சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry censors SMS news alerts

இலங்கை பாதுகாப்பு அமைச்சு குறுந்தகவல் செய்திகள் மீது தணிக்கை விதிக்கின்றது

By Sampath Perera
20 March 2012

use this version to print | Send feedback

ஊடக சுதந்திரத்தின் மீதான மேலுமொரு தாக்குதலில், இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, பரவலாக விநியோகிக்கப்படும் குறுந்தகவல் செய்தி சேவைகளுக்கு கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு, படைகள் மற்றும் பொலிஸ் தொடர்பான எந்தவொரு செய்தியையும் வெளியிட முன்னர் இப்போது "தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திடம் (எம்.சி.என்.சி) முன் ஒப்புதல் பெற" வேண்டும்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், மார்ச் 12 அன்று வெளியிட்ட கட்டளை, சர்வதேச செய்தி முகவர்களையும் சாரும். ராய்ட்டர்ஸ் நிருபர் பேட்டி கண்ட MCNC ஆணையாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இதன் நோக்கம் தணிக்கை அல்ல என மறுத்தார். "ஆனால் நாம் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்," என்றார்.

பாதுகாப்பு படைகள் சம்பந்தமாக எந்த செய்தி அனுமதிக்கப்படல் வேண்டும் என தீர்மாணிக்கும் அதிகாரத்தை எம்.சி.என்.சி.க்கு கொடுப்பதனால் இந்த தீர்மானம் சட்டவிரோதமானது. இலங்கை சட்டத்தின் கீழ், இத்தகைய ஊடக கட்டுப்பாடுகள் உத்தியோகபூர்வ அவசரகால நிலைமையின் கீழ் மட்டுமே அமுல்படுத்தப்பட முடியும்.

கடந்த ஆகஸ்ட்டில், அரசாங்கம் அதன் ஜனநாயக விரோத முறைகள் மீதான விமர்சனங்களை திசை திருப்பும் பொருட்டு, நீண்டகாலமாக அமுலில் வைத்திருந்த அவசரகால விதிகளை அகற்றியது. எவ்வாறெனினும், விசாரணையின்றி தடுத்து வைத்தல் போன்ற பல கொடூரமான அதிகாரங்கள், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற ஏனைய சட்டங்களின் கீழ் அமுலில் உள்ளன.

குறுந்தகவல் செய்திகள் மலிவான, வேகமான வழியில் புதிய செய்திகளை தருவதனால், அவை மொபைல் வலையமைப்பு பயனர்களின் மத்தியில் பிரபலமாக உள்ளன. ஏஜன்சி பிரான்ஸ் ஊடகத்தின் படி, இலங்கையின் 20 மில்லியன் மக்கள் தொகையில், 18 மில்லியன் பேர் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர்களாவர்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே வந்துள்ளது. மார்ச் 9 அன்று வெளியான ஒரு செய்தியில், யாழ்ப்பாண குடாநாட்டில் சாவகச்சேரியில் ஒரு சிப்பாய் முகாமில் தன்னுடன் இருந்த இரு சிப்பாய்களை கொன்றுள்ளார். இரண்டாவது சம்பவத்தில், 1.2 மில்லியன் ரூபா (10, 000 அமெரிக்க டொலர்)  லஞ்சம் பெறும் போது ஒரு பிரதேச போலீஸ் உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.

மார்ச் 10 அன்று, ஒரு குறுஞ்செய்தி, கொலன்னாவை நகர மேயர் ரவீந்திர உதயசாந்தவை கடத்திச்செல்ல ஒரு வெள்ளை வானில் வந்த இராணுவ சிப்பாய்கள் முயற்சித்ததாக தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களை காணாமல் ஆக்கிய அல்லது கொலை செய்த அரசாங்க சார்பு கொலைப் படைகளின் சின்னமாக இந்த வெள்ளை வான் காணப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் சிப்பாய்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த போதிலும், அந்த துருப்பினர் பின்னர் இரவு விடுதலை செய்யப்பட்டனர். சிப்பாய்கள் சீருடையற்ற உடையில் பணியில் இருந்தனர் என்று இராணுவம் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் எந்த கடத்தலிலும் ஈடுபட்டிருக்கவில்லை என மறுத்தது. மேயர் இராணுவத்தின் கூற்றை நிராகரித்தார்.

இந்த சம்பவங்கள் இராணுவத்துக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தின. இப்போது, "தேசிய பாதுகாப்பு" என்ற சாக்கில், பாதுகாப்பு அமைச்சு குறுந்தகவல் செய்திகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது.

இது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகம் அடங்கலாக பரந்த தணிக்கைக்கு ஒரு முன்னோடியாக இருக்கக் கூடும். வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சு, கடந்த நவம்பரில் "இலங்கை தொடர்பான எந்த உள்ளடக்கம்" கொண்ட கட்டுரைகளையும் வெளியிடும் அனைத்து செய்தி வலைத் தளங்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் எனக் கோரியது. இந்தக் கோரிக்கைக்கு சட்ட அடிப்படை இல்லை.

சில நாட்களுக்கு முன்னர், எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியால் நடத்தப்படும் தளம் உட்பட, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஆறு வலைத் தளங்களுக்குள்ளும் பிரவேசிப்பதை ஊடக அமைச்சு தடுத்தது. பரந்தளவில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் அரசாங்கம், ஊடகங்களை பதிவு செய்வதை திணிக்கவில்லை. ஆனால் அந்த ஆறு தளங்களுக்குமான பிரவேசத்தை தொடர்ந்து தடுத்து வைத்துள்ளது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நெட் மற்றும் தமிழ் கனடியன் வலைத் தளங்கள், அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பொறுப்புக் கூற மறுத்தாலும் கூட, ஜூன் 2007ல் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் போது, தனது அரசாங்கம் ஊடக தணிக்கையை அமுல்படுத்தவில்லை என்று தற்பெருமையுடன் கூறிக்கொள்கின்றார். எனினும், பாதுகாப்பு படைகள், யுத்தத்தின் கடைசி மாதங்களில் போர் வலயங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முழுமையாக தடை விதித்தது உட்பட, போர் பற்றி சுயாதீன செய்தி வெளியீடுகளை தடுக்க ஏனைய நடவடிக்கைகளை எடுத்தன. இந்த காலத்தில், ஒரு ஐ.நா. அறிக்கையின் படி, இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை கொன்றுள்ளது.

அரசாங்க-சார்பு கொலைப் படைகளும் ஊடகங்களுக்கு எதிராக இலக்கு வைத்திருந்தன. 2005ல் ஜனாதிபதியாக இராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, 14 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு குறைந்தது 25 ஊடகவியலாளர்கள் மீது சரீரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மற்றவர்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க 2009 ஜனவரியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டதும் அந்த உயிரிழப்புக்களில் அடங்கும்.  சிரச மற்றும் சியத போன்ற தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன. அரசாங்க-சார்பு குண்டர்களின் தொடர்பை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இருந்த போதிலும், போலீஸ் குற்றவாளிகளில் எவரையும் கண்டுபிடிக்கவில்லை.

உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த பின்னர் இருந்து ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன. அச்சுறுத்தல் மற்றும் பீதியான சூழ்நிலை மேலோங்கியிருப்பதை எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு உலக ஊடக சுதந்திரம் பற்றி வெளியிட்ட சமீபத்திய தரப்படுத்தல் பிரதிபலிக்கிறது: இலங்கை 178 நாடுகளில் 162வது இடத்தில் உள்ளது.

இந்த புதிய தணிக்கை, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கின்ற நிலையிலேயே சுமத்தப்படுகின்றன. அரசாங்கம் சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் படி, உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை கடுமையாக பாதிக்கக் கூடிய ஒரு தொடர் சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. அளவு கடந்த எரிபொருள் விலை அதிகரிப்பு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு எகிப்து மற்றும் துனிஷியாவில் நடந்த எழுச்சிகளின் வழியில் இலங்கையின் சமூக அழுத்தங்களும் வெடிக்கக் கூடும் என்று இராஜபக்ஷ தெளிவாக அஞ்சுகின்றார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எழுச்சிகளுக்கு இலத்திரனியல் ஊடகம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளதையிட்டு கவலை கொண்டுள்ள அரசாங்கம், அவற்றை தடுப்பதை நோக்கிய முதல் அடியை எடுத்து வைத்துள்ளது தெளிவு.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியலமைப்பு மற்றும் சட்ட முறைமையை மீறும் புதிய ஊடக கட்டுப்பாடுகள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க பொலிஸ்-அரச வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என்பதற்கான மற்றொரு எச்சரிக்கையாகும்.