சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Another year of death and destruction in the AfPak War

ஆப்-பாக் போரில் இன்னொரு ஆண்டு இறப்பும் பேரழிவும்

By James Cogan
3 January 2012

use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்பின் இந்த பத்தாம் ஆண்டு முழுப் போர்க்காலத்திலும் மிக அதிக இறப்புக்களையும் அழிவுகளையும் கொடுத்ததாக இருந்தது. 2011ல் 140,000க்கும் மேற்பட்ட அமெரிக்க, வெளிநாட்டுத் துருப்புக்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் தீவிரமான செயற்பாடுகளை மேற்கொண்டு இஸ்லாமிய தாலிபன் மற்றும் பிற எதிர்ப்பு இயக்கங்கள் நடத்திய எழுச்சிகளை நசுக்க முற்பட்டன. அதே நேரத்தில் CIA வடமேற்குப் பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளில் இருப்பதாகக் கூறப்படும் எழுச்சியாளர்கள் மீதான சட்டவிரோத ஆளற்ற விமான டிரோன் தாக்குதல்களையும் மேற்கொண்டது.

டிசம்பர் 3ம் திகதி பிரிட்டிஷ் படையினர் ஒருவர் தெற்கு மாநிலமான ஹெல்மாண்டில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை ஆப்கானிஸ்தானில் 2011ம் ஆண்டு அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த இறப்பு எண்ணிக்கையை 566 எனக் கொண்டுவந்தது. 2010ம் ஆண்டில்தான் இதையும் விட அதிக இறப்பு எண்ணிக்கை இருந்தது. அந்த ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் போர் விரிவாக்கத்தின் முதல் ஆண்டில், பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை நாட்டின் மிகக் கொந்தளிப்பான பகுதிகள் சிலவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆண்டு மொத்தம் 711 அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் படையினர் தங்கள் உயிர்களை இழந்திருந்தனர்.

செபடம்பர் 11, 2011 முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ கால்தடத்தை பதிப்பிக்க ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தப்பட்டன. இதில் மொத்தம் 1,864 அமெரிக்க மற்றும் 723 பிறநாட்டுத் துருப்புக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். குறைந்தபட்சம் 20,000 பேர் காயமுற்றனர். போரை தொடர்ந்த பெரும் அழுத்தங்களினால் விளையும் உளரீதியான பெரும் சோர்வு நிலை உற்ற பதினாயிரக்கணக்கான துருப்புக்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதமேந்திய ஆப்கானிய எதிர்ப்பு 2011ல் சிறிதும் குறையாமல் தொடர்ந்தது. அத்தகைய எதிர்ப்பு மிகப் பாதுகாப்பான காபூல் இன்னும் பிற நகரங்களிலும் விரிவாகியது. அமெரிக்க ஆதரவு பெற்ற கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாயியின் ஆட்சியிலுள்ள முக்கிய நபர்களும் அவற்றின் இலக்குகளில் அடங்கியிருந்தனர். கர்சாயியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆட்சியில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவருமான அஹ்மத் வாலி கர்சாயி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். செப்டம்பர் மாதம் காபூலில் இருக்கும் அமெரிக்கத்தூதரகம் தாக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து முன்னாள் ஆப்கானிய ஜனாதிபதி பர்ஹனுதின் ரப்பானி தலிபானின் சமாதானப் பேச்சுக்களை நடத்தவந்தவர்கள் எனக் கூறப்படுபவர்களைச் சந்திக்கையில் கொலையுண்டார்.

அதிக கவனம் செய்தி ஊடகத்தால் கொடுக்கப்படாத நிலையில், ஆப்கானிய பொலிசார் குறைந்தப்பட்சம் ஆண்டு நடுப்பகுதிவரை நாள் ஒன்றிற்கு எட்டு பேராவது கொலை செய்யப்பட்டனர். 2011ல் 2,000க்கும் மேற்பட்ட பொலிசார் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான ஆப்கானிய இராணுவத்தினரும் அவ்வாறே மடிந்து போயினர்.

ஆப்கானிய அரசாங்கத்தினுள்ளும் பாதுகாப்புப் படைகளினுள்ளும் எழுச்சியாளர்கள் ஊடுருவி நிற்கும் தன்மை, மற்றும் ஆக்கிரமிப்பிற்கு மக்களிடையே உள்ள பரந்த எதிர்ப்பு ஆகியவை ஒரு தொடராக தங்கள் தளத்திற்குள்ளேயே கொல்லப்பட்ட ஆப்கானிய படையினர் அல்லது காயமுற்ற வெளிநாட்டு படையினரின் எண்ணிக்கையினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது

தலிபான்கள் ஏராளமான பேர் இறந்தபோதிலும்கூட, போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய எத்தனை ஆப்கானியர்கள் இறந்துவிட்டனர் என்பது குறித்த துல்லியமான புள்ளிவிவரம் இல்லை என்றாலும், விக்கிபீடியா கணக்கை அடிப்படையாகக் கொண்ட ஊடகக் குறிப்புக்கள் எழுச்சியாளர்கள் 2011 ம் ஆண்டின் கடைசி 9 மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 4,275 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன. போர் தொடங்கியத்தில் இருந்து ஆப்கானிய எழுச்சியாளர்களின் இறப்பு எண்ணிக்கை எளிதில் 50,000 ஐக் கடந்துதான் நிற்கும்.

ஆனால் எழுச்சியாளர்கள் தொடர்ந்து போராளிகளை அணிதிரட்ட முடிகிறது. இதற்குக் காரணம் ஆக்கிரமிப்பு மற்றும் கார்சாயி அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன வெறுப்பு உணர்வும் மக்களை எதிர்கொள்ளும் அவநம்பிக்கையற்ற நிலைமைகளும்தான்.

எதிர்வரும் ஆண்டில் வறிய நிலையும் இடர்ப்பாடுகளும் இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறு கட்டமைப்பு இன்னும் பிற உதவி என்பதில் பல பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டாலும்கூட, ஆப்கானியர்களில் குறைந்தப்பட்சம் மூன்றில் இரு பங்கினர் மோதுமான உணவை இல்லாமல் இருக்கின்றனர். நாடெங்கிலும் வேலையின்மை குறைந்தது 50 சதவிகிதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காபூலின் மக்கட்தொகை 2001ல் ஒரு மில்லியன் என்பதில் இருந்து இன்று நான்கு மில்லியன் என அதிகரித்துள்ளது. மரபார்ந்த விவசாயத்துறையை நம்பியிருந்த மக்கள் இப்பொழுது சர்வதேச உணவு உதவியைப் பெறுவதற்காக வெள்ளமென தலைநகரில் குழுமியுள்ளனர். பரிதாபத்திற்குரிய வகையில் இருக்கும் நகர்ப்புறச் சேரிகளில் மின்வசதி, சாக்கடை வசதிகள் அல்லது பாதுகாப்பான குடிநீர் வசதி ஆகியவை இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வரும் ஆண்டு ஊட்டமின்மை பெரிதும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. பெரிய நாடுகளை பீடித்துள்ள நிதிய நெருக்கடி உலக உணவுத் திட்டத்திற்கான நன்கொடைகளைப் பெரிதும் பாதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. 2011ல் அவசரக்கால உதவியாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் 7.3 மில்லியன் மக்களுக்கான உதவிக்கு செலவழிக்கப்பட்ட 400 மில்லியன் டாலரில் பாதியைக் கூட ஐ.நா. இந்த ஆண்டு திரட்டுவது கடினமாக உள்ளது.

இம்மாதம் பிற்பகுதியில் ஐ.நா. 2011ல் ஆப்கானிய குடிமக்கள் இறப்பு எண்ணிக்கையை வெளியிட உள்ளது. ஆண்டின் முதல் பகுதியில் 1,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறப்புக்கள் இருந்தன என்றும்  இவை பெரும்பாலும் எழுச்சியாளர்களின் குண்டுத்தாக்குதலால் ஏற்பட்டவை அது முன்னதாகக் கூறியிருந்தது.. ஆனால் ஐ.நா. கொடுத்துள்ள தகவல் குறிப்பாக அமெரிக்கா சுமத்திய பொதுமக்கள் இறப்புக்களைப் பொறுத்தவரை போரின் உண்மையான மொத்த எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இன்டர் பிரஸ் சேர்விஸ் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அமெரிக்க நேட்டோ இராணுவத் தகவல்கள் குறித்த பகுப்பாய்வு ஒன்று 2010ல் 10 மாதங்களுக்குக் குறைவான காலத்திலும் 2011ல் முந்தைய மாதங்களிலும் 1,500க்கும் மேற்பட்ட குடிமக்கள் இரவுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் என்று குறிக்கிறது; இது ஆப்கானியப் போரில் குடிமக்கள் இறப்புக்கு அதிகமான காரணம் அமெரிக்கர்களின் இரவுத் தாக்குதல் என்று குறிப்பிடுகிறது.

பல சாதாரணக் குடிமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களும் வடமேற்குப் பாக்கிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். சமீபத்திய ஆண்டுகளில் இஸ்லாமிய பழங்குடி எழுச்சியாளர்களுக்கு எதிரான பாக்கிஸ்தானிய இராணுவ செயற்பாடுகளினால், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர் குடிபெயர்ந்தனர். பழங்குடி எழுச்சியாளர்கள் ஆப்கானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளுக்கு பாதுகாப்பும் உதவியும் அளித்து வந்தனர்.

பாக்கிஸ்தானுக்குள் ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கும், தன் இறைமையை மீறியும்கூட அமெரிக்காவுடன் தொடர்ந்து பாக்கிஸ்தான் அரசாங்கம் கொடுக்கும் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு பொதுஜன எதிர்ப்பு, நாட்டில் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதம் அமெரிக்க வான் தாக்குதல் ஒன்றில் 26 பாக்கிஸ்தானியர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்லாமாபாத் ஆட்சி அமெரிக்க நேட்டோ படைகளுக்குச் செல்லும் உணவு, எரிபொருள் மற்ற விநியோகங்கள் போக்குவரத்து அனைத்தையும் நிறுத்தும் வகையில் சாலைகளை மூடும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

ஆப்கானிஸ்தானத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டிருப்பதற்கு ஒபாமா நிர்வாகத்தின் ஒரே தீர்வு மற்றொரு ஆண்டும் இராணுவ அட்டூழியம்தான். அதே நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு 40,000 விரிவாக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்னும் அதன் உறுதி மொழிகளை அது காப்பாற்ற முற்படுகிறது.

அதே நேரத்தில் தலிபான் இன்னும் பிற எழுச்சித் தலைமைகளிடத்தில் அது சமாதானப் போக்கைக் காட்டி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் முயல்கிறது. கடந்த சில வாரங்களாக சர்வதேச செய்தி ஊடகங்களில் வளைகுடா நாடான கட்டாரில் ஒரு தலிபான் தொடர்பு அலுவலகம் நிறுவுதல் குறித்த அறிவிப்புக்கள் தோன்றின. அங்கு தீர்விற்கான விதிமுறைகள் குறித்து பேச்சுக்கள் விவாதங்கள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கீழ் எத்தகைய சமாதான உடன்பாடும் ஆப்கானிய மக்களுக்கு சோகத்தைத்தான் தரும். அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு ஏற்பட்டு ஒரு தசாப்தத்தை தொடர்ந்து, விளைவு காபூலில் ஜனநாயக விரோத ஆட்சி ஒன்று நிறுவப்படுவதாகத்தான் இருக்கும். அது வாஷிங்டனின் மூலோபாய பொருளாதார நலன்களைக் பாதுகாப்பதாகவும், போரினால் பேரழிவிற்கு உட்பட்ட மற்றும் அதனால் மக்களை பாரிய வறுமைக்குள் தள்ளிய ஒரு நாட்டினை நிர்வாகிப்பதாகவே இருக்கும்.