சட்டமசோதா, வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பார்ந்த வளர்ச்சிக்கும் மற்றும் உள்நாட்டில் பொலிஸ் ஆட்சி ஒடுக்குமுறை உறுதியாக முன்னெடுக்கப்படுவதற்கும் இடையிலுள்ள தொடர்பை அடிக்கோடிடுகிறது.

அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில்" படுகொலைகளுக்கான கருவிகளாக விளங்கும் ஆளில்லா போர் விமானங்கள் (டிரோன்கள்) உலகம் முழுவதும் இழிபெயர் பெற்ற ஒன்றாகியுள்ளது. 2001இல் அமெரிக்க இராணுவ வான்வழி தாக்கும் ஆயுதங்களில் வெறுமனே 50 ஆளில்லா போர் விமானங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அது, வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய ரேவன் (Raven) ஆளில்லா விமானங்களிலிருந்து 28 மணி நேரங்கள் விடாமல் மனித இலக்குகள் மீது குண்டுமழை பொழியும் மற்றும் நாசகரமான விளைவுகளோடு ஹெல்பயர் (Hellfire) ஏவுகணைகளை வீசும் சக்திவாய்ந்த ப்ரீடேடர்கள் (Predators) மற்றும் ரீபெர்கள் (Reapers) வரையில் சுமார் 7,500 விமானங்களின் ஒரு தொகுதியை உள்ளடக்கி உள்ளது.    

பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலுள்ள வறிய கிராமங்களின் மீது கொலைமழையைப் பொழிந்து கொண்டிருப்பதற்கு யார் காரணமென்பதை பாகிஸ்தானிய மக்கள் நன்கறிந்திருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பட்டவர்த்தனமாக இருந்த ஓர் இரகசிய டிரோன் யுத்தத்தைக் கடந்த மாதம் தான் ஒபாமா பகிரங்கமாக பாராட்டினார். டிரோன் தாக்குதல்கள் ஒபாமா நிர்வாகத்தின் போது தீவிரமாக அதிகரித்துள்ளன. 2004இல் இருந்து அவற்றால் சுமார் 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பான்மையினர் நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.  

யேமன், சோமாலியா மற்றும் ஏனைய இடங்களிலும் CIA படுகொலைகளை நடத்த ஆளில்லா போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் இலக்குகளில் புது மெக்சிக்கோவில் பிறந்த இஸ்லாமிய மதகுரு அன்வர் அல்-அவ்லாகி போன்ற அமெரிக்க குடிமக்களும் உள்ளடங்குவர். அவர் மீது ஒருபோதும் குற்றம்சாட்டப்படாமல் அல்லது சட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக ஒரேயொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

இத்தகைய படுகொலைகளும், சதிவேலைகளும் தொலை இயக்கிகள்- remote-control- மூலமாகவே நடத்தப்பட்டுவிடுகின்றன. CIA மற்றும் இராணுவ நபர்கள் அவர்களின் பலிக்கடாக்களை நெவேதா (Nevada) பாலைவனத்திலுள்ள இரகசிய அறைகள் மற்றும் வெர்ஜீனியாவின் லாங்லேவிற்கு அருகிலுள்ள அலுவலகங்களின் கணினி திரைகளிலிருந்து இலக்கு வைக்கின்றன

இப்போது இந்த தொழில்நுட்பம் உள்நாட்டிலும் நுழைகிறது. ஒபாமாவால் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்ட சட்டத்தின்படி, அரசுத்துறைகள் அவற்றின் சொந்த டிரோன்களை அமெரிக்க மண்ணில் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெறும் அந்த நிகழ்முறையைத் துரிதபடுத்தும் விதமாக, 90 நாட்களுக்குள் மத்திய விமான ஆணையம் அனுமதி (FAA) வழங்கியாக வேண்டும். சிறிய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கு அரசின் எந்தவொரு "மக்கள் பாதுகாப்பு அமைப்பும்" ஏறத்தாழ உடனடியாக அனுமதி வழங்கி ஆக வேண்டும். ஆறு மாதங்களுக்குள், டிரோன்களை நாடு முழுவதிலும் உள்ள ஆறு பரிசோதனை பகுதிகளில் "தேசிய வான்வழி அமைப்புமுறைக்குள்" ஒருங்கிணைக்க ஒரு முன்னோடி திட்டத்தையும் FAA ஸ்தாபித்தாக வேண்டும்.

இராணுவம், பொலிஸ் மற்றும் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான டிரோன்கள் உட்பட 2020 இல் 30,000 ஆளில்லா விமானமுறை அமைப்பு அமெரிக்க வான்வழியில் வலம்வரக்கூடும். அவை ஏற்கனவே அமெரிக்க எல்லைப்பகுதிகளைக் கண்காணிப்பதில் உள்நாட்டு பாதுகாப்பு துறையால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லோக்ஹீட் மார்டின், போயிங், ஜெனரல் டைனமிக்ஸ், நோர்த்ரோப் க்ரூம்மென் மற்றும் ரேய்தியோன் போன்ற இராணுவ-தொழில்துறை நிறுவனங்களும் இச்சட்டத்தின் வசனங்களை எழுதிய அவற்றின் அரசியல் பிரச்சாரகாரர்களும் அடங்கிய ஆளில்லா விமானமுறைக்கான சர்வதேச அமைப்பே (Association for Unmanned Vehicle Systems International) இந்த சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாகும். இந்த தரகர்களே அந்த சட்டமசோதாவின் எழுத்துக்களை எழுதியதாக கூறப்படுகிறது. டிரோன்களுக்கான சந்தை ஏற்கனவே ஆண்டுக்கு 6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அது அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதலாவதாக இந்த டிரோன்களின் பெருக்கம் அமெரிக்க குடிமக்கள் மீது ஒரு பரந்த அரசு வேவுபார்ப்பு விரிவாக்கத்திற்கு களம் அமைக்கிறது. டிரோன்கள் கொண்டிருக்கும் நவீன வேவுபார்ப்பு சாதனங்கள் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்த உடனேயே அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ-பதிவு செய்வது மட்டுமின்றி, அவர்களின் மின்னியல் தொலைதொடர்பு மற்றும் கைத்தோலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்கும் திறனையும் பெற்றுள்ளன.

அமெரிக்க விமான வலயத்தில் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த தரவுகளைக் கோரி மின்னணு பயன்பாட்டு சுதந்திரத்திற்கான அமைப்பு (EFF) ஒரு வழக்கு பதிவு செய்திருக்கின்ற நிலையில், EFF தலைமை வழக்கறிஞ்ஞர் ஜெனிபர் லென்ச் கடந்த மாதம் கூறுகையில், “அமெரிக்கர்களின் அசைவுகளையும், நடவடிக்கைகளையும் துல்லியமாகவும் மற்றும் பிரத்தியேகமாகவும் சேகரிக்க டிரோன்கள் அரசாங்கத்திற்கும் ஏனைய (ஆளில்லா விமானமுறை அமைப்பு) செயல்பாட்டாளர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த புதிய வேவுபார்ப்பு கருவியாக உள்ளது,” என்று எச்சரித்தார்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவிற்குள் டிரோன்கள் ஆயுதமேந்தி இருக்காது என்பதையும், பாகிஸ்தானில் அதன் கொலை வெறியாட்டத்திலிருந்தும் அவ்லாகி படுகொலையிலிருந்தும் அமெரிக்க அரசாங்கம் பெற்ற அனுபவத்தை அமெரிக்காவிற்குள் அது பயன்படுத்தாமல் விடாது என்பதையும், நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. கடந்த டிசம்பரில் ஒபாமாவால் சட்டமாக்க கையெழுத்திடப்பட்ட தேசிய பாதுகாப்பிற்கான அனுமதி சட்டத்தின் (National Defense Authorization Act) வரிகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட வாதங்களை, இந்த விஷயத்திலும் நினைவுபடுத்தி பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.

அந்த சட்டமசோதாவின் மூலமாக, அமெரிக்க மண்ணில் கைது செய்யப்பட்ட அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரை வேண்டுமானாலும் சட்ட-ஆய்வின்றி காலவரையில்லாமல் குற்றவாளியாக இராணுவ கைதில் வைத்திருக்க, ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் கூடுதல் அதிகாரம் வழங்குவதை அமெரிக்க காங்கிரஸ் அந்த சட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

"பயங்கரவாதத்திற்கு எதிரான உலக யுத்தம்" அமெரிக்கா உட்பட முழு கோளையும் ஒரு யுத்தகளமாக மாற்றியுள்ளது என்பதே காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முன்வைக்கும் காரணமாக உள்ளது. இந்த பிற்போக்குத்தனமான வாதத்திற்கு உடன்படும் ஓர் அரசாங்கம் டிரோன்களை வெளிநாடுகளில் வழக்கமாக கொலைகளுக்கு பயன்படுத்தி வருகின்ற நிலையில், அது மக்களைக் கொல்ல அமெரிக்காவிற்குள்ளே டிரோன்களைப் பயன்படுத்தாது என நம்புவதற்கு அங்கே எந்தவொரு காரணமும் இல்லை.   

ஒபாமா நிர்வாகம் மற்றும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இரண்டினது ஆதரவுடன் ஊடகத்திற்குள்ளிருந்து அல்லது ஒட்டுமொத்த ஆளும்தட்டிற்குள்ளே இருந்து வெறுமனே ஒரேயொரு வார்த்தை எதிர்ப்பு கூட இல்லாமல், முழுவீச்சில் அமெரிக்க இராணுவ-பொலிஸ் ஆட்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டுவருகின்றது.  

இந்த நிகழ்போக்கின் அடித்தளத்தில், செல்வவளத்தையும் அதிகாரத்தையும் ஏகபோகமாக்கும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் மக்களின் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூகத்துருவப்படுத்தல் உள்ளது.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி இந்த துருவப்படுத்தலை ஆழப்படுத்தியுள்ளதோடு புத்துயிர்ப்புபெற்ற வர்க்க போராட்டத்தின் முதல் அறிகுறிகளையும் தூண்டிவிட்டிருக்கும் நிலைமையின்கீழ், ஆளும் வர்க்கம் வெளிநாடுகளில் அதன் நலன்களை முன்னெடுக்க எந்தமாதிரியான இரத்தந்தோய்ந்த முறைகளைப் பயன்படுத்தியதோ அதே முறைகளை உள்நாட்டில் அதிகாரத்தின் மீது அதன் பிடியைப் பாதுகாக்க திருப்பி வருகின்றது.