சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: The lessons of the NLC betrayal

இந்தியா: NLC காட்டிக் கொடுப்பின் படிப்பினைகள்

By the Socialist Equality Party (Sri Lanka)
11 July 2012

use this version to print | Send feedback

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் அமைந்திருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிறுவனத்தில் 14,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் நடத்திய 44 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டதானது இந்தியா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

எத்தனையோ இன்னல்களைச் சகித்துக் கொண்டு, NLC தொழிலாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்தி, மிதமிஞ்சிய இலாபங்களை ஈட்டும் பொருட்டு இந்தியா முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வரக் கூடிய ஒப்பந்த வேலை அமைப்புமுறையை சவால் செய்தனர். NLC இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும்

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் வேலையை நிரந்தரமாக்குவது ஆகியவை உட்பட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எதுவுமே பூர்த்தியாகாத நிலையிலேயே ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடன் இணைந்ததான அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)ஜூன் 3 அன்று போராட்டத்தை விலைபேசும் ஒரு ஒப்பந்தத்தில் NLC நிர்வாகத்துடன் கையெழுத்திட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது

வேலைக்குத் திரும்புவதற்கு சங்கம் அளித்த உத்தரவை ஏற்க வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களில் அநேகம் பேர் பல நாட்களுக்கு மறுத்தனர். நூற்றுக்கணக்கானோர் நெய்வேலியில் இருக்கும் உள்ளூர் AITUC அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர், அடுத்த நாளில் அத்தொழிற்சங்க வளாகத்தையும் சூறையாடினர். ஆயினும் ஒரு மாற்று அரசியல் முன்னோக்கும் தலைமையும் இல்லாத நிலையில், அவர்களால் தங்களது கிளர்ச்சியைத் தொடர்வதற்கு முடியாமல் போனது.

புறநிலையாகப் பார்த்தால், வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் போராடியது NLC நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமன்றி, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்தும் தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தை எதிர்த்தும் தான். தொழிலாளர்களின் கோரிக்கைகளை தோற்கடிப்பதில் இரண்டு அரசாங்கங்களுமே மிக முக்கியமான கருவிகளாக இருந்தன.

ஆயினும், தொழிற்சங்கங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் போராட்டத்தையும் மற்றும் அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளை நோக்கித் திரும்புவதையும் நடக்கவிடாமல் திட்டமிட்டுத் தடுத்து விட்டன. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதற்கு AITUCம் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உடன் இணைந்ததான இந்திய தொழிற் சங்கங்களின் மையமும் (CITU)தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. NLC இன் நிரந்தரத் தொழிலாளர்களையும் வேலைநிறுத்தத்தில் இணைவதற்கு அழைப்பதற்கும் கூட அவை மறுத்தன.

வேலைநிறுத்த காலம் முழுவதிலும், AITUC மற்றும் CPI தலைவர்கள், தொழிலாளர்களுக்கு சாதகமான வகையில் வேலைநிறுத்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கும்படிமாநிலத்தின் அஇஅதிமுக அரசாங்கத்திற்கு விண்ணப்பம் செய்து கொண்டிருந்தனர். போராட்டம் விலைபோவதற்கு சில நாட்களுக்கு முன்னர், CPI மாநிலச் செயலரான தா.பாண்டியன் மக்களின் நலனுக்காக நல்ல பல திட்டங்களை உருவாக்கித் தந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்ந்தார். இந்த அரசியல் கேலிக்கூத்திற்கு CPM மற்றும் CITU ஆட்சேபம் செய்யவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது வலதுசாரி அஇஅதிமுக அரசாங்கமும் தொழிலாள வர்க்க விரோதமான வரலாற்றுக்காய் இழிபுகழ் பெற்றவர்களாவர். மாநிலத்தின் மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேரை மொத்தமாய் வேலையிலிருந்து அகற்றியது, 2003 இல் வேலைநிறுத்தம் செய்த அரசுத் துறை ஊழியர்கள் சுமார் 200,000 பேரை வேலைநீக்கம் செய்தது ஆகியவை இதில் அடங்கும். NLC வேலைநிறுத்தத்தின் போது, வேலைநிறுத்தம் செய்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு போலிசாருக்கு மாநில அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியிருந்தது.

AITUC மற்றும் CITU தலைவர்கள் ஜெயலலிதாவை நோக்கி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது என்பது நேரடியாக சென்ற ஆண்டில் நடந்த தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் CPI மற்றும் CPM வைத்துக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணிகளில் இருந்து எழுவதாகும். இந்த இற்றுப் போன அரசியல் உறவுகளைத் தொந்தரவு செய்ய தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை.

அதேபோல வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு சலுகைகள் அளிக்க NLC மறுத்ததை ஆதரித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிரான எந்த போராட்டத்தையும் தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்த்தனர். ஸ்ராலினிசக் கட்சிகள் நெடுங்காலமாய் காங்கிரஸை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வந்திருக்கின்றன. 2004 முதல் 2008 வரையான காலத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு முட்டுக் கொடுப்பதில் முக்கிய கருவிகளாய் செயல்பட்ட CPI மற்றும் CPM, அக்கூட்டணியின் சந்தை ஆதரவு மறுசீரமைப்புக்கான அரசியல் பொறுப்பைத் தாங்கி நிற்கின்றன

ஸ்ராலினிசத் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பானது தமிழ் இனவாதத்தை ஊக்குவிப்பது என்கிற ஒரு ஆபத்தான அரசியல் அபிவிருத்திக்கு கதவு திறந்து விட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே AITUC, NLC இல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் தமிழ்நாட்டிற்கே விநியோகிக்கப்பட வேண்டும் என்கிற சுலோகத்துடனான குறுகிய பார்வையுடனான அரசியலை ஊக்குவித்தது.

நாம் தமிழர் கட்சி(NTK)என்கின்ற தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சியின் தலைவரான சீமான் ஜூன் 3 அன்று NLC ஒப்பந்தத் தொழிலாளர்களிடையே பேசுகையில் இந்தக் கருப்பொருளையே கொண்டு பேசினார். தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழரல்லாத நிர்வாகம் கொண்டிருக்கின்ற இளக்கார மனோநிலை தான் வேலைநிறுத்தம் செய்கின்ற தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினை என்று அவர் அறிவித்தார். தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகின்ற ஒரு சமயத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் NLC முதலீடு செய்வதையும் அவர் தாக்கினார்.

வேலைநிறுத்தம் செய்தவர்களின் நலன்கள் NLC நிர்வாகத்தின் - அவர்கள் தமிழர்களாய் இருந்தாலும் சரி அல்லது தமிழரல்லாதவராய் இருந்தாலும் சரி - நலன்களுக்கு அடிப்படையான விரோதமானவை ஆகும். தமிழ் இனவாதத்தைக் கிளறிவிடுவது தமிழகத் தொழிலாளர்களை இந்தியா முழுவதிலும் மற்றும் சர்வதேசமெங்கிலும் இருக்கக்கூடிய அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து துண்டிப்பதை மட்டுமே செய்கிறது. தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் அத்தனை வடிவங்களையும் நிராகரிப்பதே எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நிலைநிறுத்துவதற்கான முதல் படி ஆகும்.

NLC போராட்டம் சமீப வருடங்களில் இந்தியாவில் தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற தொடர்ச்சியான போராட்டங்களில் ஒன்றாகும். சென்ற ஆண்டில் ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் நடத்திய ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான், BYD எலெக்ட்ரானிக்ஸ், சான்மினா மற்றும் ஹூண்டாயில் வேலைநிறுத்தங்கள் நடந்தன. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு எதிராய் நடைபெற்ற ஒரு தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் பங்கேற்றனர். மே மாதத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றதோடு, தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தப் போராட்டங்களை மட்டுப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதுமே தொழிற்சங்கங்களின், குறிப்பாக CPI மற்றும் CPM உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பாத்திரமாக இருந்து வந்திருக்கிறது. தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இந்திய அரசாங்கத்துடன் ஸ்ராலினிஸ்டுகள் கொண்டிருக்கும் அரசியல் உறவுகளைத் தொந்தரவு செய்யாத வகையில் தணிந்து போகச் செய்கின்ற விதமான ஒருநாள் விவகாரங்களாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. சந்தை ஆதரவு மறுசீரமைப்பையும் தனியார்மயமாக்கத்தையும் எதிர்ப்பதாக CPI மற்றும் CPM காட்டிக் கொள்கின்றன என்கிற அதேசமயத்தில், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இருந்த CPM தலைமையிலான அரசாங்கங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இலாபமளிக்கும் விதமான இதேபோன்ற தொழிலாள வர்க்க விரோதமான கொள்கைகளையே கடைப்பிடித்து வந்திருக்கின்றன.

NLC போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டதில் இருந்து கிடைத்திருக்கும் முதல் படிப்பினை என்னவென்றால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் இருந்து முழுமையாக முறித்துக் கொண்டு சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் போன்ற தமது சொந்த சுயாதீனமான அமைப்புகளை உருவாக்காத வரை ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியாது என்பது தான்.

ஆயினும், போர்க்குண நடவடிக்கை மட்டும் போதாது. தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கினை அடித்தளமாகக் கொண்டு இலாப அமைப்புமுறைக்கும் அதன் அத்தனை அரசியல் ஆதரவாளர்களுக்கும் எதிராக தொழிலாளர்களை இந்தியாவிலும் சர்வதேசியரீதியாகவும் ஒன்றுதிரட்ட வேண்டும். உலகிங்கிலுமான தொழிலாளர்கள் இதே அடிப்படைப் பிரச்சினையையே எதிர்கொள்கின்றனர். ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி அல்லது ஆசியாவிலும் சரி அத்தனை அரசியல் வர்ணத்தைச் சேர்ந்த அரசாங்கங்களுமே 1930கள் முதலாகவே முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கே முனைகின்றன

இத்தகையதொரு அரசியல் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த மட்டில், இதன் அர்த்தம், அனைத்திற்கும் மேலாய் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக் கொடுப்புகளின் ஒரு நெடிய வரலாற்றில் இருந்து அவசியமான அரசியல் முடிவுகளை வரைவது என்பதாகும். கடந்த காலத்தில்  CPI மற்றும் CPM கட்சிகள் சோசலிசக் கட்சிகள் என்றும் 1917 அக்டோபரின் ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை என்றும் மோசடியாகக் கூறி வந்தன. இப்போது அக்கட்சிகள் இந்திய அரசியல் ஸ்தாபகத்தில் முழுமையாக ஒன்றுகலந்து விட்டன என்பதோடு முதலாளித்துவ ஆட்சியைப் பகிரங்கமாய் ஆதரித்து நிற்கின்றன.   

ஸ்ராலினிசத்திற்கும் அதன் பல்வேறு அரசியல் வக்காலத்துவாதிகளுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் - நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு - நடத்திய கடினமானதும் நெடியதுமான போராட்டத்தின் படிப்பினைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு புதிய புரட்சிகரத் தலைமையானது கட்டியெழுப்பப்பட முடியும். ICFI இன் வேலைத்திட்டத்தை தீவிரத்துடன் ஆராய்வதை நோக்கி திரும்புவதற்கும் இந்தியாவில் கட்சியின் ஒரு பிரிவினைக் கட்டுவது என்கிற அவசரப் பணியை கையிலெடுப்பதற்கும் நாங்கள் NLC தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம்.