சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Obama signs strategic pact in Afghanistan

ஆப்கானிஸ்தானில் மூலோபாய உடன்படிக்கையில் ஒபாமா கையெழுத்திடுகிறார்

By Peter Symonds
3 May 2012

use this version to print | Send feedback

புதன் அதிகாலை இரகசியமாக பறந்து வந்து, பறந்து வெளியேறிய ஆப்கானிய பயணத்தை அமெரிக்கத் துருப்புக்கள் பின்வாங்கப்படல், ஒரு தசாப்தத்திற்கும் அதிகம் நீடித்த போருக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என்ற ஒரு புதிய உதயமாக ஜனாதிபதி ஒபாமா மாற்றிக் கொண்டார்.  உண்மையில் இந்த வருகை ஆப்கானிஸ்தானில் முடிவில்லாத அமெரிக்க இராணுவ இருப்பிற்கான அரங்கைத்தான் அமைத்துள்ளது. இது இந்நாட்டை மத்திய ஆசியாவில் ஒரு நிரந்தரத் தளமாக மாற்றும் வாஷிங்டனின் நோக்கங்களுடன் பொருந்தியதாகும்.

ஒசாமா பின் லேடன் படுகொலையின் ஓராண்டு நிறைவன்று எந்தவித அறிவிப்புமின்றி ஒபாமா ஆப்கானிஸ்தானிற்கு பயணித்ததும் அவருடைய மறுதேர்தல் பிரச்சாரத்தை உயர்ச்சிகொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்த வாய்ப்பை அவர் மீண்டும் பயன்படுத்தி பின் லேடனைக் கொன்றதற்கு உத்தரவிட்டதில் தனது பங்கை பெருமைப்படுத்தி பேசியதுடன், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வெற்றிகரமாகப் போரை முடித்துவிட்ட தலைவர் என்றும் காட்டிக் கொண்டார்.

ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயையும் ஒபாமா சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நீடித்த மூலோபாய கூட்டுழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டார். 2014 முடிவில் பெரும்பாலான அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிப் பெறுதல் என்று இருந்தாலும், பாதுகாப்புச் செயற்பாடுகளின் பொறுப்பை ஆப்கானிய இராணுவம், பொலிஸ் ஆகியவற்றிடம் ஒப்படைப்பது என்றாலும், அமெரிக்கச் சிறப்புப் படைகளும் பயிற்சியாளர்களும் குறைந்தப்பட்சம் ஒரு தசாப்தத்திற்கேனும் ஆதரவு கொடுக்கும் பங்கை வகிக்கும் எனக் கூறிக்கொண்டு அங்கு இருப்பர்.

மிகப் பெரிய பக்ரம் இராணுவ வளாகத்தில் இருந்து ஆற்றிய உரையில், ஒபாமா அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிரந்தரத் தளங்களை நாடவில்லை என்று அறிவித்தார். ஆனால் அமெரிக்கத் துருப்புக்கள் தொடர்ந்து இருப்பது போலவே அமெரிக்க இராணுவமும் 2014க்குப் பின்னரும் ஆப்கானிய நிலையங்களை அணுகுதல், பயன்படுத்துதல் ஆகிய உரிமைகளைக் கொண்டிருக்கும். ஒரு புதிய இருதரப்புப் பாதுகாப்பு உடன்படிக்கை அடுத்த ஆண்டில் பேச்சுக்கள் மூலம் முடிக்கப்பட்டு தற்போதைய படைகளின் நிலைப்பாடு பற்றிய உடன்பாட்டிற்குப் -Status of Forces Agreement- பதிலாக வரும். அது அமெரிக்கத் துருப்புக்களுக்கு நாடெங்கிலும் தடையற்ற முறையில் செல்லும் உரிமையை வழங்கும்.

இந்த உடன்பாடு இரு முழு உரிமை பெற்ற நாடுகளுக்கு இடையே சமமான பங்காளித்தனத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்று ஒபாமா கூறினார். ஆனால் உடன்பாட்டின் விதிகள் அமெரிக்காவால் அதன் காபூல் கைப்பாவை அரசிற்கு ஆணையிடப்பட்டன என்பது தெளிவு. கர்சாய் பொருளாதார, இராணுவரீதியாக வாஷிங்டனிடம் முற்றிலும் நம்பியிருப்பார். அக்டோபர் மாதம் 352,000 என்ற எண்ணிக்கையில் உச்சக்கட்டத்தை அடையும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகள், 2017ல் 230,000 எனக் குறையும்; இவற்றிற்கான செலவை முற்றிலும் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஏற்கும்.

விஜயத்தின் நேரமும், சிக்காகோவில் மே 20ல் நடக்க இருக்கும் நேட்டோ படைத்துருப்புக்கள் பின்வாங்குதல் குறித்த கூட்டத்துடன் இணைந்துள்ளது. போரையொட்டி உள்நாட்டில் பரந்த விரோதப் போக்கை எதிர்கொள்ளும் பல அமெரிக்க நட்பு நாடுகள் 2014 கால்க்கெடுக்கு முன்னரே துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளன. ஒபாமா நிர்வாகம் இக்கூட்டத்தை, நேட்டோ நாடுகள் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு நிதியுதவி கொடுக்கவும் மற்றும் வேறு வகையிலான நிதியுதவி கொடுக்க வலியுறுத்தவும் அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தும்.

தன்னுடைய உரையில் ஒபாமா அமெரிக்கா அதன் முக்கிய இலக்கை அடைந்துவிட்டது என்றும் அல் குவேடா இப்பொழுது நமது கைக்கெட்டிய தூரத்தில் உள்ளது என்றும் அறிவித்தார். அல் குவேடா வலைப்பின்னலின் துல்லியமான நிலை எப்படி இருந்தாலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலான மிருகத்தன புதியவகைக் காலனித்துவப்போர் ஆப்கானிய மக்களை கசப்படையச் செய்து, தலிபான், ஹக்கானி வலைப்பின்னல்கள் போன்ற ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிக் குழுக்களுக்கு ஏராளமான அங்கத்தவர்களை வழங்கியுள்ளது.

ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய சில மணி நேரத்திற்குள், தலிபான் போராளிகள் காபூலில் அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் உட்பட வெளிநாட்டினர் வசிக்கும் அதிக காவல் நிறைந்த குடியிருப்பு வளாகத்தை தாக்கினர். தற்கொலைப் படையினர் தங்கள் வெடிமருந்துகளை வெடித்தனர், முக்கிய நுழைவாயில் தகர்க்கப்பட்டது. பல மணி நேரம் போர் தொடர்ந்தது. பின் ஆப்கானிய படைகளும் தனியார் படைகளும் இறுதியில் தாக்கியவர்களை மௌனப்படுத்தினர். குறைந்தபட்சம் 7 ஆப்கானியர்களும் ஒரு பாதுகாப்பு படையினரும் கொலையுண்டனர்.

தலிபான் உயர்மட்டத் தாக்குதல்களை அதிக பாதுகாப்பு நிறைந்த தலைநகரத்தில் நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பது அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின் பலமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அலைகள் தலிபான் எழுச்சிக்கு எதிராக மாறிவிட்டன என்று ஒபாமா கூறினாலும், பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் பெரும்பாலான அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு நீங்கியபின் கர்சாய் ஆட்சியின் வருங்காலம் குறித்து அவநம்பிக்கையைத்தான் கொண்டுள்ளனர்.

செவ்வாயன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் வாஷிங்டன் தளத்தைக் கொண்ட  மூலோபாயத்திற்கும் சர்வதேச ஆய்வுகளுக்குமான நிலையத்தின் அந்தோனி கோர்டஸ்மான் பின்வருமாறு எழுதினார். திறமையுடைய ஆப்கானிய படைகளைத் தோற்றுவிப்பதில் உள்ள பரந்த பிரச்சினைகள் பெருகிய முறையில் வினாவிற்கு உட்படுகின்றன. எழுச்சியாளர்கள் போராட்டம் தொடர உறுதியாக உள்ளனர் என்பது தெளிவு. பாகிஸ்தானுடனான உறவு வெளிப்படையாக முன்னே ஓரடி சென்றால் பின்னே ஈரடி செல்லுகின்றன.

தந்திரோபாயப் பின்னடைவுகள் இருந்தபோதிலும்கூட, தலிபானும் மற்ற எழுச்சியாளர்களும் இன்னும் தோல்வி அடையவில்லை. தற்போதைய அமெரிக்க மூலோபாயம், ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியை 2014க்கு முன் அடைவதில் உறுதியாகத் தோல்வி அடையும். இந்த இருண்ட சித்திரம் இருக்கையில் கோர்டஸ்மான் ஆப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்குள் கூடுதல் குவிப்பு தேவை என்று வாதிடுகிறார். ஊழல், மிருகத்தனச் செயல்களில் நிறைந்திருந்தாலும் அரசாங்கச் சார்பு உள்ளூர் போராளிகள் மற்றும் போர்ப்பிரபுக்களுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

நேற்று கையெழுத்திடப்பட்ட மூலோபாய உடன்பாடு ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தஉதவும், ஆப்கானிய மக்களின் வளர்ச்சி, கௌரவம் ஆகியவற்றை முன்னேற்றுவிக்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் என்று ஒபாமா கூறினார். ஆனால் கர்சாய் ஆட்சியின் ஊழல்வாய்ந்த, சர்வாதிகாரத் தன்மையினாலும், ஆப்கானிய மக்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை ஒட்டியும் இக்கருத்து தவறாகிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் ஆப்கானியர்களில் 70% ஆனோர் நாளொன்றிற்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான பணத்தில் திணறுகின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ளதுடன், ஆக்கிரமிப்பை நம்பியிருக்கும் பொருளாதாரத்தின் பல பிரிவுகள் உறுதியாக மோசமாகும் அல்லது சரிந்துவிடும். உணவு விலைகள் வரட்சியினால் மிகவும் உயர்ந்துவிட்டன. இந்த ஆண்டு முன்னதாக Independent ல் வந்த தகவல் ஒன்றின்படி, 30,000 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து உணவு இல்லாததால் இறந்துவிடுகின்றன. ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் குழந்தைகள் கபவாதம், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்கு இரையாகின்றன.

ஒரு தசாப்த போருக்கு முடிவு என்பதற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறவது என்பது புதிய இராணுவச் செயல்களைத் தொடக்குவதற்கான தயாரிப்பு ஆகும். லிபியாவில் கடாபி ஆட்சியை அகற்ற நேட்டோ போர் நடத்தியதைத் தொடர்ந்து சிரியாவில் தலையீட்டு அச்சுறுத்தல்கள் விரிவாகியுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா அதன் நட்பு நாடான இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு ஈரான்மீது தாக்குதலை நடத்த அச்சுறுத்துகிறது.

இன்னும் பொறுப்பற்ற தன்மையில், ஒபாமா நிர்வாகம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்திற்கு மறு குவிப்பைக் கொடுக்க முற்படுகிறது; இது சீனச் செல்வாக்கை அங்கு இராஜதந்திர/மூலோபாய முயற்சிகள் மூலம் குறைக்கும் செயல்களின் ஒரு பகுதி ஆகும். சீனாவுடன் வேண்டும் என்றே அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில், அமெரிக்கா இரு அணுவாயுதமேந்திய நாடுகளுக்கு இடையே பேரழிவு தரும் மோதலை நோக்கிச் செல்லும் ஆபத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது